Monday, November 24, 2014

கார்ல் ஹையசனின் நகைச்சுவைக் குற்றப்புனைவு - Carl Hiaasen

பதாகை இதழில் வெளிவந்தது - 
http://padhaakai.com/2014/11/16/carl-hiaasen/
---------------------------------------------------------------
பதாகையில் மொழிபெயர்க்கப்பட்ட “நகை எனும் மெய்ப்பாடு” என்ற பதிவின் மூல கட்டுரை, இவ்வாறு ஆரம்பிக்கிறது- “When moral or political decisions are at stake, we often make use of catch-phrases drawn from a repertoire of available drama and literature. For we understand that both our actions and how they are perceived depend on how we frame them. Comedy, of all genres, appears to be the one we covertly use all the time without, meanwhile, fully appreciating its ability to portray and explore the intensity and integrity of our interactions with others. “
இயன் ரேங்கின் (Ian Rankin) குற்றப்புனைவுகள் பற்றிப் பேசும்போது “But the best crime fiction today is actually talking to us about the same things big literary novels are talking about. They are talking about moral questions, taking ordinary people and putting them in extraordinary situations, and saying to the reader, “How would you cope in this situation?” என்கிறார். அன்றாட வாழ்வில் “தார்மீகத்தை” கடைபிடிக்க முயலும்போது மனிதனுள் எழும் கேள்விகள், அவன் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசும் இந்த இந்த இரண்டு கூற்றுகளும் ஒரே புள்ளியில் இணையும்போது நகைச்சுவைக் குற்றப்புனைவு (comic crime fiction) என்ற வகைமை உருவாகிறது.
தங்கள் திறமையின்மையால் முட்டாள்தனமாக நடந்து கொள்ளும், ஆனால் அதிர்ஷ்டத்தால் வழக்குகளில் உண்மையைக் கண்டுபிடிக்கும் சாம்பு கதைகள், ‘Pink Panther’ பட வரிசை போன்றவற்றுக்கும் , விசாரணை செய்யும் இருவரில் ஒருவர் தீவிரமானவராக இருந்து இன்னொருவர் அவ்வப்போது சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தும் விளையாட்டு ஆசாமி வரும் படைப்புகளுக்கும், இந்த வகைமைக்கும் வித்தியாசம் உள்ளது.
என்ன வித்தியாசம்? கார்ல் ஹையசனின் (Carl Hiaasen) ‘Bad Monkey’ நாவலின் ஆரம்பத்தில் , தேன்நிலவுக்கு வந்துள்ள தம்பதியர், துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்கள். என்ன கொடூரமான நிகழ்வு என எண்ணும்போதே, கார்ல் அதைக் கலைத்துப் போடுகிறார். எப்படி? மேற்கத்திய நாகரீகத்தில் நடுவிரலை மட்டும் எதிராளியிடம் நீட்டுவது (flipping the bird) , அவனை அவமானப்படுத்தும் செயலாகப் பார்க்கப்படுகிறது. துண்டிக்கப்பட்ட கையின் நடுவிரலும் அதுபோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது சட்டென்று சூழலின் இறுக்கத்தைக் குறைக்கிறது. ‘Gallows/Ghoulish Humor’ மிகுந்திருக்கும் ‘Stuart Macbride’ போன்றோரின் படைப்புகளைச் சட்டென்று இந்த நிகழ்வு நினைவுபடுத்தினாலும், அவற்றுடனும் ஒப்பிட முடியாது. ஒரு விபரீத நிகழ்வை சட்டென்று இலகுவாக்கும் இந்தப் புனைவுகள், அதிக வன்முறையையோ/ ரத்த விரயத்தையோ கொண்டிருப்பதில்லை.
காவல்துறை அதிகாரியான கதாநாயகன்,தன் காதலியின் (வயதான) கணவனின் குதத்தை தூசகற்றும் கருவியின் (vaccum cleaner), குழாயினால் தாக்கியதால், உணவக உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யும் வேலைக்குப் பணிக்கப்படுகிறான். மீண்டும் பழைய பணியில் சேர துண்டிக்கப்பட்ட கை பற்றிய விசாரணையை தனியாக செய்கிறான்.
இப்படி ஒரு கதாநாயகனா? இவர் மட்டுமல்ல. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், ஆண்களைப் பாலியல் வேட்டையாடும் சூனியக்கார மூதாட்டி, துர்க்குணங்கள் கொண்ட குரங்கு, பிணவறையில் உறவு கொள்ள விரும்பும் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவப் பெண் போன்ற ‘oddball’ பாத்திரங்களைக் கொண்டிருக்கிறது இந்த நாவல். இப்படிப்பட்ட பாத்திரங்களினால் மிக எளிதாக குற்றப் புனைவு பற்றிய ‘farce’ஆக மாறி இருக்கக்கூடிய இந்த நாவல், ஒரு கொலை, அதைப் பற்றிய விசாரணை, முடிச்சுகள் அவிழ்தல் என விரிந்து, (பல அதிநகைச்சுவை நிகழ்வுகள் இருந்தாலும்) நாம் படிப்பது குற்றப் புனைவு என்ற உணர்வையே தருகிறது.
கார்லின் “Skinny Dip” நாவல், அதன் நாயகி கப்பலிலிருந்து கீழே விழுவதுடன் (தள்ளப்படுவதுடன்) ஆரம்பிக்கிறது. திடுக்கிடும் சம்பவமான இதை, “I married an asshole…” என்று நம் நாயகி நினைப்பதாகக் கூறி, கார்ல் சம்பவத்தின் பதட்டத்தை சமன் செய்கிறார். (நாயகியின் மன ஓட்டத்தை அறியும் வாசகன், அவர் தப்பிப்பார் என்று உடனே யூகிக்க முடியும்). கணவனால் ஏமாற்றப்பட்ட நாயகி வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் வழமையான கதைதான் என்றாலும், பழிவாங்கும் பாவையாக மாறி கணவனைத் துன்புறுத்த நாயகி தீட்டும் திட்டங்களில் உள்ள நகைச்சுவை, கதை சொல்லப்படும் விதத்தில் இந்த நாவலை வேறுபடுத்துகிறது. கல்லறை சிலுவைகளைத் திருடி தன் வீட்டில் நட்டு வைக்கும் ஆசாமி, அபத்தமான சந்தேகத்தால் மனைவியை கொல்லத் துணியும், தன்னைப் பற்றிய அதீத சுயமதிப்பீடு கொண்ட, ஆனால் உண்மையில் அரைவேக்காடு ஆசாமியான நாயகியின் கணவன், மலைப்பாம்புகளை வளர்க்கும் காவல்துறை அதிகாரி, என இதிலும் விசித்திர பாத்திரங்கள், சம்பவங்கள் இருந்தாலும் “Heaven has no rage like love to hatred turned, Nor hell a fury like a woman scorned” என்ற கூற்றை அப்படியே பிரதிபலிக்கும் நாவல் இது. நாயகிக்கு வஞ்சம் தீர்ப்பதில் உள்ள கோபத்தை, நகைச்சுவை மட்டுப்படுத்துவதில்லை. பதாகை கட்டுரையின் மூலத்தில்  Comedy, on the contrary, begins badly, with a complication, yet ends well, in a resolution of the conflict. This resolution often includes a seemingly bawdy and exuberant celebration of love and life. என்று சொல்லியுள்ளபடி, இரண்டு நாவல்களும் பிரச்சனையுடன் ஆரம்பித்து சுபமாக முடிகின்றன.
