Tuesday, November 11, 2014

The Circle - Dave Eggers

பதாகை இதழில் வெளிவந்தது - 
http://padhaakai.com/2014/11/02/the-circle-by-dave-eggers/
---------------------------------------
“MY GOD, MAE thought. It’s heaven” என்ற வரியுடன் டேவ் எக்கர்ஸின் (Dave Eggers) ‘The Circle’ நாவல் ஆரம்பிக்கிறது. சொர்க்கம் என்று மே குறிப்பிடுவது, தான் அன்று வேலையில் சேரப்போகும் சர்க்கிள் (Circle) என்ற தொழில்நுட்ப/ சமூக வலைதள நிறுவனத்தின் வளாகத்தை பார்த்துத்தான். தான் பிறந்த சிறு நகரில், சவால்கள் இல்லாத, தனக்குப் பிடிக்காத வேலையில் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த மே, சர்க்கிளில் உயர் பதவியில் இருக்கும் ஆனி என்ற தோழியின் உதவியில் அங்கு வேலைக்கு சேர வந்துள்ளார். (மேவின் திறமைதான் காரணம் என்றே ஆனி சொல்கிறார்). ஊழியர்களுக்கான விளையாட்டரங்கம், வசதியான ஓய்வறைகள், பலவகை உணவுகள் இலவசமாக கிடைப்பது, இதையெல்லாம் விட சமூகத்தில் மிகப் பெரிய (நல்ல) தாக்கத்தை ஏற்படுத்தும் வேலையைச் செய்ய வாய்ப்பு, இவை மே சொர்க்கமென்று நினைக்கத் தூண்டுகிறது. அப்படி என்ன ‘சர்க்கிள்’ சாதித்து விட்டது?
கல்லூரிப் படிப்பை பாதியில் விட்ட டய் (Ty) என்ற மாணவன் ‘TruYou’ (Unified Operating System) என்ற சேவையை வடிவமைக்கிறான். ஒரே ஒரு பயனர் அடையாளத்தைக் கொண்டு பல சேவைகளைப் பெறக்கூடிய இதில் நீங்கள் சேர வேண்டுமென்றால் உங்களைப் பற்றிய உண்மையான தகவல்களைத் தர வேண்டும். ஒரே பயனர் அடையாளம் என்பதைவிட, உண்மையான அடையாளம் என்பது இதன் சிறப்பம்சமாகிறது. இணையத்தின் மிகவும் பலமான (அல்லது பலவீனமான) அம்சமான அனாமதேய இருப்பை இது ஒழித்து விடுகிறது, தான் இணையத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு வரிக்கும் பதிவு செய்பவர் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகிறது, இணைய உரையாடல்கள் நாகரீகமாக நடக்க ஆரம்பிக்கின்றன. “The trolls, who had more or less overtaken the internet, were driven back into the darkness.” என்கிறார் எக்கர்ஸ்.
என்ன கட்டுப்பாடுகள் வந்தாலும் இவற்றையெல்லாம் (trollingஐ ஒழிப்பது) சாத்தியமா என்று தோன்றினாலும், நாவலின் போக்கிற்கு அடித்தளம் அமைப்பதால் இதை ஏற்றுக்கொள்வோம். நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படும் சர்க்கிள் கூகிள், பேஸ்புக் போன்றவற்றை தன்னுள் கிரகித்துக்கொண்டு , இணையத்தில் கிட்டத்தட்ட ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் மே அங்கு வேலையில் சேருகிறார். எனவே, இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வேலையில் சேர்ந்த அன்று “Who else but utopians could make utopia?” என்று மே எண்ணுவதில் ஆச்சரியமில்லை.
ஆனால் நாவலின் முதல் வரியிலேயே, பெரும் கனவுகளுடன் வரும் இளம் பெண், அந்தக் கனவுகள்/ மதிப்பீடுகளின் வீழ்ச்சியை எதிர்கொள்வது, அந்த அனுபவம் அவளை எப்படி மாற்றுகிறது என நாவலின் போக்கு இருக்கும் என்று வாசகனால் யூகிக்க முடிகிறது.
