Tuesday, March 11, 2014

Dare Me - Megan Abbot

பதாகை தளத்தில் வெளிவந்தது (http://padhaakai.com/2014/03/02/dare-me-megan-abbot/)
----------------------
Ages fourteen to eighteen, a girl needs something to kill all that time, that endless itchy waiting, every hour, every day for something—anything—to begin.”
“There’s something dangerous about the boredom of teenage girls.”
மேகன் ஆபட்டின் (Megan Abbot) ‘Dare Me’ நாவலில் பதின்பருவத்தைப் பற்றி வரும் வரிகள் இவை. அந்தப் பருவத்தின் சிக்கல்கள், எதிர்பாலின ஈர்ப்பு, பாலின குழப்பம், எதையும் (குறிப்பாக, தடை செய்யப்பட்டுள்ளதை) முயற்சி செய்ய/ அறியும் விழைவு, நட்பு வட்டாரத்தால் எப்போதும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் (peer pressure), வாழ்வின் யதார்த்தங்கள் அறிந்திராத காலத்தில் முடிவற்று நீளும் எனத் தோன்றும் இளமை என பலதரப்பட்டவை. சுயத்தை அறியவும் உறுதி செய்ய​வும்​ நாம் நம்மையறியாமல் செய்பவைகளாக இவற்றைக் கொள்ளலாம். அப்படி ‘தன்னையறிதலை’ மையமாக வைத்து, குற்றப்புனைவின் களத்தில் மேகன் ஆபட் இந்த நாவலை எழுதி உள்ளார்.
பெத் (Beth), ஆடி (Addy) இருவரும் குழந்தை பருவத்திலிருந்தே நெருங்கிய தோழிகள். பதின்பருவத்தில் உள்ள இருவரும், தங்கள் பள்ளியின் ‘cheer-leading’ குழுவில் உறுப்பினர்கள். பெத் இயல்பாகவே தலைமைப் பண்பு உள்ளவராகச் சுட்டப்படுகிறார், ‘cheer-leading’ குழுவின் தலைவரும் அவரே. ‘Cheer-leading’ பயிற்சியாளராக கொலட் (Colette) என்பவர் புதிதாக வேலைக்கு சேருவதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது.
பயிற்சியாளர்/ ஆசிரியர் என்பவற்றின் வெற்றி அவர் எந்தளவுக்கு தன் துறையில் வல்லவர் என்பதை பொறுத்து இருப்பதில்லை. அவர் எந்தளவுக்கு தன் மாணாக்கரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், தான் சொல்லிக் கொடுக்கும் துறையில் ஈடுபாடு கொள்ள வைக்கிறார் என்பதை பொறுத்துதான் உள்ளது. ‘He has lost his team’, ‘Team has quit on his coach’ போன்றவை ஒரு பயிற்சியாளரின் கொடுங்கனவாகும். இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் தன் மாணாக்கரின் மதிப்பை அவர் பெற வேண்டும். கொலட் வருவதற்கு முன்பிருந்த பயிற்சியாளரை இந்தப் பெண்கள் மதிக்காமல் (‘We girls, we owned her. Especially Beth. Beth Cassidy, our captain’), தங்கள் இஷ்டப்படி இருந்துள்ளார்கள். ஆனால் முதல் நாளே தான் மாறுபட்டவர் என்று கொலட் நிரூபிக்கிறார்.
But standing there, back straight like a drill officer, she’s wielding the roughest gaze of all.
Eyes scanning the staggered line, she’s judging us. She’s judging each and every one. I feel her eyes shred me— my bow legs, or the flyaway hairs sticking to my neck, or the bad fit of my bra, me twisting and itching and never as still as I want to be. As she is.
பெண்கள் அலைபேசிகளைப் பயிற்சியின்போது பயன்படுத்த முடியாதபடி செய்கிறார். அணிக்கு தலைவர் யாரும் தேவை இல்லை என்று அந்தப் பதவியை எடுத்து விடுகிறார். புதிய வகை பயிற்சிகளை அறிமுகப்படுத்தி,’cheer-leading’ என்பது பொழுதைக் கழிக்கும் விஷயமாகக் கருதி அசட்டையாக இருந்த இந்தப் பெண்களை அதில் இன்னும் சிரத்தை கொள்ளச் செய்கிறார். இந்த மாற்றங்களினால் கொலட் குறித்து முதலில் சில தயக்கங்கள் இருந்தாலும், சீக்கிரமே ‘cheer-leading’ குழுவினர், அவரின் ஆளுமையால் ஈர்க்கப்படுகின்றனர் (girl-crush).
