Monday, June 27, 2016

அந்தரங்க வாசிப்பின் துணைக்கருவிகள்

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/06/19/ancillary-instruments/)
---
உணர்தல், உணர்வதை புரிந்து கொள்ள முயலுதல், பிறகு ஏன் அவ்வாறு உணர்ந்தோம்/ புரிந்து கொண்டோம் என இன்னும் உள்நோக்கி செல்லுதல் என்பது வாசகன் எந்தவொரு கலைப்படைப்பையும் உள்ளுணர்வும் தர்க்கமும் சார்ந்து அணுகும் முறையில் ஒன்றாக இருக்கலாம். வாசிப்பு முதன்மையாக, அந்தரங்கச் செயல்பாடாக மட்டுமே இருக்கக் கூடும். ஆனால் அவ்வாறு மட்டுமாக இருந்தால், வாசிப்பின் நாம் அறிந்திராத பல பாதைகளில் பயணம் செய்யும் வாய்ப்பே கிட்டாது. அதிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான செவ்வியல் ஆக்கங்களை வாசிக்க -படைப்பு எழுதப்பட்டுள்ள மொழியில் மட்டுமின்றி சமூகத்திலும், விழுமியங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் – இலக்கிய பதிப்புக்களின் துணை முக்கியத்துவம் பெறுகிறது.
ஷேக்ஸ்பியரின் 5வது சானட்டில் உள்ள
Beauty o’er-snowed and bareness every where:
Then were not summer’s distillation left,
A liquid prisoner pent in walls of glass,
Beauty’s effect with beauty were bereft,
Nor it, nor no remembrance what it was:
வரிகள். கண்ணாடிக் குவளையில் திரவத்தை ஊற்றி வைப்பது போல் அழகை பொத்தி வைத்து, அழகின் சாரத்தையேனும் அழியாமல் காப்பாற்ற முடியும் என்பதாக இவற்றை ஒரு பொது இலக்கிய வாசகன் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் , ‘கைதி’ என்று சுட்டுவதன் நோக்கம் என்ன, அப்படிச் சிறைபிடித்தாவது அழகை பாதுகாக்க வேண்டுமா, அப்படி செய்வது அறம் சார்ந்ததா போன்ற கேள்விகளையும் அவன் எழுப்பக் கூடும்.
ஷேக்ஸ்பியரின் 19வது சானட்டின்
“Pluck the keen teeth from the fierce tiger’s jaws,
And burn the long-lived phoenix in her blood;”
வரிகளில் Phoenix பறவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து (Phoenix பறவை குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் வாழ்ந்து மடிந்தபின் புத்துயிர் பெறுவதாக பொதுவான ஐதீகம் உள்ளது), காலம் அழகை எத்தனை முறை அழித்தாலும் அது மீண்டும் உயிர்கொள்ளும் என்று புரிந்து கொள்ளலாம்- ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற 18வது சானட்டில்
“Nor shall Death brag thou wander’st in his shade,
When in eternal lines to time thou grow’st;
So long as men can breathe or eyes can see,
So long lives this, and this gives life to thee. “
என்று சொல்லி இருப்பது போல் கவிஞனின் எழுத்தில் கிடைக்கும் இறவாமையால்- என்பதாக வாசகன் நேரடி வாசிப்பில் புரிந்து கொள்ள முடியும்.
ஷேக்ஸ்பியரின் சானட்கள் குறித்து பல கோணங்களில் விளக்கங்களை முன்வைக்கும் பதிப்புகள் பல வந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக சொல்லப்படும் ஒன்றான John Kerrigan பதிப்பில் மேலே பார்த்த 5ஆம் சானட்டின் வரிகளை அவர் இப்படி விளக்குகிறார்: ரோஜா நீர் கண்ணாடி குவளையில் இருப்பது என்பது திருமண பந்தத்தின் தூய்மையின் பாதுகாவலாக, அக்குவளை உடைவது அப்பந்தத்தை கெடுக்கும் ஒன்றின் உருவகமாக ஷேக்ஸ்பியருக்கு முன்னர் Arcadia என்ற நூலில் உபயோகிக்கப்பட்டது. இப்போது வாசகனுக்கு அந்த வரியின் இதுவரை தான் அறிந்திராத பொருள் தெரிய வருகிறது. மணவுறவு என்று இங்கு பொதுவாக குறிப்பிடப்பட்டாலும், அதில் ‘பெண்ணின்’ இடம், அவளிடம் எதிர்பார்க்கப்படும் ‘தூய்மை’ இவற்றையே ‘Arcadia’ சுட்டுகிறது என்றும் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன் அந்த உருவகத்தை ஷேக்ஸ்பியர் எப்படி மாற்றுகிறார் – திருமண பந்தத்தின் பாதுகாவல் என்ற அர்த்தத்தை மாற்றி, குவளை என்பது கருவறையை சுட்டுவதாக, அதாவது அழகின் எச்சமேனும், தலைமுறைகள் தோறும் வாரிசுகளால், வழித்தோன்றல்களால் காப்பாற்றப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுவதாக புரிந்து கொள்கிறான். இப்போது அவ்வரிகள் குறித்த இரு புதிய திறப்புக்கள் மட்டுமின்றி, பழமையை புத்தாக்கம் செய்யும் ஷேக்ஸ்பியரின் எழுத்தாளுமை பற்றிய புரிதலும் கிடைக்கக்கூடும்.
அதே போல் 19ஆம் சானட்டின் வரிகளையும் விரிவாசிப்பு செய்கிறார் Kerrigan. “in her blood” என்ற சொற்றொடர் “to be in blood” என்பதின் அதாவது “to be in one’s prime” என்று அர்த்தம் கொள்ளத்தக்க சொற்றொடரின் மருவல் என்று விளக்குகிறார். இப்போது இந்த வரிகளை, Phoenix பறவையை (அழகை) அழிக்க, காலம் 500 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் அதை அழிக்க முடியும் என்ற பொருளில் வாசிக்க வாய்ப்புள்ளது. Phoenix (அல்லது அது இக்கவிதையில் சுட்ட வரும் அழகு) இப்போது காலத்தை வெல்லும் பறவை மட்டும் அல்ல. நாளை இந்த சானட்களின் பிரதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டால், இவற்றின் உந்து சக்தியான (muse) நாயகன்/ நாயகியை உலகம் காலப்போக்கில் மறந்து விடும். அதே நேரம், ஒரு சிலரிடம் மட்டும் வாய்மொழி பதிவுகளாக இவை காப்பாற்றப்பட்டு மீண்டும் காலத்தை மீறி, உலகின் முன் வலம் வர வாய்ப்புள்ளது. இப்போது இந்தக் கவிதை இறுதியான வெற்றியோ தோல்வியோ இல்லாத – இரு தரப்பும் சமநிலையில் இருக்கும் – களத்தின் சித்தரிப்பாக வாசகனுக்கு தோன்றக் கூடும். மேலும் 5வது சானட்டில் பார்த்தது போல் வாரிசுகளாலும் அழகு தொடர்ந்து உயிர் கொண்டிருக்கும் என்றும் இந்த இரு சானட்களையும் ஒப்பிட்டு ஒரு வாசிப்பை நிகழ்த்த முடியும்.
மொழி என்றில்லை, எழுதப்பட்ட சூழல் குறித்தும் பதிப்பு நூல்களில் இருந்து வாசகனுக்கு பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் குறித்து எந்த வாசிப்பும் செய்திராத ஒருவரிடம் அவரின் சானட் தொகுதியைக் கொடுத்தால், அனைத்து சானட்களும் கவிஞனின் உத்வேகமாக (muse) இருந்த ஏதோ ஒரு பெண்ணை முன்னிறுத்தி எழுதப்பட்டவை என்றே முடிவுக்கு வருவார். எனவே, இந்தத் தொகுதியில் 126 சானட்கள் ஒரு இளைஞனை நோக்கி எழுதப்பட்டவை என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அவருக்கு ஆச்சரியத்தை தரக் கூடும். இந்தப் புரிதல் அவருடைய வாசிப்பில், அவர் முதலில் இந்தக் கவிதைகளில் உணர்ந்ததில் எந்த மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பது யோசிக்கத்தக்கது. ஷேக்ஸ்பியரை பாதித்த படைப்புக்கள்/ எழுத்தாளர்கள்,அவற்றின் தாக்கத்திலிருந்து சிறு கருவை எடுத்துக் கொண்டு முற்றிலும் தனித்தன்மை கொண்ட படைப்புக்களை அவர் உருவக்கிய விதம் குறித்து விளக்கும் பல கட்டுரைகள்/ நூல்கள் வந்துள்ளன. அவற்றைப் பற்றிய அறிதலும் அவரின் எழுத்தாளுமையை இன்னும் உள்வாங்க உதவக்கூடும்.
ஒரு கலைப்படைப்பை அதன் படைப்பாளி எந்த அர்த்தத்தில்/ கோணத்தில் உருவாக்கினான் என்பது குறித்தோ அதிலிருந்து தான் மிகவும் விலகிச் செல்வதைப் பற்றியோ கவலை கொள்ளாமல் அதை உள்வாங்குவதை முற்றிலும் தனக்கான ஒன்றாக மட்டுமே வாசகன் அணுகக் கூடும். செவ்வியல் படைப்புக்களைப் பொருத்தவரை, ஒரு படைப்பிற்கே பல பதிப்பாசிரியர்கள்/ தொகுப்பாசிரியர்கள் உள்ளார்கள். அவரவர்களின் அழகியல், கருத்தியல் கோட்பாடு சார்ந்து பல்வகைப்பட்ட பார்வைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். இவற்றோடு சேர்த்து செவ்வியல் ஆக்கங்களை படிக்கும்போது, தன் வாசிப்பின் சுயத்தை கொஞ்சமேனும் விட்டுக் கொடுக்காமல் பன்முக வாசிப்பை உள்வாங்குவது சாத்தியம் அல்ல. அப்படி விட்டுக் கொடுக்கும்போது பல புதிய உலகங்கள் அவன் முன் தோன்றுகின்றன, அவற்றினுள் செல்ல தான் உருவாக்கிய உலகை விட்டு அவன் தற்காலிகமாகவேனும் நீங்க வேண்டியுள்ளது. அதே நேரம் தன் அழகியல் மற்றும் உணர்வுத்திறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை அவன் கொள்ள வேண்டியதில்லை. தன் நிலையில் உறுதியாக இருந்தவாறே மற்ற கோணங்களின் சாத்தியங்களை ஏற்றுக்கொள்வதும், சில நேரங்களின் தன் முந்தையை நிலைபாட்டை மாற்றிகொள்வதும் கூட அவன் வாசிப்பு ஆளுமையையை இன்னும் மெருகேற்றவே செய்யும்.
பின்குறிப்பு:
பெங்குவின் வெளியீடாக வந்துள்ள ‘The Sonnets and A Lover’s Complaint’ (John Kerrigan)நூலில் இருந்து இந்த இரு சானட்களுக்கான விளக்கங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Tuesday, May 10, 2016

