Tuesday, December 29, 2015

Brooklyn - Colm Toibin - பன்முகப்பட்ட வாசிப்பு சாத்தியங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/12/20/multifaceted-reading-possibilities/)
-----------

ஒரு இளம் பெண் அயர்லாந்திலிருந்து வேலைக்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறாள். அங்கு தனிமையில் வாடுகிறாள். ஒரு இளைஞனை அவள் சந்திக்க, அவர்களுக்குள் மெல்ல ஒரு உறவு உறவாகும்போது மீண்டும் தாய் நாடு செல்ல வேண்டிய சூழல் அப்பெண்ணிற்கு. அங்கு இன்னொரு (உயர்குடியைச் சேர்ந்த) இளைஞன் அவள்பால் ஈர்க்கப்படுகிறான். அப்பெண் மனத் தடுமாற்றம் கொள்கிறாளா, தன் வாழ்க்கை குறித்து  என்ன முடிவெடுக்கிறாள் என்பது கலம் டுபீனின் (Colm Toibin) ‘Brooklyn’  நாவலின் இறுதிப் பகுதி. நாவலின் உள்ளடக்கத்திற்கு கிஞ்சித்தும் நியாயம் செய்யாத இந்தக் கதைச் சுருக்கம், வழக்கமான முக்கோணக் காதல் கதையைச் சுட்டுவதாகத் தோன்றினால், அது ‘கதைச்சுருக்கம்’ என்பதன் போதாமையே தவிர நாவலின் தரம் குறித்த சரியான  மதிப்பீடாகாது. இந்தக் கட்டுரைக்கு ஒரு பின்புலமாக மட்டுமே அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நாவலைப் பற்றிய நேர்மறை விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, அது குறித்து  வெளிவந்துள்ள/ வருகிற எதிர்மறை விமர்சனங்களில் இரண்டு கருத்துகள் முக்கியமாக மீண்டும் மீண்டும்  சொல்லப்படுகின்றன. ஒன்று,  அதன் முக்கிய பாத்திரமான எல்லிஸின் (Ellis)  ‘செயலின்மை’.    தன்னிச்சையான முடிவெடுக்கத் தெரியாதவராக, அலைபாயும் மனமுடையவராக  உருவகித்து இறுதியில்  நம்பிக்கை துரோகியாக, ஏமாற்றுக்காரியாக அவரை வாசகன் பார்க்கும் முடிவிற்கும் அது இட்டுச் செல்கிறது.  நாவலில் ‘கதை’ என்பதே இல்லை (‘கதை’ என்பதன் வரையறை என்ன என்பதை தனிக் கட்டுரையாக பார்க்க வேண்டும்),  இதன்  மூன்று பகுதிகளில் முதல் இரண்டு பகுதிகளும் அவற்றின் சம்பவங்களும் எந்தத்  தொடர்பும் இன்றி சிதறிக் கிடந்து   வாசகனுக்கு  எதையும் சொல்வதில்லை,  அதன் இறுதிப் பகுதியில் வரும் நிகழ்வுகள் மட்டுமே நினைவில் தங்குகின்றன. நாவலே இறுதிப் பகுதியின் பலத்தில்தான் நிற்கிறது  என்பது இரண்டாவது விமர்சனம். நேரடியான வாசிப்பில் நாவல் குறித்து இத்தகைய ஒரு பார்வை  சாத்தியம்தான் என்றாலும், நாவலை மீள் பார்வை செய்து இத்தகைய மேலோட்டமான வாசிப்பைத் தாண்டிய இன்னொரு கோணத்தையும் வாசகன் காணக் கூடுமா என்பதை இக்கட்டுரையில் ஆராய்வதின் மூலம், எந்தத் தரப்பையும்  முற்றிலுமாக மறுதலிக்காமல், அதே நேரம் இலக்கியத்தின்  பன்முகப்பட்ட வாசிப்பின் சாத்தியத்தை நாம் அறியவரக்கூடும்.
