Sunday, April 13, 2014

விழுமியங்களின் வீழ்ச்சியும், அதிகாரத்தின் முடிவும்

பதாகை தளத்தில் வெளிவந்தது http://padhaakai.com/2014/03/16/marquez-and-power/)
-----------------

தென் அமெரிக்காவை ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து மீட்டு ஒரு கட்டத்தில் சர்வ வல்லமையுடன் இருந்த ( ‘The Liberator’ என்றழைக்கப்பட்ட) சீமோன் பொலிவர் (Simon Bolivar), தன் தூக்கம், உணவு, பாதுகாப்பு குறித்து அசட்டையாக இருந்ததை,
“… his disinterest was not lack of awareness or fatalism, but rather the melancholic certainty that he would die in his bed, poor and naked and without the consolation of public gratitude.”
என்று ‘மார்கேஸ்’ (Gabriel Garcia Marquez) தன்னுடைய ‘The General in His Labyrinth’ நாவலில் குறிப்பிடுகிறார். நாவலின் முடிவில் கிட்டத்தட்ட அப்படியே நடக்கவும் செய்கிறது.
வரலாற்றிலும் சர்வாதிகாரிகளின் முடிவு ஒன்று பதவியில் இருக்கும்போது கொல்லப்படுவதாகவோ அல்லது பதவியிலிருந்து அகற்றப்பட்டு அல்லது புகழின் வெளிச்சத்திலிருந்து விலக்கப்பட்டு, தங்கள் இறுதி காலத்தை அநாமதேயமாகக் கழிப்பதாகவோ உள்ளது. வெகு சிலரே இறுதிவரை பதவியையும், அதிகாரத்தையும் தம்மிடம் தக்க வைத்திருந்துள்ளனர்.
‘தென் அமெரிக்கா’, சர்வாதிகாரிகளின் விளைநிலமாக இருந்துள்ளது (அமெரிக்க/ ரஷ்ய பனிப் போரின் ஒரு பகுதியாக இரு நாடுகளும் தங்களை ஆதரிப்பவரை பதவியில் இருத்தியும், அவர்கள் தங்களை எதிர்த்தவுடன் வீழ்த்தியும் உள்ளன). எனவே மார்கேஸ் மற்றும் இன்னும் பல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் ஆக்கங்கள், அதிகாரத்தைப் பெற/ தக்கச் வைக்க செய்யப்படும் சமரசங்கள், அதிகாரம் மனிதனை எப்படி மாற்றுகிறது, நேரடியாக அதிகாரம் கிடைக்காவிட்டாலும், தன்னை இழிவுபடுத்துக் கொண்டாலும் அதன் நிழலிலாவது இடம் பெற முயற்சிப்பது என இவற்றை குறித்து நிறைய பேசுகின்றன. காபோவின் புனைவுலகில், ‘The General In His Labyrinth’ , ‘The Autumn Of The Patriarch’ இத்தகைய ஆக்கங்கள். முழுதும் இல்லாவிட்டாலும், ‘One Hundred Years Of Solitude’ நாவலில், ‘Colonel Aureliano Buendia’ வரும் பகுதிகள், அதிகாரத்தின் தாக்கத்தைப் பேசுகின்றன.
மூன்று நாவல்களிலுமே, பாத்திரங்களின் இறுதிக் காலம், பழம் பெருமைகள் மட்டுமே உள்ள காலமாக உள்ளது. அவர்கள் பயணத்தை ஆரம்பித்ததின் நோக்கம் , துவக்கத்தில் செய்த சாதனைகள் அனைத்தும் பழங்கனவாய் மாறி, அவர்களைப் பற்றிய கசப்பான உணர்வோடோ அல்லது முடிந்துபோன/ மறக்கப்பட வேண்டிய காலகட்டத்தின் எச்சமாகவோதான் மக்களால் பார்க்கப்படுகிறார்கள். அதிகாரம் எப்போதும் கொண்டாடப்படுதல் அல்லது மறக்கப்படுதல்/ மறக்கடிக்கப்படுதல் என்ற இரட்டை நிலையிலேயே இயங்குகிறது.
முடிவைப் பற்றிப் பேசுவதற்கு முன், அதை வந்தடைவதற்கான பாதையைப் பார்ப்போம். “Men make their own history, but they do not make it as they please; they do not make it under circumstances of their own choosing, but under circumstances existing already, given and transmitted from the past” என்ற கார்ல் மார்க்ஸ் மேற்கோள் உள்ளது. தென் அமெரிக்காவை அடிமைப்படுத்தி, ‘Inquisition’ போன்ற பல அட்டூழியங்களை செய்த ஸ்பானிய சாம்ராஜ்யத்தை ஒழித்து, தன் கண்டத்தை விடுவிக்க பொலிவர் புரட்சியில் ஈடுபடுகிறார். ஆரம்பத்தில் Buendia (One Hundred Years of Solitude),மென்மையானவராக, கவிதை எழுதுபவராக, அரசியலில் ஈடுபாடு இல்லாதவராகத்தான் நமக்கு அறிமுகமாகிறார். அப்போதைய அரசு, தேர்தலில் செய்யும் தகிடுதத்தங்களைக் கண்டு வெறுப்படைந்து அவரும் புரட்சியில் ஈடுபடுகிறார். இருவரையும் அவர்களின் காலகட்டத்தின் சூழலே புரட்சியாளர்களாக உருவாக்குகிறது.
உயர்ந்த இலட்சியங்களோடு ஆரம்பிக்கப்பட்ட பயணங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி நடப்பதில்லை. நடைமுறைச் சூழ்நிலை வெளிக்கொணரும் மனித பலவீனங்கள், (அல்லது மனித பலவீனங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் சூழ்நிலைகள்) பாதையை மாற்றி விடுகின்றன. ராஜதந்திரம் (diplomacy) என்னும் பதம் பலவித சமரசங்களுக்கு வழிவகுக்கிறது, அதிலிருந்து அவர்கள் இலட்சியங்களின் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. எதிர்தரப்புடன், ஒரு சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் முன் ‘That means, …………….. that all we’re fighting for is power’ என Buendia சொல்கிறார், ஆக, அவர்கள் தங்கள் சமரசங்கள் குறித்து அறிந்தே இருக்கிறார்கள், ஆனால் அதைத் தடுக்க முடியாமலோ/ விரும்பாமலோ உள்ளார்கள். காலத்தை மாற்றப் புறப்பட்டவர்கள், பிறகு அது தங்களை செலுத்தும் திசையில் செல்லத் துவங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் யாரை/ எதற்காக எதிர்த்தார்களோ, அவர்களைப் போலவே/ அவர்கள் செய்ததையே இவர்களும் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ‘Buendia’ ஒரு கட்டத்தில் ரத்த வெறி பிடித்து எதிர்ப்பவர்கள்/ மாற்றுக் கருத்துடையவர்கள் என பலரை கொல்லத் துணிகிறார். இதில் அவர்கள் விழுமியங்களின் வீழ்ச்சி முழுமை அடைகிறது.
‘The Liberator’ என்று ஒரு கண்டத்து மக்களால் அழைக்கப்பட்ட ஒருவர், அவரிடம் இருந்த அதிகாரம் பறி போனபின், காட்சிகள் மாறும் கோலத்தை மென்சோகத்துடன் ‘The General in His Labyrinth’ நாவல் சொல்கிறது. எல்லையற்ற அதிகாரம் கொண்டவராக இருந்த பொலிவர், தன் இறுதிப் பயணத்தின்போது பல ஏளனங்களைச் சந்திக்கிறார், அவர் விடுவித்த நகரங்களில் அவருக்கு எந்த வரவேற்பும் இல்லை, அவர் மீது சாணம் வீசப்படுகிறது. தான் விடுவித்த கண்டம் தன் வாழ்நாளிலேயே பல (புதிய) நாடுகளாக பிளவுபடுவதை பார்க்கும் சோகம் அவருக்கு நேர்கிறது. இந்தப் பிளவுகளுக்கு (பொலிவர் / மற்றவர்களின்) ‘அதிகாரத்தின் ருசி’ ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். (தென் அமெரிக்க வரலாற்றை நன்கறிந்தவர்கள் இது குறித்து இன்னும் விரிவாகச் சொல்ல முடியும். காபோவின் புனைவை வைத்தும், சில இணைய இணைப்புக்கள் மூலமுமே என் கருத்துக்கள் உள்ளன).
காபோவின் இந்தப் பாத்திரங்கள் புனிதர்களோ, அரக்கர்களோ அல்ல. நம்மைப் போல் பல பலவீனங்கள் கொண்டவர்களே. பல ஊழல் புகார்கள், அவர் தென் அமெரிக்க கண்டத்தையே தன் அதிகாரத்திற்குள் கொண்டு வர நினைத்தார் என பொலிவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களாகச் சிலவற்றை காபோ சொல்கிறார். பொலிவர் அந்தக் கண்டத்தை ஒற்றை நாடாகவே பார்த்தார் என்றும் காபோ சொல்கிறார், எனவே பொலிவர் தரப்பிலும் அவர் பார்வையில் நியாயம் இருக்கலாம்.
இவர்கள் தங்கள் விழுமியங்களிலிருந்து முற்றிலும் விலகுபவர்களும் அல்லர். தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கும் முன், தன் தற்போதைய உடைமைகளைப் பார்க்கும்போது “We never would have believed, my dear Jose, that so much glory could fit into a shoe”, என்று பொலிவர் சொல்கிறார். சர்வாதிகாரி, கொடுங்கோலன் என்று ஒரு தரப்பால் நாவலில் குறிப்பிடப்படும் ஒருவரின் உடைமைகள் இவ்வளவுதான் எனும்போது அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை எப்படி அணுகுவது (எளிமை = புனிதம் என்ற ஒற்றைத்தன்மையை கணக்கில் கொள்ளாவிட்டாலும்)?. இலட்சியங்களின் சீர்கேடு (corruption ) என்பதை அதிகாரத்தைக் கொண்டு பணம், பொருள் கையாடல் என்று மட்டும் இல்லை, அந்த அதிகாரமே, அதன் போதையே சீரழிவாக மாறக்கூடும் (‘Power is the ultimate aphrodisiac’ என்று Henry Kissinger சொன்னதாக ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது அல்லவா?).