லிடியா டேவிஸ் (Lydia Davis) குறுங்கதைகள் – ஒரு விரிபார்வை

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/05/02/lydia-davis-2/)
-----------
We are sitting here together, my digestion and I. I am reading a book and it is working away at the lunch I ate a little while ago.
Companion‘ என்ற தலைப்பிலான லிடியா டேவிஸின் (Lydia Davis) ‘குறுங்கதை’ இது. கதையா, நாட்குறிப்பா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, இதில் நாம் என்ன வாசிக்க முடிகிறது?. கதைசொல்லியும் அவருடைய செரிமானமும் ஒருவருக்கொருவர் துணை என்று Companion என்ற தலைப்பை வைத்து புரிந்து கொள்வதோடு, புத்தகமும், கதைசொல்லியும் ஒரு இணை, வாசிப்பும் செரிமானமும் மற்றொரு இணை என்றும் வாசிக்கலாம். வெளிப்படையாகச் சுட்டப்படாவிட்டாலும், ‘working away at the lunch’ என்பதை, உண்டதை வெளிக் கொணரும் குமட்டல் நிறைந்த எழுத்தை கதைசொல்லி வாசிக்கிறார் என்ற பிழைவாசிப்பையும் நாம் நிகழ்த்தக்கூடும். செவிக்குணவில்லாதபோது மட்டுமே வயிற்றுக்கு ஈவதை டேவிஸ் கொஞ்சம் மாற்றுகிறார் என்றும் இது குறித்து பேசிப் பார்க்கலாம் இல்லையா? .
Away from Home (தலைப்பு)
It has been so long since she used a metaphor!
இந்த நொடிக்கதையின் ஒரே வரியான ‘உருவகத்தை அவள் உபயோகித்து பல காலமாகி விட்டது’ என்பதை தலைப்போடு பொருத்தி வாசிப்போமே. எழுத்தாளனுக்கு உருவகங்கள் மிக நெருக்கமானவை என்பதால், அதை அவள் உபயோகிக்காமல் இருந்துள்ளது, தன் தாய் (தன் சொந்த) வீட்டிலிருந்து/ நாட்டிலிருந்து மிகவும் விலகிப் போய்விட்ட உணர்வை அவளுக்குத் தந்திருக்கக்கூடும் என்ற வாசிப்பை நிகழ்த்தலாம். தலைப்பில் உள்ள ‘Home’ ஐ உருவகமாக வைத்துப் பார்த்தால், Away from Home போன்ற உருவகம் கொண்ட தொடரைப் பல காலம் கழித்து இப்போதுதான் எழுதி இருக்கிறார் என்றும் தலைகீழாக வாசிக்கக்கூடுமா?
Spring Spleen (தலைப்பு)
I am happy the leaves are growing large so quickly.
Soon they will hide the neighbor and her screaming child.
அண்டை வீட்டார் தன் கண்களில் படமாட்டார்கள் என வசந்த – இனிமையின் – காலத்தின், நாம் எண்ணிப் பார்த்திராத நன்மையை டேவிஸ் முன்வைக்கிறார். அதில் ‘screaming’ என்ற பெயர் உரிச்சொல்லின் (adjective) தேவை என்ன? அண்டை வீட்டுப் பெண்ணும் அவள் குழந்தையும் கண்ணில் பட மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே? இலைகள் உருவத்தை மறைத்தாலும், சத்தத்தை மறைக்கக்கூடுமா, அந்தளவிற்கு அடர்த்தியாக செடிகள், பல குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் வளர்ந்திருக்குமா என்று கேட்டு இந்த குறுங்கதையை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். குழந்தையின் அலறல் எப்படியும் கேட்கப் போவதால், தான் இப்போது உணரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, அரைகுறையானது என்பதை கதைசொல்லி புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை சுட்ட ‘screaming’ஐ பயன்படுத்தி இருக்கிறாரா?
Examples of Remember (தலைப்பு)
Remember that thou art but dust.
I shall try to bear it in mind.
(Italics as in print edition)
முதல் வரியில் உள்ள அறிவுரைக்கான, (அரைமனதான?) ஒப்புதலாக இரண்டாவது வரி உள்ளது. இது ஒரு வாசிப்பு. இரண்டு வரிகளையும் தலைப்போடு பொருத்திப் பார்த்தால், அவை தனித்தனியே கூட அர்த்தம் கொள்கின்றன, அதாவது தலைப்பில் உள்ள ‘Examples’ இந்த இரண்டு வரிகள். சில வார்த்தைகள் ‘Italics’ல் குறிப்பிடப்பட்டுள்ளது அவசியமான ஒன்றா அல்லது சொல்ல வருவதை வாசகனுக்கு திணிக்கும் முயற்சியா என்றும் வாசகன் கேள்வி எழுப்பக்கூடும். எப்படி இருப்பினும் நம் வாசிப்பை ‘Italics’ எப்படி பாதிக்கின்றன போன்ற கேள்விகளையும் இங்கு எழுப்பலாம்.
Insomnia (தலைப்பு)
My body aches so-
It must be this heavy bed pressing up against me
தூக்கம் வராத ஒருவர் அதற்கான காரணமாக, படுக்கையைச் சுட்டுகிறார் – அவருக்கு வேறேதும் உடல்/ மனரீதியான காரணங்களும் இருக்கலாம், ஆனால் வசதியாக படுக்கை மீது பழி போடுகிறார் – என்பது இந்தக் கதையின் முதல் வாசிப்பாக இருக்கக்கூடும். ‘against me’ என்று சொல்லப்படும்போது, படுக்கை எப்படி ஒருவர் மீது அழுத்த முடியும், கரடுமுரடான படுக்கை என்றாலும், படுப்பவர்தானே அதன் மேல் அழுந்தி இருக்கிறார் என்று ஒரு கேள்வியை எழுப்பலாம். அப்போது உடல் வலி என்று வருந்துவது, அவ்வலியால் தூங்க இயலாமல் துன்புறுவது படுக்கை நிலை கொண்டிருக்கும் தரை போலிருக்குமோ? அப்போது, மண்ணின் சுமையே தன்னை அழுத்துவதாக வாசிக்கலாம்.
The Busy Road (தலைப்பு)
I am so used to it by now
that when the traffic falls silent,
I think a storm is coming.
வரிகள் மடக்கி எழுதப்பட்டு இருப்பதால் மட்டுமல்ல, இது உருவாக்கும் துல்லியமான பிம்பமும், அதில் பொதிந்துள்ள உணர்வும் கவித்துவ கணத்தை நினைவுபடுத்தக்கூடும். ‘so used to it’ என்று நம்பிக்கையோடு ஆரம்பிக்கும் கதைசொல்லி ஏன் ‘think’ என்று தயக்கத்துடன் /சந்தேகத்துடன் முடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் போக்குவரத்து அமைதியாகும்போது, புயல் வரப்போகிறது என்று நினைத்து அது பொய்த்து விடுகிறது என்பதாக இந்த சந்தேகத்தைப் புரிந்து கொள்ளலாமா? அல்லது இரைச்சலுக்குப் பழகிய செவிகளை மௌனம் அச்சுறுத்துகிறது என்றோ, மக்கள் திரளுக்கு நடுவே வாழ்ந்து பழகியவர்கள் தனிமையை அஞ்சுகிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா?
இன்னொரு கவிதையையொத்த குறுங்கதை.
Head, Heart (தலைப்பு)
Heart weeps.
Head tries to help heart.
Head tells heart how it is, again:
You will lose the ones you love. The will all go. But
even the earth will go, someday.
Heart feels better, then.
But the words of head do not remain long in the ears of
heart.
Heart is so new to this.
I want them back, says heart.
Head is all heart has.
Help, head. Help heart.
எல்லாருக்கும் தெரிந்த கதைதான். மூளை சொல்வதை மனம் கேட்பதில்லை, அப்படியே கேட்டாலும் அது நீடிப்பதில்லை. மனக் குரங்கு மீண்டும் வெளியே உலவ ஆரம்பித்து விடுகிறது. ‘Heart is so new to this’ என்பதின் அர்த்தம் என்னவாக இருக்கும். மனம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பதால், புதிய புதிய வருத்தங்கள் அதற்குள் தோன்றுகின்றன அல்லது பழைய வருத்தங்கள் மீண்டெழுகின்றன. எனவே ஒவ்வொரு முறையும் மனம் துயர் கொள்ள, அதை மீண்டும் மூளை தணிக்க என இது தொடர்கதையாக நீள்கிறது. எனில் இங்கு யார் ‘Sisyphus’, தொடர்ந்து துயருறும் மனமா அல்லது துயரைத் துடைத்து சில காலத்திலேயே மீண்டும் அதே துயர் துடைத்தலில் ஈடுபடும் மூளையா?
டேவிஸ் அதிகமும் குறுங்கதைகள்/ நிமிடக்கதைகள் மட்டுமே எழுதி இருக்கிறார், அதிலும் சொல்/ மொழி விளையாட்டை மட்டுமே நிகழ்த்தியுள்ளார் என்று அவர் எழுத்தைக் குறித்த பிழைத்தோற்றத்தை இந்தக் கட்டுரை தரக் கூடும் .Lonely என்ற “No one is calling me. I can’t check the answering machine because I have been here all this time. If I go out, someone may call while I’m out. Then I can check the answering machine when I come back in,” குறுங்கதையில் அவர் தனிமையை மட்டுமல்ல, அதை தவிர்க்க எதைப் பற்றிக்கொள்வது என்ற மனதின் வேட்கை இட்டுச் செல்லும் உளச் சிக்கலையும் சித்தரிக்கிறார். ‘A Strange Impulse’ என்ற ஒரே ஒரு பத்தி அளவு கதையில் வெய்யில் காயும் பரபரப்பான கடை வீதியில், திடீரென கடை முதலாளிகள் காதைப் பொத்திக் கொள்கிறார்கள், வீதியில் உள்ள மற்றவர்கள் அடித்துப் பிடித்து ஓட ஆரம்பிக்கிறார்கள். விரைவில் முடிவுக்கு வரும் இந்த பித்து நிலை அன்றாட வாழ்வின் எரிச்சலுக்கான வடிகாலாக சுட்டப்படுகிறது.
இல்வாழ்கை, நட்பு, உள்முகப் பரிசோதனை , தனிமை என வாழ்வின் பல பரிணாமங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக்கொணரும் டேவிஸ், சிறுகதையின் வழமையான அளவிலும் சரி, குறுநாவலின் அளவிலும் சரி கதைகள் எழுதியுள்ளார். புனைவின் தெளிவான அம்சங்கள் கொண்டவை , புனைவும் நிஜமும் இணைபவை என சொல்லத்தக்கவை, கவிதை வடிவுக்கு நெருக்கமானவை, ‘What you learn about the Baby’ போன்ற வகைப்படுத்த முடியாதவை என பல்வேறு நடை, தொனி கொண்ட கதைகள் அவர் புனைவுலகில் உள்ளன. குறுங்கதைகள் அவர் புனைவுலகின் குறிப்பிடத்தக்க, ஆனால் அதை பிரதிநிதப்படுத்தும், ஒரே அம்சம் கிடையாது. கவிதை/ புனைவு/ அ-புனைவு என அனைத்தின் வரையறைகளையும் ஒன்றுடன் ஒன்று முயங்கச் செய்து கலைத்துப் போடும் டேவிஸின் எழுத்தை வகைப்படுத்த முயல்வது என்பது வியர்த்தமாகவே முடியும்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் டேவிஸின் புனைவுலகைப் பற்றிய ஆழமான குறுவெட்டு பார்வையை தருவதோ , அவரது எழுத்தின் கச்சாப் பொருட்கள், கேன்வாஸ், நுட்பங்கள் பற்றியோ பேசுவது அல்ல, தன் குறுங்கதைகள் மூலம் வாசிப்பை அவர் எவ்வாறு வாசகனை அவன் அறிந்திராத பாதைகளில் பயணிக்கச் செய்கிறார் என்பதை மட்டும் பார்ப்பதே. தங்களின் அளவைச் சார்ந்து குறுங்கதைகள் இயல்பாகவே அதற்கு தோதாக உள்ளன. அவை ஒரு சிறிய, பூட்டிய கதவை வாசகன் முன் வைக்கின்றன. அதை திறந்து உள்நுழைபவன் வானமே கூரையாய், வெளியே நாற்புற சுவராய் இருக்கும் முடிவில்லா -உலா வர வழிகளற்ற பாதைகள் கொண்ட – வீட்டினை காண்கிறான். அதனுள் அவன் தேர்ந்தெடுத்து செல்லக் கூடிய பாதைகளும், திசை தப்பிய அலைதலும் – அதற்கிணையான இந்தக் கட்டுரையிலேயே இருக்கும் பிழைவாசிப்பின் சாத்தியங்களும் – மட்டுமே இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