சம்பவம் 1:
குடும்பத்தை விட்டு பிரிந்து அயர்லாந்திலிருந்து அமெரிக்கா வந்து ஒரு துணிக்கடையில் வேலை செய்யும் இளம் பெண்ணான எல்லிஸ் (Ellis), தன் விடுமுறை நாளை  காதலனுடன் கடற்கரையில் செலவிட முடிவு செய்கிறார்.  அதற்குத் தகுந்த உடையை (bathing suit) தேர்வு செய்ய அவருடைய பெண் மேலதிகாரி உதவுகிறார்.  எல்லிஸின் உடலை அவர் தொடுவது, ஆடை அணிவிப்பது என அவருடைய சுவாதீனமான நடவடிக்கை எல்லிஸை அசௌகர்யப்படுத்துகிறது. (மேலதிகாரிக்கும் ஒரு காதலன் இருக்கிறான் என்பதால் , அவர் நடத்தையில் பாலியல் விழைவு உள்ளது என்பது போன்ற வாசிப்பிற்கு இடமில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்)  எனினும் எல்லிஸ் தன் கூச்சத்தை வெளியே சொல்வதில்லை.
சம்பவம் 2:
குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் இருக்கும் எல்லிஸ், தன் மனத்துயர் குறித்து யாருடனும் பகிர முடியாத மனநிலையில் உள்ளார் என்பதை டூபின்
None of them could help her. She had lost all of them. They would not find out about this; she would not put it into a letter. And because of this she understood that they would never know her now. Maybe, she thought, they had never known her, any of them, because if they had, then they would have had to realize what this would be like for her.” 
என்று சுட்டுகிறார்.
இரண்டு சம்பவங்களும் நேரடியான தொடர்பு கொண்டவையல்ல என்றாலும், இரண்டாம் சம்பவம், மற்றவர்களிடம் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மிகவும் தயங்கும் எல்லிஸின்
குணத்தை வெளிப்படுத்தி முதல் சம்பவத்தை புரிந்து கொள்ள உதவும் அதே நேரத்தில், மொத்த நாவலையும் தொகுத்துக் கொள்ளவும் உதவுகிறது. அவரின் ‘செயலின்மையாக’ சுட்டப்படுவது உண்மையில் தன்னுள்ளேயே சுருங்கிக் கொள்ளச் செய்யும் அவர் அகத்தின் தயக்கம்தான்.   
அயர்லாந்தில் விதவைத் தாய் மற்றும் மூத்த சகோதரி ரோஸுடன்  வசிக்கும் எல்லிஸிற்கு, ஒரு பாதிரியின் உதவியால் அமெரிக்காவில் வேலை கிடைக்க, அவர் அங்கு அனுப்பப்படுகிறார். அயர்லாந்தைவிட அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கள் அதிகம் என்பதால்  அங்கு இங்குள்ளதைவிட மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று கருதி ரோஸ் இந்த முடிவெடுக்கிறார்.   மூத்த பெண் என்பதால்  குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பை – முப்பது வயதான, யாரையும் திருமணம் செய்யாத, தங்கையின் படிப்புச் செலவை ஏற்கும், வேலையில் நேர்த்தியாக இருக்கும், இவை அனைத்தையும்   தனக்குள்ள சிக்கல்களை வெளிக்காட்டாமல்  திறம்பட செய்யும் – அழகி ரோஸின் பார்வையில் அவர் எடுக்கும் முடிவு மிகச் சரி என்றாலும்
எல்லிஸிற்கு  நன்மை செய்வதாக எண்ணி அவர் இதைச் செய்யும்போது, சொந்த ஊர், குடும்பம், நண்பர்கள் அனைவரையும் பிரிந்து   அங்குச் செல்வது குறித்து  எல்லிஸிற்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடும் என்பதை அவர் கருத்தில் கொள்வதில்லை.   எல்லிஸிற்கு முற்றிலும் நேர்மாறான  ரோஸின்  பாத்திரம், எல்லிஸை புரிந்து கொள்ள உதவக் கூடும். ஒருவேளை சிறு வயதிலியே எல்லிஸும்  ரோஸ் போல் மன ரீதியாக முதிர்ந்திருந்தால் பல அசந்தர்ப்பமான நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும். தங்கை மீது பாசம் வைத்திருக்கும் ரோஸ் ஏன் அவரிடம் அமெரிக்கா செல்வது குறித்த அபிப்பிராயம் கேட்கவில்லை? எல்லிஸிற்கு கூட இது குறித்து நேர்மையாகவோ/ எதிர்மறையாகவோ அதிகம் சொல்ல எதுவும் இல்லை என்றோ அல்லது அதைச் சொல்ல அவர் விரும்பவில்லை என்றோ தோன்றுகிறது. இங்கும் அவர் அகத்தில் உறைந்திருக்கும் தயக்கத்தையே உணர முடிகிறது. இவற்றிக்கான  காரணங்களை அவர் அமெரிக்கா சென்றபின் நடக்கும் நிகழ்வுகளில் தேடிப்  பார்க்கலாம்.