‘The Autumn of the Patriarch’ நாவல் அதிகாரத்தோடு எப்போதுமே உடன் வரும் அதிகாரம் குறித்த பாதுகாப்பின்மையையும் (insecurity), மிதமிஞ்சிய கர்வம் (hubris) குறித்தும் பேசுகிறது. நாவலில் வரும் பெயர் குறிப்பிடப்படாத குலத்தலைவன் (Patriarch), தன் பதவியைப் பறிக்க யாரோ சதித் திட்டம் தீட்டுகிறார்கள், அவர்களைத் தடுக்க வேண்டும் என்றே பல நேரம் யோசித்துக் கொண்டிருக்கிறார். தன்னைப் போலவே இருக்கும் ஒருவனை (doppelganger) கண்டுபிடித்து, தனக்கு பதிலாக சில அரசாங்க விழாக்கள்/ கூட்டங்களுக்கு அனுப்புமளவுக்கு, பாதுகாப்பின்மையை உணர்கிறார். தன் அமைச்சரவையை மொத்தமாக அழித்துவிட்டு “…, from now on I’m going to rule alone with no dogs to bark at me” என்று சொல்கிறார். தேதிகளை/ நேரத்தை மாற்றும் அளவிற்கு அவரின் அதிகார போதை செல்கிறது. ஒரு கட்டத்தில் தன் மக்களிடமிருந்து மிகவும் அந்நியப்பட்டு, முதியவர்களின் நினைவுகளைத் தவிர, வேறு யாருமே பார்த்திராதவராக, கிட்டத்தட்ட ஒரு தொன்மமாக உள்ளார். வல்லூறுகள் அவரின் மாளிகையை வட்டமிட ஆரம்பித்தவுடன்தான், அவர் இறந்ததே மற்றவர்களுக்கு தெரிய வருகிறது.
இந்த மூன்று நாவல்களில் நாம் பார்த்தவர்களில் ஒருவர் வரலாற்று நபர் (பொலிவர்), மற்ற இருவர் புனைவுப் பாத்திரங்கள். வேறு கண்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்கள் நாடுகளைப் பொறுத்து இருந்தாலும், அவர்கள் நமக்கு முற்றிலும் அந்நியமானவர்களாகத் தெரிவதில்லை. இவர்களைப் போலவே பிறரை நாமும் (எந்த நாடாக இருந்தாலும்) அறிந்திருக்கிறோம். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட மனிதர் என்றில்லாமல், இவர்களின் முன்மாதிரி (prototype) நாம் பார்த்துள்ள/ பார்க்கிற பல தலைவர்களின் கலவை.
அதிகாரம் என்னும் Labyrinthக்குள் உள்ள மினோடர் (Minotaur) என்னும் அரக்கனை அழிக்க, தீசியஸ் (Theseus) போல் அதில் நுழைபவர்களே ஒரு கட்டத்தில், அதிகாரத்திற்கு முற்றிலும் அடிமையாகி மினோடாராக (Minotaur) மாறும் விநோதத்தை நாம் கண்டிருக்கிறோம். ஜனநாயக ஆட்சியோ அல்லது சர்வாதிகார ஆட்சியோ, இதுவே நடக்கிறது, என்ன, அதிகாரத்தின் எல்லை மட்டுமே வேறுபடுகிறது. அப்படி மாறும் தலைவர்கள் அனைவரையுமே இந்தப் பாத்திரங்களில் காணலாம். ‘The General in His Labyrinth’ என்ற தலைப்பும் இவர்களில் பலருக்கும் பொருந்தும்.
“… How will I ever get out of this labyrinth!” என்று பொலிவர் இறுதியில் பெருமூச்சு விடுகிறார். தனங்கள் இலட்சியங்களிலிருந்து முற்றிலும் விலகாமல் உள்ள தலைவர்களிடமிருந்தும் இந்தப் பெருமூச்சு இன்றும் வந்து கொண்டிருக்கலாம்/ வர வேண்டும் என்று நம்புவோம்.

அதிகாரத்தின் மானுட முகங்கள் – பூமணியின் ஏட்டையாவும் ஆத்தியப்பனும்

பதாகை தளத்தில் வெளிவந்தது http://padhaakai.com/2014/03/09/poomani-police/)
--------
தினசரி செய்திகள், சொந்தங்கள்/ தெரிந்தவர்களின் அனுபவங்கள் மூலம் காவல்துறை பற்றி தெரியவருவதில் அந்தத் துறை குறித்து எதிர்மறையான கருத்துக்களே அதிகம் மக்களிடம் உள்ளன. ஆனால் காவல்துறை அதிகாரிகள் பற்றி திரைப்படங்கள், பல சாகச குற்றப்புனைவுகள் பொதுவாக அளிக்கும் பிம்பம், அவர்கள் எப்போதும் நீதியின்பால் நிற்பவர்கள், அதற்காக எதையும்/ யாரையும் எதிர்ப்பவர்கள், சாகசங்கள் புரிபவர்கள் என்பதாகும். இந்த ஒற்றைத் தன்மையிலிருந்து மாறுபட்ட ஆக்கங்களை மான்கெல் (Mankell) போன்றோர் தங்கள் குற்றப்புனைவுகளில் தந்திருக்கிறார்கள். ‘Ardh Sathya’ போன்ற திரைப்படங்கள் வந்துள்ளன. பொது இலக்கியத்தில், குறிப்பாக இடதுசாரி ஆக்கங்களில் வழிபாட்டுத் தன்மையற்ற சித்தரிப்புக்களைக் காண்கிறோம். இவற்றில் வெளிப்படும் காவல்துறை அமைப்பின் கோர முகம் அச்சுறுத்துவதாக உள்ளது- காவல்துறையினர் அரசு எந்திரத்தால் மனிதத்தன்மை அகற்றப்பட்டு (dehumanized), அவர்களே எந்திரங்களாக உள்ளனர்.
இப்படி நமக்கு கிடைத்துள்ள சித்தரிப்புக்கள் முக்கியமானவை என்றாலும் தெய்வம் X சாத்தான் என்றில்லாத மாறுபட்ட கோணத்தில் காவல்துறையினரை நெருக்கமாகச் சென்று பார்க்கும் சிறுகதைகள்/ நாவல்கள் பற்றி பார்க்கலாம். அதாவது. அவர்களை நாயக பிம்பத்தோடு வழிபடாமல், அவர்களுடைய செயல்களை நியாயப்படுத்தாமல், கதையின்/ நாவலின் முக்கிய பாத்திரங்களாக காவல்துறையினரை அமைத்து, அவர்கள் வாழ்வைப் பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கும் படைப்புக்கள். சு.ராவின் ‘பிரசாதம்’ சிறுகதை நினைவுக்கு வருகிறது. இன்னும் வேறு படைப்புக்கள் இருக்கலாம், அவற்றைத் தொகுத்தால் தமிழிலக்கியம் காவல்துறை பற்றி அளித்துள்ள சித்திரம் நமக்குத் தெரியவரும்.
பூமணியின் சிறுகதைத் தொகுதியில் உள்ள ‘நாக்கு’ சிறுகதை, காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தை மனம் பதைக்கும்படிச் சொல்கிறது. இதற்கு மாறாக அதே தொகுதியில் உள்ள, ஏட்டையாவும் ஆத்தியப்பனும் பிரதான பாத்திரங்களாக வரும் மற்ற சில கதைகள், காவல் துறையினரை அவர்களின் பலம்/பலவீனத்தோடு, சட்டப்படி இல்லாத, ஆனால் நடைமுறையில் அவர்களுக்கு இருக்கும் வரம்புகளோடு காட்டுகின்றன (பிரசாதம் கதையின் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு இன்னும் பல கதைகளில் வந்திருந்தால் இது போன்ற இன்னொரு சித்திரம் கிடைத்திருக்கும்).
ஏட்டையாவும் (இவர் பெயர் குறிப்பிடப்படுவதில்லை) ஆத்தியப்பனும் ஒரே ஸ்டேஷனில் வேலை செய்பவர்கள். ஏட்டையா வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் என்று நாம் யூகிக்கலாம். ஒருவருரை ஒருவர் அவ்வப்போது கிண்டல் செய்து சீண்டுவதிலிருந்து அவர்களிடையே உள்ள comfort-level மற்றும் அவர்கள் நண்பர்கள் போல்தான் பழகுகிறார்கள் என்றும் தெரிகிறது. இவர்கள் வரும் கதைகள் பூமணியின் மற்ற கதைகளைப் போலவே கனமான விஷயங்களைப் பேசினாலும், இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல்களில் உள்ள மெல்லிய நகைச்சுவையின் காரணமாக அவரின் மற்ற கதைகளைவிட இவை சற்றே இலகுவான தன்மையோடு உள்ளன.
இவர்கள் வழக்குடன் வருபவர்களையோ, பாதையோர, ரயில்வே கேட்டில் வியாபாரம் செய்பவர்களையோ அதிகார மமதையில் துன்புறுத்துபவர்களோ, அடித்துப் பிடித்து பணம் லஞ்சம் வாங்குபவர்களோ கிடையாது. அதே நேரம் முழுதும் நியாயசீலர்கள் அல்லர். ஐஸ் விற்பவன் பற்றி பேசும்போது, ஆத்தி ‘ருசியாருக்கும்’ என்று சொல்ல, ஏட்டையா “அதான பாத்தென். நம்ம ஆரத்தான் பாக்கிவச்சொம்”, என்கிறார். இது அவர்கள் அவ்வப்போது ‘அன்பளிப்பு’ வாங்கத் தவறாதவர்கள் என்பதை உணர்த்துகிறது.