Tuesday, May 3, 2016

உள்ளூரில் ஒற்றன் – தேஜூ கோலின் Every Day is for the Thief சிறுகதை தொகுப்பு - Teju Cole

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/04/24/teju-cole/)
------------
And there, behind it, marched so long a file
Of people, I would never have believed
That death could have undone so many souls.

என்ற 'இன்ஃபெர்னோவின்' (Inferno)   வரிகளை 'Every day is for the thief' கதைசொல்லி ஒரு திருமண நிகழ்வின்போது நினைவு கூர்கிறார். பல்லாண்டுகளுக்குப் பின் தன் தாய் நாடான நைஜீரியாவிற்கு திரும்பியிருக்கும் அவர் அணிவகுத்துச் செல்லும் வரிசையில் காண்பதுஇறந்தவர்களை மட்டுமல்லஉயிரோடிருந்தும் அவர் நினைவுகளிலிருந்து விலகியவர்களையும்தான். தன் கடந்த காலத்தினூடாக ஒரு பயணமும்தன் நாட்டின் நிகழ்காலத்தினூடாக இன்னொரு பயணமுமாக அவர் விவரிக்கும் - எந்தத் வெளிப்படையான தொடர்பும் இல்லாத 27 அத்தியாயங்கள் கொண்ட  - இந்தச் சிறு நூல் 'குறுநாவல்என்று வகைப்படுத்தப்பட்டாலும்நினைவுக் குறிப்புகளாகவும் பார்க்கப்படும் சாத்தியம் உண்டு . இந்த விதத்தில் அசோகமித்திரனின் 'ஒற்றனைஒத்திருப்பதோடுஅந்நூல் வாசகனுள் உருவாக்கும் உணர்வையும்எழுப்பும் கேள்வியையும் இங்கும் எழுப்புகிறது. ஒற்றன் எத்தேச்சையாக தோன்றினான் என்று அ.மி சொல்வதற்கு நேர் மாறாக"I’m very interested in fictional forms that challenge our idea of what fiction is," .... "I think a lot of people will read Every Day Is for the Thief and feel that it’s nonfiction, but that confusion is intentional," என்று இந்நூல் குறித்த ஒரு பேட்டியில் கோல் சொல்கிறார்.

சந்தையில் குழந்தையைத் திருட முயன்றதாகக் கூறிடயரொன்றினுள் திணிக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகளின் கண்முன் எரித்துக் கொல்லப்படும் 11 வயது சிறுவன்திருட வருவதற்கு சில நாட்களுக்கு முன் அவ்வீட்டின் நாய்களை விஷம் வைத்து கொல்பவர்கள் (உண்மையில் அது திருட்டு நிகழப்போவதற்கான சமிக்ஞையாக புரிந்து கொள்ளப்படுவது நகைமுரண்தான்),   தாங்கள் நுழைந்த முதல் வீட்டிலிருந்து ஒருவனை அழைத்துக் கொண்டுஅவன் மூலம் அடுத்த வீட்டிலுள்ளவரை கதவைத் திறக்கச் செய்து அங்கும் கொள்ளையடித்துபிறகு அவர்களிருவரையும் அழைத்துக் கொண்டு செல்வதும் - அதிகாரத்திற்கு பயந்த காலம் கடந்து போய் சக குடிமகனையே யார் என்ன செய்வார்கள் என்று எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையின் - மிகைப்படுத்தப்பட்ட உண்மையின் கோர புனைவாக தோன்றும் அதே நேரத்தில்உண்மையில் 11 வயது சிறுவன் எந்த தயக்கமும் இல்லாமல் பல பேர் முன இப்படிக் கொல்லப்படக் கூடுமோ என்ற பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.  இத்தகைய ஒரு குழு மனப்பான்மையின் தீர்ப்பை  Lagos நகரை பின்புலமாக வைத்து புனையப்பட்டுள்ள பென் ஒக்ரியின் (Ben Okri)  'Stars of the new Curfew' தொகுப்பில் உள்ள 'When the lights return' கதையிலும் காண முடிகிறது. இரு நூல்களிலும் நைஜீரியாவின் நிகழ்கால அவலத்தை காண முடிகிறது என்றாலும்,   ஒக்ரியின் தொகுப்பைப் போல -கொடுங்கனவுகளால் நிறைக்கப்பட்டஉண்மையின் சாயல் கொண்ட - புனைவுலகமாக 'Every day is for the thief'யும்  முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 

முதல் பார்வையில்கோபம்/ ஆற்றாமை தவிர்த்த வேறு எந்த உணர்வெழுச்சியும் இல்லாதஅன்றாட நைஜீரிய நாட்களின் துல்லியமான -நூலில் அவர் இணைத்துள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களை ஒத்த - சித்திரத்தை  நூலெங்கும் அவர் அளிப்பதன் மூலம்   புனைவின் சாயலை முடிந்தளவுக்கு குறைப்பது முதல் காரணம். 'ஒற்றனின்காணக்கூடிய புனைவின் அம்சத்தைவிட இதில் குறைவாகவே பார்க்க முடிகிறது என்றே சொல்லலாம். பேருந்தில் பயணிக்கும் கோல், 'Michael Odjante'ன் நூல் ஒன்றை வாசித்தபடி அதில் ஏறும் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியாமல் போனாலும்அந்தப் புள்ளியிலிருந்துஅவள் இப்புத்தகத்தை எங்கு வாங்கி இருக்கக்கூடும்நைஜீரியர்களின் வாசிப்புப் பழக்கங்கள் (அல்லது பழக்கமின்மை) குறித்த சிந்தனைகளுக்குச்  செல்கிறார். தன்னையொத்த ரசனை கொண்ட ஒருவரைக் கண்டவுடன் ஏற்படும் இயல்பான ஆர்வத்தில்அவளிடம் பேசுவதற்கான விஷயங்களைதன்னுள்ளேயே (monologue) பேசிக்கொள்கிறார்.   3 பக்கங்களில்நிதானமான  நடையை  கொண்ட இந்த அத்தியாயம்ஒரு சந்திப்பைப் பற்றிய அனுபவக் குறிப்பாக வாசிக்கப்படவே அதிகம் வாய்ப்புள்ளது. 