சரி, இவற்றில் உள்ள ‘moral or political decisions are at stake’ என்ன? கார்ல் பல ஆண்டுகளாக ‘ப்ளோரிடா’ மாகாணத்தில் சூழியல் மாசுபடுவதைக் குறித்து கட்டுரைகளும்/நாவல்களும் எழுதி வருகிறார் வருகிறார். ப்ளோரிடா மாகாணத்தை களமாகக் கொண்டுள்ள இந்த நாவல்களில் சூழியல் குறித்த அக்கறையின்மை, இயற்கைச் சூறையாடலுக்கு உடன்போகும் லஞ்சலாவண்யங்கள், ஒரு குற்றத்தின் பின்னணியில் பகடியாக விவரிக்கப்படுகின்றன. இதுவரை மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படாத, இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கள், உல்லாச விடுதிகளாக (resort) மாறி வருவது ‘Bad Monkey’ நாவலின் அடிநாதமாக உள்ளது. சூழியல் அழிவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் “Everglades” என்ற இடம், அதைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள், அவற்றில் மலிந்துள்ள ஊழல் “Skinny Dip” நாவலின் மைய்ய இழை. (நிஜத்திலும் Evergladesன் அழிவை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது)
‘Bad Monkey’யின் நாயகன், உணவகங்களின் தரத்தை ஆய்வு செய்யும்போது அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள் உணவகங்கள் தங்களின் தரம் குறித்து எடுத்துக் கொள்ளும்/ கொள்ளாத அக்கறை பற்றி பற்றிய பகடியாக உள்ளன. (நம் நாயகனுக்கு முன்பாக இந்தப் பதவியில் இருந்தவர் hepatitis நோயால் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு, தர ஆய்வுக்காக பல உணவகங்களில் அவர் உண்ட உணவே காரணம் என்று நாயகன் பயப்படுகிறார். எலி/கோழி புழுக்கை, புழுக்கள், கரப்பான் பூச்சி , ஆணுறை என உணவகங்களின் சமையலறையில்/ உணவில் அவர் கண்டுபிடிக்கும்/ பார்க்கும் விஷயங்கள், அவரின் சாப்பிடும் ஆர்வத்தைக் குறைத்து எடை இழக்கச் செய்கிறது). இந்த விஷயங்கள் ‘கருத்து’ சொல்வதாக இல்லை, கதையின் மையமான குற்றத்தை நகர்த்தும் விசைகளாக உள்ளன.
இந்த நாவல்களை இரண்டுவிதமாக விமர்சிக்கலாம். ஒன்று, அழுத்தமான பாத்திரப் படைப்பு இல்லை, விட்டேத்தியான உரைநடை என்று சொல்லலாம். குற்றப்புனைவாகவும் இவை சோபிக்கவில்லை என தூய குற்றப்புனைவு ஆர்வலர்கள் கூற முடியும், அதுவும் உண்மைதான். ‘Bad Monkey’ நாவலின் மர்மத்தை நாவலின் நடுவிலேயே யூகிக்க முடியும். ஆனால் இந்த விமர்சனங்கள் நாவலுக்கு வெளியே நிகழ்பவை , அதாவது ஒரு படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற பொது அளவுகோல் வைத்துப் பார்க்கும்போது இவை நியாயமானவையே.
கார்ல் இந்த நாவல்களில் என்ன செய்ய முயல்கிறார், அதில் அவர் எந்தளவுக்கு வெற்றி அடைகிறார் என்று விமர்சிப்பது இன்னொரு முறை, அதாவது ‘நகைச்சுவை குற்றப் புனைவு’ என்பதை ஏற்றுக்கொண்டால்/ ஏற்றுக்கொள்ள முடிந்தால் செய்யப்படுபவை. அப்படிப் பார்க்கும்போது, இந்த நூல்களின் பலவீனமாக தோன்றுபவைகளில் பல இந்த வகைமையின் கூறுகளாக உள்ளன. உதாரணமாக, “Skinny Dip” நாவலில் மனைவியைக் கொலை செய்ய கணவனைத் தூண்டும் காரணம் மிகவும் முட்டாள்தனமாக உள்ளது, இரண்டு நாவல்களிலும், குழப்பத்தை அதிகரிக்கும் அடுக்கடுக்கான நகைச்சுவை நிகழ்வுகள், பின்னர் சுபமாக முடிவது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இவைதான் நாவலின் கட்டமைப்பை உறுதி செய்கின்றன. “Comedy, in contrast, is capable of resolving its complication through its own means by creating order out of chaos. ” என்பதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். சூழியல் மாசுபாடு குறித்து, நகைச்சுவையைக் குறைத்து இன்னும் ஆழமாக சொல்லி இருந்தால் அழுத்தமாகப் பதிந்திருக்கக்கூடும் என்பதும் உண்மையே. ஆனால் அது இந்த வகைமையில் முடியாது அல்லவா.
நகைச்சுவையே இந்த நாவல்களைச் செலுத்துகின்றது என்பதால், அதைத் தவிர்த்து நேரடியாக சொல்லப்படுபவை நாவல்களின் மற்ற பகுதிகளோடு ஒட்டாமல் அந்தரத்தில் தொங்குவது போல் உள்ளன. தன்னைக் கொல்ல முயன்ற கணவனைப் பற்றிய, “Skinny Dip” நாவல் நாயகியின் மனநிலை ஓர் உதாரணம். தன் கணவனின் செயல் குறித்து கோபப்படுகிறார், பழிவாங்கவும் முனைகிறார். அதே நேரம், தன் கணவனுக்கு தான் அப்படி என்ன கெடுதல் செய்து விட்டோம் என்றும் இத்தனை நாள் அவன் தன்னிடம் நடித்து வந்தானா, இவ்வளவு காலம் இவனைப் பற்றி புரிந்து கொள்ளாமல் எப்படி இருந்தோம் என கேள்விகள் எழுப்பி தன்னைத்தானே வதைத்துக் கொள்கிறார். கணவனை பழிவாங்குவதோடு தன்னை தன் கணவன் ஏன் கொல்ல முயன்றான் என்று அறிந்து கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறார். தன் சுயம் பற்றிய அதிக நம்பிக்கை இல்லாத (insecure) பெண்ணாக சுட்டப்படும் நாயகியின் சுய வெறுப்பு, கழிவிரக்கம் இயல்பானதே, அந்தளவில் கார்ல் வெற்றி பெறுகிறார். ஆனால் அதில் அதிக அழுத்தம் தராததால், முதலிரண்டு முறை, நாயகியின் vulnerabilityயை சுட்டுவதாக உள்ள இந்த மனநிலை, நாவல் முழுதும் நாயகி தன்னை இது குறித்து வருத்திக் கொள்ளும்போது சலிப்பையே தருகிறது. பொதுவாக சொல்ல வேண்டுமானால் நகைச்சுவைத்தளத்தை விட்டு கார்ல் விலகும் போதெல்லாம், நாவல் பலவீனமாக ஆகிறது, இத்தகைய இடங்கள் அதிகம் இல்லை என்பது ஒரு ஆறுதல்.
பெரியவர்களுக்கான 10-15 நாவல்கள், பதின் வயதினருக்கான (young adult) சில நாவல்கள் என நிறைய எழுதி உள்ள கார்ல் ஒரே மோஸ்தரில் எழுதுகிறார் என்ற விமர்சனமும் உள்ளது. இவரின் பெரும்பான்மையான படைப்புக்களைப் படித்த பின்புதான் இது பற்றி பேச முடியும். இந்த இரண்டு நாவல்களில் கதை சொல்லல் முறை/ சூழியல் என்ற பொது அம்சங்கள் இருந்தாலும், மற்றபடி அதிக ஒற்றுமை இல்லை.