ஏட்டையா தன் துறைமீதே அதிக நம்பிக்கை இல்லாதவர். தன்னிடம் வரும் பிரச்சினைகளை புகார் எதுவும் பதிவு செய்யாமல், தானே சமரசம் செய்ய இந்தக் கதைகளில் முயல்கிறார். ஒரு இடத்தில் சண்டை போட்டுக் கொண்ட இருவரை ஏன் வீட்டுக்கு அனுப்பினார் என ஆத்தி கேட்க, “போலீஸ் ஸ்டேசனுக்குப் போகச் சொல்றயா, அவங்க பட்டது போதாதுன்னு நம்மகிட்ட வேற மாட்டி சாணி தள்ளனுமா” என்று ஏட்டையா பதில் சொல்கிறார்.
ஏட்டையா முடிந்தவரை நியாயமாக சச்சரவுகளைத் தீர்க்க முயன்றாலும், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர். முழு நீதி வேண்டும் என்றெல்லாம் முயலாமல், அந்தச் சூழ்நிலையில் எது நடைமுறை சாத்தியமோ அதை ஒரு சமரசத் தீர்வாக சொல்லி, அதைச் செயல்படுத்த முயல்கிறார். ‘மட்டம்’ கதையில் ஏட்டையாவின் ஊருக்கு பக்கத்து ஊரில், இரு சாதிகளிடயே கோவிலில் கும்பிடுவது பற்றிய தகராறினால் அவர்கள் ஸ்டேஷன் வருகிறார்கள். வழக்கம் போல, வழக்கு பதியாமல் பிரச்சனைக்கு ஒரு சமரச தீர்வை சொல்கிறார். கோவிலில் வழிபட தடுக்கப்படுபவர்களிடம் தங்களுகென்று ஒரு தனி கோவில் கட்டிக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார், ஆதிக்க சாதி அதற்கு பண உதவி செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்.
நியாயப்படி பார்த்தால் கோவிலில் யாரும் வழிபடலாம் என்பதே சரியான தீர்வாகும். ஏட்டையாவும் குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக/எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அல்லர். பிரச்சனை தீர வேண்டும் என்று மட்டுமே நினைப்பவர். நடைமுறையை நன்குணர்ந்த அவருக்கு (பூமணிக்கு) இதுதான் சரியான தீர்வாகத் தெரிகிறது (கோவில் வழிபாடு என்பது ஆன்மிகம் சம்பந்தமான இடமாக இருந்து ஒரு சாதியின் அந்தஸ்த்தை, கௌரவத்தை நிர்ணயிக்கும் இடமாக எப்படி மாறுகிறது என்பதையும், அதனால் வரும் பிரச்சினைகளையும் மிக விரிவாக பூமணி ‘அஞ்ஞாடி’ நாவலில் விவரிக்கிறார்).
சிறு வியாபாரிகள், தெரிந்தவர்கள் பிரச்சினையை இப்படி ஓரளவுக்காவது தீர்த்தாலும், அவரை மீறிய தளத்தில் சம்பவங்கள் நடக்கும்போது இதுகூட செய்ய முடியாத கையறு நிலையில் ஏட்டையா இருக்கிறார். ‘குடை’ கதையில், ஏட்டையாவுக்கு தெரிந்த பெண் ஒரு அரசு அலுவலகத்தில் கிளார்க்காக வேலை செய்கிறார். லஞ்சம் எதுவும் வாங்காமல், தன் வேலையைச் சரியாகச் செய்பவர் அவர். லஞ்சம் வாங்கி காரியம் சாதித்துக் கொடுக்கும் ஒரு பியூனை அவர் கண்டிக்க, ஆத்திரத்தில் அலுவலகத்தின் அருகிலேயே அந்தப் பெண்ணை அருவாளால் வெட்ட முயல்கிறான் அவன். இதில் அந்தப் பெண்ணிற்கு அடிபட்டு விடுகிறது. அலுவலக சக ஊழியர்கள் யாரும் உதவ வரவில்லை என்பதோடு, அப்படி ஒரு சம்பவம் நடந்ததைப் பற்றி அறியாதவர்கள் போல் இருக்கிறார்கள். இந்நிலையில் ஏட்டையாவால் அந்தப் பியூனை கைதுகூட செய்ய முடிவதில்லை.
‘தகனம்’ கதையில் ஊரில் சாதிக் கலவரம் வெடிக்க, ரோந்துப் பணிக்கு ஏட்டையா செல்கிறார். தான் சிறுமியாகப் பார்த்து, இப்போது மணமுடித்து இருக்கும் பெண்ணைச் சந்திக்கிறார். இறுதியில் அந்தப் பெண் கொல்லப்பட்டு இருப்பதைப் பார்க்கிறார். இங்கும் அவருடைய ரோந்துப் பணி என்பது ஒரு கண்துடைப்பாகவே உள்ளது . சமூகப் படிநிலையில் சம அளவிலோ, அல்லது கீழோ இருந்தால் மட்டுமே ஏட்டையாவால் எதாவது செய்ய முடிகிறது, அங்குதான் அவருடைய அதிகாரம் செல்லுபடியாகிறது . இது அவருக்கு மட்டுமல்ல, சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் எனப் படிநிலையில் ஏதோ ஒரு அடுக்கில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
கறீம்பாய் என்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மரணச் செய்தியை அறிந்து, அவர் பற்றிய ஏட்டையாவின் நினைவுகளாக விரியும் ‘நாதி’ சிறுகதை நமக்கு இன்னொரு விதமான அதிகாரி பற்றி சொல்கிறது. கறீம்பாய் கலவையான மனிதர், நிறைய லஞ்சம் வாங்கினாலும், மற்றவர்களுக்கு அதை செலவழித்து விடுபவர். அதிரடியாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடிப்பவர் (ஒரு சமயம் தான் தேடி வந்தவர்களிடமே மாட்டி தீக்காயங்கள் அடைகிறார்). அதே நேரம் தான் தேடும்/ ஏற்கனவே பகையுள்ள ஒருவனைக் கொல்லும் முடிவோடு வந்து, பிறகு தற்காப்புக்காகச் செய்தேன் என்று தப்பித்துக் கொள்பவர். நிறைய லஞ்சம் வாங்கிய, அடாவடியாகத் திரிந்த கறீம்பாயை, குடும்பத்திற்கென்று எதுவும் சேர்க்காமல், கடைசி காலத்தில் பெண் பிள்ளைகள் பீடி கம்பெனி வேலைக்குச் செல்லும் நிலையில் வைத்த, குடும்பத்தை வறுமையில் விட்டுச் சென்ற கறீம்பாயோடு ஒப்பிட முடியுமா? கறீம்பாயின் செய்கைகள் எங்கும் நியாயப்படுத்தப்படவில்லை (தவறென்றும் சொல்லப்படுவதில்லை), ஏட்டையா/ ஆத்தியப்பன் போலல்லாமல் காவல்துறையின் இன்னொரு விதமான பிரதிநிதி அவர்.
காவல்துறை பற்றி இன்று நாம் அறிந்துள்ளதைப் பார்க்கையில், திரைப்பட பிம்பங்களை நிஜ வாழ்க்கையில் எதிர்பார்ப்பதைவிட மனசாட்சிக்கு பயந்த, குறைந்தபட்ச நியாய/ கடமை உணர்வு கொண்ட, அதே நேரம் யதார்த்தத்தை மீறிச் செல்லும் துணிவு இல்லாத, தனக்கு பாதிப்பில்லாமல் முடிந்த அளவு நன்மை செய்ய வேண்டும் என்றெண்ணும் ஏட்டையா போன்ற காவல்துறை அதிகாரிகள் இருந்தால்கூட போதும் என்றுதான் தோன்றும். என்ன செய்ய, இதுவும் ஒரு சமரசம்தான்.

Friday, April 11, 2014

வாழ்க்கையை மீட்டெடுக்கும் கற்பனை

சொல்வனம் இதழில் வெளிவந்தது (http://solvanam.com/?p=32177)
-------------------------
1939ஆம் ஆண்டு. ஆறு வருடங்கள் கழித்து முடியப் போகும் வெறியாட்டத்தை ஹிட்லர் துவக்கியிருந்த நேரம். உலகம் அவனுடைய எண்ணங்களின் தீவிரத்தையும், அது உண்டாக்கப்போகும் பேரழிவையும் முழுதும் புரிந்து கொள்ளாமலும், அல்லது புரிந்தும் அதை ஒரு பைத்தியக்காரனின் பிதற்றல்கள் என ஒதுக்கியிருந்த காலம். (Auschwitz முதலிய நாஜி வதைமுகாம்களைக் கைப்பற்றும்வரை அதை உலகம் முழுமையாக உணரவில்லை.)
அமெரிக்கா 30களின் பொருளாதார பின்னடைவிலிருந்து இன்னும் முழுதும் மீளாத காலம். தனித்திருத்தல் (isolationism) கொள்கையை இன்னும் பின்பற்றுவதால் போரில் நேச நாடுகள் அணியில் இதுவரை அமெரிக்கா சேரவில்லை. அதிநாயகர்கள் (superheroes), அமெரிக்க வானில் பறக்கத் தொடங்கியிருக்கும், ‘காமிக்ஸ்’ என்னும் ழானர் பிரபலமாகிக்கொண்டிருக்கும் காலம்.
இந்தக் காலகட்டத்தில் காமிக்ஸில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள ‘Sammy Klayman’ (க்ளே) என்னும் 19 வயது அமெரிக்க இளைஞன், 17 வயதான தன் ஒன்று விட்ட சகோதரன் ‘Josef (Joe) Kavalier’ ‘ஜோவை’ முதல் முறையாகச் சந்திப்பதோடு ‘மைகல் ஷேபன்’ (Micheal Chabon) எழுதிய ‘The Amazing Adventures of Kavalier & Clay’ நாவல் ஆரம்பிக்கிறது.