நாவல் குறித்த இரண்டாவது முக்கிய எதிர்மறை விமர்சனமான  – சம்பவங்கள் தொடர்பற்று இருக்கின்றன என்பதை  கலம் டுபீனின் இன்னொரு நாவலான  ‘The Blackwater Lightship‘ நாவலுடனேயே ஒப்பிடலாம்.  அதிலும்  சம்பவங்கள் நேரடி தொடர்புள்ளவையாக டுபீனால் சொல்லப்படாவிட்டாலும்  அவை தன்னியல்பாக ஒன்றுடன் ஒன்று பொருந்தி விடுகின்றன. இந்த அம்சம் ‘Brooklyn’ நாவலில் இல்லை என்பதால், இவற்றைத் தொகுப்பதில் வாசகனின் பங்கு அதிகம் உள்ளது. இது பலரை நாவலிலிருந்து அந்நியப்படுத்தும் என்றாலும், வாசகனின் அதிக உழைப்பைக் கோரும் இத்தகைய வாசிப்பும் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் அல்லவா?  இங்கு நாவலின் இன்னொரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் டோனி (Tony) எனும் இத்தாலிய இளைஞனை எல்லிஸ் சந்திக்கிறாள்.   டோனி அவள்பால் ஈர்க்கப்படுகிறான், அவளும் தடை சொல்வதில்லை (இவர்களுக்கிடையே உள்ள உறவு குறித்து விரிவாக பின்னர் பார்ப்போம்). ஒரு முறை  தாய்/ தந்தை, மூன்று சகோதரர்களுடன் வசிக்கும் (கூட்டுக் குடும்ப)  வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்கிறான். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது/ சீண்டிக் கொள்வது இவற்றை சற்றே அன்னியத்தன்மையோடு எல்லிஸ் கவனிக்கிறாள். இந்தச் சம்பவம்  குறித்து ஒரு பேட்டியில் டூபின் “They’re all just so good with each other. And one watches this in life with fascination and envy. I would love to have been brought up like that. But Ireland’s not like that.” என்று குறிப்பிடுகிறார். இதில் எல்லிஸின் செயல்/ செயலின்மைக்கான ஒரு விளக்கம் உட்போதிந்துள்ளது.  பாசமும் நேசமும் குடும்பத்தில் இருந்தாலும், அதைத் தளர்வான (informal) முறையில் வெளிப்படுத்தும்  சூழலில் எல்லிஸ் வளராததால்,அவளால் தன் உணர்வுகளைத் தெளிவாக சொல்ல முடிவதில்லை என்று   புரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்வும் கதையின் மையத்திற்கு நேரடியான தொடர்பு கொண்டதல்ல என்பதால், இதை வாசகன் எளிதில் கடந்து சென்றுவிடக் கூடும். ஆனால் சற்றே கூர்ந்து கவனித்தால்
இப்படி தொடர்பற்றவையாகத் தோன்றும் பல நிகழ்வுகள் எல்லிஸின் மனச் சங்கிலியின் கண்ணிகள் தான் என்று வாசகன் அவதானிக்கலாம். அது எல்லிஸ் குறித்த அவன் பார்வையை விரிவடையச் செய்யக் கூடும்.
