Monday, October 26, 2015

Colm Toibin – The Blackwater Lightship – கதைசொல்லலின் சில நுட்பங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/10/18/the-blackwater-lightship/)
----------------------
கலம் டுபீனின் (Colm Toibin) ‘The Blackwater Lightship‘ நாவலில் இரு சம்பவங்கள். ஒன்று. தாய் லில்லியுடன் (Lily) பல வருடங்களாக பிணக்கு கொண்டுள்ள ஹெலனிடம் (Helen) லில்லி அன்னியோன்யமான தொனியில் பேசும்போது, “It brought anxiety with it as much as reassurance” என்று உணர்கிறார். இரண்டு- ஹெலனின் வீட்டில் விருந்து நடக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த நண்பர்களும் நண்பர்களின் நண்பர்கள் என தெரியாதவர்கள் பலரும் வருகின்றனர். அதில் ஓர் ஆண் ஹெலனுடன் சற்றே நெருக்கமான/ கிண்டலான தொனியில் பேசுகிறார். சிறிய உரையாடலான இது எல்லைமீறிச் செல்வதில்லை. அடுத்த நாள், அந்த ஆண் தன் இளைய சகோதரன் டெக்லனுக்கு தெரிந்தவன் என்றும் தற்பால்விழைவு கொண்டவன் என்றும் ஹெலனுக்கு தெரியவரும்போது அவள் எரிச்சலடைகிறாள்.
இந்த இரு சம்பவங்களும் சாதாரணமானவை போன்று தோற்றமளித்தாலும் இவற்றுக்குச் சிறிது நேரம் ஒதுக்குவோம். முதல் சம்பவத்தில் தாயின் எதிர்பாராத அன்னியோன்யம், ஹெலனுக்கு ஆச்சரியமளிக்கக்கூடும். ஆனால் ஏன் பதட்டப்படுத்த வேண்டும்? இதற்கான காரணம் நாவலில் பின்னொரு இடத்தில், வேறொரு சூழலில் இந்தச் சம்பவத்திற்கு தொடர்பில்லாத நிகழ்வில் தெரியக்கூடும், அது ஹெலனுக்கும் அவர் தாய்க்கும் உள்ள பிணக்கு ஏன் என்ற கேள்விக்கான விடையாகவும் இருக்கக்கூடும்.
இரண்டாவது சம்பவத்தில் ஹெலன் கோபப்படுவது அந்த ஆண், தான் அவளின் சகோதரனுக்கு தெரிந்தவன் என்பதைச் சொல்லாததால் மட்டும்தானா? ஒரு இனிய flirting நினைவு அவன் தற்பால்விழைவு கொண்டவன் என்று தெரிந்ததும் மாற்றமடைந்து, தன்னை அவன் கேலி செய்ததாக எண்ணுவதால்கூட இருக்கலாம் (ஹெலனுக்கு அந்த ஆண் மீது பெரிய ஈர்ப்பெல்லாம் இல்லை, அவள் குடும்ப வாழ்க்கை திருப்திகரமாகவே உள்ளது, கணவனை மிகவும் நேசிக்கிறாள். அந்த ஆணுடனான உரையாடலை ‘compliment’ஆகவே அவள் முதலில் எடுத்துக் கொள்கிறாள்)
முதல் சம்பவம் நாவலின் முக்கிய கேள்வியாக உருப்பெருவதை பின்னர் உணர்கிறோம். இரண்டாம் சம்பவம் அதனைத் தாண்டி வேறெந்த தாக்கத்தையும் கொண்டிராவிட்டாலும் அதற்குப் பின்னுள்ள அக உணர்வுகள் அத்தனை எளிமையாக விளக்கப்படக்கூடியவை அல்ல. “I’m against story,” என்று ஒரு பேட்டியில் டுபின் சொல்வதற்கேற்ப, முதல் பார்வையில் எளிமையானவையாக தோற்றமளிக்கும் பல புறவய நிகழ்வுகள்/ அவற்றின் பின்னாலுள்ள அகஉணர்வுகள் மற்றும் அந்நிகழ்வுகளால் பாத்திரங்களின் அகத்தில் உண்டாகும் மாற்றங்கள்/ உணர்ச்சிகளின் திரட்சியாக இந்த நாவல் உள்ளது.