அருங்காட்சியகத்திற்குச் செல்பவர்அது அரிய கலைப்பொருட்களின் சேகரிப்பாக இல்லாமல்ஏனோ தானோ என்று  அரசின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டிருப்பதையும்அதன் நீட்சியாக வேலை செய்பவர்களின் அசிரத்தையையும் பதிவு செய்கிறார்.  அங்கு அவர் கண்டதாக குறிப்பிடும் ஒரு சில விஷயங்கள் புனைவாகசற்றே மிகைப்படுத்தப்பட்டவையாக - அங்கு வேலை செய்யும் பெண் கோல்லை கண்டு கொள்ளாமல் ஸ்தோத்திர துதியை சொல்லியபடி இருக்கிறார் -  இருக்கக்கூடும்ஆனால் அவர் அத்தியாயம் முழுதும் சுட்டும்எந்த  கலைப்பிரக்ஞையும் இல்லாத ஒரு சூழல்அதற்கு அபுனைவின் தொனியையே தருகிறது. "Why is history uncontested here? There is no sight of the dispute over words, that battle over versions of stories that marks the creative inner life of a society. Where are the contradictory voices?" என்று வேறொரு இடத்தில் கோல் கேள்வி எழுப்புவதை புனைவின் குரலாக அல்லாமல்நிஜத்தின் ஆற்றாமை நிறைந்த குரலாகவே கேட்க முடிகிறது. 

உணர்வுபூர்வமாக அனைத்திலிருந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் விலகியே இருக்கும்ஆனால் எல்லாவற்றையும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் அவதானிப்புக்கள் எனும் தொனி நூலில் விரவி இருப்பதும் அதற்கு  நாட்குறிப்பின் சாயலைத் தருகிறது. விலகியே இருத்தல் என்பதின்  நீட்சியாகநம்பிக்கையின்ஆசுவாசத்தின் சுவடே இல்லாத எதிர்மறை நோக்கு மட்டுமே இந்நூலில் உள்ளதுமுதலாம் உலக நாடுகளில் பல்லாண்டுகள் வசித்து தாய் நாடு திரும்புபவர்களிடம் காணக்கூடிய அதே சலிப்பைத்தான் கோலும் வெளிப்படுத்துகிறார் - அமெரிக்காவில் இருந்து புறப்பட நைஜீரிய தூதரகத்தை அணுகும்போது லஞ்சத்தை எதிர்கொண்டு கோல் துணுக்குறுவதை அமெரிக்காவில் லஞ்சமே இல்லையா என்ற கேள்வியோடு எதிர்கொள்ள முடியும்என்ற மேலெழுந்தவாரியான விமர்சனம் உருவாகுவதும்  சாத்தியமே.  இந்த விமர்சனம் காத்திரமானதா என்பது ஒருபுறம் இருக்கவாசகன் மேலோட்டமாக உணரக்கூடிய  இத்தகைய கசப்பும்கூட,- புனைவு அளிக்கக்கூடிய முப்பரிமாணச் சித்திரம்பன்முகப் பார்வைகள் - இவை இல்லாத,  எதிர்மறை அனுபவங்களின் தொகுப்பாகவே நூலை முன்னிறுத்தக் கூடும். 

வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஏதோ ஒரு பிணக்கு/ காயம் காரணமாகவே அவர் நாட்டை நீங்கினார் என்பதைச் சுட்டும் சில இடங்கள் நூலில் உள்ளன என்பதால்  அவர் வெளியாளாக அனைத்தையும் கவனிப்பது போல் வாசகனுக்குத் தோன்றுவது கோலின் மனநிலை சார்ந்து  இயல்பான ஒன்றே.  அதே போல் "The house of course is unchanged. Memory and the intervening years many of which I have spent in cramped English flats and American apartments, limitations I have endured like a prince in exile.  Now, in the cool interior of this great  house in Africa, proper size is restored."  போன்ற வரிகளில் உள்ள வலியையும்அவர் தன்னெஞ்சிலிருந்து நைஜீரியாவை முற்றிலும் அகற்றவில்லைஅகற்றவும் முடியாது என்பதையும் உணர முடியும். 


நூலின் அபுனைவு தோற்றத்திற்கு அங்கங்கு இணைக்கப்பட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களும் வலு சேர்க்கின்றன. இந்தப்

புகைப்படத்தில் இருப்பவர் தான்  'Michael Odjante'ஐ படித்துக்கொண்டிருந்தவராகவோகலங்கிய


இந்தப் புகைப்படம்புகைமூட்டமாக உள்ள கோலின்  கடந்த காலத்தையும், துலக்கமாக விளங்கிக்கொள்ள முடியாத நைஜீரியாவின் நிகழ் காலத்தையும் சுட்டுவதாகவும்  இருக்கலாம். அவ்வப்போது இடையிடும் இத்தகைய புகைப்படங்களை உணர/ புரிந்து கொள்வதற்காகவாசிப்பை சில கணங்கள்   நிறுத்தி விடுகிறோம். கோல் சொல்வது போல் 'புனைவுஎன்றால் என்ன என்பது குறித்த நம் கருத்தாக்கங்களுக்கு சவால் விடுபவையாக இவை உள்ளன.  

புகைப்பட உத்தியில் மட்டுமின்றி,  திடீர் பயணம்அதனூடான அனுபவங்கள்அதன் விளைவான  சுயபரிசோதனை செய்யும்  தன்னுரைகள் (introspective monologue) போன்றவற்றால் உருவாகும்,  புனைவா/அபுனைவா என பிரித்தறிய இயலாத நூலின் இறுதி வடிவம்என கோலின் எழுத்தின் கட்டமைப்பிலும்நடையிலும்   சீபால்ட்டின்  (Sebald) தாக்கத்தை காண முடிகிறதுசீபால்ட் தன்னை பாதித்தவர்களில் ஒருவர் என்று கோலும் சொல்கிறார்.  குறிப்பாக கோலின் முதல் நூலான 'Open City'ல் இந்த தாக்கத்தை இன்னும் அதிகமாக உணர முடிகிறது. கோலின் எழுத்தே சீபால்ட்டின் தழுவல் எனவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.  இந்தக் கட்டுரை இந்நூலின் வகைமை குறித்த சாத்தியக்கூறுகளையே மையமாகக் கொண்டுள்ளதால் இந்நூல் பற்றிய விரிவான பார்வையையும் (உண்மையில் அவர் நூல் முழுதும் எதிர்மறை உணர்வோடு , கசப்பை சுமந்தலைபவராநூல் ஒற்றைத்தன்மை கொண்டதா  போன்ற கேள்விகள்)சீபால்ட்/ கோல் இடையேயான  ஒப்புமை/ வேற்றுமையையும்  பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.  



மனச் சோர்வடையச் செய்யும் பெரும்பாலான அனுபவங்களுக்கிடையில் இசை/நாடகத்திற்காக இயங்கும் ஒரு தனியார் சங்கம்(பணக்காரர்களே  சேரக்கூடியதாக அச்சங்கம் இருப்பதில் உள்ள முரணை கோல் உணர்ந்தாலும், இப்படியேனும் கலைக்கு வடிகாலாக ஒரு இடமாவது உள்ளதே என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறார்)இசைத்தட்டுக்களை நேரடியாக விற்பனை செய்யாமல் அவற்றை பிரதி எடுத்து விற்கும் கடைக்கு மாற்றாக,  சட்டபூர்வமாக இசைத்தட்டுக்களைஇலக்கிய நூல்களை  விற்பனை செய்யும்,  இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும்  கடை போன்ற ஒரு சில விஷயங்களைப் பார்க்கும் போது "The most convincing signs of life  I see in Nigeria connected to the practice of the arts" என்று நூலின் ஒரு அத்தியாயத்தில் கோல் உணர்கிறார்.  அதையே இறுதியில் இந்த நூல் குறித்து நாமும் உணர முடிகிறது.  எரிமலையென கொதித்துருகிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் புறச் சித்திரத்தோடுஎரிகுழம்பென அனைத்தையும் எரித்துக்கொண்டிருக்கும் சமூக பொருளாதாரச் சூழலுடனேயான  பயணங்களின் மூலம் உருவாகும் அகச் சித்திரத்தையும் உயிர்ப்புடன் தீட்டியுள்ள கோலின் கலை புனைவா/அபுனைவா என்ற கேள்வியை ஒரு கட்டத்தில் தேவையற்றதாக்கி (moot point)  விடுவதோடு,  புத்தாயிரத்தின் புதுக்குரல்களில் குறிப்பிடத்தக்கவராக அவரை முன்னிறுத்துகிறது. 