இரு ஆல்பா (alpha) நபர்கள் ஒரே இடத்தில் இருப்பது கடினம். எனவே பெத் மட்டும் கொலட்டிடமிருந்து விலகியே இருக்கிறார். தன் அதிகாரம் பறிபோனதை அவரால் ஏற்கவும் முடியவில்லை, அதே நேரம் கொலட்டை நேரடியாக எதிர்க்கவும் முடியவில்லை. ஆனால் கொலட் பெத் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாமல், தன் பாணியில் குழுவை வழிநடத்துவது போல் உள்ளது. அது உண்மையா, அல்லது நமக்கு புலப்படாத, நுட்பமான ஆடு புலி ஆட்டம் இருவருக்கிடையே நடக்கிறதா என்று நினைக்கும்படி சில சம்பவங்கள் நடக்கின்றன. புதிய உறவுகள் நாவலின் முதல் பகுதியில் ஏற்படுகின்றன. குற்றப்புனைவென்று சொல்லுமளவுக்கு நாவலில் இதுவரை எதுவும் நடப்பதில்லை. ஆபட் நாவலிற்கான தளத்தை உறவுச் சிக்கல்களின் மீதே கவனம் செலுத்துவதன் மூலம் அமைக்கிறார். ஆனால் இந்தச் சூழல் இப்படியே இருக்க முடியாது, ஏதோ ஒன்று நடந்தே ஆக வேண்டும், அது கண்டிப்பாக நல்லதாக இருக்காது என்ற அச்சத்துடனேயே இந்தப் பகுதியை கடக்கிறோம்.
பிறகு ஒரு மரணம் நடக்கிறது. முதலில் தற்கொலை போலிருந்தாலும், அதில் ஒரு மர்மம் இருப்பதுபோல் சில விஷயங்களை ஆபட் (பாத்திரங்கள் மூலம்) வெளிப்படுத்துகிறார். முதல் பகுதியில் பார்த்த உறவுச் சிக்கல்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இருக்குமா? நமக்கு தெரிவதில்லை. ஒரு பாத்திரத்தை தன் பக்கம் இழுக்க/ தன் பக்கக்திலிருந்து இழக்காமலிருக்க, உணர்வு ரீதியான ஆட்கொள்ளல் முயற்சிகள் (emotional manipulation) நடக்கின்றன. பாத்திரங்களின் உறவு முடிச்சுகள் அவிழ அவிழ, குற்றம் பற்றிய உண்மையும் கொஞ்சம் கொஞ்சமாக புலப்படத் தொடங்குகிறது. அதாவது பல பாத்திரங்களுக்கு, நடந்த மரணம் சார்ந்து சில விஷயங்கள் தெரிந்திருக்கிறது (ஆனால் அதன் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை, என்ன நடந்தது என்பதையும் மொத்தமாக யாரும் அறிந்திருப்பதில்லை). முதலில் எதுவும் சொல்லாமல் இருப்பவர்கள், உறவு நிலை மாற/ மாற்ற அதை வெளிப்படுத்துகிறார்கள். விஷயங்கள் நமக்கும் (பாத்திரங்களுக்கும்) தெரிய வர, சம்பவங்கள் வேகம் பிடித்து, குழுவினர் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான ‘cheer-leading’ போட்டிநாளை நோக்கி நகர்ந்து, கொதி நிலையை நாவல் அடைகிறது. போட்டி அன்று நடக்கும் சம்பவங்கள் பலப் பாத்திரங்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டு விடுகின்றன.
நாவலில் இரண்டு இழைகள் உள்ளன, இரண்டிலுமே ஒரு மர்மம் உள்ளது. முதல் பகுதியிலிருந்து வரும் உறவுகளின் dynamics பற்றிய உண்மை என்ன என்பது ஒரு மர்மமென்றால், நாவலின் நடுவில் நடக்கும் மரணம் இன்னொரு மர்மம். இரண்டு மர்மங்களுக்கும் உள்ள தொடர்பை, கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு தெளிவுபடுத்துகிறார் ஆபட். காவல் துறைக்கு நாவலில் அதிக பங்கு இல்லை, பாத்திரங்களின் implosionதான் அனைத்து முடிச்சுகளும் அவிழக் காரணமாக உள்ளது. இங்கு ஒரு விஷயம். முதல் மர்மத்தின் இரு முக்கிய முடிச்சுக்களை, அதாவது ஒரு முக்கிய பாத்திரம் தானே அறிந்திராத/ அறிந்திர விரும்பாமல் இருந்த, குணாதிசயத்தை அறிவது, மற்றும் இரு பாத்திரங்களிக்கிடையே உண்மையில் எப்படிப் பட்ட உறவு உள்ளது என்று தெரிய வருவது, இரண்டையும் வாசகன் ஓரளவுக்கு எளிதாக, நாவலின் இறுதிக்குள் ஊகிக்க முடிகிறாது.