எல்லிஸின் மனவுலகை நுட்பமாக உருவாக்கும் அதே நேரத்தில் டூபின் 50களின் Brooklyn நகரில், கனவுலகைப் போல் தோற்றமளிக்கும் அமைதியான “… quietness of these few leafy, streets that had shops only on the corners, streets where people lived” காட்சிகளோடு, நிஜ உலகில் தள்ளும் பரந்த வீதிகளையும், அவற்றை முற்றிலும் நிரப்பும் மனிதர்களையும்/ வாகனங்களையும் பார்க்கும்போது நாளுக்கு நாள் உருமாறிக்கொன்டிருக்கும், பல நாடுகளிருந்தும் எண்ணற்றோர்  புலம்பெயர்ந்து கொண்டிருக்கும்  ஒரு நகரின்  சித்திரத்தையும் உருவாக்குகிறார். ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவருக்கு துணிகள் விற்பதற்கு எல்லிஸ் வேலை செய்யும் கடை முடிவு செய்வது நாவலில் வரும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல.
அம்முடிவு குறித்த எல்லிஸின் எதிர்வினைக்கும் , மற்ற பெண் விற்பனையாளர்களின்  எதிர்வினைக்கும் உள்ள வித்தியாசம் குறிப்பிடத்தக்கது. அயர்லாந்தில் தன் சொந்த ஊரில் கறுப்பினத்தவரை கண்டிராத/ அறிந்திராத எல்லிஸிற்கு கடையில் அவர்களை அனுமதிப்பது என்ற  முடிவு எந்த பெரிய சலனத்தையும்  ஏற்படுத்துவதில்லை, ஆனால்
கடையின் மற்ற பெண் விற்பனையாளர்கள் இதை எதிர்கொள்ளும் விதம் – ஆப்பிரிக்க அமெரிக்க இனப் பெண்கள் கடைக்குள் வந்தால் இடமே அமைதியாவது, ஓரக்கண்ணால் வந்தவர்களைக் கவனிப்பது, தங்கள் வீட்டில் இது குறித்து தெரியவந்தால் அவர்கள் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்று தங்களுக்குள்ளேயே  கேள்வி எழுப்புவது – ஆகியவை ஒரு காலகட்ட சமூகச் சூழலின் பிரதிபலிப்பும் கூட. இது குறித்து அதிகம் கவலைப்படாத எல்லிஸ், மற்றொரு பெண் முன் உடைமாற்றுவது குறித்து வெட்குவதை கலாசார வேறுபாடு என்று சொல்லலாமா? உடை தேர்வு செய்யும்போது, இத்தாலிய ஆண் தன் இணை கடற்கரையில் எப்படி தோற்றமளிக்கிறாள் என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் தருபவன் என எல்லிஸின் மேலதிகாரி கூற,
‘In Ireland no one looks, Ellis said. It would be bad manners.’
‘In Italy it would be bad manners not to look’.
என்று நடக்கும் உரையாடலில் கலாசார வேறுபாடு மட்டும் தெரிவதில்லை. எல்லிஸும் சரி அவள் மேலதிகாரியும் சரி அமெரிக்கா என்று குறிப்பிடாமல் Ireland/ Italy என்று சொல்வது, தங்களை அவர்கள் இன்னும்  முழுதாக அமெரிக்காவினுள் ஐக்கியப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுடன் புலம்பெயர்ந்தவர்களின் ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடாகவும் உள்ளது. (இவர்கள் இருவரின் பிள்ளைகள்/ பேரப்பிள்ளைகள் தங்களை அமெரிக்கர்களாக மட்டுமே கருதக்கூடும் என்பதையும் நினைவில் கொள்வோம்)
எந்த ஆப்பிரிக்க- அமெரிக்க  பெண்ணும் தனியாக கடைக்கு வராமல் இரண்டு-மூன்று பேராக வருவது, நேர்த்தியாக உடையணிந்திருக்கும் அப்பெண்கள், விற்பனையாளர்களுடன் அதிகம் பேசாதது (கர்வத்தால் அல்ல, இனம் சார்ந்து இருக்கும் இடைவெளி என்று வாசகன் புரிந்து கொள்ள முடியும்)  என அவர்கள் நடந்து கொள்வதையும்  ஒரு விதத்தில் புலம் பெயர்ந்தவர்களின் கலாசார வேறுபாட்டால் புரிந்து கொள்ளலாம். எல்லிஸ் நாடு விட்டு நாடு வந்திருந்தால், இப்பெண்கள் தங்கள் நாட்டிற்குள்ளேயே வெளியாட்களாக இருந்து,  இப்போது தான் தங்கள் தேசத்தின் சில காட்சிகளை காண்கிறார்கள்.