இந்த வகைமையின் எல்லைகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, குதூகலமான கதைசொல்லல்/ நிகழ்வுகள், உற்சாகம் கொப்பளிக்கும் உரைநடை/ உரையாடல்கள் என நகைச்சுவை குற்றப்புனைவின் சாத்தியக்கூறுகளை கார்ல் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

Thursday, November 20, 2014

அன்றாட வாழ்வை அச்சுறுத்தும் கணங்கள் – ஹிலாரி மேன்டல் சிறுகதைத் தொகுப்பு - The Assassination of Margaret Thatcher - Hilary Mantel

பதாகை இதழில் வெளிவந்தது - 
http://padhaakai.com/2014/11/09/the-assassination-of-margaret-thatcher/
-----------------------------
Bachman என்ற புனைப்பெயரில் ஸ்டீபன் கிங் எழுதிய ‘Thinner’ நாவல், ஜிப்சி ஒருவனால் தீச்சொல்லிடப்படும் பில்லியின் உடல் எடை இழக்க ஆரம்பிப்பதையும், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களையும், திகில் நாவல்களின் பாணியில் சொல்கிறது. நம்மை எவ்வளவு அச்சுறுத்தினாலும், அனைத்தும் ஆசிரியருக்கும்/ வாசகனுக்கும் உள்ள எழுதப்படாத ஒப்பந்தத்தின் பேரில் நடப்பது என்று உணர்ந்திருப்பதால் (பயமுறுத்துவது ஆசிரியரின் பங்கு – கிளர்ச்சியடைவது வாசகனின் பங்கு) நாவலில் இருந்து நாம் சற்று விலகியே இருக்கிறோம். இங்கு பயம் என்பது கிளர்ச்சியாகவே உள்ளது. நாவல் முடிந்தவுடன், இரவு நம்மை பயமுறுத்தலாம், அன்று தூங்குவது எளிதாக இல்லாமல் போகலாம் ஆனால் நம் அன்றாட வாழ்விற்கு வெகு தொலைவிலேயே நாவல் இருக்கிறது என்ற ஆசுவாசம் அடைகிறோம்.
இந்த ஆசுவாசம் எப்போதும் செல்லுபடியாகுமா? ‘ஹிலரி மேன்டலின்’ ‘The Assassination of Margaret Thatcher’ சிறுகதை தொகுப்பின் ‘The Heart Fails Without Warning’ சிறுகதை, “When she began to lose weight at first, her sister had said, I don’t mind;…” என்று சாதாரணமாகவே ஆரம்பிக்கிறது. “Anorexia” பற்றிய செய்திகள் அதிகம் கவனப்படுத்தப்படும் இந்நாளில், உணவு உட்கொள்ள மறுக்கும் பதின்பருவப் பெண் பற்றிய வழமையான கதை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் “.. was shrinking…” என்று மேன்டல் சொல்லும்போது, இது நாம் முதலில் எண்ணியதைவிட விபரீதமானது என்று புரிகிறது. எடை அதிகமாக இருப்பதாகக் காட்ட, அதிக உடைகளை அணிந்து கொள்வது, எடை பார்க்கும் முன் நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற அப்பெண்ணின் தந்திரங்களை முறியடிக்க அவள் தாய், குறிப்பிட்ட நேரமென்றில்லாமல் திடீர் திடீரென்று எடையைப் பரிசோதிப்பது, என நடக்கும் தாய்-மகள் ஆடுபுலியாட்டம் கிளர்ச்சியூட்டுவதில்லை. அந்தப் பெண் மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியமான குடும்பமே சுருங்கி, எடையிழந்து எலும்புக்கூடாக மாறுவதையும் பார்ப்பது, கதை முடிந்த உடன் சிறிது நேரத்திலேயே நாம் நமது உலகுக்கு திரும்பி விடலாம் என்பது போன்ற எந்த ஆசுவாசத்தையும் அளிப்பதில்லை. கதையின் களன் நமக்கு மிக நெருக்கமான ஒன்றாக, நம் யார் வாழ்விலும் சந்திக்கக்கூடிய ஒன்றாக இருப்பதால், அதன் அச்சுறுத்தலை இன்னும் நிஜமானதாக, எப்போதும் நமக்கு அருகிலேயே இருக்கும் ஒன்றாக உணர்வது, எந்த திகில் கதைக்கும் ஈடான அல்லது அதைவிட பயங்கரமான ஒன்றாக இந்தக் கதையை ஆக்குகிறது.
இந்தக் கதை நமக்குக் கடத்தும் உணர்வை இந்தத் தொகுப்பின் சிறந்த கதைகளின் பொதுச்சரடாக கொள்ளலாம். யதார்த்தமும்/ கொடுங்கனவுகளும் தொட்டுச் சென்றாலும், இவை யதார்த்த தளத்திலேயே அழுத்தமாக காலூன்றியுள்ளன. உளக்காய்ச்சலால் வெதும்பும் பாத்திரங்கள், ஏதோ விபரீதம் நடக்கக் போகிறது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும், அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் தென்படும் மிகையதார்த்தத்தன்மை (surreal),  இவற்றின் சஞ்சலத்துடன் கதையினூடாக வாசகனின்/ பாத்திரங்களின் பயணம் இந்தக் கதைகளின் உள்ளது.
மேன்டலின் உரைநடையில் உள்ள ஒளிர்வு (luminosity) அதன் சிறப்பம்சம். ‘ஒளிர்வு’ என்பது கதையின் அனைத்து அம்சங்களையும் நிகழ்வுகளின் காரணகாரியங்களையும் விலாவரியாக விளக்குவது அல்ல. உரைநடையில் சிடுக்குகள் இல்லாமல் தான் சொல்ல வருவதை (அவற்றில் பொதிந்துள்ள தெளிவின்மையோடு) துல்லியமாக சொல்வது. இந்த ஒளிர்வு சவுதியில், வீட்டின் அனைத்து சன்னல்களும் எப்போதும் மூடப்பட்டுள்ள இறுக்கம், லண்டனின் ரயில் நிலையங்களில் உள்ள நெரிசல் போன்ற புறச்சூழலுக்குள்ளும், பாத்திரங்களின் அகஉணர்வுகளுக்குள்ளும் சமமாக ஊடுருவி, இரண்டையும் இணைத்து, பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் உருக்கொள்ளச் செய்கிறது.
‘Sorry to Disturb’ கதை, சவுதியில் வசிக்கும் கதைசொல்லி, தொலைபேசியை உபயோகிக்க அனுமதி கேட்கும் அந்நியனை வீட்டினுள் அனுமதிப்பதுடன் ஆரம்பிக்கிறது. நாளின் பெரும்பகுதியை தனிமையில் கழிக்கும் பெண், அவள் சந்திக்கும் ஆண் என்றவுடன் கதையின் போக்கு குறித்து நமக்கு தோன்றும் எதுவும் நடப்பதில்லை. துணையில்லாமல் வெளியில் எங்கும் செல்ல முடியாத, எப்போதும் அடைபட்டிருக்கவேண்டிய சூழல் ,  கதைசொல்லியைச் சுற்றி வீட்டின் சுவர்கள் நெருங்கி வரும் உணர்வோடு, அவர் மனமும் சுருங்கும் claustrophobiaவை அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் உருவாக்குகிறது. வீட்டின் மேஜை நாற்காலிகள் தங்களைத் தாமே வேறு வேறு இடங்களுக்கு நகர்த்திக் கொள்கின்றன என்று கதைசொல்லி சொல்வதை, தன்விருப்பத்தையொட்டி எங்கும் செல்லும் சுதந்திரமற்ற அவருடைய நிலைக்கு பதிலீடாக அவர் வைப்பதாகக் கொள்ளலாம்.