Monday, April 25, 2016

புனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (https://padhaakai.com/2016/04/17/ashokamitran-3/)
---------------
நான் அமெரிக்கா பற்றி எழுதுவதாகவே இல்லை. அன்று பயணக்கட்டுரைகள் ஒவ்வொரு பிரபல பத்திரிகையிலும் தொடராக வெளிவந்துகொண்டிருந்தன. புதுடில்லி ஸ்பான் பத்திரிகை என்னை அயோவா குறித்து ஒரு கட்டுரை கேட்டது. நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். அதைச் சிறுகதை என்று அப்பத்திரிக்கை வெளியிட்டது. ‘ஒற்றன்!’ பிறந்தான்.
– (ஒற்றன் நூலின் காலச்சுவடு பதிப்பிற்கான அசோகமித்திரனின் முன்னுரையில் இருந்து)
கல்லூரிக்குச் செல்ல ஹூசேன் சாகர் டாங்க் பண்ட் வழியாகவோ, பப்ளிக் கார்டன்ஸ் வழியாகவோ செல்வது, அந்தப் பாதையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் அதில் குளித்த அனுபவம் என அசோகமித்திரனின் ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ துவங்குகிறது. இந்தியா மட்டுமல்ல ஐதராபாத்தும் சுதந்திரம் அடைந்த காலம். கடந்த ஒரு மாதமாகவே வகுப்புக்கள் சரியாக நடக்காதது, தொடர் பிரிவுபசார விழாக்கள் என இதில் விவரிக்கப்படுவதை ‘கதை’ என்று ஏற்றுக்கொள்ள வாசகனுக்கு அதிக சிரமம் இருக்காது. ஆனால் இதை கட்டுரை என்றே அசோகமித்திரன் வரையறுக்கிறார்.
அ.மியின் சிறுகதைத் தொகுதிகளிலும், ‘ஒற்றன்‘ நூலின் ஒரு அத்தியாயமாகவும் சேர்க்கப்பட்டுள்ள ‘அம்மாவின் பொய்கள்‘ ‘கதை’யில், ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்‘ கவிதையின் முதல் பகுதி தாய் தன் சிறு வயது மகனைப் பார்த்து சொல்வதாகவும், பின்னர் அவன் பெரியவனாகிய பின் முழு கவிதையைச் சொல்வது போலவும் நாடகமாக்கப்படுகிறது. அயோவாவில் ‘உறைவிட எழுத்தாளராக’ அசோகமித்திரன் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய கட்டுரை என்று முதற் பார்வையில் இதை வரையறுக்க முடியும். அதே நேரம் ஞானக்கூத்தனின் கவிதையை வேறொரு சந்தர்ப்பத்தில் கதைசொல்லி மொழிபெயர்த்து வாசிக்க, அது ‘விக்டோரியா’ என்பவரிடம் கிடைத்து அதை அவர் நாடகத்தில் உபயோகிக்கிறார் என்பதை புனைவின் உத்தியாகப் பார்க்கலாம். ஒற்றன் நூலிலேயே ‘கவிதை வாசிப்பு’ என்ற அத்தியாயத்தில் அசோகமித்திரன் கவிதையை மொழிபெயர்த்து வாசித்தது குறித்து உள்ளது, ஆனால் அதில் கதைசொல்லி வாசிப்பது ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை‘ கவிதையை. இதுவும் இந்த படைப்பிற்கு புனைவின் சாயலையே தருகிறது. இந்த இரண்டு படைப்புக்களையும், யார் எழுதியது என்று சொல்லாமல், கதையா/ கட்டுரையா என்பதை மாற்றிக் குறிப்பிட்டு படிக்கக் கொடுத்தால், பலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அசோகமித்திரனின் படைப்புகளில் இப்படிப்பட்ட மயக்கம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கும்? கதைக்கென்று ஒரு நடையையும் கட்டுரைக்கென்று இன்னொன்றையும் அ.மி வைத்துக் கொள்வதில்லை. இரண்டிலும், மெல்ல ஒரே சரடாக இணையும் சம்பவங்கள், நுண்ணிய விவரிப்புக்கள், இதழோரச் சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை என்ற பொதுவான – ஒரே படைப்பில் புனைவாகவும், அபுனைவாகவும் உணரக்கூடிய – தொனி உள்ளது. அசோகமித்திரன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ பாடலை ( ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்‘) பாடிய விதத்தை சொல்லும்போது (‘ஒவ்வொரு சரணத்தையும் வெவ்வேறு கதியில் பாடினோம். பாரதியார் சிறிது சுருக்கமாகவே பள்ளு பாடியிருக்கலாமென்று தோன்றிற்று‘) , அதைப் பாடியது தமிழ் மன்ற விழாவில், சாமி பாட்டு பாட பணிக்கப்பட்டு ‘சகுந்தலை‘ படத்தின் பாடலைப் பாடிய 18வது அட்சக்கோட்டின் சந்திரசேகரனாக இருக்கக் கூடும் என்றே அவரை பின்தொடர்ந்து வரும் வாசகன் எண்ணினால் அதில் பிழையேதும் இருக்க முடியாது.
அதே போல் விழா முடிந்து கதைசொல்லி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தனியாக வீடு திரும்பும்போது அது “இனி கல்லூரி கிடையாது, இனி கல்லூரி கிடையாது’ என சொல்வது போல உணர்ந்து ஆறுதல் கொள்வது புனைவின் உத்தியாகவே உள்ளது. இன்னொரு புறம் வில்லியம் டெல் பிறந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ்பாலின் மனைவி, அவரின் ‘கலைந்த தலையுடன் போரிலிருந்து திரும்பிய ஜோன் ஆப் ஆர்க்’ போலிருக்கும் மகள் போன்ற விவரிப்புக்கள் புனைவு/அ-புனைவு இரண்டிற்கும் பொருந்துகின்றன. இந்தக் கட்டுரையில் உரையாடல்களே இல்லை என்பதும், இதன் அளவும், இந்தப் படைப்பு கட்டுரை என்ற தரப்பின் வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடும். கதை என்றால் கண்டிப்பாக உரையாடல் இருக்க வேண்டும் போன்ற அளவுகோலை இங்கு முன்வைக்கவில்லை, ஆனால் ஒரு படைப்பில் உரையாடல்கள் அதிகமிருப்பின் அதை ‘புனைவு’ என்ற கோணத்தில் வாசக மனம் அணுக சாத்தியமுண்டா என்று சந்தேகத்தை இங்கு முன்வைக்கிறேன்.
கதை, கட்டுரை எதுவாக இருந்தாலும் அ.மியின் நுண்ணிய நகைச்சுவையை அனைத்திலும் உணர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். எடுத்துக்கொள்ளும் புகைப்படம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு நிற்பதில் உள்ள ஹாஸ்யம் கட்டுரை/கதை இரண்டிற்கும் பொருந்துவதாகத் தான் உள்ளது. அம்மாவின் பொய்களில் நாடகம் நடக்கும் போது, அப்போது வாசிக்கப்படும் கவிதையை எழுதியவரிடம் கதைசொல்லி ஒரு கேள்வி கேட்க அவர் “..யமதர்மராஜன் போல் ‘ஆமாம்‘” என்று சொல்வதை நிஜத்திலும் நடந்திருக்கக்கூடியதாய் ஏற்றுக்கொள்வதில் கடினம் ஏதும் இருக்காது. எந்த எழுத்தாளர்தான் தன் படைப்பு அரங்கேற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது தன் கவனம் குலைக்கப்படுவதை பொறுத்துக் கொள்வார்? இந்தக் கதையில் ஒப்பீட்டளவில் உரையாடல்கள் அதிகம் இருப்பதும் இதை கதையாக உள்வாங்கிக்கொள்ளச் செய்யக் கூடும். கதைசொல்லி வசிக்குமிடத்தில் உள்ள வங்கி மேலாளரின் மூக்கைப் பற்றிய விவரிப்பிலும் , ‘பறவை மனிதன்’ என அவரை கதைசொல்லி அழைப்பதிலும் humorஐ விட comedyஏ சற்று தூக்கலாக தெரிவதால் இந்தப் படைப்பிற்கு புனைவின் சாயல் வருகிறது.
காபி க்ரீம் – கமலதாஸ்‘ என்ற கட்டுரையின் மூன்றில் இரண்டு பகுதி வரை, அசோகமித்திரன் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, அதில் பங்கேற்க  பிராங்க்பர்ட் சென்றது, ஹோட்டலில் தங்கியது என்று கட்டுரையின் வரையறைக்குள் பயணம் செய்து, அ.மி கமலாதாஸ் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய பிரசுர நிறுவனத்தின் உரிமையாளர் மல்ஹோத்ராவும் ஒன்றாக காலையுணவு உண்ட/உண்ண ஆரம்பித்தபோது நடந்த – உதவி செய்யப் போய் மல்ஹோத்ரா மீது அ.மி க்ரீமை கொட்டி விடும் – நிகழ்வுடன், “என்றென்றும் மல்ஹோத்ரா என் நூல்களை வெளியிட மாட்டார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், எனக்குக் கமலாதாஸ் பற்றியும் சந்தேகம் வந்தது. காரணம் அன்று அதிகமாகச் சிரித்தது அவர் தான்” முடிகிறது. இந்த நிகழ்வு நடந்திருக்காது என்பதோ, அப்படியே நடந்திருந்தாலும் கமலாதாஸ் வெடிச் சிரிப்பை உதிர்த்திருக்க மாட்டார் என்றோ சொல்ல முடியாது. புனைவை விட நிஜம் விசித்திரமானது தான் என்றாலும், இந்நிகழ்வில் வாசகன் உணரக் கூடிய slapstick அம்சம், அதை வாசிக்கும் முதற்கணத்தில், கட்டுரை புனைவின் பாதைக்கு தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அவனுள் எழுப்பக்கூடும்.
ஒரு ஆக்கம் புனைவா அல்லது அ-புனைவா என்பதைப் பற்றிய உரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் கல்விசார் பயிற்சியாக (‘academic exercise’) மட்டுமே முடியக் கூடும் என்றாலும், பல பொது அம்சங்களைக் கொண்ட இரு எழுத்து வகைமைகள் எந்த இடத்தில் தமக்குரிய இடத்தை (கதை/கட்டுரை) தேர்வு செய்கின்றன என வாசகன் புரிந்து கொள்ள முயல்வது அவன் வாசிப்பை நுட்பமாக்க உதவக் கூடும். மொத்தமாக பார்க்கும்போது அ.மி எழுதியுள்ள கதைகளை/ கட்டுரைகளை ஒரு முழு வாழ்க்கையின் சிதறல்களாக – வேறு வேறு பெயர்களில் வரும் அவர் பாத்திரங்களையும், நாம் ஒருவருடன் ஒருவரை முடிச்சு போட முடிகிறது – ஒருவர் உணரக் கூடும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே படித்தவரும், கதைகள் மட்டுமே படித்த இன்னொருவரும் உரையாடினால், ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்ததைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவதோடு, ஹுசேன் சாகர் டாங்க் பண்ட்டையும், லான்சர் பாரகஸையும் எளிதில் அடையாளம் காண முடியும். அ.மியின் மாடு (கோணல் கொம்பு) வளர்ப்பு புராணத்தையும், மாரிஸ், லாரா, டெரின்ஸ், போன்றோரையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே அ.மியின் படைப்புலகம் குறித்து எந்த தடையும் இன்றி உரையாட முடிவதோடு அதில் ஒரு பொது தளத்தையும் அவர்கள் கண்டடையக் கூடும் என்றே தோன்றுகிறது.

Tuesday, April 12, 2016

அசோகமித்திரனின் 'மணல்'

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/04/03/ashokamitran-2/)
----------
'ஒரு காதல் கதை'  என்ற சிறுகதையில் 'அம்மாக்களின் மனசு தான் எவ்வளவு ஆழம்' என்று சங்கரன் யோசிக்கிறான்.  கணவனை இளம் வயதில்  இழந்து பல இன்னல்களை எதிர்கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலில் உள்ள  அசோகமித்திரன் புனைவுலகின் - வாசகன் அடிக்கடி சந்திக்கும் - அம்மாக்கள் அப்படித்தான் இருக்க முடியும். பல இடர்களுக்கிடையிலும் குடும்பம் குலையாமல் இருப்பதற்கான அச்சாணி அவர்களே. 