இப்படி தொடர்பற்றவையாக தோன்றும்  நிகழ்வுகளும் எல்லிஸின் மனவுலகோடு அவரின் புற உலகையும் நாவலினுள் உருவாக்குகின்றன எனபதால் அவை நாவலின் கட்டமைப்பிற்கு தேவையானவைதான் என்று சொல்லலாம்.
டோனியின் துணையும், பகுதி நேரப் படிப்பும் எல்லிஸின் மனதை ஆற்ற ஆரம்பிக்கும் வேளையில் அவர் குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத துயர நிகழ்வால், தாயை கவனித்துக்கொள்ள  எல்லிஸ் மீண்டும் அயர்லாந்து திரும்ப வேண்டியுள்ளது. தன்னைப் பிரிய மனமே இல்லாமல் டோனி துயருற, மீண்டும் சொந்த ஊர் வரும் எல்லிஸ் வீட்டை கவனித்துக் கொள்கிறாள். ஜிம் (Jim) என்ற சற்றே மேட்டுக்குடி இளைஞனுடன்  அவளுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. ஜிம் அவள்பால் ஈர்க்கப்படுகிறான், அவளை மணம் முடிக்க வேண்டும் என்ற முடிவுக்கும் அவன் வந்து விட்டது போல்  தெரிகிறது. எல்லிஸ்   என்ன செய்கிறாள்? தன் தோழியின்  கணவனின் நண்பனான அவனுடன், குழு சுற்றுலா செல்கிறாள், அவனுடன் கனிவாக நடந்து கொள்கிறாள் ஆனால் டோனி பற்றி ஒன்றும் சொல்வதில்லை, அதே நேரம் ஜிம்மை அதிகம் ஊக்குவிப்பதும் இல்லை, அவன் தன் மீது செலுத்தும் கவனத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறாள் அவ்வளவே. டோனி அனுப்பும் கடிதங்களை படிப்பதையும் அவள் நிறுத்தி விடுகிறாள். இங்கு எல்லிஸின் நடவடிக்கை/ நடவடிக்கையின்மையை  நம்பிக்கை துரோகமாக பார்க்கும் சாத்தியம் உள்ளதுதான்.
இங்கு இடைவெட்டாக நாவலின் முதல் பகுதியிலிருந்து  ஓர் சம்பவம். அமெரிக்கா வந்த முதல் சில நாட்களில், மிகவும் மனச் சோர்வுற்றிருக்கும் எல்லிஸ், காலையில் வேலைக்குச் செல்லும் வழியில் உணவருந்த ஓர் விடுதிக்கு செல்கிறாள். அவள் முகத்தைப் பார்த்து அவளின் சோகத்தை யூகிக்கும் விடுதி பணியாள் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே என்று கேட்கிறான். இல்லை என்று அவள் சொன்ன பிறகும், மீண்டும் அதையே கேட்கும் அவன் உரத்தக் குரலில் “Cheer up…..Give us a smile.” என்று சொல்ல அந்தக் கரிசனத்தைக் தாங்க முடியாமல் அழுது விடுவோம் என்று அஞ்சி அங்கிருந்து ஓடி விடுகிறாள். பணியாளனின் செய்கை வெளிப்படையாகப் பேசும் அமெரிக்க குணம் அது, அவன் கரிசனம் தவறில்லை என்றாலும் அதைத் தாங்கும் வலு அவளுக்கு இல்லை. கரிசனத்தை அல்ல அவள் எதிர்பார்ப்பது, தன்னுடன் கை கோர்த்து நடக்கும் ஒரு சக ஜீவியை. டோனி அத்தகையவனாக உள்ளான்.  