தலைமை ஆசிரியை பொறுப்பில் இருக்கும் ஹெலனுக்கு அவரின் தாய் மற்றும் பாட்டி டோராவுடன் (Dora) சுமுகமான உறவில்லை. பாட்டியையாவது அவ்வப்போது அவர் சந்தித்தாலும் தாயை முற்றிலும் ஒதுக்குகிறார் (அல்லது தாயும் அவரிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் என்றும் அர்த்தம் கொள்ளலாம்). ஹெலனின் இளைய சகோதரன் டெக்லன் (Declan) எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள விஷயம் ஹெலனுக்குத் தெரியவருகிறது. பாட்டியின் வீட்டில் சில நாட்கள் தங்க ஆசைப்படுகிறாள் ஹெலன். இதன் பொருட்டு அவர் வீட்டில் பாட்டி, தாய், மகள் மற்றும் மகன் என்று மூன்று தலைமுறை ஆட்களும் டெக்லனின் இரு நண்பர்களும் சில நாட்கள் தங்குவதை விவரிக்கும் நாவலின் களம் பரிச்சயமான ஒன்றுதான்.
பிணக்கு கொண்ட குடும்பங்கள் ஏதோ காரணத்திற்காக ஒன்று கூடுவதை ‘Douglas Coupland’ (‘All families are psychotic’) போல இருண்மையான நகைச்சுவையோடு சொல்வது அல்லது ‘Anne Enright’ போல நேரடித்தன்மை கொண்ட நடை என பல வகைகளில் சொல்லப்படுகிறது. மேலே பார்த்த பாணிகளிலிருந்து மாறுபட்ட உரைநடை stylist டுபீன். தான் விவரிப்பது தன் பாத்திரங்களை distract செய்து விடும் என்று அஞ்சுபவர் போல, வாசகனுக்கு மட்டும் (அவன் கூர்ந்து கவனித்தால்) கேட்கும் தொனியில் அவரது நடை உள்ளது.
ஹெலனுக்கும் அவர் தாய்க்கும் நடக்கும் ஓர் உரையாடலில் தன்னைக் குறித்து லில்லி எப்போதுமே திருப்தியுறவில்லை என்று ஹெலனும் அதை மறுத்து லில்லியும் வழக்கம் போல் வாதத்தில் இறங்க
‘Helen, I’ve always accepted you,’ her mother said.
‘That’s a lovely word for it, thanks,’ Helen said.
என்று சொல்வதில் ‘accepted’ என்ற வார்த்தை ஒரு மகளுக்கு ஏற்படுத்தக்கூடிய காயம், மிகுந்த வலி தரக்கூடியது இல்லையா (லில்லி அதை நேர்மறையான அர்த்தத்திலேயே சொல்லி இருந்தாலும்)?
டெக்லன் மருத்துவமனையில் உள்ளான் என்று மட்டும் கூறி பால் என்ற அவனின் நண்பன், ஹெலனை அங்கு அழைத்துச் செல்ல, அவன் பின்னால் செல்லும் ஹெலன் மிகப் பெரிய மருத்துவமனை என்றோ, கால் வலிக்க நடக்க வேண்டியுள்ளது என்றோ யோசிப்பது போல் விவரிக்காமல், “..did not know at what point he would turn and open a door and she would find Declan” என்று எழுதுகிறார் டுபீன். ‘did not know at what point he would turn‘ என்பதில் நடையின் நீளமும், ‘open a door and she would find Declan‘ என்பதில் ஹெலனின் பயம்/ பதற்றமும் தெரிகிறது. ஏன் இங்கு கதவு திறக்கப்படுவதைச் சுட்ட வேண்டும் என்றால், மூடிய கதவிற்கு பின்னால் என்ன காத்திருக்கிறது என்ற பயம் பொதுவான ஒன்றுதானே? (மூன்று பூட்டிய கதவுகளில் ஒன்றினுள் மட்டும் கொடிய மிருகம் உள்ளது, அதைத் தவிர்க்க வேண்டும்- போன்ற போட்டிகள் பல மாயாஜாலக் கதைகளில் உண்டு) . ‘Pandora’s box’ஐ திறப்பது போன்று அவன் அறையைத் திறந்தால் என்ன தெரியவருமோ?