(நாவலில் வரும் தொழில்நுட்பம் பற்றிய குறிப்புக்கள், வளாகங்கள் குறித்த வர்ணனைகள் பேஸ்புக், குறிப்பாக கூகிள் நிறுவனங்களை நினைவுப்படுத்துகின்றன. ஆனால் எக்கர்ஸ் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை மனதில் கொண்டு நாவலை எழுதவில்லை என்றும் நாவலுக்காக அந்நிறுவனங்கள் பற்றிய புத்தகங்களைப் படித்ததோ /அதன் வளாகங்களுக்கு சென்றதோ /அதன் ஊழியர்களிடம் பேசியதோ கிடையாது என்கிறார்)
சர்க்கிளின் நோக்கம் நல்லதுதானே என்று தோன்றலாம், அதன் செயல்பாடுகளும் அவ்வாறுதான் முதலில் இருக்கின்றன. மூன்று பகுதிகளாக உள்ள இந்த நாவலின் முதல் பகுதியில், சர்க்கிளின் செயல்பாடுகள் குறித்த சஞ்சலத்தை, எக்கர்ஸ் நம்முள் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். குழந்தைகளின் பாதுகாப்பிற்காகஅவர்கள் இருப்பிடத்தை எந்நேரமும் கண்காணிக்க உதவும் சிப் (chip) , 18 வயது வரை மட்டுமே அவர்களின் உடலில் பொதிக்கப்படும் உதவக்கூடும் என்றால், எங்கும் மிக எளிதாக பொறுத்தப்படக்கூடிய, அந்த இடத்தில் நடப்பவற்றை வீடியோவாக பார்க்க உதவும் கருவி, தெருக்களில் நடக்கக்கூடிய குற்றங்களை, ஏன் சில நேரங்களில் அரசு அத்துமீறல்களைக்கூட கண்காணிக்கவும் உதவலாம் என்று சொல்லப்படுகிறது. வார இறுதியில் நாம் செல்ல நினைத்துள்ள கடற்கரை அல்லது மலை வாசஸ்தலத்தின் தற்போதையை வானிலையை அறிந்து கொள்ளக்கூட இவை உதவலாம்.
தனியார் நிறுவனங்கள், கடைகள் போன்றவை இத்தகைய கருவிகளை தங்கள் பாதுகாப்பிற்காக இப்போதே வைத்துள்ளன. அரசாங்கமும் இதை பேருந்து/ ரயில் நிலையங்களில் உபயோகிக்கிறது. என்ன, இவை நுகர்வுப் பொருட்க்ளாக இன்னும் மாறவில்லை. சகாய விலையில் Circle அறிமுகப்படுத்தும் இந்தக் கருவி சந்தைப்படுத்தப்பட்டால் அந்நிறுவனம் சொல்வது போல் முற்றிலும் நன்மை மட்டும்தான் நிகழுமா. மலிவாகக் கிடைக்கும் இந்தக் கருவியை வைத்து கீழ்த்தரமான பல செயல்களையும் செய்யமுடியும்.
கடற்கரையில் ஒருவர் இளைப்பாறுவதை ஏன் இன்னொருவர் (அவருடைய நோக்கம் கண்காணிப்பதாக இல்லாமல் வானிலையை அறிந்துகொள்வதாகவே இருந்தாலும் ) பார்க்க வேண்டும், அவரின் கருவியில் ஏன் தனிமையை நாடி வந்தவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இது அந்தத் தொழில்நுட்பத்தின் பிரச்சனை அல்ல, அதை உபயோகிப்பவரின் மனவிகாரம் என்று குறைத்து மதிப்பிட முடியாது. அந்நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் வேலை செய்யும் ஒருவன், உடன்வேலை செய்யும் பெண்ணுடன் தான் உடலுறவு கொள்வதை வீடியோவில் பதிவு செய்கிறான். அப்பெண் அதை அழிக்கச் சொல்லும்போது, “.. you know technically neither one of us owns that video anymore. I couldn’t delete it if I tried. It’s like news. You don’t own the news, even if happens to you. You don’t own history. It’s part of the collective record now,”
என்று கூறுகிறான்.
இரண்டு விஷயங்கள் இதில் உள்ளன. தொழில் நுட்பத்தில் கில்லாடியான ஒருவனால்கூட அதை அழிக்க முடியாது என்பது ஒன்று. இன்னொன்று ஒரு அந்தரங்க நிகழ்வை ‘செய்தியாக’ மாற்றும் மனநிலை. இந்த இரண்டாவதே நமக்கு அதிக கவலை அளிக்கக்கூடியது. இதை மனவிகாரம் என்று சொல்லி கடந்து விட முடியாது, அப்படியென்றால் அதை அவன் தான் மட்டுமே காணக்கூடிய கருவியை உபயோகித்து பதிவு செய்திருப்பான்.