யதார்த்த சூழலை குலைக்கும் கதைகளுக்கு நேர்மாறாக, இறந்து போன தன் தந்தை ரயிலில் செல்வதைக் கதைசொல்லி பார்ப்பதாக  ‘Terminus’ ஆரம்பிக்கிறது. அமானுஷ்ய நிகழ்வுகளை உருவாக்க வலுவான களத்தைக் கொண்டிருந்தாலும், ஆன்மா பற்றியோ, தந்தையுடனான தன் உறவு பற்றியோ (அது பற்றி அவர் வேகமாக கடந்து செல்லும் ஓரிரு இடங்கள் தவிர) கதைசொல்லி சொல்லவில்லை. அவர் தன் தந்தையைத் தேடுவது பற்றி பேசுவதாகவும், இறந்தவர்கள்/ உயிரோடிருப்பவர்கள் பற்றிய அவருடைய எண்ண ஓட்டங்களாகவும், கொந்தளிப்பில்லாத contemplative கதைசொல்லலைக் கொண்டுள்ளது.
‘Sorry to Disturb’ கதையைப் போல் தலைப்புக் கதையிலும் கதைசொல்லி ஒருவனை வீட்டினுள்ளே அனுமதிக்கிறார். ஆனால் குழாய் செப்பனிடுபவர் என்று கதைசொல்லி எண்ணிய அந்த ஆசாமி, கதைசொல்லியின் வீட்டினருகே உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, கதை நடக்கும் அன்று, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ள இங்கிலாந்து பிரதமர்  ‘மார்க்ரெட் தாட்சரைக்’ கொல்ல வந்தவன். அதற்கு தோதான இடமாக கதைசொல்லியின் வீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அவன் பிரதமரை கொன்றானா இல்லையா என்பது குறித்த தெளிவற்றதன்மை கதையின் ஒரு பகுதி என்றால், கதைசொல்லிக்கும் அவனுக்கும் நடக்கும் உரையாடல்கள், கதைசொல்லி நடந்து கொள்ளும் விதம் இவை, அந்த ஆசாமி கொன்றானா இல்லையா என்ற கேள்விக்கு இணையான முக்கியத்துவம் உடையவை.
எண்பதுகளில் தாட்சர் ஆட்சியின் கீழ் வாழ்ந்து அதை நேரடியாக அனுபவித்தவர்கள், அல்லது அந்தக் காலத்தைக் குறித்து ஆராய்ந்தவர்கள், நம்மைப் போன்ற வெளியாட்கள் தவறவிடக்கூடிய சரடுகளை நெருக்கமாக உணரக்கூடும் (கொல்ல வருபவனின் தாட்சர் வெறுப்பு நமக்கு அவன் பேசுவதன் மூலம் தெரியும் தகவல் அவ்வளவே, அதற்கான காரணிகள், அந்தச் சூழல் இவை நமக்கு அந்நியம்.
தாங்கள் குரூரமாக நடந்து நடந்து கொள்கிறோம் என்பதை உணராத குழந்தைகள் பற்றிய ‘Comma’ கதையாகட்டும், கதைசொல்லி தன் தந்தை, அவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதையும், அது தன் குடும்பத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விலகலோடு கவனிக்கும் ‘Offences Against the Person’ கதையாகட்டும், அவை மோசமானவை அல்ல. நேரடியாக சொல்லப்படாத விஷயங்கள், பாத்திரங்களின் செயல்களுக்கு வெளித்தெரிந்த காரணத்தை விட வேறேதும் உள்நோக்கு உள்ளதா என யூகிக்க வைக்கும், பல அடுக்குகளாக உள்ள மன உணர்வுகள் என இலக்கியக் கூறுகளைக் கொண்டிருந்தாலும் முதலில் பார்த்த கதைகளைப் போல், மேன்டலின் எழுத்து பாணியாக உள்ள ஒளிர்மிகு உரைநடையில், தனித்துக் காட்டுவதாக இல்லாமல், இலக்கியக் கூறுகள் சூத்திரமாக மாற்றப்பட்டதைப் போல் வழமையான (generic), கதைகளாக உள்ளன.
இங்கு ‘வழமையான’ என்பது ஒரே களத்தை தங்கள் கதையில் பலர் உபயோகிப்பதை குறிப்பது அல்ல, அதே களத்திற்குள் ஆசிரியர் தன்னை எப்படி தனித்துக் காட்டுகிறார் என்பதைதான் குறிக்கிறது.  சிலர் கதைசொல்லலை முன் பின்னாக கலைத்துப் போடுகிறார்கள், சிலர் வரலாற்றை/ தொன்மத்தை மறுவாசிப்புச் செய்து புதிதாக எழுதுகிறார்கள். மேன்டல் முதலில் பார்த்த கதைகளில் உள்ளது போல் உளக்காய்ச்சலை, அதை வெளிக்கொணரும் உரைநடைப் பாணியை கொண்டுள்ளார். இது இல்லாத கதைகளே வழமையான ஒன்றாக உள்ளன.
உதாரணமாக ஜூனோ டியாஸின் (Junot Diaz) ‘Ysrael’ கதையும் குழந்தைகள் இரக்கமில்லாமல் (அவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை உணராமல்) நடந்து கொள்வதைப் பற்றிய இன்னொரு கதை. ‘Comma’ கதையுடன் அதை ஒப்பிடுவது நோக்கமல்ல, மேலும் இரண்டின் மையம் ஒன்றாக இருந்தாலும், நிகழ்வுகள், உரைநடை பாணி இவற்றில் வேறுபட்டவை இவை. ஆனால் களம் என்பதைக் கணக்கில் கொள்ளாவிட்டாலும், ‘Comma’ தனித்துக் காட்டும் எதுவும் கதையில் இல்லை, குழந்தைகள் செலுத்தும் வன்முறை பற்றிய இன்னொரு கதை அவ்வளவே.
“… there are households with other lives… Different histories lie close; they are curled like winter animals, breathing shallow, pulse undetected.” என்று மேன்டல் இந்தத் தொகுப்பின் ஒரு கதையில் சொல்கிறார். பல்வேறு வாழ்வுகளைக் காட்டும் இந்தத் தொகுப்பில், இரண்டு வகையான கதைகள் உள்ளன. அன்றாட வாழ்வின் சில பக்கங்களைக் காட்டும், புற நிகழ்வுகளே மையமாக உள்ள, ‘Comma’, ‘Harley Street’ போன்ற நேரடித் தன்மையை உடைய சம்பிரதயமான கதைகள் ஒரு வகை. இதற்கு நேர்மாறாக ‘The Assassination of Margaret Thatcher’, ‘The Heart Fails Without Warning’, ‘Sorry to Disturb’ போன்ற, தங்களின் களத்தின் மேற்பரப்பை ஊடுருவிச் செல்லும் கதைகள். இந்தக் களங்கள் நமக்குப் பரிச்சயமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாத்திரங்களுக்குள் சுருண்டிருக்கும் அக மிருகத்தின் அனல் மூச்சை, அதன் நாடித்துடிப்பின் படபடப்பை நாம் உணரும்படி செய்கின்றன. பாத்திரங்களின் அகக்கொந்தளிப்பு அன்றாட வாழ்வை பூதாகரமாக மாற்றும் தருணங்களைக் கொண்ட, எளிதில் கடந்து சென்று விட முடியாத இக்கதைகளே தொகுப்பின் குறிப்பிடத்தக்க கதைகளாக உள்ளன.