உரைநடை stylist என்று சொல்லும் போது அது எதிர்மறையான விமர்சனங்களுக்கும் இட்டுச் செல்லக் கூடும். ஹெலன் தன் தந்தையை இழந்த பின் பாட்டியின் வீட்டிற்கு வரும் போது கடற்கரைக்குச் சென்று
“imagined the sea, angry and inexorable, moving slowly towards the town, everything dissolving, slowly disappearing, the dead being washed out of their graces, houses crumbling and falling, cards being dragged out into the unruly ocean until there was nothing any more but this vast chaos”
என்று கற்பனை செய்வதாக விவரிக்கப்படுவதை வாசிக்கும்போது, 11 வயது சிறுமி இப்படி எண்ணக்கூடுமா என்ற கேள்வி எழலாம். அதைத் தாண்டி, நடை/ style என்பதை எழுத்தில் முக்கிய அம்சமாக ஏற்றுக்கொண்டு பார்க்கும் போது, ‘chaos’ பற்றி பேசும் இந்தப் பத்தியில் உள்ள அமைதியையும், அதனுள் பொதிந்திருக்கும் பயங்கரத்தையும், தந்தையை இழந்த சிறுமியின் இயலாமையால் விளையும் கோபத்தையும் அது உருவாக்கும் மன உளைச்சலையும் உணர முடியும்.
“I would take realism as something where the sentences provide information, whereas here, you’re being led towards feeling with as much subtlety as I can manage. It’s closer to some sort of poetic thing, but it’s buried.”
என்று டுபீன் சொல்கிறார். நாவலில் கடலைப் பார்த்தமர்ந்தபடி ஹெலனின் நினைவுகள் விரிவது பல முறை வரும் நிகழ்வாக (motif) உள்ளது. ஒரு முறை கோபம், இன்னொரு முறை ஆற்றாமை, வேறொரு முறை வெறுமை-
“Imaginings and resonances and pain and small longings and prejudices. They mean nothing against the resolute hardness of the sea. They meant less than the marl and the mud and the dry clay of the cliff that were eaten away by the weather, washed away by the sea. It was not just that they would fade: they hardly existed, they did not matter, they would have no impact on this cold dawn, this deserted remote seascape where the water shone in the early light and shocked her with its sullen beauty. It might have been better, she felt, if there had never been people, if this turning of the world, and the glistening sea, and the morning breeze happened without witnesses, without anyone feeling, or remembering, or dying, or trying to love. She stood at the edge of the cliff until the sun came out from behind the black rainclouds”
மேலே உள்ளது போல் நிச்சலமான வெறுமை என அவர் உணர்வுகளின் வண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் கறாரான ‘realism’ இல்லை, ஆனால் தனித்தனியாகவும், ஒட்டுமொத்தமாகவும் அவை நம்மைக் கொண்டு செல்லும் இடம் ஹெலனைப் பற்றிய புரிதலுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.
கதைக்கு எதிரானவர் என்று டுபீன் சொல்லிக் கொண்டாலும், அவரின் நடை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமில்லாமல், அவற்றில் உள்ள nuances, சம்பவங்களை இணைக்கும் சரடாகி ‘கதையுள்ள/ கதை நிகழும்’ உலகை உருவாக்குவதைக் காண்பதோடு (ஹெலன் கடலைப் பார்த்தபடி இருக்கும் சம்பவங்கள் ஒரு உதாரணம்). பாத்திரங்களும் நாம் கவனித்திராத கணத்தில் உயிர் கொண்டெழுவதை உணர்கிறோம். சம்பவங்களை அடுக்குவதிலும் ஒரு நடையை டுபீன் பின்பற்றுகிறார்.