எதையும் செய்தியாக, உலகுக்கு பகிரத்தகுந்த ஒன்றாக மாற்றியதில் Circleஇன் பங்கும் உள்ளது. தான் செய்தை அதனால்தான் அவன், ” No one’s watched the video. It’s just a part of the archive. It’s one of ten thousand clips that go up every day here at the Circle alone. One of a billion worldwide, every day.” என்று தான் செய்ததை நியாயப்படுத்த முடிகிறது. ஆம், இந்தக் கருவியில் பதிவு செய்தது மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் எந்தக் கருவியையோ/ மென்பொருளையோ நீங்கள் ஒருமுறை உபயோகித்தால்கூட அவை Circleஇன் சேவையகங்களிலும் (servers) பிரதி எடுக்கப்பட்டு சாகாவரம் பெற்றுவிடுகின்றன.
நமக்கு இது ஒன்றும் முற்றிலும் புதிதல்ல.இன்றுகூட இணையத்தில் ஒரு முறை நடந்த செயலின் கால்தடத்தை (digital footprint) அழிப்பது எளிதல்ல. இன்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் நம் இணைய செயல்பாடுகளை பதிவு செய்து அது சார்ந்த சிபாரிசுகளை நமக்குத் தருகின்றன. இன்றும் பாலியல் ரீதியான வீடியோக்கள் வெளி வருவது பற்றி செய்திகளைப் படிக்கிறோம். அவற்றில் ஒருவகை திட்டமிட்டு செய்யப்படுபவை, இத்தகைய இழி செயல்கள் எக்காலத்திலும் இருக்கும். இன்னொரு வகை, தொழில்நுட்பம் பற்றி அரைகுறையாகத் தெரிந்து கொண்டு உபயோகித்து, அதில் செய்யும் தவறுகளால், அவர்கள் விரும்பாவிட்டாலும் வெளியாகுகின்றன.
தெரிந்தவர்/ தெரியாதவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவருடனும் பகிரக் கூடியது/ வேண்டியது இது என்று பகிரப்படுபவை மிகக் குறைவே. இந்த மனநிலை நாவலில் உருவாவது, நம் அடுத்த கட்ட பரிணாமமாக இருக்கக் கூடும். அந்த மனநிலையை அனைவரிடமும் உருவாக்குவதே Circle செய்யும் மிகப் பெரிய தீங்காக இருக்கிறது.
அதே போல் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதற்கும் 24 மணிநேர கண்காணிப்பு என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அது மட்டுமல்ல, இந்தச் சிப்பை கல்விக் கூடங்களுடன் இணைத்து, மாணவர்களின் மதிப்பெண்கள், வீட்டுப்பாடம் பற்றிய செய்திகள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யும் அடுத்த கட்ட தொழிநுட்பத்தையும் Circle யோசிக்கிறது. இதன்படி பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்போடு, அவர்களின் படிப்பைப் பற்றிய ஒவ்வொரு செய்தியையும் அறிந்து கொள்ள முடியும். இப்போது நிலவுவதைவிட அதிக கட்டுப்பாடோடு, தங்கள் பிள்ளைகளை பால்யத்திலிருந்தே உயர்கல்விக்குத் தயார் செய்ய முடியும்.
பிள்ளைகளின் மனநிலை? அது குறித்து என்ன, பெற்றோர் இந்த இணைப்பை வரவேற்கின்றார்கள், அது போதுமே Circleக்கு. மற்ற விஷயங்களைப் போல இதிலும் ஒரு சூட்சமம் உள்ளது. 18 வயதுக்குப் பின் இந்தச் சிப்புகள் உடலிலிருந்து எடுக்கப்பட்டாலும், தகவல்கள் அனைத்தும் அந்நிறுவனத்தின் மேகக் கணினி சேவையகங்களில் இருக்குமல்லவா. எனவே 18 வயதுக்குப் பின், சிப்புக்களை எடுத்தாலும் அவர்கள் அந்நிறுவனத்தின் பார்வையிலிருந்து விலகுவது கடினம்தான், அவர்களை எளிதில் Circleஇன் உறுப்பினராக மாற்றலாம். நாளைய உறுப்பினர்களுக்கான விதையாகவே இன்றைய சிப்புகள் உள்ளன.
அந்நிறுவனம் செய்யும் (செய்வதாகச் சொல்லும்) ஒரு சில நன்மைகளுக்காக, எந்தளவுக்கு ஒருவர் தன் சுயத்தை/அந்தரங்கத்தை இழக்க வேண்டும், அப்படி இழக்கத்தான் வேண்டுமா என்ற கேள்விகள் எழுகின்றன.