குற்ற/ மர்மப் புனைவு என்று பார்க்கும்போது இது நாவலின் பலவீனமாகத் தோன்றலாம். ஆனால் முதலில் சொன்னது போல் நாவலின் மையம் என்பது ‘ தன்னையறிதல்’ என்பதே ஆகும். அதற்கான ஒரு காரணியாகத்தான், மரணம்/ அது தொடர்பான மர்மம் அனைத்தும் உள்ளன. இதுவே பொதுப் புனைவின் கூறுகளும் கொண்ட நாவலாக அணுகப்படும்போது, ஆசிரியர் சில விஷயங்களை நுட்பமாக சொல்லிச் செல்வதை வாசகன் புரிந்து கொள்கிறான் என்று மாறுகிறது (பொதுப் புனைவில் இறுதி கட்டம்வரை புலப்படாத முடிச்சு ஒன்று இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது இல்லையா?).
மேலும் ஆபட் ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றியும் வேண்டுமென்றே உருவா​க்கும் தெளிவற்ற தன்மை காரணமாக நம்முடைய யூகம் தவறாகவும் இருக்கும் என்றும் வாசகனுக்கு தோன்றுவதால் இறுதிவரை ஒரு பரபரப்பு இருந்து கொண்டுதானிருக்கிறது. உதாரணமாக ஆல்பா(alpha) நபர்களாக தோன்றும் பெத்/ கொலட் இருவருக்குள்ளும் உள்ள பலவீனமான (vulnerable) பகுதியையும், எப்போதும் அவர்களைப் பின்தொடர்கின்ற தொண்டர்கள் போல் உள்ள ஆடி போன்றவர்கள் (இவர்களில் ஒருவரை கொலட் ‘Sheep’ என்று வரையறுக்கிறார்), திடீரென வெளிப்படுத்தும், அவர்களிடம் இருக்கும் என நாம் எண்ணியிருக்காத, மனத்திண்மையையும் ஆபட் contrast செய்கிறார். எனவே இந்தப் பாத்திரம் இப்படித்தான் நடந்து கொள்ளும் என்று வாசகன், ஊகிக்க முடிகிறதே தவிர,இறுதி வரும் வரை அதுப் பற்றி உறுதி கொள்ள முடியவில்லை. குறுஞ்செய்திகள் அனுப்புவது பற்றி கொலட்
“You girls, with your phones and your sad little texts,” she says, shaking her head.
“Ten, twelve years ago, it was still folding notes, passing them in class. Just as fucking sad. No, this is sadder.”
என்று பேசும்போது, அவரும் பதின்பருவத்தைக் கடந்துதான் வந்திருக்கிறார் என்பது சுட்டப்படுகிறது, அவருடைய இப்போதைய சமநிலைத்தன்மை நாம் நினைப்பது போல் வலுவானது கிடையாது என்றும் வாசகனுக்கு தோன்றுகிறது.
பதின்பருவத்தில் உள்ள ஆடி தான் நாவலின் கதைசொல்லி என்பதால், நீண்ட பத்திகளோ, கடினமான வார்த்தைகளோ அதிகம் இல்லாமல், நாவலின் உரைநடை பெரும்பாலும் அந்த வயதுக்குரிய பேச்சுவழக்கில் உள்ளது. அலைபேசிவழி குறுஞ்செய்தி பரிமாற்றங்கள், உடல் குறித்த வெறுப்புக்கள் (body image problem) என அந்த வயதினருக்கான இன்றைய காலகட்டத்தின் பிரத்யேக விஷயங்களும் நாவலில் உள்ளன (கொலட் ஒரு பெண்ணிடம் ‘baby-fat’ஐ குறைக்கும்படி சாதாரணமாகச் சொல்ல, அந்தப் பெண், பிலாக்கணம் வைத்து ஓலமிடுகிறார். பயிற்சியில் படும் அவஸ்தை/ அது சார்ந்து பயிற்சியாளரின் கண்டிப்பு/ கிண்டல்கூட அவர்களை அழ வைப்பதில்லை, உடல் குறித்த ஒரு சிறு கருத்து அவர்களை நிலைகுலைய வைக்கிறது).