Tuesday, November 11, 2014

The Circle - Dave Eggers

பதாகை இதழில் வெளிவந்தது - 
http://padhaakai.com/2014/11/02/the-circle-by-dave-eggers/
---------------------------------------
“MY GOD, MAE thought. It’s heaven” என்ற வரியுடன் டேவ் எக்கர்ஸின் (Dave Eggers) ‘The Circle’ நாவல் ஆரம்பிக்கிறது. சொர்க்கம் என்று மே குறிப்பிடுவது, தான் அன்று வேலையில் சேரப்போகும் சர்க்கிள் (Circle) என்ற தொழில்நுட்ப/ சமூக வலைதள நிறுவனத்தின் வளாகத்தை பார்த்துத்தான். தான் பிறந்த சிறு நகரில், சவால்கள் இல்லாத, தனக்குப் பிடிக்காத வேலையில் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த மே, சர்க்கிளில் உயர் பதவியில் இருக்கும் ஆனி என்ற தோழியின் உதவியில் அங்கு வேலைக்கு சேர வந்துள்ளார். (மேவின் திறமைதான் காரணம் என்றே ஆனி சொல்கிறார்). ஊழியர்களுக்கான விளையாட்டரங்கம், வசதியான ஓய்வறைகள், பலவகை உணவுகள் இலவசமாக கிடைப்பது, இதையெல்லாம் விட சமூகத்தில் மிகப் பெரிய (நல்ல) தாக்கத்தை ஏற்படுத்தும் வேலையைச் செய்ய வாய்ப்பு, இவை மே சொர்க்கமென்று நினைக்கத் தூண்டுகிறது. அப்படி என்ன ‘சர்க்கிள்’ சாதித்து விட்டது?
கல்லூரிப் படிப்பை பாதியில் விட்ட டய் (Ty) என்ற மாணவன் ‘TruYou’ (Unified Operating System) என்ற சேவையை வடிவமைக்கிறான். ஒரே ஒரு பயனர் அடையாளத்தைக் கொண்டு பல சேவைகளைப் பெறக்கூடிய இதில் நீங்கள் சேர வேண்டுமென்றால் உங்களைப் பற்றிய உண்மையான தகவல்களைத் தர வேண்டும். ஒரே பயனர் அடையாளம் என்பதைவிட, உண்மையான அடையாளம் என்பது இதன் சிறப்பம்சமாகிறது. இணையத்தின் மிகவும் பலமான (அல்லது பலவீனமான) அம்சமான அனாமதேய இருப்பை இது ஒழித்து விடுகிறது, தான் இணையத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு வரிக்கும் பதிவு செய்பவர் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகிறது, இணைய உரையாடல்கள் நாகரீகமாக நடக்க ஆரம்பிக்கின்றன. “The trolls, who had more or less overtaken the internet, were driven back into the darkness.” என்கிறார் எக்கர்ஸ்.
என்ன கட்டுப்பாடுகள் வந்தாலும் இவற்றையெல்லாம் (trollingஐ ஒழிப்பது) சாத்தியமா என்று தோன்றினாலும், நாவலின் போக்கிற்கு அடித்தளம் அமைப்பதால் இதை ஏற்றுக்கொள்வோம். நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படும் சர்க்கிள் கூகிள், பேஸ்புக் போன்றவற்றை தன்னுள் கிரகித்துக்கொண்டு , இணையத்தில் கிட்டத்தட்ட ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் மே அங்கு வேலையில் சேருகிறார். எனவே, இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வேலையில் சேர்ந்த அன்று “Who else but utopians could make utopia?” என்று மே எண்ணுவதில் ஆச்சரியமில்லை.
ஆனால் நாவலின் முதல் வரியிலேயே, பெரும் கனவுகளுடன் வரும் இளம் பெண், அந்தக் கனவுகள்/ மதிப்பீடுகளின் வீழ்ச்சியை எதிர்கொள்வது, அந்த அனுபவம் அவளை எப்படி மாற்றுகிறது என நாவலின் போக்கு இருக்கும் என்று வாசகனால் யூகிக்க முடிகிறது.
(நாவலில் வரும் தொழில்நுட்பம் பற்றிய குறிப்புக்கள், வளாகங்கள் குறித்த வர்ணனைகள் பேஸ்புக், குறிப்பாக கூகிள் நிறுவனங்களை நினைவுப்படுத்துகின்றன. ஆனால் எக்கர்ஸ் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை மனதில் கொண்டு நாவலை எழுதவில்லை என்றும் நாவலுக்காக அந்நிறுவனங்கள் பற்றிய புத்தகங்களைப் படித்ததோ /அதன் வளாகங்களுக்கு சென்றதோ /அதன் ஊழியர்களிடம் பேசியதோ கிடையாது என்கிறார்)
சர்க்கிளின் நோக்கம் நல்லதுதானே என்று தோன்றலாம், அதன் செயல்பாடுகளும் அவ்வாறுதான் முதலில் இருக்கின்றன. மூன்று பகுதிகளாக உள்ள இந்த நாவலின் முதல் பகுதியில், சர்க்கிளின் செயல்பாடுகள் குறித்த சஞ்சலத்தை, எக்கர்ஸ் நம்முள் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். குழந்தைகளின் பாதுகாப்பிற்காகஅவர்கள் இருப்பிடத்தை எந்நேரமும் கண்காணிக்க உதவும் சிப் (chip) , 18 வயது வரை மட்டுமே அவர்களின் உடலில் பொதிக்கப்படும் உதவக்கூடும் என்றால், எங்கும் மிக எளிதாக பொறுத்தப்படக்கூடிய, அந்த இடத்தில் நடப்பவற்றை வீடியோவாக பார்க்க உதவும் கருவி, தெருக்களில் நடக்கக்கூடிய குற்றங்களை, ஏன் சில நேரங்களில் அரசு அத்துமீறல்களைக்கூட கண்காணிக்கவும் உதவலாம் என்று சொல்லப்படுகிறது. வார இறுதியில் நாம் செல்ல நினைத்துள்ள கடற்கரை அல்லது மலை வாசஸ்தலத்தின் தற்போதையை வானிலையை அறிந்து கொள்ளக்கூட இவை உதவலாம்.
தனியார் நிறுவனங்கள், கடைகள் போன்றவை இத்தகைய கருவிகளை தங்கள் பாதுகாப்பிற்காக இப்போதே வைத்துள்ளன. அரசாங்கமும் இதை பேருந்து/ ரயில் நிலையங்களில் உபயோகிக்கிறது. என்ன, இவை நுகர்வுப் பொருட்க்ளாக இன்னும் மாறவில்லை. சகாய விலையில் Circle அறிமுகப்படுத்தும் இந்தக் கருவி சந்தைப்படுத்தப்பட்டால் அந்நிறுவனம் சொல்வது போல் முற்றிலும் நன்மை மட்டும்தான் நிகழுமா. மலிவாகக் கிடைக்கும் இந்தக் கருவியை வைத்து கீழ்த்தரமான பல செயல்களையும் செய்யமுடியும்.