அவனின் வேகத்திற்கு தன்னால் செல்ல முடியாது என்ற உணர்வும்  எல்லிஸிற்கு இருந்தாலும், சக பயணியை அவள் இழக்க விரும்பவில்லை. டோனி எல்லிஸை காதலியாகப் பார்க்கிறான் என்றால் எல்லிஸ் அவனை தோழனாக மட்டுமே அதிகம் பார்க்கிறாள். தன் குடும்பத்தில் நிகழ்ந்த பேரவலச் சம்பவத்தின் தாக்கத்தில் அவள்  வாழ்வில்  முதல் முறையாக  அவனுடன் உடலுறவு கொண்டாலும் அதைக் காதல் என்றோ காமம் என்றோ அறிதியிட்டு கூற முடியாது. அப்போது அவள் அவனை உபயோகிக்கிறாள் என்று சொல்லலாமா? அப்படி சொன்னால் டோனியும் தன் மனதின் விழைவுக்காகவே அவளுடன் பழகுகிறான் என்றும் சொல்லலாம், இதை இன்னும் விரிவாக்கி அனைத்து உறவுகளையுமே கொடுக்கல் வாங்கல் என்ற இரட்டை நிலைக்குள் அடக்கிவிடலாம். ஆனால் அப்படி எளிமையாக வகைபடுத்தக் கூடிய ஒன்றா மனித உறவுகள்? இவர்கள் உறவின் dynamic தெளிவான இடத்தை அடையும் முன், எல்லிஸ் மீண்டும் தன் தாய் நாடு திரும்ப வேண்டியுள்ளது. குடும்பத் துயரம் வேறு அவளை வாட்ட, அவள் திக்கு தெரியாதவள் போல் நடந்து கொள்வதில்  – அது மூன்று பேரின் வாழ்வை குலைத்துப் போடக்கூடும் என்றாலும் –  ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இறுதியில் எல்லிஸ் எடுக்க வேண்டிய முடிவிற்கும் கெல்லி (Kelly) என்ற பாத்திரமே  காரணமாக உள்ளார்.  இந்தப் பாத்திரத்தை நாவலோடு பொருந்தாத ஒன்றாக பார்க்க முடியும். மேட்டிமைத்தன்மை கொண்ட, அனைவரையும் எள்ளல்  செய்யும் இந்தப் பாத்திரம் நம்ப முடியாத ஒன்றோ / ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றோ அல்ல. ஆனால் டூபின் முதலிலிருந்தே நாவலின் போக்கில் உருவாக்கும் சலனமின்மையை இந்தப் பாத்திரம், அமைதியான இடத்தில்  ஒருவர் உரத்தக் குரலெழுப்பி அந்தச் சூழலைக்  குலைப்பது போல் கலைத்து விடுகிறது. அந்த விதத்தில் இப்பாத்திரம் நாவலின் உலகோடு பொருந்தாமல், அதன்  பலவீனமாக உள்ளது.   மேலும் எல்லிஸை முடிவெடுக்கத் தூண்டும் நிகழ்வும் நாவலை அதன் இறுதி நிகழ்விற்கு திருப்ப வலிந்து செய்யப்பட்ட உத்தியாக உள்ளது.