வார்த்தைகளால் காயப்படுத்தி, அடுத்த கணமே அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்டு, சிறிது நேரத்தில் மீண்டும் அதே சுழற்சியைத் தொடங்குவதாக இருக்கும் பாட்டி/ மகள்/ பேத்தி உறவை, அவ்வுறவில் அத்தகைய விரிசல் விழக் காரணம் என்ன, அது முற்றிலும் உடையாமல் காக்கும் பிணைப்பு என்ன என்பதை டுபீன் நேர்க்கோட்டில் சொல்வதில்லை. ஒரு சம்பவம், அதனால் ஒரு பாத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனக்காயம் முதலில் சொல்லப்படுகிறது. பிறகு எத்தேச்சையாக இன்னொரு பாத்திரம் அந்தச் சம்பவம் பற்றி ஏதோ சொல்ல, வாசகனுக்கு புரிதல் ஏற்படுவது போல் தோன்றுகிறது. சில இடங்களில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. நாவலில் அதன் இடம் என்ன என்று அப்போது புரிவதில்லை. பிறகு அதே சம்பவத்தின் நீட்சி சொல்லப்படும்போது அது முழுமையடைகிறது.
உரைநடையின் நுட்பங்கள் மட்டுமின்றி, நாவலின் கட்டமைப்பும் வாசகனிடம் ஒருமுகப்படுத்திய வாசிப்பைக் கோருகின்றன. டுபீன் நேரடியாக எதையும் சொல்வதில்லை என்பதால், அத்தகைய வாசிப்பே வாசகனுக்குள் நாவலின் உலகை உருவாக்கும். அல்லது கவனமாக வாசிக்காமல் போனால், விரைந்து கடந்து விடும் ஒரு வரியோ/ பத்தியோ/ சிறு நிகழ்வோ பின்னர் நடப்பவற்றை சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியாமல் செய்துவிடக்கூடும்.
ஹெலனுக்கு அவள் தாயுடன் ஒத்துப்போகவில்லை, லில்லிக்கு அவள் மகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதால் இதை வெறும் தலைமுறை இடைவெளி சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. டெக்லன் தற்பால்விழைவாளன் என்பது குறித்து ஹெலனுக்கு எந்த எதிர்மறை கருத்தும் இல்லை. பாட்டி டோராவோ, அதை ஆமோதிக்காவிட்டாலும், பெரிதாக எதிர்வினை புரிவதில்லை, அவன் நண்பர்களுடன் நட்பாகவும் இருக்கிறார். லில்லி மட்டுமே அவன் பால்விழைவை, அவன் நண்பர்களை சகித்துக்கொள்ளக்கூட முடியாமல் இருக்கிறார்.
கார் ஓட்டக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும், தனியாக வசிப்பதால் தற்காப்புக்கு கத்தி வைத்திருக்கும் பாட்டி டோரா எளிதில் வாசகனை ஈர்ப்பார். நாவல் ஹெலனின் பார்வையிலேயே நகர்வதால் பாசம்/ வெறுப்பு இவற்றுக்கிடையே ஊசலாடும் அவரின் முரண்பாடான உணர்வுகள் குறித்து வாசகனுக்குப் பிடி கிட்டுகிறது. எனவே ஹெலன் பாட்டி போல் வாசகனை ஈர்க்காவிட்டாலும், அவருடன் empathize செய்யலாம். நேர்மறை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புக்கள் அதிகம் இல்லாத பாத்திரம் லில்லி. ஹெலனின் கண்ணின் வழியே நாம் காணும் லில்லி இறுகிய மனம் உடையவராக மட்டுமே முதலில் தெரிகிறார். ஆனால் இளம் வயதில் கணவனை இழந்து, பிள்ளைகளை வளர்த்து, கணினி பயிற்சி/ விற்பனை வியாபாரத்தில் வெற்றி பெற்றுள்ள அவருக்குள் உள்ள துயரைப் பற்றிய சமிக்ஞைகளுக்கும் நாவலில் உரிய இடமளிக்கிறார் டுபீன்.
டெக்லனின் உடல்நிலை மூன்று பெண்களையும் சில நாட்களுக்கு இணைப்பதற்கே அதிகம் பயன்படுகிறது. அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையே உள்ள ஆழமான நட்பைச் சுட்டும் பழைய? கணங்கள் நாவலில் உள்ளன, அதற்கான பின்னணி பற்றி அதிகம் சொல்லப்படுவதில்லை. மூவரில் பாலின் வாழ்க்கை பற்றி மட்டுமே சற்று விரிவாக ஹெலனுக்கும் அவனுக்கும் இடையே நடக்கும் நீண்ட உரையாடலில் சொல்லப்படுகிறது.