கடற்கரையில் ஒருவர் இளைப்பாறுவதை ஏன் இன்னொருவர் (அவருடைய நோக்கம் கண்காணிப்பதாக இல்லாமல் வானிலையை அறிந்துகொள்வதாகவே இருந்தாலும் ) பார்க்க வேண்டும், அவரின் கருவியில் ஏன் தனிமையை நாடி வந்தவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இது அந்தத் தொழில்நுட்பத்தின் பிரச்சனை அல்ல, அதை உபயோகிப்பவரின் மனவிகாரம் என்று குறைத்து மதிப்பிட முடியாது. அந்நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் வேலை செய்யும் ஒருவன், உடன்வேலை செய்யும் பெண்ணுடன் தான் உடலுறவு கொள்வதை வீடியோவில் பதிவு செய்கிறான். அப்பெண் அதை அழிக்கச் சொல்லும்போது, “.. you know technically neither one of us owns that video anymore. I couldn’t delete it if I tried. It’s like news. You don’t own the news, even if happens to you. You don’t own history. It’s part of the collective record now,”
என்று கூறுகிறான்.
இரண்டு விஷயங்கள் இதில் உள்ளன. தொழில் நுட்பத்தில் கில்லாடியான ஒருவனால்கூட அதை அழிக்க முடியாது என்பது ஒன்று. இன்னொன்று ஒரு அந்தரங்க நிகழ்வை ‘செய்தியாக’ மாற்றும் மனநிலை. இந்த இரண்டாவதே நமக்கு அதிக கவலை அளிக்கக்கூடியது. இதை மனவிகாரம் என்று சொல்லி கடந்து விட முடியாது, அப்படியென்றால் அதை அவன் தான் மட்டுமே காணக்கூடிய கருவியை உபயோகித்து பதிவு செய்திருப்பான்.
எதையும் செய்தியாக, உலகுக்கு பகிரத்தகுந்த ஒன்றாக மாற்றியதில் Circleஇன் பங்கும் உள்ளது. தான் செய்தை அதனால்தான் அவன், ” No one’s watched the video. It’s just a part of the archive. It’s one of ten thousand clips that go up every day here at the Circle alone. One of a billion worldwide, every day.” என்று தான் செய்ததை நியாயப்படுத்த முடிகிறது. ஆம், இந்தக் கருவியில் பதிவு செய்தது மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் எந்தக் கருவியையோ/ மென்பொருளையோ நீங்கள் ஒருமுறை உபயோகித்தால்கூட அவை Circleஇன் சேவையகங்களிலும் (servers) பிரதி எடுக்கப்பட்டு சாகாவரம் பெற்றுவிடுகின்றன.
நமக்கு இது ஒன்றும் முற்றிலும் புதிதல்ல.இன்றுகூட இணையத்தில் ஒரு முறை நடந்த செயலின் கால்தடத்தை (digital footprint) அழிப்பது எளிதல்ல. இன்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் நம் இணைய செயல்பாடுகளை பதிவு செய்து அது சார்ந்த சிபாரிசுகளை நமக்குத் தருகின்றன. இன்றும் பாலியல் ரீதியான வீடியோக்கள் வெளி வருவது பற்றி செய்திகளைப் படிக்கிறோம். அவற்றில் ஒருவகை திட்டமிட்டு செய்யப்படுபவை, இத்தகைய இழி செயல்கள் எக்காலத்திலும் இருக்கும். இன்னொரு வகை, தொழில்நுட்பம் பற்றி அரைகுறையாகத் தெரிந்து கொண்டு உபயோகித்து, அதில் செய்யும் தவறுகளால், அவர்கள் விரும்பாவிட்டாலும் வெளியாகுகின்றன.
தெரிந்தவர்/ தெரியாதவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவருடனும் பகிரக் கூடியது/ வேண்டியது இது என்று பகிரப்படுபவை மிகக் குறைவே. இந்த மனநிலை நாவலில் உருவாவது, நம் அடுத்த கட்ட பரிணாமமாக இருக்கக் கூடும். அந்த மனநிலையை அனைவரிடமும் உருவாக்குவதே Circle செய்யும் மிகப் பெரிய தீங்காக இருக்கிறது.
அதே போல் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதற்கும் 24 மணிநேர கண்காணிப்பு என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அது மட்டுமல்ல, இந்தச் சிப்பை கல்விக் கூடங்களுடன் இணைத்து, மாணவர்களின் மதிப்பெண்கள், வீட்டுப்பாடம் பற்றிய செய்திகள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யும் அடுத்த கட்ட தொழிநுட்பத்தையும் Circle யோசிக்கிறது. இதன்படி பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்போடு, அவர்களின் படிப்பைப் பற்றிய ஒவ்வொரு செய்தியையும் அறிந்து கொள்ள முடியும். இப்போது நிலவுவதைவிட அதிக கட்டுப்பாடோடு, தங்கள் பிள்ளைகளை பால்யத்திலிருந்தே உயர்கல்விக்குத் தயார் செய்ய முடியும்.
பிள்ளைகளின் மனநிலை? அது குறித்து என்ன, பெற்றோர் இந்த இணைப்பை வரவேற்கின்றார்கள், அது போதுமே Circleக்கு. மற்ற விஷயங்களைப் போல இதிலும் ஒரு சூட்சமம் உள்ளது. 18 வயதுக்குப் பின் இந்தச் சிப்புகள் உடலிலிருந்து எடுக்கப்பட்டாலும், தகவல்கள் அனைத்தும் அந்நிறுவனத்தின் மேகக் கணினி சேவையகங்களில் இருக்குமல்லவா. எனவே 18 வயதுக்குப் பின், சிப்புக்களை எடுத்தாலும் அவர்கள் அந்நிறுவனத்தின் பார்வையிலிருந்து விலகுவது கடினம்தான், அவர்களை எளிதில் Circleஇன் உறுப்பினராக மாற்றலாம். நாளைய உறுப்பினர்களுக்கான விதையாகவே இன்றைய சிப்புகள் உள்ளன.
அந்நிறுவனம் செய்யும் (செய்வதாகச் சொல்லும்) ஒரு சில நன்மைகளுக்காக, எந்தளவுக்கு ஒருவர் தன் சுயத்தை/அந்தரங்கத்தை இழக்க வேண்டும், அப்படி இழக்கத்தான் வேண்டுமா என்ற கேள்விகள் எழுகின்றன.