நாவலில் தர்க்க ரீதியாக இல்லாமல் உள்ள ஒரு விஷயம், பெத்/ஆடி இருவரும் இரவு/ பகல் என்றில்லாமல் நினைத்த மாத்திரத்தில், காரில் பிறரைச் சந்திக்க கிளம்புகிறார்கள். இருவரின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் (பெற்றோர் விவாகரத்து) இருப்பது குறிப்பிடப்பட்டாலும், வீட்டில் கொஞ்சம்கூட அக்கறை இல்லாமல் இருப்பார்களா என்று தோன்றாமல் இல்லை.
நாவலில் இன்னொரு நெருடல், ‘cheer-leading’ பெண்கள் அனைவரையும் பசலை படர்ந்தவர்களாக சித்தரித்திருப்பது. பதின்பருவத்தில் பாலியல் ஈர்ப்பு என்பது இயல்பானதே என்றாலும், இதில் வரும் சில சம்பவங்கள் cheer-leading’ஐப் பற்றிய stereotypeகளை மீண்டும் வலியுறுத்துவது போலத் தான் உள்ளது. ஒரு கட்டத்தில் பந்தயத்திற்காக ஆண் ஒருவனை தங்கள் பக்கம் ஈர்க்க பள்ளி வளாகத்திலேயே அவர்கள் செய்யும் சில விஷயங்கள், நிஜத்தில் நடக்கக் கூடியதா என்று அமெரிக்க பள்ளிகள் பற்றித் தெரிந்தவர்களே சொல்ல முடியும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதீதமாகத்தான் தோன்றுகிறது. அதே நேரம் நாவலின் மற்ற இடங்களில் குற்றப் புனைவின் சட்டகங்களை ஆபட் மீறிச் செல்வதைப் பார்க்கும்போது, அவர் சித்தரித்திருப்பது இயல்பான ஒன்றே, வெளியிலிருந்து பார்ப்பதனால்தான் stereotype போலத் தோன்றுகிறது என்றும் சொல்லலாம்.
ஒரு குற்றப் புனைவு சுவாரஸ்யமாக, ஓரளவுக்கேனும் தர்க்கத்தோடு அவிழ்க்கப்படும் மர்மத்தை மட்டும் கொண்டிருந்தால் போதும், அந்த வகைமையின் கடமையை அது பூர்த்தி செய்கிறது. ஆனால் அனைத்து எழுத்தாளர்களும் இதை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை, அவர்கள் இந்த எல்லைகளை மீற முயல்கிறார்கள்.
“When a murder is satisfied, it isn’t the beginning of the story; it’s the middle. We shouldn’t forget that fact because murder has ripples. You never go back to being the same. The people that investigate these crimes never go back to being the same as they were before they started the investigation. The people’s whose lives have been affected, the victim’s families, even the murderer themselves are profoundly changed. That’s why murder is still the most interesting crime for us to write about, because it is the only crime where something unique is taken away from the world, something that can’t be replaced.”
என்று Rankin சொல்கிறார். இந்தப் பாரம்பர்யத்தில் வருபவர் மேகன் ஆபட். பதின்பருவத்தில் ஏற்படும் அடையாளச் சிக்கல்கள் எப்படி பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது என்று விரியும் இந்த நாவலின் முடிவில், வாசகனுக்கு ‘adrenaline rush’ஐ விட, ஒரு சிறு நிகழ்வு நடக்காமலிருந்தால், பலவற்றை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில், அது தற்காலிகமான தள்ளிவைப்​பா​கத்தான் இருந்திருக்க முடியுமென்றும், சில விஷயங்கள் எப்படியும் பின்னர் கண்டிப்பாக வெடித்திருக்கும் என்ற ஆயாசமும், எப்போதும் புரிந்து கொள்ள முடியாத மனதின் விசித்திரமும், அது மனிதரை கொண்டு செல்லும் இடத்தைப் பற்றிய எண்ண ஓட்டங்களுமே நம்மிடம் தங்குகின்றன. குற்றப் புனைவு என்பதைத் தாண்டி வேறு விஷயங்களைச் சொல்ல முயன்ற அளவில் இந்த நாவல் குறிப்பிடத்தக்க ஒன்று.

No comments:

Post a Comment