'மாறுதல்குறுநாவலில் கணவனின் மறைவுக்குப் பின்வேறு துணை இல்லாமல்மூத்த மகள் வீட்டில் வசிக்க வரும்  'அம்மா' , பள்ளி செல்லும் தனது இரண்டாவது பெண்ணால் மூத்த மகள் குடும்பத்தில் பிரச்சனை வரக் கூடும் எனத் தோன்றியவுடனேயேமீண்டும் தன் வீட்டிற்கே செல்லும் முடிவை எந்தத்  தயக்கமும் இல்லாமல் எடுப்பது ஓர் உதாரணம். இந்த வழமையான சூழலை மாற்றிமனைவி/அம்மா காலமானால்ஒரு குடும்பம் அதை எதிர்கொள்ள  முடியாமல்  எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சிதைகிறது என்பதை 'மணல்குறுநாவலில் காண்கிறோம்.  

பி.யு.ஸி படித்துக்கொண்டிருக்கும்மருத்துவராகும் கனவில் இருக்கும் சரோஜினி கல்லூரியில் இருந்து திரும்பி வருவதில் இருந்து குறுநாவல் ஆரம்பித்துவீட்டிற்கு வந்திருக்கும்அவளுடைய திருமணமான மூத்த சகோதரிஅவளுடன் இரண்டு முறை 'வெறுமனே தானே வந்திருக்கேஎன்று - வேறெதையோ கேட்க எண்ணி -  கேட்கும் சரோஜினியின் அண்ணன் மணிஅவனிடம் திரைப்படத்திற்கு அழைத்துப் போகுமாறு வனஜா கெஞ்சுவது என அன்றாடக் குடும்ப நிகழ்வுகளின் தொகுப்பாக நாவல் விரிகிறது. அதே நேரம்மணி வனஜாவிடம் கேட்கும் கேள்விக்கு பின்னால் பொதிந்திருக்கும் உண்மையான - அவன் கேட்க விரும்பும் - கேள்வியும்திரைப்படத்திற்கு  செல்ல வேண்டுமென்ற வனஜாவின் விழைவு அவள் கணவன் வீட்டின் நிலை குறித்து  சுட்டுவதும் என அவற்றிற்கும் இன்னொரு அர்த்தம் தருகின்றனபெண்கள் தங்கள் பிறந்த வீட்டில் தான் எப்போதும் முற்றிலும் சுதந்திரமாக உணர்கிறார்களோ?

மணிக்காக பெண் பார்த்து விட்டு சென்ற வீட்டிலிருந்து அப்பெண்ணின் தாயார் வருகிறார். "நாங்க பத்து பவுனுக்கு மட்டுந்தானே நகை போடறோம்னு மனசிலேவைச்சுக்காதேங்க்கோ ... பொண்ணு வேலைக்கு போறவ.. எல்லாமாச் சேந்து நூத்தி தொண்ணூறு வரது ... அப்படியே எங்க கையிலே கொண்டு வந்து கொடுத்திட்டு அதிலேந்துதான் அப்புறம் அவள் செலவுக்கு வாங்கிப்பாள் "
என்று அவள் பேசிக்கொண்டே இருப்பதும் , சரோஜினியின் அம்மா பிடி கொடுக்காமல் பேசுவதும்வெறும் சித்தரிப்பு அல்ல. முடிந்த வரை தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல்கெஞ்சாமல் அதே நேரம் அவர்கள் முடிவை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு தாயின் இயலாமையின் வெளிப்பாடு இந்த உரையாடல். எந்த பதிலும் கிடைக்காமல் அந்த அம்மாள் சென்று விடமணி தன் அம்மாவிடம் இந்தப் பெண்ணிற்கு என்ன குறைச்சல் எனக் கேட்க ".. எனக்கு என்னமோ அந்தப் பொண்ணு இந்தாத்துக்கு சரிபட்டு வருவாள்னு தோணலை. அப்புறம் உன் இஷ்டம்" என்று  கறாராக சொல்கிறார். உண்மையில் அவருக்கு அந்தப் பெண் குறித்து எதிர்மறையான அபிப்ராயம் உள்ளதாஇல்லை தன் மகன் அப்பெண் குறித்து சாதகமாக பேசுகிறான் என்பதால் இப்படி சொல்கிறாரா என்பது யோசிக்கத்தக்கது. இப்படி பதில் ஏதும் சொல்லாமல் பல பெண்களைப் பார்த்து விட்டு, 'இன்னும் மனசுக்கு பிடிச்சது வந்தால் பாக்கறதுஎன்று சொல்வதின்  பின்னணியில்   - ஆண் பிள்ளையைப் பெற்றவள் என்ற ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பான  - ஹோதா தெரிகிறது  என்றால், 'உங்க மனசுக்கு எதைப் பிடிக்கும்ஏன் இந்த பெண்ணுக்கு என்னவாம் என்று மணி சொல்லும் பதிலில்பெற்றோரை மீற முடியாத மணியின் இயலாமையும்அதை வேறு வகையில் கோபமாக வெளிக் கொணரும்  குணமும் புலப்படுகிறது.

சரோஜினியின் அம்மாவின் எதிர்பாராத மரணம்குடும்பத்தின்  சமநிலையை குலைத்து விடுகிறது.  'அக்கறையின்மை' (indifference) இந்தக் குடும்பத்தின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகிறது.  'அம்மாஇழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தவற்றை தொடர்ந்து செய்ய பெரியவர்கள் யாருக்கும் அக்கறையில்லைஅல்லது அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. அம்மா இறந்தவுடன் காரியத்தின் போதேமாலதியின் அக்கா இருவரும் நகை பற்றி பேசுகிறார்கள். பவானி அழுகுரலில் சொன்னாள்  'வளைகாப்புக்கு கட்டாயம் ஒரு ஜோடி கரும்பு வளை  பண்ணிப் போடறேன்னு அம்மா சொல்லிண்டிருந்தாள்' 'கரும்புக் கணு  வளையாஎன்று வனஜா கேட்டாள். பவானி ஒரு விநாடி அசையாமல் இருந்தாள். பிறகு 'ஆம்மாம்கரும்புக் கணு வளைஎன்றாள். அவள் அழவில்லை.  'ஒரு விநாடி அசையாமல்இருந்து பிறகு அவள் பதில் சொல்வதுவாசகனுக்கு உணர்த்துவது  என்னவாக இருக்கக்கூடும்இவர்கள் யாரும் சுயநலமானவர் என கதையில் சுட்டப்படுவதில்லைஇயல்பான தன்னலம் பேணுபவர்களாகவே  அவர்கள்  வார்க்கப்பட்டிருக்கிறார்கள்.  அம்மா இறந்து காரியம் முடிந்தவுடனேயே வனஜா கிளம்பி விடுவது  கணவன் மீதுள்ள அதீத பாசம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். அப்பு தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு  வீட்டை விட்டு சென்று விடுகிறான். பெரிய நாடகீயத் தருணங்கள் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் மிக இயல்பான நடக்கின்றன.

சரோஜினியின் தந்தையோஅன்றாட செயல்களில் கூட  ஈடுபட  முடியாதபடி  முற்றிலும் செயலிழந்து விடுகிறார். சவரம் செய்யாத முகத்துடன் வலம் வரும் அவர்அனைத்திற்கும் சரோஜினியை எதிர்பார்க்க ஆரம்பிக்கிறார். மணியின் திருமண பேச்சுக்கள் அனேகமாக நின்று விடுகின்றன. அவனும் எல்லாவற்றிற்கும் சரோஜினியை எதிர்பார்ப்பவனாக மாறி விடுகிறான். துக்கத்தினால் உண்டான செயலின்மை என்று இதைக் குறிப்பிட முடியும். அதே நேரம்சரோஜினியின் தோழி ரேணுகா  'நீ வீட்டோடேயே இருந்திண்டு  வேளா வேளைக்குச்  சமைச்சுப் போட்டிண்டிருக்கயே' 'என மணியைப் பற்றி சொல்வதிலும் உண்மை உள்ளது. சரோஜினி போன்ற அனைத்தையும் ஏற்றுச் செய்பவளை உபயோகித்துக்கொள்ளும்  தன்னலம் என்றும் இதைக் கூறலாம். 'உங்க சின்ன அண்ணாவாவது எவளையோ கல்யாணம் பண்ணிண்டு எங்கேயோ இருக்கான். உன் பெரிய அண்ணாவுக்கு அதுக்குக்கூடத் தைரியம் இல்லைஎன்றும் மணி குறித்து ரேணுகா குறிப்பிடுகிறாள். கதையில் இரு முறை மட்டுமே  வரும் ரேணுகா பேசும் இந்த ஒரு  வரியை வைத்தே - எதிர்பார்ப்பும் மெல்லிய ஏமாற்றமும் தந்தமுளையிலேயே கருகிய  -  அதுவரை வாசகன் அறிந்திராத ஒரு உட்கதையை வாசகனுக்கு அ.மி சொல்லி விடுகிறார்.  மணி குறித்து முன்பே தெரிந்து வைத்திருக்கும் வாசகனுக்குரேணுகாவின் ஏமாற்றம் ஆச்சரியம் அளிப்பதில்லை.