நாவலின் போக்கு மேவின் கோணத்தில் விரிந்தாலும், நாம் எக்கர்ஸ் காண்பதை மட்டுமே தொடர்கிறோம், நாம் கேட்பது அவர் நமக்குச் சொல்வதை மட்டுமே. மையப் பாத்திரமான மேவை நம்மால் ரத்தமும் சதையுமான மனுஷியாக உணர முடிவதில்லை. எதையும் கேள்விக்குட்படுத்தாத வெகுளித்தனம் உள்ளவராகவும் மேவின் பாத்திரப்படைப்பு இல்லை- அவ்வாறு இருந்திருந்தால் நாவலின் சம்பவங்களுக்கு அவரின் எதிர்வினைகள் பொருத்தமாக இருந்திருக்கக்கூடும். சர்க்கிள் பற்றிய வியப்பு இருந்தாலும், தனித்துவம் உள்ளவராகவே மே அறிமுகமாகிறார் (அதுவே அவரை தன் முந்தைய வேலையை வெறுக்கச் செய்கிறது), ஆனால் இந்த வேலைக்குச் சேர்ந்தபின், மிக இயல்பாகவே சர்க்கிளின் மந்தையாடுகளுள் ஒன்றாக மாறிவிடுகிறார். சில கேள்விகள் அவருள் எழுந்தாலும், மிக எளிதாக அவற்றைத் தாண்டிச் செல்கிறார் (அதாவது எக்கர்ஸ் அவ்வாறு அவரைச் செய்ய வைக்கிறார்). அவரை அவ்வப்போது சந்திக்கும் ஒரு மர்ம மனிதன்பால் (அவன் சர்க்கிளில் வேலை செய்பவனா அல்லது அதை வேவு பார்க்க வந்தவனா என்று தெரிவதில்லை) ஈர்க்கப்படுகிறார், மதிய உணவு நேரத்தைக் குறைத்துக் கொள்வது, பிறகு வேலை நேரத்தைத் தாண்டியும் உழைப்பது, ஓரிரு நாட்கள் சர்க்கிள் வளாகத்தில் உள்ள ஓய்வறைகளில் இரவைக் கழிப்பது என்று ஆரம்பித்து, பின்பு அதுவே நிரந்தர வசிப்பிடமாக மாறுமளவிற்கு சர்க்கிள் அவரை ஆக்கிரமிக்கிறது.
இவை அனைத்தையும் ஒரு விலகலுடன்தான் நாம் கவனிக்கிறோம். சர்க்கிள் குறித்து நம்முள் எழும் கேள்விகள், மேவின் கோணத்தில் எழாமல், எக்கர்ஸின் கோணத்தில் எழுவதை நாம் உணர்கிறோம். அவர் உருவாக்கி வைத்துள்ள கற்பனைகளில் விரிசல் விழுவதை, அவர் விழுமியங்கள் கேள்விக்குள்ளாவதை நாம் உணர்வதில்லை.
எனவே சர்க்கிளின் செயல்பாடுகள் நம்மை துணுக்குற வைத்தாலும் இந்த நாவல் (குறிப்பாக இதன் முதல் பகுதி) இணையம்/ சமூக வலைதளங்களின் தாக்கம், இவற்றால் அந்தரங்கம் பாதிக்கப்படுவது, இதையெல்லாம் பற்றி எக்கர்ஸின் அறிக்கையைப் போல் உள்ளதே நாவலின் பலவீனமாக இருக்கிறது.
ஒருங்கிணைந்த பயனர் முகவரி என்ற ஒற்றை நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது, கிளைகள் பரப்பி இணைய உலகை ஆக்கிரமித்து, பிறகு அதன் வாயிலாக மக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும்/ கட்டுப்படுத்தும்/ கட்டுப்படுத்த விரும்பும் (அது மக்களின் நன்மைக்காகவே என்ற முழக்கத்துடன்) ஒன்றாக மாறியது/ மாறிக்கொண்டிருப்பதின் பின்னணி என்ன, சர்க்கிளை செலுத்துபவர்கள் யார்? TruYouவை உருவாக்கிய டை, பிறகு அவன் இணைத்துக் கொண்ட பெய்லி, டாம் மூவரும் ‘Three Wise Men’ என்றும் ‘Gang of 40′ என்று அந்நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவும் அழைக்கப்படுகின்றனர். டை மற்றவர்களுடன் அதிகம் பழகாத, தொழில்நுட்ப மேதாவி(geek/ nerd), பெய்லி சர்க்கிளின் நோக்கத்தில்/செயல்பாடுகளில் முழு நம்பிக்கை உடையவர், டாம் சர்க்கிளின் தயாரிப்புக்களை சந்தைப்படுத்துபவர் என்ற அளவிலேயே நாவல் நின்று விடுகிறது.
புலி வால் சவாரி போல் இவர்கள், தாங்கள் ஆரம்பித்ததை நிறுத்த/ மாற்ற முடியாமல், அதன் போக்கில் செல்கிறார்களா, அல்லது அளப்பரிய செல்வம்/ கிடைக்கும் புகழ் தான் இவர்களைச் செலுத்தும் விசையா அல்லது வேறு ஏதேனும் கெடுநோக்கு (உலகையே கட்டுப்படுத்த வேண்டும் என்பது போல் ) உள்ளதா என்று நாவலில் எங்கும் சுட்டப்படுவதில்லை. எக்கர்ஸுக்கு Circleஇன் செயல்பாடுகளின் விளைவுகளே முக்கியம், அதன் நோக்கம் அல்ல என்று நமக்குத் தெரிந்தாலும், அது குறித்து பேசப்பட்டிருந்தால் நாவலை வாசகன் இன்னொரு கோணத்திலும் அணுகியிருக்க முடியும்.
(இதை எக்கர்ஸின் ‘A Heartbreaking Work of Staggering Genius’ என்ற quasi-memoirஉடன் இணைத்துப் பார்க்கலாம். Circle போல் நேரடியான கதைசொல்லல் இல்லாமல், வடிவ/ உரைநடை உத்திகளில் அதிக சித்து வேலைகள் உள்ள, ஆசிரியர் நிறைய இடங்களில் நேரடியாக நம்மிடம் பேசும் self-reflexive தன்மை உடைய நாவலாக இருந்தாலும், பாத்திரங்களின் உணர்வுகள் அவர்களுடையதாகவே தோன்றுகின்றன. வேறு களத்தில் இயங்கும் ‘Circle’ நாவலும், அத்தகைய பாத்திரங்களை உருவாக்குவதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருக்கிறது என்றாலும், எக்கர்ஸ் அதில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை)
முதல் பகுதியின் முடிவில் ஒரு ‘set-piece’ சம்பவம் நடக்கிறது. அதன் விளைவாக மே சர்க்கிளில் ஒரு முக்கிய பொறுப்பிற்கு வருகிறார். புதிய திட்டங்கள் உருவாகின்றன. “SECRETS ARE LIES; SHARING IS CARING; PRIVACY IS THEFT ” என்ற கோஷத்தை மே உருவாக்குகிறார். அவருக்கு சர்க்கிளின் செயல்பாடுகள் குறித்து முன்பிருந்த ஒன்றிரண்டு கேள்விகளும் மறைந்து, அதன் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சர்க்கிளின் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படுபவர்களில் ஒருவருடனான சந்திப்பிலேயே நடப்பதும் ,மேவினுள் இயல்பாக நடக்கும் மாற்றம் அல்ல, அதை வலிந்து உருவாக்கும் எக்கர்ஸின் கைங்கர்யம்தான். கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் உத்தியாக இதுவே உள்ளது, மேலும் இதனால் பாத்திரங்கள் முன்பை விட நம்மிடம் இன்னும் கொஞ்சம் நெருங்குகிறார்கள்.
மேவின் உயர்வு ஆனி- மே உறவில் விரிசல்களை உருவாக்குகிறது (அல்லது அப்படி மே உணர்கிறார்). தன் பெற்றோருக்கு நன்மை செய்யவே விரும்பினாலும், தன் செயல்களால், அவர்கள் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் தனிமையை பலவந்தமாகக் குலைக்கிறர். குற்றவாளிகளைத் தேட உதவும் என சொல்லப்படும் சர்க்கிளின் புதிய ஒரு மென்பொருள், மக்கள் முன் நடத்தப்படும் சோதனை முயற்சியிலேயே குழு ‘vigilante’ மனப்பான்மையை, trollingஇன் பிரதிபிம்ப பரிமாணத்தை உருவாக்கி ஒரு மரணத்திற்கே காரணமாகி விடுகிறது. இவ்வளவு நடந்தும், சர்க்கிளின் கொள்கைகளில் எள்ளளவும் சந்தேகம் இல்லாதவராக, தான் செல்ல ஆரம்பித்துள்ள பயணம் மனிதகுலத்தின் நன்மைக்கே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராக மாறிவிடுகிறார் மே.