ஜோ ஜெர்மனியால் கைப்பற்றப்பட்ட Prague நகரத்திலிருந்து தப்பித்து வந்திருக்கிறான். ஹூடினி (Houdini) போல் புகழ் பெற்ற ‘Escape Artist’ஆக பயிற்சி எடுத்துள்ள அவன், ஓவியக் கல்லூரியில் பயின்றுள்ள ஓவியனும்கூட. தன் குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்து வருவதே ஜோவின் லட்சியமாக உள்ளது. இந்த இருவரின் சந்திப்பு, அவர்கள் கூட்டாக காமிக்ஸ் துறையில் அடையப்போகும் வெற்றிகளுக்கு அச்சாரம் இடுகிறது. அவர்கள் உருவாக்கும் காமிக்ஸ் நாயகர்கள்/ கதைகளுக்கு சவால் விடும் அற்புத சாகசங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. இங்கு சாகசம், போன்ற வார்த்தைகள் பக்கத்திற்கு பக்கம் சண்டைகள், பரபரப்பு போன்றவற்றைக் குறிக்கவில்லை. ஷேபன்(Chabon) ஒரு இடத்தில் .
“… cabinet of mysteries that was the life of an ordinary man”
என்று சொல்வது போல், சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழ்நிலையில் சிக்கி, பல நம்ப இயலாத, அதிநாயகர்கள் கதைகளில் எதிர்கொள்வதற்கு சற்றும் சளைக்காத சம்பவங்களைச் சந்திப்பதை விவரிக்கும் நாவல் இது. குண்டுகள் வெடிப்பது, பறப்பது என்றெல்லாம் இல்லாமலும் எந்த ஒரு தனிமனிதனின் வாழ்க்கையும் அவனளவில் சாகசம்தான், இல்லையா?.
இருவரையும் சந்திக்கவைத்து விட்டு, கதையை நிதானமாக புனைகிறார் ஷேபன். அவர்களுக்கு மட்டுமல்ல, துணை பாத்திரங்களுக்கும் தனித்தன்மை கொடுக்கிறார். இவை அனைத்தும் இணைந்து இந்த நாவலின் பிரபஞ்சத்தை உருவாக்குகின்றன.
ஷேபன் காலத்தில் பின்னோக்கி சென்று, Prague ஜெர்மனியின் பிடியில் அகப்பட்ட ஆரம்ப காலத்தை பற்றிய சித்திரத்தை அளிக்கிறார். Pragueஇல் உள்ள யூதர்கள் மீது அடக்குமுறை ஆரம்பிக்கப்பட்டு விட்டாலும்,அவர்கள் அது எந்தளவிற்கு போகும் என்பதை இன்னும் உணரவில்லை. ஆடு, மாடுகள் போல் யூதர்கள் அடைக்கப்பட்டு, வதைமுகாம்களுக்கு செல்லும் ரயில்கள் இன்னும் பயணிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, தங்கள் உடைமைகள், இருப்பிடம், கௌரவம் இவற்றை இழக்கத் தொடங்கி உள்ள காலம் அது. அவர்கள் தாய்நாடு அடையாளம் தெரியாத அந்நிய தேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்களான ஜோவின் பெற்றோர் வேலைகளை இழந்து விட்டார்கள். ஜோவை எப்படியாவது அமெரிக்கா அனுப்ப வேண்டும் என்று முயல்கிறார்கள்.
ஒரு இனம் தங்கள் மீது பெரும் இடி விழப் போவதை அச்சத்துடன் எதிர்பார்த்திருக்கும் காலத்தைக் காட்டும் அதேநேரத்தில் நம்பிக்கை முற்றிலும் இழக்காத காலமும்கூட அது என்று சொல்கிறார். நாஜி பிரசாரத்தை நம்பி (அல்லது வேறு வழியில்லாத நிலையில் நம்ப விரும்பி), உடைமைகள் இழந்தாலும் இதை விட மோசமாக எதுவும் நடக்காது என்று தங்களையே தேற்றிக்கொள்கிற காலம். ‘Kornblum’ என்ற தன்னுடைய மாஜிக் ஆசிரியர் உதவியுடன் ஜோ தப்புகிறான். அவன் தப்பும் விதம் எந்த ஒரு அதிநாயக சாகசத்திற்கும் சளைத்ததல்ல, ஆனால் நம்மால் அதை ரசிக்க முடியாது.
காமிக்ஸில் ஆர்வமிருந்தாலும் க்ளே அதை கலையாகப் பார்க்கிறான் என்று சொல்ல முடியாது. அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாகி வரும் துறை என்பதே அவனை அதன்பால் அதிகம் ஈர்க்கிறது. அவன் சிறந்த ஓவியனும் கிடையாது, ஜோவோ நல்ல ஓவியன் என்றாலும் காமிக்ஸ் பற்றி எதுவும் தெரிந்திராதவன், அவனுக்கு தன் குடும்பத்தை அமெரிக்கா அழைத்து வர பணம் தேவை. ஆக இருவரும் காமிக்ஸை கலையாக அணுகாமல் அவரவர் தேவைக்குப் பொருந்திவரும் துறையாகவே கருதி அதில் நுழைகிறார்கள். காமிக்ஸ் படைப்புக்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பது அவர்களை அந்தக் காலத்திய மற்ற காமிக்ஸ் படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்துகிறது.
ஒரு படைப்பில் அதை உருவாக்கிய கலைஞன் எங்கு, எந்தளவுக்கு உள்ளான், அவனுடைய அனுபவங்கள் அந்தப் படைப்பை உருவாக்குவதில் என்ன பங்கு வகிக்கின்றன போன்ற விஷயங்களை ஷேபன் நுட்பமாக காட்டுகிறார் . அவர்கள் உருவாக்கும் அதிநாயகனின் பெயர் ‘Escapist’ (தப்பிப்பவன்), அவனின் முக்கிய எதிரி ‘ஹிட்லர்’. அந்தக் காலகட்டத்தில் ஹிட்லரை முக்கிய எதிரியாக உருவகிப்பதும் ஜோவே. ஆனால் அப்படிச் செய்தால் அது ஏற்படுத்தக் கூடிய சலசலப்பை, அதன் மூலம் இந்தத் துறையில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வெற்றியை முதலில் கணிப்பவன் க்ளேதான். காமிக்ஸில் அதிக நம்பிக்கை இல்லாத, அவர்கள் வேலை செய்யும் பத்திரிகை முதலாளிகளையும் ஒப்புக் கொள்ளச் செய்பவனும் அவனே.
க்ளே போலியோவால் பாதிக்கப்பட்டவன், Escapistஉம் அப்படியே. escape artistஆக பயிற்சி பெற்ற ஜோ போல், Escapistஇன் பலமும் அதுவே. பெற்றோரை காப்பாற்ற வேண்டுமென்ற ஜோவின் லட்சியத்தின் வெளிப்பாடாக, Escapistஇன் நோக்கம், எங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் இருந்தாலும், அவர்களை விடுவித்து அங்கிருந்து தப்பிக்க வைப்பது. இந்த ஒற்றுமைகள் நேரடியாகக் குறிப்பிடப்படாமல் கதையின் போக்கில், வாசகன் புரிந்து கொள்வது போல் அமைக்கப்பட்டுள்ளன. அதுவரை போரில் கலந்து கொள்ளாத அமெரிக்காவில், இவர்கள் படைப்புக்கள் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. ஹிட்லர் எதிரியாக இருப்பதால் உண்டாகும் பரபரப்பால் அவர்களின் படைப்புக்களுக்கு கிடைக்கும் ஆரம்ப கால வெற்றி, அவற்றின் தரத்தால் தொடர்கிறது.
தன் நாவலின் பிரபஞ்சத்திற்குள், ஒவ்வொரு பாத்திரத்திற்கும் நுண்மைகூடிய, மிக விரிவான தனி உலகை சித்தரிக்கும் ஷேபன் அதே நேரம், சற்று விலகியும் நின்று வாசகனின் கற்பனைக்கு சில விஷயங்களை .விட்டு விடுகிறார். ரோஸா சாக்ஸ் என்ற பெண்ணிடம் காதல் கொள்கிறான் ஜோ. பணம், உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நண்பன்/ காதலி என இருந்தாலும் ஜோ மன உளைச்சலில் உள்ளான். தன் குடும்பம் தவிக்கையில் தான் மட்டும் தப்பி விட்டோமே என்ற குற்ற உணர்வு (survivor guilt) அவனை வாட்டுகிறது. தான் சந்தோஷமாக இருப்பது குறித்து வருந்துகிறான். ஹிட்லரை கதைகளில் வெல்வது, ஜோவை ஆற்றுப்படுத்தினாலும், அந்தக் கலையும் ஒரு கட்டத்திற்கு மேல் அவனைக் கைவிடுகிறது. நிஜத்தில் ஹிட்லர் பிரான்ஸ் நாட்டையும் கைப்பற்றி, மேலும் மேலும் வெற்றிகள் பெற, தன் கலையின் பால் ஏமாற்றம் அடைகிறான் ஜோ.
ஜோவை விட க்ளே எளிதில் புரிந்து கொள்ள முடியாதவனாக (ambiguous) இருக்கிறான். அவனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதாக இல்லை. அவனை செலுத்துவது எது, கலையா, பணமா, புகழா அல்லது வேறேதோ ஒன்றா? நாவல் செல்லச் செல்ல ஓரளவுக்கு தெளிவான சித்திரம் தெரிகிறது. க்ளே இரு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்க்கும் இடமும், அப்போது அவனின் மனநிலையும், ஜோ-ரோஸா உறவைப் பற்றி எண்ணும்போது why he isn’t jealous of Rosa (அவன் ஜோவை அல்லாமல் ரோஸாவை இங்கு சுட்டுகிறான் என்பதுதான் இங்கு முக்கியம்) என்று அவன் யோசிப்பதும் அவனுடைய பாலியல் விழைவை ஷேபன் மென்மையாக குறிப்புணர்த்தும் இடங்கள்.