இப்போது எல்லிஸ் காதலா அல்லது கடமையா என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். எல்லிஸின் முடிவு தெரிந்தவுடன் அவர் இதைத்தான் தேர்வு செய்திருக்கிறார் என்று  பெரும்பாலான வாசகர்கள்  புரிந்து கொள்வது எதுவாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. அந்தப்  புரிதல் நியாயமானதும்  கூட. இருப்பினும் எல்லிஸின் தேர்வு இது தான்  என்று வாசகன் எதை முடிவு செய்தாலும் அதற்கு  நேர்மாறாக வாதிட  சாத்தியம் நாவலின் பக்கங்களின் உள்ளது.  அதாவது ஒரு வாசகன் அவர் காதலை தேர்வு செய்தார் என்று சொன்னால், இல்லை அவர் தேர்வு செய்தது கடமையை என்றும், எல்லிஸின் தேர்வு ‘கடமை’ என்று சொன்னால், இல்லை அது ‘காதல்’ என்றும்  இன்னொரு வாசகன்  வாதிடலாம். எனவே வாசகன் எந்தப் புரிதலுக்கு வந்தாலும் அதைச்  சற்றே மறுபரிசீலனை செய்தால், எந்த முடிவிலும்  அவர் பெறப்போவதற்கு ஈடாக அல்லது அதற்கும் மேலாகவே இழப்பையும் துயரையும்  அடையக்  கூடும் ‘Catch-22’ சூழலில் அவர் இருக்கிறார் என்பதையும்  உணர முடியும்.  இந்த இரண்டு தேர்வையும் தவிர, சுய பாதுகாப்புக்காக மட்டுமே அவர் அந்த முடிவு எடுத்தார் என்றும் வேறொரு வாசகன் சொல்லலாம். அப்படி எண்ணும் வாசகன்
Eilis imagined the years ahead, when these words would come to mean less and less to the man who heard them and would come to mean more and more to herself. She almost smiled at the thought of it, then closed her eyes and tried to imagine nothing more.
என்ற இறுதி பகுதியை மீண்டும் வாசிக்க வேண்டும். அசோகமித்திரன் கதை ஒன்றில் கதைசொல்லி இரவு நடையின்போது ஒரு ஆணும்- பெண்ணும் (தம்பதியர் என்று புரிந்து கொள்ளலாம்) சண்டையிடுவதைப் பார்ப்பான். அப்பெண்ணின் துயர் அவனை பாதித்தாலும், தலையிடாமல் வந்து விடுவான். இரவு முழுதும் அவனை அது வாட்டும். அடுத்த நாள் அனைத்தும் சரியாகி விட்டது என்பதாக கதை முடிந்தாலும், அதில் அ.மி சொல்லாமல் எழுப்பும் கேள்வி  அவ்வளவு சீக்கிரம் அந்நிகழ்வை அவன் மறந்து விட முடியுமா என்பதுதான். அக்கேள்வியை இங்கும் மேலே உள்ள பத்தியோடு பொருத்திப் பார்க்கலாம். பல வருடங்கள் சென்றேனும் அவள் அமைதியடையக்கூடுமா, அப்படி அடைந்தாலும் அதுவரை அவள் அனுபவித்த வாதை?
நாவலில் எல்லிஸின் வயது குறிப்பிடப்படவில்லை என்றாலும், ‘பெதும்பை’ பருவத்தில் அவள் இருப்பதாக யூகிக்கலாம். பேதைக்கும் மங்கைக்கும் இடையே உள்ள, தன்னைக் குறித்தும் வாழ்வு குறித்தும் தெளிவின்மையும் சலனங்களும் தோன்றும் இந்தப் பருவத்தில், குடும்பத்தைப் பிரிதல், குடும்பத்தில் இழப்பு போன்ற தொடர்   பாரத்தை சுமக்கும் முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லாத அப்பருவப் பெண், அது சார்ந்து தன் வாழ்வு குறித்த  மிக முக்கிய முடிவுகளை  எடுக்க வேண்டிய நிலையிலும்  இருக்கிறாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன்  பிறகும்,  அவளை .ஏமாற்றுக்காரியாகவோ, கோழையாகவோ, குறைந்தபட்சம் செயலின்மை கொண்டவளாகவோ சுட்ட முடியும் என்றாலும், இறுதிப் பத்தியின் மீள்வாசிப்பு தன் துயரை வெளிக்காட்டாமல், எந்தச்  சூழலிலும்   முடிந்தளவு அனைவருடனும் நேர்மையுடன் இருக்க முயன்று, அதில் தன்னை மீறி தோல்வியுற்று அதன் காரணமாக மனதில் பல ஆண்டுகள் ஒலிக்கப் போகும், மற்ற யாருக்கும் கேட்காத, வலியின் ஓலத்தை  தான் மட்டும் தனித்து கேட்டுக்கொண்டிருக்கப் போகும் ஒரு பெதும்பைப் பெண்ணின் உயிர்ப்புள்ள நெகிழ்வான சித்திரம் மனதில் தோன்றி மற்ற அனைத்தையும் விலக்குகிறது.