டுபீன் எந்தச் சம்பவத்தையும் அதன் எல்லையைத் தாண்டி செல்ல அனுமதிப்பதில்லை. அவர் அச்சம்பவத்தின் எல்லையென்று எதை இலக்காக வைத்துள்ளார் என்பதே வாசகன் முன்புள்ள கேள்வி.
பாலுடனான உரையாடலில் ஹெலனின் கடந்த காலம் குறித்த சில விஷயங்கள் தெரியவருகின்றன. இங்கு ஆசிரியர் இரு பாத்திரங்களை பேசவைத்து அதன் மூலம் சில விஷயங்கள் வெளிக்கொணரும்போது நேரடியாக ஏன் இப்படி எளிதான வழியில் சொல்லவேண்டும், ஒருவருக்கொருவர் அறிமுகமாகி ஓரிரு நாட்களில் இத்தகைய விஷயங்களை (கணவனிடம் பகிர்ந்திராத) பேசிக்கொள்வார்களா, ‘நுட்பம்’ என எதுவும் கிடையாதோ என்று தோன்றினால் “..being led towards feeling with as much subtlety..” என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். நண்பனின் உடல் நிலை குறித்த கவலையில் பாலும், கடந்த காலத்தின் நிழல் மீண்டும் தன் மீதும் படருமோ என்ற பதற்றத்தில் ஹெலனும் இருக்கையில், அதற்கான வடிகாலாக அவர்கள் பேசிக்கொள்வது இருக்கலாம். இல்லற வாழ்க்கையில் இத்தகைய அசாதாரணமான சூழலை சந்திக்காத நிலையில், உறவுகளை ஒதுக்கிவிட்ட அவள் தன் பயங்கள் குறித்து கணவனிடம் பகிர்ந்து கொள்ளமுடியாதபடி மனத்தை பயிற்றுவித்திருப்பதும் இயல்பானதே. இந்த உரையாடலால் இருவரிடையேயும் ஆழமான நட்பு எதுவும் உருவாவதில்லை. அந்த நேரத்தில் இருந்த மனநிலையில் சில விஷயங்களை பரிமாறிக் கொண்டவர்களாக, பரஸ்பரம் மரியாதை உடையவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த உரையாடலில் அதனுடன் நேரடியாக சம்பந்தமில்லாத இன்னொரு விஷயம் புதைந்துள்ளது. “… recognizing when he saw her how much she feared her own passionate attachment to him, how much she would hold back for a while,” என்று நாவலின் ஆரம்பத்தில் தன் அன்பைக் கண்டு அவளே அச்சமடைவது பற்றியும், தனக்கு அவ்வப்போது ஏற்படும் மனநிலை மாற்றங்களை (black moods) தன் கணவன் சகித்துக்கொள்வது பற்றியும் அவர் கூறுகிறார். இவற்றுக்கான காரணத்தை புரிந்து கொள்ள முயலும் வாசகன் எடுத்து வைக்க வேண்டிய முதல் அடியாக, பால்/ஹெலன் உரையாடலை அதற்கு முன்பு சாதாரணமாக சொல்லிச் செல்லப்பட்ட விஷயங்களுடனும், பின்னர் நடப்பதையும்/பேசப்படுவதையும் இணைத்துப் பார்ப்பது உள்ளது.
டோரா கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் சம்பவம் ஒன்று நாவலில் வருகிறது. மூதாட்டி கார் ஓட்டக் கற்றுக்கொள்கிறாள், அதில் தேர்ச்சி பெறுகிறாள் என்பது, இறுக்கமான சூழலை சமன் செய்யும், செயற்கையான உற்சாகம் தோற்றுவிக்கும் (feel good) நிகழ்வாக ஆகியிருக்கும். ஆனால் டோரா கார் ஓட்டக் கற்றுக்கொள்வதை பார்த்துக்கொண்டிருக்கும் லில்லியும் ஹெலனும் சாதாரணமாக பேச ஆரம்பித்து இன்னொரு வாக்குவாதத்திற்கான ஆரம்பத்திற்கு சென்று விடுகிறார்கள். கார் ஓட்டுவது என்னும் நிகழ்வு பின்னுக்கு சென்று விடுகிறது. ‘It’s a vale of tears, Lily… It’s a vale of tears, and there’s nothing we can do,’ என்று ஒரு இடத்தில் டோரா லில்லியிடம் சொல்கிறார். வாழ்வின் துயரை முற்றிலும் துடைக்க முடியாவிட்டாலும், துயரை சந்தோஷத்தால் எப்போதும் சமன் செய்ய முடியாவிட்டாலும், தற்காலிக ஆசுவாசம் அளிக்கும் கணங்களை (moments of reprieve) நாம் எத்தேச்சையாக கண்டடைய முடியும்.