நாவலின் மற்ற துணை பாத்திரங்களுக்கும் அவர்களுக்குரிய தனித்தன்மையை ஷேபன் தருகிறார். எதிலும் குறை கண்டுபிடிக்கும் அவர்கள் பத்திரிகை ஆசிரியர் ‘George Deasey’ (இவரின் சுட்டெரிக்கும் நக்கலை யாரும் ரசிக்கலாம், அதன் இலக்கு நாமாக இல்லாத பட்சத்தில்), ‘modest but genuine conscience’ (ஷேபனின் வார்த்தைகளில்) உடைய அவர்கள் வேலை செய்யும் பத்திரிக்கையின் அதிபர் ‘Sheldon Anapol’ (ஷேபனின் கூற்றுக்கேற்ப, சட்டப்படி நியாயமான, ஆனால் அறமற்ற வகையில் நம் நாயகர்களின் லாபத்தை பெரிதும் கையகப்படுத்திக் கொள்கிறார்), க்ளேவின் பெற்றோர் என அவர்களின் உலகம் முழுமையாக, நாவலை ஒட்டி உள்ளது. நாவலில் பெரிதும் துணை பாத்திரமாக வரும் ரோஸா இறுதிப் பகுதியில் முக்கியத்துவம் பெறுகிறார். அவநம்பிக்கைவாதியாக (cynic) ‘George ‘ மாற காரணம் என்ன, அவர் அடைந்த தோல்விகளா, வயலின் கலைஞனாக இருந்த ‘Sheldon’ ஏன் முழு முதலாளித்துவ (சக கலைஞர்களின் நியாயமான லாபத்தை அபகரிக்கும்) பாதையை தேர்வு செய்தார் என இவர்களைப் பற்றி தனி நாவலே எழுதக்கூடிய அளவிற்கு சில விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார் ஷேபன்.
நம் நாயகர்களின் கதைகளோடு, அவர்கள் உருவாக்கும் அதிநாயகர்களின் கதைகளும் வருகின்றன. தொழில்முறை எழுத்தாளர்களல்லாத, ஏதோ ஒரு வேகத்தில் உந்தப்பட்ட இளம் வயதுடையவர்கள் உருவாக்கும் படைப்புகள் என்பதால் ஒரு rawnessஓடு இந்தக் கதைகள் இருப்பது இயல்பாகவே உள்ளது.
ஷேபனும் காமிக்ஸ் ஆர்வலரே. காமிக்ஸை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துபவர். மன சஞ்சலமான ஒரு நேரத்தில், ஜோ ஆர்ச்சி (‘Archie’) காமிக் இதழ் ஒன்றைப் படித்தது குறித்து .
The escape from reality was, he felt—especially right after the war—a worthy challenge… The pain of his loss—though he would never have spoken of it in those terms—was always with him in those days, a cold smooth ball lodged in his chest, just behind his sternum.
For that half hour spent in the dappled shade of the Douglas firs, reading Betty and Veronica, the icy ball had melted away without him even noticing. That was the magic—not the apparent magic of a silk-hatted card-palmer, or the bold, brute trickery of the escape artist,but the genuine magic of art. It was a mark of how fucked-up and broken was the world—the reality—that had swallowed his home and his family that such a feat of escape, by no means easy to pull off, should remain so universally despised.
என்று எழுதுகிறார்.
ஆர்ச்சி காமிக்ஸ் மற்றும் கலை பற்றி ஒரு சேர பேச முடியுமா என்று நாம் நினைக்கலாம். அமெரிக்க pop-cultureஇல் அதற்குரிய இடம் நாம் அறிந்ததே. இங்கு காமிக்ஸ் ஜோவிற்கு கிளர்ச்சியையோ, போலியான மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை. வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவனுக்கு சிறிது நேரம் மன அமைதியைக் கொடுக்கிறது எனும்போது அதை ஏன் பழிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஜோ பணத்திற்காக முதலில் இந்தத் துறையில் ஈடுபட்டாலும் பிறகு அதை கலையாகக் காண்கிறான். அவன் ‘Escape Artist’ஆக பயின்றதும், காமிக்ஸில் செய்வதும் தொடர்புடையவைதான். பௌதீக உலகம் நம் மீது திணிக்கும் கட்டுப்பாடுகளை உடைத்து எல்லைகளில்லாத, எந்தத் தளைகளும் இல்லாத உலகத்தை நோக்கிததான் இரண்டும் நம்மைக் கொண்டுசெல்கின்றன. ஜோ சொல்வது போல்
“…the expression of an yearning that a few magic words and an artful hand might produce something – exempt from the crushing strictures, from the ills cruelties, and inevitable failures of the greater creation”
இந்த ஏக்கம் (yearning) தான் ஜோவை காமிக்ஸ் உலகிற்குள் இன்னும் ஆழமாக இழுத்துக் கொண்டு, அவனுடைய மனநிலை முற்றிலும் கெடாமல் பார்த்துக் கொள்கிறது எனும் போது மட்டையடியாக காமிக்ஸ், கலை அல்ல என்று சொல்ல முடியுமா? ‘long underwear’ (ஷேபனின் வார்த்தைகளில்) அணிந்திராத, எப்போதும் தீவிரமாக உலா வரும் பாத்திரங்கள் இருப்பதாலேயே ஒரு சராசரி ‘பொது இலக்கியப்’ படைப்பு காமிக்ஸை விடச் சிறந்தது என்று கொள்ள முடியுமா? எல்லா கலைகளையும் போல் இதிலும் சிறந்த, மோசமான, சுமாரான படைப்புக்கள் உள்ளன அல்லவா?
ஆனால் க்ளே முன்பே சொன்னது போல காமிக்ஸை மலிவான கலையாகத்தான் பார்க்கிறான். அவன் தாய்கூட இதை அப்படித்தான் பார்க்கிறார், காமிக்ஸ் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் பணம், புகழ் அவரின் எண்ணத்தை மாற்றுவதில்லை, காமிக்ஸ் என்பது எப்போது வேண்டுமானாலும் வழக்கொழிந்து போகும் என்பதே அவர் தரப்பு. க்ளே ஒரு (அவனால் முடிக்க முடியாத) ‘நாவல்’எழுத முயல்வதுகூட ஒரு ‘இலக்கிய’ அங்கீகாரம் வேண்டித்தான்.
ஷேபனின் மிக விரிவான கதைப் பின்னல் ஒரு சில இடங்களில் நாவலின் மைய இழையிலிருந்து விலகிச் செல்கிறது. ஒரு துயரச் சம்பவத்தைப் பற்றி ஜோ அறிந்தபிறகு நடப்பதைப் பார்ப்போம். அவனுடைய குற்ற உணர்வு (survivor guilt) இன்னும் மோசமாகிறது. அமெரிக்க ஜெர்மானியர்களுடன் வீண் சண்டை பிடித்து, அவர்களிடம் அடிபடுவது போன்ற தன்னைத்தானே வறுத்திக்கொள்கிற செயல்களைச் செய்கிறான். இது புரிந்துகொள்ளக் கூடியதே. இப்படி நடக்குமா என்பதல்ல இங்கு கேள்வி, மிகவும் மனமுடைந்த நிலையில் மனிதன் என்ன செய்வான் என்று யார்தான் உறுதியாகச் சொல்ல முடியும்? ஆனால் இந்த வம்புச் சண்டை பற்றிய விவரிப்புக்கள் தொடர்ந்து பல பக்கங்கள் விரியும்போது ஷேபன் ஜோவுடன் நாம் இன்னும் பச்சாதாபம் கொள்ளவே இதை வலிந்து திணிக்கிறார் என்று தோன்றுகிறது.
பொதுவாக ஜோ/ரோஸா இருவருக்கிடையே உள்ள உறவை, க்ளே/ட்ரேசி உறவைவிட நன்றாகக் கையாண்டிருக்கிறார். க்ளே தன் பாலியல் விழைவு பற்றி குழப்பம் உடையவனாக இருப்பதால் அவனின் உறவுகளில் சஞ்சலம், நிலையின்மை, அதில் அவனால் பொருத்திக் கொள்ள முடியாத நிலை (awkwardness) இருப்பது இயல்பானதே. ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யும் இரவில், க்ளே டிரேசியுடன் இணைவது போன்ற சில வகைமாதிரி (cliche) சூழல்களும் அவன் உறவுகளின் சித்தரிப்பில் இருப்பது துரதிருஷ்டவசமானது.
இருவரின் காமிக்ஸால் கோபமுற்று, இனவெறி கொண்ட சில அமெரிக்க ஜெர்மானியர்கள் (domiciled Germans) அவர்களுக்கு தீங்கிழைக்க முயல்வது ஒரு உப கதையாக நாவலில் உள்ளது. போரின்போது அமெரிக்க ஜெர்மனியர்களின் மன உணர்வுகள்,மற்ற அமெரிக்கர்கள் பொதுவாக அவர்களை எப்படிப் பார்த்தனர், போருக்கு முன் அவர்களுடன் இருந்த உறவு எப்படி மாறியது என இதை இன்னும் விரிவாகத் தொட்டிருக்கலாம். ஆனால் நாவலில் உள்ள இந்தப் பகுதிகள், அதன் இயல்பான போக்கோடு ஒட்டாமல் இருக்கிறது.
ஜோ, க்ளே இருவரும் தங்கள் வாழ்க்கையுடன் ஓரளவுக்கு சமரசம் செய்து கொண்டிருக்கும் நிலையில் நிகழும் இரு (தனித்தனி) சம்பவங்கள் அவர்களை புரட்டிப் போட்டு, அவர்கள் செல்லும் திசையையே மாற்றி விடுகின்றன. இங்கு ஒரு விஷயம். இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடக்கின்றன. சரி இதை கவித்துவ உரிமை என்று கொள்ளலாம். ஆனால் அன்றுதான் ‘Pearl Harbor’ தாக்குதலும் நடக்கிறது எனும்போது, இதுவும் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
The true magic of this broken world lay in the ability of the things it contained to vanish, to become so thoroughly lost, that they might never have existed in the first place
என்று நாவலில் ஒரு இடத்தில் ஷேபன் சொல்கிறார். அன்பு மட்டுமே இந்த மாஜிக்கை வெல்ல முடியும். அது மட்டுமே மறைந்த விஷயங்களை, நினைவில் வைத்திருந்து ஒரு வேளை அந்த விஷயம் மீண்டும் கிடைத்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்யும். பகிர்ந்து கொள்ள யாருமில்லாதது என்ன வாழ்க்கை? தனக்கேற்பட்ட அனுபவங்களிளால் ஜோ யாருமில்லாமல் இருக்கக்கூடிய சூழல் பற்றிய பயத்தால் எப்போதுமே பீடிக்கப்பட்டிருக்கிறான், அதுவே அவனை அலைக்கழிக்கிறது, அதுவே அவனை தன் (கர்ப்பமாக உள்ள ) காதலி/ நண்பன் இருவரையும் பிரிந்து செல்ல வைக்கிறது.