அனைவரை விடவும் மிக அதிகமாக பாதிக்கப்படுவது சரோஜினி தான். அவள் கனவுகள் அனைத்தும் கலைந்து போகின்றன. நல்ல மதிப்பெண் கிடைத்தும்,  அவள் படிப்பை நிறுத்த வேண்டியதாகிறது. குடும்பத்தில் அவள் அம்மாவின் இடத்திற்கு வருகிறாள் அல்லது அதை நோக்கி தள்ளப்படுகிறாள். இப்போது குடும்ப நிர்வாகம் முழுதும் அவளுடையது தான். தினசரி வேலைகளோடுபிரசவத்திற்கு வரும் இரண்டாவது சகோதரியையும் அவள் தான் கவனித்துக் கொள்கிறாள். நீண்ட நாட்களுக்குப் பின் எதிரே வரும் ரேணுகாவை சந்திப்பதை சரோஜினி தவிர்க்க எண்ணுவதும்பிறகு அவளுடன் பேசுகையில் "செகண்ட் க்ரூப் எடுத்துக்கிறவா எல்லாருமே டாக்டராகப் போறோம்னுதான் முதல்லே நினைச்சுண்டிருப்பா"  என்று சொல்வதில் தெரியும் நிராசையும்அப்படி எதுவும் இல்லை என தன்னையே ஏமாற்றிக்கொள்ள முயலும் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் வாசகனை உடையச் செய்கிறது. இந்தச் சிறியப் பெண் மேல்அவள் வயதிற்கு மீறிய பாரத்தைச் சுமத்துவதைக் குறித்தோ , இவ்வளவு திடீர் மாற்றத்தால் அவளுக்கு ஏற்படக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தோ  யாரும் கவலைப்படுவது போல் தெரியவில்லை. ரேணுகா மணி குறித்து சொல்வது சரோஜினியின் குடும்பத்தினர்  அனைவருக்கும் பொருந்தும். இப்போது சமநிலை கொண்டவளாக சரோஜினி தோன்றினாலும்அவள் தன்னையறியாமலேயே பூசிக்கொண்டிருக்கும் 'முதிர்ந்த பெண்என்ற அரிதாரம் எளிதில் கரையக் கூடும் என்ற அச்சம் வாசகனுள் ஏற்படுகிறது. 

அவ்வச்சத்தை உண்மையாக்குவது போல்  போட்டோ கடைக்காரன் ஒருவன்,   தன்னைச் 
சந்திக்க பூங்காவிற்கு வருமாறு சரோஜினியிடம் சொல்கிறான். தன் முகத்தில் இன்னும் சிறிது உற்சாகம் இருந்திருந்தால்  கூட அவன் அப்படி செய்திருக்க மாட்டன் என்று தான் சரோஜினிக்கு முதலில் தோன்றுகிறது. அவளுடைய களைத்துப் போனசோர்வான தோற்றமே அவனுக்கு தைரியத்தை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறாள். குடும்பமே கதி என்று ஆன பிறகுஅவளுக்கு தன்னை கவனித்துக் கொள்ள எங்கே நேரம். வீட்டிற்கு திரும்பும் சரோஜினி வழக்கம் போல் அன்றாட வேலைகளைச் செய்கிறாள். ஆனால் எந்தக் காரணமும் இன்றி  வீடு முழுவதையும் அவள் துப்புரவு செய்வது தன் எண்ணங்கள் அலைபாய்வதை தடுக்கவா என்றே அவள் செய்கைகளை வாசகன் கவனித்துக் கொண்டிருக்கிறான். கண்ணாடியில் காணும் முகத்தை 'குழந்தை முகம்என இனி யாரும் சொல்ல முடியாது என அவள் நினைப்பது ஏன் என யூகிக்க முயல்கிறான். சரோஜினியிடம் தென்படும் அமைதிக்கு நேர்மாறாகவாசகன் பதட்டத்தில் இருக்கிறான். வெளியே சென்று வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பும் அவள்தான் அவசரப்படவில்லை என்று சொல்லி கொண்டே நடந்து செல்ல பூங்காவை நெருங்கி விட்டதை உணர்கிறாள். கதை முடிகிறது.    

சரோஜினி எந்த யோசனையும் இல்லாமல் தான் அங்கு வந்தடைந்தாளா அல்லது திட்டமிட்டேவா என்ற கேள்வி எழுகிறது. ஒரு சிறு பெண்ணிற்கு வயதுக்கு மீறிய பாரம் அழுத்தும்/ அழுத்தப்படும்போது ஏற்படக்கூடிய ஒரு கொதி நிலை (breaking point)  அல்லது தன்னழிப்பு மனநிலை (self destructive streak) என்றெல்லாம் அவள் செயலைக் குறித்து பேசலாம். இந்த நொய்மையான  தருணத்தை சரோஜினி எந்த பாதிப்பும் இல்லாமல் கடந்து விடுவாளாஅல்லது இது அவளது வாழ்வை  திசை மாற்றி விடுமா என்று பதைக்கலாம். ஆனால் இவற்றினூடேஅவள் தாய் மட்டும் இருந்திருந்தால் இவை எதுவும் நடந்திருக்காது என்ற எண்ணமும் மனதில் ஓடியபடியே இருக்கிறது. அவர் உயிருடன் இருந்திருந்தாலும் சரோஜினி மருத்துவம் படிக்க முடியாமல் போயிருக்கக்கூடும். ஆனால் சரோஜினியின் உளச் சிக்கலை கண்டிப்பாக அவர் புரிந்து கொண்டுஅதை திசை திருப்ப வேறேதேனும் வழியைக் கண்டு பிடித்திருப்பார் என்று நிச்சயமாக நம்பலாம்.

எழுத்தாளர்கள் புனைவில் செய்யும் தேர்வுகளின்  பின்னணியும் வாசிப்பின் பாதைகளும் 

அ. மி. தன் சிறுகதை தொகுப்பு ஒன்றின் முன்னுரையில், 'மணல்குறுநாவலை  பூங்காவில் வைத்து எழுதியதாகவும் , கதையின் இப்போதைய முடிவின் இடத்திற்கு வந்த போது,  மழை பெய்ய ஆரம்பித்ததால் அத்துடன் கதையை நிறுத்தி விட்டதாகவும் குறிப்பிடுகிறார். இது குறித்து 'அறிவுக்கு பொருந்தாததாகத் தோன்றுகிறதேஎன்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு'எனக்கு இயற்கையின் யாப்பமைதி மீது நம்பிக்கை உண்டு. ..... நம் வாழ்க்கையில் ஏதாவதொரு நேரத்தில் நாம் புற உலகுடன் மிக உயர்ந்தநுண்ணிய வகையில் ஒன்றுபட்டுவிடக்கூடும். அப்படி ஒன்றித்துப் போன காலத்தில் தான் 'மணல்குறுநாவல் மழையால் மிக நேர்த்தியாக முடிவு பெற்றது என்று நான் நினைக்கிறேன்.என்று பதிலளிக்கிறார். எழுத்து தன்னிச்சையாக அடையும் 'யாப்பமைதிபற்றிய இந்த பதிலைவாசகர்கள் புனைவைஅது விட்டுச் செல்லும்/ செல்வதாக அவர்கள் நினைக்கும் இடைவெளிகளை புரிந்து கொள்ளச் செய்யும் முயற்சியோடும்  இணைத்துப் பார்க்கலாம்.  ஒரு படைப்பைப் பற்றிய அதை எழுதியவரின் கோணத்தைத் தவிரவும் பல மாறுபட்ட -எழுத்தாளரே சென்றிடாத திசையில் பயணிக்கக் கூடிய - வாசிப்பு இருப்பது இயல்பே. ஆனால் ஒரு எழுத்தாளர் தன் படைப்பின் பின்னணி/பாத்திரங்களின் தேர்வுகள் குறித்து  முழுதும் விளக்கி விட்டால்வாசிப்பில் வாசகனின் பங்கு என்ன?  அதன் பின்பும்  வாசகன் தன்னுடைய அழகியல் (aesthetic sensibility)  சார்ந்து உருவாக்கும்  கற்பனையின் ராஜபாட்டையில் பயணிக்க இயலுமாஅல்லது அவன் அவ்வெழுத்தாளர் வகுக்க நினைத்த பாதையில் செல்லவே உந்தப்படுவானா.  தன் படைப்பைப் குறித்து ஒரு அளவுக்கு மேல் அதன்  எழுத்தாளரை விளக்கச் சொல்லக் கூடாது என்பதன் காரணம் இது தானோ.  'மணலின்முடிவு அமைந்த விதம் குறித்து நமக்குத் தெரிந்தப் பின்சரோஜினி தெரிந்தே பூங்காவை நோக்கிச் சென்றாளாஅல்லது தன்னிச்சையாக சென்றாளாஅடுத்த என்ன நிகழும்  போன்ற கேள்விகளின் இடம் என்ன

பின்குறிப்பு: 
 'சொல்லப்பட்ட கதையும்சொல்லில் வராத கதைகளும்' (http://solvanam.com/?p=30619) கட்டுரையில் உள்ள,  எழுத்தாளரின் நோக்கத்தை மீறும்  வாசக மனப் பயணத்திற்கான இன்னொரு  உதாரணம். 

...இங்கு எழுத்தாளரின் நோக்கம் (authorial intention) பற்றியும்அதை வாசகர் மீறிச் செல்லலாமா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்குச் சரியான பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அப்படி ஒரு நோக்கம் என்ன என்பதை ஒருவர் பிசிறில்லாமல் அறுதியிட்டுக் கூறுவது சாத்தியமாஇங்கு ஒரு பக்கவாட்டுப்பயணம். ‘It Happened in Boston?’ நாவலின் பின்னுரையில் அதன் ஆசிரியர் ரஸ்ஸல் க்ரீனன் (Russell H. Greenan) ஒரு வாசக எதிர்வினை குறித்துச் சொல்வதைப் பார்ப்போம்.


“One woman complimented me on how cleverly I worked the title into the narrative. She had the process backward, however. When I submitted the manuscript I called it Alfred Omega. My editor, Lee Wright, who strove mightily to promote the novel, felt the word “Boston” should be part of the title and suggested borrowing the sentence “Who would believe such things could happen in Boston?” from the text. But Bennet Cerf considered that too long, so we settled on It Happened in Boston?….”

Monday, April 4, 2016

இந்திராவின் ஆசைகள் – அசோகமித்திரனின் இரு சிறுகதைகள் - இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்/இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள முடியவில்லை

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/03/27/indira/) ​​
-----------------
பிரபலமான வீணைக் கலைஞர் 'ராமச்சந்திரன்பற்றி  தன் தோழி சரோஜாவிடம்இந்திரா ('இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்') கேட்கப் போக , அவர் யார் என்றே தெரியாதது போல் முதலில் பதில் சொல்லிபிறகு  "எல்லாம் கேட்டிருக்கிறேன். ஒரு வாத்தியம் என்றால் அதனிடம் மரியாதைபக்தி எல்லாம் வேண்டாம்குரங்கை ஆட்டிக் காண்பிப்பது போலவா வீணையை வாசிப்பது" என்று அவரைக் கடுமையாக விமர்சிக்கிறாள் சரோஜா.  இவளால் இப்படி நுட்பமாக விமர்சிக்க முடியுமா என்று நம்ப முடியாமல் அவளை  இந்திரா கூர்ந்து பார்க்க ,  தான் வீணை கற்றுக்கொள்ளும் வாத்தியார் தான் அப்படிச் சொன்னார் என்று உண்மையை தயங்கிய படி சரோஜா சொல்கிறாள்.