ஹெலன்/ பால் உரையாடல் அதைத் தாண்டி சில விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்க, கார் ஓட்டும் நிகழ்விற்கு, ஆசுவாசமளிக்கும் ஒரு கணத்தின் பெறுமானத்தையே டுபீன் அளிக்கிறார். நாவலின் சில நிகழ்வுகள் ஓர் உணர்வு நிலையை மட்டுமே முன்வைத்தும், சில நிகழ்வுகள் அவற்றின் பின்னால் சிலவற்றை பொதித்துள்ளதாகவும் இருப்பதால், முதல் வகை நிகழ்வுகளால், இரண்டாம் வகையையும் அவ்வாறே எண்ணி வாசகன் கடந்து சென்று விடக்கூடிய வாசிப்பு மனநிலை அவனையறியாமலே உருவாகக்கூடும்.
Tóibín is suspicious, he says, of “literature that depends on plot”. He doesn’t think more should be required than “a portrait of a sensibility”” என்பதற்கேற்ப, மூன்று பெண்களும் ஒன்றாக இருக்கும் சில நாட்களில் அடைபட்டுள்ள உணர்வுகள் பீறிட்டெழுந்து (catharsis), அனைத்து பிணக்குகளும் தீர்ந்து விடுவது என்பது இந்த நாவலின் கரு (plot) அல்ல. பாசத்தை வெளிக்காட்ட முடியாத மனநிலை/ சூழல், அதனால் ஒருவரையொருவர் தவறாக புரிந்துகொண்டு/ புரிந்து கொள்ளப்பட்டு (அவரவர் கோணத்தில் சரியாக), விரிசல் பெரிதாகி ஒருவரை தன் வாழ்விலிருந்து ஒதுக்கினாலும், அவரின் அன்பிற்காக உள்ளூர ஏங்கிக்கொண்டே இருத்தல், அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியை எப்போதாவது அன்பின் கீற்று குறைத்தால், அந்த அன்பைக் கண்டு ஒரே நேரத்தில் ஆசுவாசமும்/ அந்த அன்பு மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடுமோ என்று அச்சமும் கொள்ளுதல், அந்த அச்சத்தால் மீண்டும் வெறுப்பை உமிழ்ந்து மீண்டும் அதே சுழற்சியை ஆரம்பித்தல் என மூடிய மனதின் புழுக்கத்தை தாள முடியாமல் அதே நேரம் மனதின் கதவுகளைத் திறக்கத் துணிவும் இல்லாமல் துன்புறுபவர்களின் உணர்வுகளின் சிக்கலான சித்திரம் (டுபீன், ஹெலனின் எண்ணங்களின் வழியாக சொல்லும் Imaginings and resonances and pain and small longings and prejudices) இந்நாவலின் “portrait of a sensibility”யாக உருவாகிறது.
Ending a novel is almost like putting a child to sleep – it can’t be done abruptly,” என்று ஒரு பேட்டியில் டுபீன் சொல்கிறார். பல வருட விரிசல் சில நாட்களில் சரியாகப் போவதில்லை என்றாலும் இணக்கமான சூழலுக்கான (நல்லுறவுக்கல்ல) முதல் அடி எடுத்து வைக்கப்படுகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அதுவும் கூட நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகச் சொல்லாமல், வாசகனின் எதிர்பார்ப்பாக, கவனத்துடன், அதே நேரம் பொருத்தமாக முடித்து வைக்கிறது.

No comments:

Post a Comment