நாவலின் கடைசி பகுதி ‘Pearl Harbor’ சம்பவத்திற்கு பத்து ஆண்டுகளுக்குப் பின் நடக்கிறது. போருக்குப் பின் அதிநாயகர்கள் வரும் காமிக்ஸின் அபிரித தேவை குறைகிறது.
ஒரு கலைஞன் அறிவுஜீவி என்றோ முட்டாள் என்றோ குறிப்பிடப்பட்டாலும், தன் படைப்புக்கள் ஏதோ ஒரு வகையில் எதிர்வினைகளை உருவாக்குகின்றன என ஆறுதல் கொள்ளலாம், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டலோ சமூகம் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப்படலாம். ஆனால் அவனுடைய இருப்பு அங்கீகரிக்கப்பட்டு, அதே நேரம் பொருட்படுத்தத் தகாதவனாக (mediocre) அவன் அலட்சியப்படுத்தப்பட்டால் அதை அவனால் தாங்க முடியாது. அதுவும் க்ளே போன்ற, தன் துறையில் உச்சத்தை அடைந்த ஒருவர் இப்படிப்பட்ட சூழலை எதிர்கொள்வது மிகக் கடினம். க்ளே அந்த நிலையில் உள்ளான். வாழ்க்கையை ஓட்ட சராசரி படைப்புக்களை உருவாக்குபவனாக அவன் உள்ளான். ஒரு ‘இலக்கிய நாவல்’ எழுதும் அவன் முயற்சி முடிவுறவில்லை .
ஜோ அவர்கள் வாழ்விலிருந்து விலகிய பிறகு, க்ளே ரோஸியை மணந்து அவள் மகளுடன் வாழ்கிறான்.இதை நட்பிற்கான தியாகமாகவோ, அல்லது க்ளே தன் பாலியல் குறித்த மற்றவர்களின் சந்தேகங்களைப் போக்கச் செய்ததாகவோ ஷேபன் சொல்வதில்லை. அதை வாசகனின் முடிவுக்கு விட்டு விடுகிறார். மிகக் குறைவாகவே வரும், ஜோவின் மகன் டாமியுடன் க்ளே கொண்டிருக்கும் உறவு குறித்தப் பகுதிகளும் வாசகனை நாவல் முடிந்தும் யோசிக்க வைப்பவை.
இந்நிலையில் ஜோ மீண்டும் அவர்கள் வாழ்வுக்குள் நுழைகிறான். ரோஸா, க்ளே, ஜோ மூவரும் க்ளே வீட்டில் பேசிக்கொள்கிறார்கள். ஜோ தன் செய்கைகளுக்கு சில காரணங்கள், அது குறித்த குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்த முயலும்போது க்ளே
“Christ, Joe, you fucking idiot,” Sammy said. “We love you”.
என்கிறான். இது ஒரு எளிய வாக்கியம்தான். அதில் பொதிந்திருக்கும் அன்போ மிக ஆழமானது. நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் நாம் சொல்வதைக் கேட்காமல், நம் உதவியை ஏற்றுக்கொள்ளாமல் துன்புறும் போது அவர் மேல் நாம் கொண்டுள்ள அன்பு, கோபமாக/ஆதங்கமாக வெளிப்படும் அல்லவா.
(பத்தாண்டுகள் சென்று விட்டாலும், அந்த மூவரிடையே உள்ள அன்பு முன்னளவுக்கு இல்லாவிட்டாலும், முற்றிலும் மறைந்து விட்டிருக்காது இல்லையா). இப்படிப் பட்ட சூழலில் வியாக்கியானம் பண்ணுவது போல் பேசுவதைவிட இதுவே இயல்பாக உள்ளது. (love means never to say you’re sorry’ என்ற வரி அதிகப்படியான ஒன்றாக இருந்தாலும், அதிலும் ஒரு உண்மை உள்ளது அல்லவா?)
இந்தப் பத்தியை படிக்கும்போது, இந்த வரியை அதிகமாகப் புகழ்வது போல் தோன்றலாம். ஆனால் நாவலில் மூவருக்கிடையே உள்ள உறவோடு இந்தக் காட்சியை இணைத்துப் பார்க்கும்போது இதன் தாக்கம் புரியும். இவ்வளவு சுருக்கமாக, உச்சகட்ட மனவெழுச்சியை ஏற்படுத்தும் ஒரு காட்சியை கடந்த நான்கைந்து ஆண்டுகளில் நான் அதிகம் படித்ததில்லை.
காமிக்ஸ் கலை/ கலையல்ல என்ற விவாதங்களைத் தாண்டி காமிக்ஸ் சமூகத்திற்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும் என்றும் ஒரு தரப்பு அன்று(இன்றும்) இருந்துள்ளது .’Fredric Wertham’ என்ற உளவியல் மருத்துவரால் 1954இல் எழுதப்பட்ட ‘ Seduction of the Innocent’ என்ற நூல் காமிக்ஸ் போன்ற எழுத்து வகைகள் சமூகத்தில் ‘ஓர்பால் சேர்க்கை’ போன்ற ‘ஒழுக்கக் கேடுகளை’ ஊக்குவிக்கின்றன என்று கூறியது. (Batman/Robin உறவு குறித்த ஹேஷ்யங்கள் இன்றும் உள்ளன) அமெரிக்க செனட் செயற்குழு ஒன்று இது குறித்த விசாரணையும் மேற்கொண்டது. இதில் விசாரிக்கப்படும் க்ளே, அவனுடைய பாலியல் விழைவு குறித்த சந்தேகங்களால் அவமானப்படுத்தப்படுகிறான்.
தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் அந்த விசாரணை பலரால் பார்க்கப்பட்டு அவர்களின் கேலிக்குள்ளாகிறான். ஆனால் இது ஒரு விதத்தில் நன்மையையும் செய்கிறது. வாழ்வு முழுதும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அவன், உலகை நேரடியாக எதிர்கொள்ள முடிவெடுக்கிறான். ஜோ/ ரோஸி தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க முயல்கிறார்கள்.
நட்பு, அன்பு, காதல் என பல இழைகள் இருக்கும் இந்த நாவலின் எல்லாவற்றைவிட முக்கியமானதாக இருப்பதை ஒரு பாத்திரம் சொல்வதின் மூலம் பார்ப்போம்.
“there is no force more powerful than that of an unbridled imagination”.
இதுதான் இந்த நாவல். அதீதமான விஷயங்களை யோசிப்பதும், கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க முயல்வதுமே நாம் எண்ணிப் பார்த்திராத பல விஷயங்களை சாதித்திருக்கின்றன. எனவே தான் எல்லா காலத்திலும் அரசுகள் கற்பனைக்கு கடிவாளம் போட முயன்றுள்ளன.
இந்த விசைதான் ஜோவை எப்படியாவது தன் குடும்பத்தைக் காக்க முயற்சி செய்ய வைக்கிறது, பதின்வயதிலேயே க்ளே ஒரு காமிக் சாம்ராஜ்யம் அமைப்பதைப் பற்றி கனவு காண வைக்கிறது. கற்பனைகள் அனைத்தும் நனவாவதில்லை. ஜோ/ க்ளேவின் கற்பனைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களுக்கு சில நேரம் வெற்றி, சில நேரம் தோல்வி என மாறி மாறி வந்து ஒரு கட்டத்தில் கற்பனை அணைந்தே விட்டது போல் தோன்றினாலும், நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருக்கிறது.
இறுதியில், ஜோ வந்தபிறகு எடுக்கப்படும் முடிவுகளோடு, இவர்கள் வாழ்க்கையில் அந்தக் கங்கு மீண்டும் கொழுந்துவிட்டு எரியும்/ எரிய வேண்டும் என்ற நம்பிக்கையோடு/ விருப்பத்தோடு நாவலின் பாத்திரங்களிடமிருந்து நாம் விடைபெறுகிறோம்.
- See more at: http://solvanam.com/?p=32177#sthash.9cixKH88.dpuf

உயிர்த்தெழும் நினைவுகள்/கடந்த காலம் - அசோகமித்திரன்

சொல்வனம் இதழில் வெளி வந்தது (http://solvanam.com/?p=31322)
-----------
ஒரு காலகட்டத்தில் நடந்து முடிந்த சம்பவங்களை இறந்தகாலம், கடந்தகாலம் என்றெல்லாம் நாம் குறிப்பிட்டாலும், அவை நினைவிலிருந்து முற்றிலும் மரிப்பதில்லை, நாமும் அவற்றை முற்றிலும் கடந்து விடுவதில்லை. சில நினைவுகளை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்தாலும் சரி, அவை  காலப்போக்கில் தானாகவே மங்கினாலும் சரி,  அவை நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்து நாமே எதிர்ப்பாராத போது வெளிவருகின்றன. எவ்வளவு சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு நினைவின் அடுக்குக்களில் எதாவது மிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே தான் பல பத்தாண்டுகளாக அசோகமித்திரன், தன் பால்ய/பதின் பருவ நினைவுகள் குறித்து  நிறைய எழுதி இருந்தாலும், கடந்த 2-3 ஆண்டுகளில் வெளிவந்த அவரின்  சிறுகதை/குறுநாவல்கள் தொகுப்பு நூல்களான ’1945ல் இப்படியெல்லாம் இருந்தது’(சிறுகதைகள்), ‘நண்பனின் தந்தை’ (இரு குறுநாவல்/நெடுங்கதைகள் , மூன்று சிறுகதைகள்)  இரண்டிலும், வேறு வேறு களத்தின்/காலகட்டத்தின்  கதைகள் இருந்தாலும், அவரின் பால்ய/பதின் பருவ கால நினைவுகள் சார்ந்த கதைகளே பிரதான பங்கு வகிக்கின்றன.