நாம் மதிக்கும் ஒருவரின் கருத்தைஅதை புரிந்து கொள்ளாவிட்டாலும்நம்முடையது போலவே சொல்வதின் நுண் சித்திரம் இது.  தன்  ஆசையை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்லும் தந்தை"அழுத மூஞ்சி சிரிக்குமாம்,  கழுதைப் பாலைக் குடிக்குமாம்"  என கேலி செய்பவர்களை நீங்கள் எனக்கு தம்பி தங்கைகளே இல்லை என இந்திரா பழிப்பதுதிருவிழாவுக்கு போவது போல் கும்பலாக  கச்சேரி கேட்க கோவிலுக்கு செல்வதுஅங்கு தன் சங்கீதம் பற்றி அதிகம் தெரியாத தாய் கேட்கும் கேள்விகளுக்கு பல்லைக் கடித்துக்கொண்டு   பதில் சொல்வதுசற்று நேரத்தில் வாயைத் திறந்து கொண்டே அவள் தாய் தூங்கி விடுவது என வீணை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இந்திராவின் ஆசையைப் பற்றிய கதையில் பெரும் பகுதி இத்தகைய சித்தரிப்புக்களால் தான் நிறைந்திருக்கிறது. 

இலக்கில்லாமல் செல்வது போல் தோன்றினாலும் வாசகனே அறியாதவாறு அவனை தான் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வார் அசோகமித்திரன்.  சரோஜாவின் வாத்தியாரைப் பார்த்து விட்டு திரும்பும் இந்திராவைக் கடிந்து கொள்ளும் அவள் தாயிடம் அவள் நடத்தும் உரையாடல் இந்தக் கதையில் அத்தகைய ஒரு இடம்..முதலில் இந்திராவின் விருப்பத்துக்கு ஒப்புக்கொள்பவர்,  வீணை கற்றுக் கொள்ள கட்டணம் 20 ரூபாய்  என்றவுடன்  'இருபது  ரூபாயாஎன்று  ஒரு கணம் மலைக்கிறார். அவர் தாய் கொத்தமல்லிபச்சை மிளகாய் வாங்க  பேரம் பேசுவது போல் இப்போது செய்வதாக இந்திராவுக்கு தோன்றதொடர்ந்து அவர்  உடைந்த மூக்குக் கண்ணாடியை தொடர்ந்து உபயோகிப்பதுமாதக் கடைசியில் பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது நினைவில் வர  இங்கு ஒரு திறப்பு அவளுக்கு கிடைக்கிறது.  நிறைய செலவாகும் என்ற காரணத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்போது கற்றுக்கொள்ளப் போவதில்லை என அவளேதாய் வற்புறுத்தியும் உறுதியாக இருக்கிறாள். 

குழந்தைமை மறைந்து இந்திரா முதிர்ச்சி அடையும்  கணம் என்ற அளவில் முடிந்திருக்கக் கூடிய கதையில்,  இந்திராவிற்கும் வாசகருக்கும் இன்னொரு திறப்பை அளிக்கிறார்  அசோகமித்திரன். இரவு தூக்கம் வராமல் படுத்திருக்கும் இந்திராஅம்மா சப்தமில்லாமல் குலுங்கி அழுது கொண்டிருப்பதை உணர்வதோடு கதை முடிகிறது. தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்பதனாலாஅல்லது இளமையில் இதே போல் நிறைவேறாமல் போன தன் ஆசையை எண்ணியா அல்லது இரண்டினாலுமாஎதனால் இந்திராவின் தாய் அழுகிறாள் என்பதற்கான பதிலை வாசகனின் யூகத்திற்கே அசோகமித்திரன் விடுகிறார்.

தாய் அழுவதைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திரா இப்போது மத்திம வயது பெண். ('இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள முடியவில்லை'). இந்தக் கதையில் அவளின் இள வயது ஆசை நிறைவேறவில்லை என்று தெரிய வருகிறது. தன் மகன் கோபுவை பாட வைக்க அவள் முயலஅவனோ கராத்தே கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். நிறைவேறாத  ஆசைகளை  பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று இந்தக் கதையை   விமர்சிக்கலாம். ஆனால் கதை இந்திரா தன் ஆசையை மகன் மீது திணிப்பதைப் பற்றியல்ல. அவனின் ஆர்வமின்மைக்காக வருத்தப்பட்டாலும்இந்திரா அவனைக் கடிந்து கொள்வதில்லை.

இந்திராவிற்கு அவள் சகோதரர்களின் நண்பன் சங்கரன்வீணை ராமச்சந்திரன் குறித்த அவன் கருத்துக்கள்பொதுவாகவே அவன் தரப்பை தன்மையாக எடுத்து வைக்கும் அவன் குணம் எல்லாம் இப்போது  நினைவில் வருகின்றன. ஒரு நாள் நீ இல்லாமல் நான் இருக்க முடியாது என்று அவளிடம் சொல்லும் அவன்அடுத்த சில நாட்கள் கழித்து அவள் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விடுகிறான். இந்த நினைவலைகளைத் தொடர்ந்து அ.மியின்  புனைவில் அதிகம் காண முடியாதயதார்த்தத்தைக்  கடந்து செல்லும் , பகற்கனவின் சித்தரிப்பில்  சங்கரன் அவள்  வீட்டிற்கு வருகிறான். இந்திரா நரைத்த தலைமுடியுடன் இருக்க அவன் மட்டும் அன்று பார்த்தது போலவே இருப்பதாகச் சுட்டப்படுவதில் உள்ள உளவியல் கவனிக்கத்தக்கது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சங்கரனை மீண்டும் அழைத்து வருமாறு அப்போது வீட்டிற்குள் நுழையும் கோபுவை இந்திரா அனுப்பஅவன் வெளியே யாரும் இல்லை என்கிறான்.
​​
வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது இந்திராவின் நிறைவேறாத ஆசை என்று வாசகனுக்குத் தெரியும்.  இந்திராவின் சங்கரன் குறித்த நினைவுகளும்அதைத் தொடரும் பகற்கனவும்  அது ஒன்று மட்டுமே அவளுடைய நிறைவேறாத ஆசை இல்லையோ என்ற உணர்வைத் தருகிறது. அவளில்லாமல்
​​
அவனால் இருக்க முடியாது என்று ஒரு நாள் சங்கரன் சொல்லி விட்டுச் செல்லஇந்திராவிற்கோ தன் மீது அவன் பெரிய சுமையை தூக்கி வைப்பது போல் தோன்றுகிறது.​ அவன் குறித்து அவளுக்கிருக்கும் நேர்மறையான அபிப்ராயத்தை
 சுட்டும் சம்பவங்களை வைத்து,  ​அது மற்றவர்கள் அறிந்து விடக் கூடாது என்ற பயம் கலந்தஅதே நேரம் இனிமையும் கூடிய சுமை தான் என்று யூகிக்க முடியும். 
​ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் சங்கரன் அவள் வீட்டிற்கு வருவது நின்று விடுகிறது.  
​​
வீணை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவளின் ஆசையைப் போல் அழுத்தமானதாக இதைச் சொல்ல முடியாவிட்டாலும்சங்கரன் குறித்த நினைவுகள்  இத்தனை ஆண்டுகளாக அவள் மனதின் ஒரு மூலையில்  அழியாமல் இருந்தது என்பதை அவள் பகற்கனவு உணர்த்துகிறது. இருவருக்கும் ஆண் பிள்ளைகள் மட்டுமே இருப்பதால் சம்பந்தம் கூட செய்து கொள்ள முடியாது என்று சங்கரன் ​கூறுவதாக இந்திரா காணும் பகற்கனவில்இன்னும் சில சொல்லப்படாத விஷயங்கள் உள்ளன. 
​வீணை கற்றுக்கொள்ள தனக்கிருந்த ஆசையை அவள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடும். ஆனால் சங்கரன் குறித்துஅவள் யாரைத் தேடுகிறாள் என்று கோபு கேட்பதற்கு 'சங்கரன்என்று இந்திரா சொல்ல அவன் உதட்டைப் பிதுக்குகிறான். 'அவள் சங்கரன் என்றாலும் சர்தார் சிங் என்றாலும் அவனுக்கு ஒன்று தான்'  என்று அசோகமித்திரன் சொல்லும் போது இந்திராவின் - யாருடனும் பகிர முடியாத - அந்தரங்க சோகம் தெரிகிறது. 

ஒரு வேலை சங்கரனை மணந்திருந்தால் அவள் ஆசைகள் நிறைவேறி இருக்கலாம். சங்கரனுக்கு என்ன ஆனது என்பதையும் இறுதியில் புனைவு எழுத்தாளனுக்கு  அளிக்கும் 'எல்லாம் தெரிந்த கதைசொல்லிஎன்ற சலுகையின் மூலம் வாசகனுக்கு மட்டும் சொல்கிறார் அசோகமித்திரன். ​​அதை இதுவரை அறிந்திராத இந்திரா இனியும் அறிய மாட்டாள். அவள் நினைவுகளில் எப்போதும் இனிமையை நிறைக்கும் இளைஞனாகவே சங்கரன் வலம் வருவான். 

நிறைவேறாத ஆசைகளுடன் நடுத்தர வயதை அடைந்துள்ள இந்திராவின் வாழ்வும் அவள் தாயைப் போல சப்தமில்லாமல் குலுங்கி அழுவதில் - இதே போல் யாருக்கும் வெளிக்காட்டாமல் மனதோடு குமறிக்கொண்டிருக்கும் எண்ணற்ற வாழ்க்கைகளோடு - தான் இணைய வேண்டும்.