“We must all have the right to disappear” என்று நாவலில் ஒருவர் கூறுகிறார். Circleஇல் நீங்கள் ஒருமுறை நுழைந்து விட்டால் அது சாத்தியமில்லை. எனவே அதில் நுழைய விரும்பாதவர்கள் உள்ளனர். அவர்களும் நுழையாதவரை, சர்க்கிள் என்ற பெயர் இருந்தாலும், அந்நிறுவனம் முழுமை அடையப்போவதில்லை.
அந்த முழுமைக்காக, இன்னும் தனித்திருப்பவர்களை ஒரே குடையின்கீழ் கொண்டு வர, அரசாங்கம்- தனியார் என்ற வேறுபாடுகளைக் களைய, வட்டத்தை முழுமை செய்ய ஒரு திட்டம் தீட்டப்படுகிறது. ஊழியர்கள் சந்திக்கும் ஒரே ஒரு கூட்டத்திலேயே இத்தகைய திட்டம் உருவாகுமா, அப்படியே உருவாகினாலும் நடைமுறையில் அது சாத்தியமா, அரசு அதை ஒப்புக்கொள்ளுமா போன்ற கேள்விகளைவிட, நன்மையின் முகமூடி அணிந்து வரும், அனைவரையும் விழுங்கக்கூடிய, “..right to disappear”ஐ ஒழிக்கக்கூடிய அந்தத் திட்டத்தின் வீச்சு நம்மை பீதியடையச் செய்யும்.
இறுதிப் பகுதியில் ஒரு பாத்திரம் மூலம் ஒரு பெரிய திருப்பம் வருகிறது. அத்தகைய திருப்பம் வரக்கூடும் என்று யூகிக்கும் வகையிலும், அப்படி முதலிலேயே யூகிக்க முடியாவிட்டாலும், நாவலின் முந்தைய நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை ஓடவிட்டால், அதற்கான அடித்தளத்தை நாவல் முழுதும், சில நிகழ்வுகள் வழியாக எக்கர்ஸ் லாவகமாக அமைத்துச் சென்றுள்ளது தெரியும்.
வாசகனுக்கு யூகிக்க எந்த வாய்ப்பும் கொடுக்காமல், இறுதியில் அவன் மீது திணிக்கப்படும் திருப்பமாக இல்லாமல், தன் எழுத்தின் மீதுள்ள நம்பிக்கையில், துப்புக்களை முன்கூட்டியே தந்து, அந்த திருப்பத்தை உருவாக்குவது பாரட்டப்படவேண்டியது என்றாலும்,
திருப்பம் ஏற்படுவதற்கான காரணங்கள் காத்திரமாக இல்லை, ஓரிரு பத்திகளில் எக்கர்ஸ் அதை கடந்து சென்று விடுகிறார். இதற்கும் எக்கர்ஸ், விளைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே காரணம்.
புதிய திட்டம் குறித்து நாவலின் இறுதி கட்டத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் மே, அப்போது என்ன செய்வார் என்பதையும் நாம் யூகிக்க முடியும், அவ்வாறே நடக்கிறது.
அந்த திட்டமாவது முழுமையை கொடுத்ததா என்றால் இல்லை. அனைவரின் புறச்செயல்பாடுகளையும் இணைத்து வட்டத்துக்குள் கொண்டு வந்து விடலாம், ஆனால் அவர்கள் மனதை? அதையும் இணைக்கும்வரை வட்டம் முழுமையாகாது அல்லவா. மனதின் எண்ணங்களையும் கண்டறிய வேண்டும், அவையும் பகிரப்பட வேண்டும் என்ற மேவின் விபரீத யோசனையோடு நாவல் முடிகிறது.
முதல் வரியிலிருந்தே யூகிக்கப்படக்கூடிய கதையோட்டம், தனக்கென்ற சுயம் இல்லாமல் நாவலாசிரியரின் விருப்பத்திற்கேற்ப செலுத்தப்படும் பாத்திரங்கள், நடக்கும் சம்பவங்கள் என செல்லும் இந்த நாவலை ஏன் நாம் கவனிக்க வேண்டும்?
சர்க்கிளின் செயல்பாடுகளை ஏற்காத, ஒரு காலத்தில் மே விரும்பிய மெர்செர் “You look at pictures of Nepal, push a smile button and you think that’s the same as going there,” என்று ஒரு இடத்தில் சொல்கிறார். தன்னைப் பற்றிய ஒரு கருத்து கணிப்பில் (‘Is Mae Holland awesome or what?’) வாக்களித்த 12000 பேர்களில் 97% சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தாலும், மே தனக்கு ஆதரவளிக்காத 3% சதவீதம் பற்றியே எண்ணுகிறார். அவர்களை உதாசீனப்படுத்தாமல், அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல், அவர்கள் யாரென்று கண்டுபிடிக்கிறார். பிறகு அவர்கள் தன்னை விரும்ப, தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார். தங்கள் நிலைப்பாடுகளில் இரு துருவங்களில் உள்ள இவர்கள் சொல்வதும் செய்வதும், இந்த நாவல் மே பற்றியோ அல்லது ஒரு நிறுவனம் உலகையாள முயல்வது பற்றியோ மட்டுமே அல்ல என்று சுட்டுகிறது.
இந்த நாவலை வாசிக்கும்/ வாசிக்காத, இணையத்தில்/ சமூக வலைதளங்களின் வட்டத்திற்குள் தங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் அனைவருமே இந்த நாவலில் நேரடியாக வராத, ஆனால் அதன் முக்கிய பாத்திரங்கள்தான். நாவலை செலுத்தும் விசையே அவர்கள்தான். இந்த நாவலில் வருவது போல் நாளை வட்டம் முழுமை அடைந்தால், அதற்கு அவர்கள்தான் முக்கிய காரணமாக இருப்பார்கள். தங்களை மற்றவர்கள் விரும்ப வேண்டும் என்ற அவர்களின் ஆசைகள், அதற்காக எதையும் செய்யத் துணியும் ஆர்வம், அதே நேரம் கொஞ்சமும் எதிர்மறை கருத்துக்களைச் சந்திக்க இயலாத மனநிலை, அது உருவாக்கும் சஞ்சலங்கள்/ பயங்கள் இவற்றின் மீதுதான் சர்க்கிள் போன்ற நிறுவனங்கள் எழுகின்றன. (“Cities, like dreams, are made of desires and fears, even if the thread of their discourse is secret, their rules are absurd, their perspectives deceitful, and everything conceals something else” என்ற கல்வீனோவின் கூற்றில் Cities என்பதை Internet அல்லது Social media என்று மாற்றினாலும் பொருத்தமாகவே இருக்கும்.)
எதிர்காலத்தில் இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ளபடி நடந்தால் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்ட நாவல் என்று சொல்லப்படும். அப்படி நடக்காவிட்டாலும் என்ன, ஒரு காலகட்டத்தின் zeitgeistஐ, அது எங்கு சென்று முடியும்/ சென்று முடிந்திருக்கக்கூடும் என்பதைச் சுட்டிய வகையிலும் இது குறிப்பிடத்தக்க நாவலாகிறது.