அசோகமித்திரனின் புனைவுலகை ஏற்கனவே அறிந்தவர்களுக்கு பழக்கமான பாத்திரங்களை/களங்களை இந்தக் கதைகளில் நாம் காண்கிறோம். பத்து, பன்னிரண்டு வயதில்  பேதமையுடன் அனைத்தையும் உள்வாங்கும், என்ன நடக்கிறது  என்று முழுதும் புரியாவிட்டாலும் உள்ளுணர்வில்  ஏதோ தவறு என்பதை மட்டும் எப்படியே உணரும் சிறுவன் (‘லீவு லெட்டர்’ நெடுங்கதை ), அந்தப் பேதைமை நீங்கும்/நீங்கப்போகும் கல்லூரி படிக்கும் பதின்ம வயதுடையவன் என இவர்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான். இவர்கள் மட்டுமல்ல, ‘பதினெட்டாவது அட்சக்கோட்டின்’,  மஸூத்தும், நாசிர் அலிகானும், ”தோஸ்த்’  கதையில் பெயர் குறிப்பிடப்படாத ‘தோஸ்த்தாகவும்’,  ’சுப்பாராவ்’ கதையில், ‘நஸீராகவும்’ வருகிறார்கள். ‘இரண்டாவது    ரிச்சர்ட்’ நாடகத்தில் , ‘ஜான் ஆப்காண்ட்’, ‘ரிச்சர்ட்’ இருவருக்கும் மேலாக புலம்பும் ரங்காவுக்கு பதில் ‘மாணிக்கம்’ என்ற புது ஆங்கில உரைநடை ஆசிரியர்.  போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் மேயச்சென்று விடும் கோணல் கொம்பு மாட்டையும், ‘சனீஸ்வரன்’ என்றழைக்கப்படும் ஜோசியரையும், கிரிக்கெட் பற்றிய பதிவுகளையும் நாம் மீண்டும் இந்தக் கதைகளில் சந்திக்கிறோம். இங்கு பழைய கதைகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்று எண்ண வேண்டாம்,  கோணல் கொம்பு மாட்டிற்கு என்ன ஆனது, தோஸ்த்தின் தந்தை, என இவர்களைப் பற்றி நுட்பமான வேறுபாடுகளுடன் இன்னொரு கோணத்தில் தெரிந்து கொள்கிறோம். அ.மி புனைவுகளில் தந்தை இறந்த பிறகு தலைமகனாய் (அக்காக்கள் உண்டு) குடும்ப பாரத்தை சுமக்கும் கதைசொல்லியை அதிகம் பார்த்த நாம், ‘பம்பாய் 1994′ குறுநாவலில் அவரின் அண்ணனையும் பார்க்கிறோம்.  (இள வயதில் தந்தையை இழப்பதைப் பற்றி அதிகம் எழுதும் இன்னொருவர் ‘யுவன் சந்திரசேகர்’. ஆனால் யுவன் கதைகளில் வருவது போல் இங்கு கதைசொல்லி தந்தையுடன் நெருக்கமாக இருப்பதில்லை, தந்தை-மகனிடையே formal உறவையே அசோகமித்திரன் புனைவுகளில் காண்கிறோம்).
ஐம்பது-அறுபது ஆண்டுகளுக்கு முன் நடக்கும் சம்பவங்கள் என்பதால் அந்த நாட்களைப்  பற்றிய பதிவுகள் நிறைய உள்ளன. அடர்த்தியாக சொல்லப்படும் தகவல்கள், ஓவியர் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்கும் போது உருவாகும் வரிவடிவங்கள், ஒரு கட்டத்தில் ஒன்றிணைவதைப் போல் கதைகளோடு பொருந்தி விடுகின்றன. கதைசொல்லி பதிவு செய்யும்
தார் ரோடுகளில் இருபுறமும் நிறைய வெற்றிடம் இருந்ததால் அங்கேயே நின்றுகொண்டு பார்த்துக் கொண்டே இருக்கலாம்எங்கோ அங்கொரு கட்டடம்இங்கொரு கட்டடம்கூரைசீமை ஓடு வேய்ந்ததாக இருக்கும்எப்பக்கம் திரும்பினாலும் பிரம்மாண்ட ஓவியம் போலத் தோன்றும்
நிலவியல்  இன்று அருகி வரலாம், ஆனால் மின்வசதி இல்லாத இருட்டான மருத்துவனைகள் இன்றும் இருக்கக்கூடும்.
 ஆனால் இந்தக் கதைகள் கடந்த காலத்தைப் பற்றிய பதிவுகள் மட்டுமே அல்ல. இவற்றில் வரும்  மனித உணர்வுகளும்/உறவுகளும்  இன்றும் பொருத்தமானவை.  தீ விபத்தின் கோரத்தால், மிகுந்த மன உளைச்சலுக்கு (PTSD)  ஆளாகும் கதை சொல்லியின் அண்ணனின் உணர்வுகளை, தந்தை இல்லாமல் தாயின் உறவினர்கள் வீட்டில் வாழும் சிறுவனின் உணர்வுகளை, அவனுக்கு இயல்பாக நடக்கும் புறக்கணிப்பை,டாங்காக்காரர், பள்ளிக் காவலாளி இவர்கள் மீதும் ஏற்படும் குழந்தைமையான ஈர்ப்பை (ஆனால் பெரியவர்கள் இவர்களை கண்டுகொள்வதில்லை, எளிதில் மறந்தும் விடுகிறார்கள்)  , ஓரிரு வயதான சகோதர/சகோதரியை இழந்து, முகமே நினைவிலிருந்து மறைந்து (புகைப்படங்கள் அதிகம் எடுக்காத காலம் அது),சிரிப்பாக,மழலையாக மட்டுமே  நினைவில் தங்குவதை யாரும் உணர முடியும்.
‘பம்பாய் 1944′ குறுநாவல்  ’bildungsroman’ (ஒருவன் தன் பேதைமை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சிறுவன்/இளைஞன் பிறகு ஆண் என்று மாறுவதை விவரிப்பது) பாணி கதை. உறவினர் வீட்டில் வாழும் கதை சொல்லி, பிறகு அண்ணனுடன் பம்பாயில் வசிக்கிறான். படித்து முடித்து வேலைக்கு செல்கிறான், புதுஅனுபவங்களை/எதிர்கொள்கிறான். அவனுக்குத்  தெரிகிறதோ இல்லையோ, அவனைத் தொடரும் வாசகனுக்கு அவனுக்கு ஏற்படும் முதிர்ச்சி புரிகிறது. புது உறவுகள் மலரும் என்ற நிலையில், ’மணல்’ குறுநாவல் போல், ஒரே நேரத்தில், திடீரென்று   முடிந்து விட்டது போன்றும், அதே நேரம் மிகப் பொருத்தமானதாகவும் தோன்றும் tantalizing முடிவோடு, கதை முடிகிறது. பால்ய காலத்தைப் பற்றிய இந்தக் கதைகள் தனித் தனியாக பார்க்கும் போது, மற்றவற்றிலிருந்து வேறுபட்டு அதே நேரம் தன்னளவில் முழுமையாக  இருந்தாலும், இவற்றை மொத்தமாகப் பார்ப்பது அ.மி  சொல்வதை ஒரு முழு வாழ்க்கையாக/நிலவியலாக/காலகட்டமாக தொகுத்துக் கொள்ள உதவுவதோடு அவர் புனைவுகளைப் பற்றிய இன்னும் காத்திரமான சித்திரத்தை அளிக்கும்.
நிறையத் தகவல்கள் இருந்தாலும்,  ஊதிப் பெருத்த உரைநடையாக இல்லாமல், எப்போதும் போல் எளிமையான அதே நேரம் அடர்த்தியான உரைநடையை இந்தக் கதைகள் கொண்டுள்ளன. ஒரு கதையில், கதை சொல்லியின் தந்தை அவன் பிறப்பதற்கு முன்பே இறந்து விட, தன் பால்ய கால அனுபவத்தை
எனக்கு ஒரு அண்ணா உண்டு.  சுந்தரம்அவன்அப்பா இருக்கிற சிறுவனாக உறவினர் வீட்டுக்குப் போய் விளையாடியிருக்கிறான்நான் எப்போதுமே அம்மாவுடன் சமையல் அறையில்இல்லது போனால் இருட்டாக உள்ள ஸ்டோர் அறையிலேதான் வளர்ந்தேன்குழந்தையிலிருந்து அடுப்புக் கணப்புடன் இருட்டுக்கும் எனக்குப் பழக்கமாகிவிட்டது
சொல்லும் சிறு பத்தி, கதைசொல்லியை பற்றி மட்டுமல்ல, அவன் தாயின் நிலைமை பற்றியும், ஏன் ஒரு காலத்தில்  கணவனை இழந்த பெண்கள் அனைவரின் நிலைமையையும் (இன்றும் அந்தச் சூழல் சில இடங்களில் இருக்கக் கூடும்), ஒரு பறவைக் கோணத்தில் சொல்லி விடுகிறது
நிஜாமின் புகைப்படங்களை பற்றி அவை “‘என்னால் என்ன செய்ய முடியும்’ என்று கூறுவது போலிருந்தது”, ஐந்து பெண்களைப்  பெற்ற ராமலட்சுமி, முதல் மூன்று பெண்களுக்கு உறவிலேயே திருமணம் முடித்தப் பின் “உறவினர்களில்  அதற்கு மேல் யாரையும் கண்டெடுக்க முடியவில்லை”  எனபதால் வரதட்சணையோடு கல்யாணம் செய்ய வேண்டிய நிலைமை என வாழ்வில் இயல்பாக, அதன் துயரத்திலும் உள்ள அபத்தத்தை, தனக்கே உரிய இயல்பான அங்கதத்தோடு, அதே நேரம் சக மனிதர்கள் மேல் உள்ள பரிவோடும் கூறிச்செல்கிறார்.
பெண்கள் படும் துயரங்களை, அவர்கள் வாழ்வை பரிவோடும், கருணையோடும் எழுதுபவர் அ.மி. இந்தப் பெண்கள் ஒரே வார்ப்பில் படைக்கப்பட்டவர்கள்  இல்லை.  முற்றிலும் பலவீனமானவர்களோ அதே நேரம் தங்கள் தளைகளை தகர்த்தெரிபவர்களோ  இல்லை. தன் ஐந்து பெண்களையும், கணவனின் தயவின்றி வளர்க்கும் திடம் ராமலக்ஷ்மியிடம் (கட்டைவண்டி) உள்ளது. அவர் கடைசி பெண் சுய முயற்சியில் கணினி கற்று, முன்னேற முயல்கிறார். ஆனால் கணவர் என்ன செய்கிறார் என்று பிறர் ராமலக்ஷ்மியிடம் கேட்டால்   “அவர் என்ன பண்ணுவார். கட்டைவண்டி ஓட்டுவார் ” என்று (சமுதாயம்/மரபு கற்பித்துள்ளபடி)விட்டுக் கொடுக்காமல் சொல்கிறார். கணவன் இறந்த பின், தன் பிறந்த வீட்டில் குரலற்றவராகவே பல காலம் இருக்கும் கதைசொல்லியின் தாய் (பம்பாய் 1944), தன் பெரிய மகன் வேலைக்குச்  சேர்ந்து, ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்து, அவனுடன் வசிக்க ஆரம்பித்தவுடன், இயல்பாகவே தன்னுடைய ஆளுமையை மீட்டெடுத்து யாரும் அறிவிக்காமலேயே, பெரிய மகன்/மருமகள், சிறியமகன் உள்ள அந்த வீட்டின் தலைவராகிறார். ஆனால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை.
நிகழ்காலத்தில் நடக்கும் ’ஒரு சொல்’,'குடும்ப புத்தி’ ஆகிய கதைகளில் வரும் பெண்கள் நாம் மேலே பார்த்தவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், இவற்றின் கோணமும் கோணமும் வேறு மாதிரி உள்ளது.இந்தக் கதைகளில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். இவற்றில் மனைவி, கணவனை மோசமாக ஆதிக்கம் செலுத்துபவராக உணர்த்தப்படுகிறார். கணவன், சமையல் போன்ற வேலைகளில் மனைவிக்கு உதவுவது மிகவும் பெருந்தன்மையான விஷயமாக (பல கணவர்கள் நிஜத்திலும் அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்பதும் உண்மை),அதை அவர்களின் மனைவிகள் உணராதவர்களாக இருக்கிறார்கள். நவீன யுகத்தில் மாறி வரும் கணவன்-மனைவி உறவின் இயக்கங்களை (dynamic), ஆண் உணராமல் இருப்பதை இந்தக் கதைகளில் குறிப்பிடுகிறாரா, அல்லது இவை ஆசிரியரின் கருத்தா என்று தெளிவாக இந்தக் கதைகளில் வெளிவரவில்லை 

‘சுப்பாராவ்’ என்ற கதை கதைசொல்லியின் அணிக்கு கிரிக்கெட் போட்டியில் கிடைத்த எதிர்பார்க்கவே  முடியாத வெற்றியைப் பற்றியது
.  ’under dog’ வெற்றி பெறுவது என்ற பொது இழை இருப்பதால்  ’ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ தொகுப்பில் உள்ள ‘பேப்பரில் பேர்’ கதையை இது ஞாபகப் படுத்தினாலும்,இரண்டிலும் கதைசொல்லிகளின் பார்வை வேறு.
சுஜாதாவின் கதையில் ஒரு சாகச உணர்வு உள்ளது. பலஆண்டுகள் கழித்தும், கே.விக்கும், சுஜாதாவுக்கும் வெற்றியின் அந்தச்  சிலிர்ப்பு, இன்னொரு போட்டி ஏற்பாடு செய்யலாமா என்று விளையாட்டாக பேசுமளவுக்கு உள்ளது.  ‘சுப்பாராவ்’கதையில்,வென்றதைப் பற்றிய  நம்பமுடியாமையை (wide eye disbelief), மேட்ச் நடந்த அன்றும் சரி, ஐம்பது ஆண்டுகள் கழித்து அதை நினைவு கூறும் போதும் சரி கதை சொல்லி உணர்கிறார், கண்டிப்பாக இவர் மறு போட்டி பற்றி பேச/நினைக்கக் கூட மாட்டார்.  மேலும் இந்தக் கதையின் மையப் புள்ளி, மேட்சில் வென்றது அல்ல.  போட்டிக்குள்-போட்டியாக (contest within a contest), கதை சொல்லியின் மனதில் ஐம்பதாண்டுகளாக உள்ள ஒரு சிறு உறுத்தலே மையப் புள்ளி. ஒரே கதை களத்தை/சம்பவத்தை இரு எழுத்தாளர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்ற வகையிலும்  இந்தக் கதை சுவாரஸ்யமானதே.
‘உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி’, ‘கடை திறக்கும் நேரம்’ கதைகள் போன்று திரைப்படங்களில் நகைச்சுவை சம்பவங்கள் வந்துள்ள நிலையில், அவற்றை இருபக்கக்கதைகளாகப்  படிப்பது கொஞ்சம்  ஆச்சர்யத்தையும்/குழப்பத்தையும்  அளிக்கின்றது.
சிறுகதைகளில் ‘திடீர் திருப்பத்துடன்’ முடியும் கதைகள் (twist endings) பிரபலம். ஆனால் அந்த இறுதித் திருப்பம், வாசகனுக்கு அதிர்வூட்ட வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக, கதையுடன் ஒட்டாமல் போகவும் வாய்ப்புள்ளது . இந்தத் தொகுதிகளில் உள்ள கதைகளிலும் திருப்பம் என்று கருதக்கூடிய முடிவுகள் உள்ளன, ஆனால் அவை கதையின் போக்கை மாற்ற வேண்டும் என்ற ஒரே இலக்கோடில்லாமல்,முன்நடந்த சம்பவங்களை, பாத்திரங்களைப்  பற்றி அதுவரை நமக்கு உள்ள முடிவுகளை, மறுபரிசீலனை செய்ய தூண்டுபவையாக, கதையின் போக்கோடு ஒட்டியும் உள்ளன.
‘நாடக தினம்’ கதையில் சண்முக சுந்தரம் நடத்தும் நாடகத்தின் கதாநாயகி நாடக தினம் அன்று வர முடியாத சூழல் திடீரென்று ஏற்பட, முன்பு கதாநாயகியாக நடித்த பாக்கியத்தை மீண்டும் நடிக்க அழைக்கிறார். பாக்கியத்தை  ஒப்புக்கொள்ள அவர் கால்களில் விழும் போது . நாடகம் மீது மிகுந்த பற்று கொண்ட ஒருவரை நாம் காண்கிறோம். பாக்கியம் இறுதியில் ஒப்புக்கொண்டு, மாலை நான்கு மணிக்கு வந்தால் போதுமா என்று கேட்க, நாலரை மணி ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சண்முக சுந்தரம் வீடு திரும்புகிறார். ஆனால் வீடு வந்தவுடன்  ரிக்ஷாக்காரரிடம்,  மூன்று மணிக்கே பாக்கியம் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வர சொல்கிறார், கதை இங்கு முடிகிறது. கையறு நிலையில் உள்ள மனிதராக    கதை நெடுகிலும் வருபவர், பற்றிக்கொள்ள ஒரு ஊன்றுகோல் கிடைத்தவுடன், பல ஆண்டுகால அனுபவம் உள்ள  நாடக முதலாளியாக,  இன்னொரு தவறு நடந்து விடக் கூடாதென்ற முன்னெச்சரிக்கை உணர்வுடையவராக தெரிகிறார்.  அவருடைய முந்தைய செயல்கள் (காலில் விழுவது போன்றவை) உணர்ச்சிப்பெருக்கில் செய்யப்பட்டவையா அல்லது பாக்கியத்தை ஒப்புக் கொள்ள வைக்க  திட்டமிட்டே செய்யப்பட்டவையா?
‘கோயில்’ என்ற கதை, சூட்சுமமான, அமானுஷ்ய அனுபவத்தை அளிக்கிறது. யதார்த்த பாணி கதையாக ஆரம்பிப்பது, ஒரு கட்டத்தில், வேறு தளத்திற்கு நகர்ந்து, ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வை (foreboding ) அளித்து, மிகை யதார்த்தமாக(surreal)  முடிகிறது. இந்த மாற்றங்கள், முடிவு அனைத்திலும் கதையின் நடையில் உருவ அமைதியும், அதன் போக்கில் எப்போதும் ஒரு சம நிலையும்  உள்ளது. கதையின் நடையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லாமலேயே இரு வேறு தளத்தில் இயங்கும் கதைகளின் உணர்வுகளை கொடுப்பதே இதன் சிறப்பு.
‘நண்பனின் தந்தை’ தொகுப்பை பற்றி அ.மி ‘இக் கதைகள் மங்கலாக இருந்த எனது கடந்தகால நினைவுகள் சிலவற்றை தெளிவாக்கின’.வாசகர்களும் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இயலும் என்று நம்புகிறேன். என்றும்  ’1945இல் இப்படியெல்லாம் இருந்தது’ தொகுப்பில் ‘இவை எனக்களித்த மன நிறைவை வாசகர்களும் பெறக் கூடுமானால் நான் மிகுந்த மகிழ்சியடைந்தவனாவேன்’ என்கிறார்.  இரண்டும் மிகச் சரி, வாசகருக்கும் அ.மி புனைவுகளைப் பற்றியும் இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. கதைகளின் களங்கள் பரிச்சயமானதாக  இருந்தாலும், நம் தாத்தாக்கள் (முன்னோர்கள்) சொல்லும் நினைவுகளை, ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அவற்றில் உள்ள புதிய நுணுக்கங்களால் (nuances) எப்போதும் மகிழ்வோடு தான் கேட்போம் இல்லையா. “.. இன்று   என் கைவிரல்கள் பேனாவைப் பிடித்தாலே பின்னிக்கொண்டு விடுகின்றன. எழுதுவது அநேகமாக அசாத்தியமாகிவிட்டது” என்று படிக்கும் போது எழும் நெகிழ்ச்சியோடு, வாசகனாக இன்னும் அவர் எழுத வேண்டும் என்ற குரூரப் பேராசை தோன்றுவது , அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதை உணர்த்துகிறது.