நாவலின் போக்கு மேவின் கோணத்தில் விரிந்தாலும், நாம் எக்கர்ஸ் காண்பதை மட்டுமே தொடர்கிறோம், நாம் கேட்பது அவர் நமக்குச் சொல்வதை மட்டுமே. மையப் பாத்திரமான மேவை நம்மால் ரத்தமும் சதையுமான மனுஷியாக உணர முடிவதில்லை. எதையும் கேள்விக்குட்படுத்தாத வெகுளித்தனம் உள்ளவராகவும் மேவின் பாத்திரப்படைப்பு இல்லை- அவ்வாறு இருந்திருந்தால் நாவலின் சம்பவங்களுக்கு அவரின் எதிர்வினைகள் பொருத்தமாக இருந்திருக்கக்கூடும். சர்க்கிள் பற்றிய வியப்பு இருந்தாலும், தனித்துவம் உள்ளவராகவே மே அறிமுகமாகிறார் (அதுவே அவரை தன் முந்தைய வேலையை வெறுக்கச் செய்கிறது), ஆனால் இந்த வேலைக்குச் சேர்ந்தபின், மிக இயல்பாகவே சர்க்கிளின் மந்தையாடுகளுள் ஒன்றாக மாறிவிடுகிறார். சில கேள்விகள் அவருள் எழுந்தாலும், மிக எளிதாக அவற்றைத் தாண்டிச் செல்கிறார் (அதாவது எக்கர்ஸ் அவ்வாறு அவரைச் செய்ய வைக்கிறார்). அவரை அவ்வப்போது சந்திக்கும் ஒரு மர்ம மனிதன்பால் (அவன் சர்க்கிளில் வேலை செய்பவனா அல்லது அதை வேவு பார்க்க வந்தவனா என்று தெரிவதில்லை) ஈர்க்கப்படுகிறார், மதிய உணவு நேரத்தைக் குறைத்துக் கொள்வது, பிறகு வேலை நேரத்தைத் தாண்டியும் உழைப்பது, ஓரிரு நாட்கள் சர்க்கிள் வளாகத்தில் உள்ள ஓய்வறைகளில் இரவைக் கழிப்பது என்று ஆரம்பித்து, பின்பு அதுவே நிரந்தர வசிப்பிடமாக மாறுமளவிற்கு சர்க்கிள் அவரை ஆக்கிரமிக்கிறது.
இவை அனைத்தையும் ஒரு விலகலுடன்தான் நாம் கவனிக்கிறோம். சர்க்கிள் குறித்து நம்முள் எழும் கேள்விகள், மேவின் கோணத்தில் எழாமல், எக்கர்ஸின் கோணத்தில் எழுவதை நாம் உணர்கிறோம். அவர் உருவாக்கி வைத்துள்ள கற்பனைகளில் விரிசல் விழுவதை, அவர் விழுமியங்கள் கேள்விக்குள்ளாவதை நாம் உணர்வதில்லை.
எனவே சர்க்கிளின் செயல்பாடுகள் நம்மை துணுக்குற வைத்தாலும் இந்த நாவல் (குறிப்பாக இதன் முதல் பகுதி) இணையம்/ சமூக வலைதளங்களின் தாக்கம், இவற்றால் அந்தரங்கம் பாதிக்கப்படுவது, இதையெல்லாம் பற்றி எக்கர்ஸின் அறிக்கையைப் போல் உள்ளதே நாவலின் பலவீனமாக இருக்கிறது.
ஒருங்கிணைந்த பயனர் முகவரி என்ற ஒற்றை நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது, கிளைகள் பரப்பி இணைய உலகை ஆக்கிரமித்து, பிறகு அதன் வாயிலாக மக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும்/ கட்டுப்படுத்தும்/ கட்டுப்படுத்த விரும்பும் (அது மக்களின் நன்மைக்காகவே என்ற முழக்கத்துடன்) ஒன்றாக மாறியது/ மாறிக்கொண்டிருப்பதின் பின்னணி என்ன, சர்க்கிளை செலுத்துபவர்கள் யார்? TruYouவை உருவாக்கிய டை, பிறகு அவன் இணைத்துக் கொண்ட பெய்லி, டாம் மூவரும் ‘Three Wise Men’ என்றும் ‘Gang of 40′ என்று அந்நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவும் அழைக்கப்படுகின்றனர். டை மற்றவர்களுடன் அதிகம் பழகாத, தொழில்நுட்ப மேதாவி(geek/ nerd), பெய்லி சர்க்கிளின் நோக்கத்தில்/செயல்பாடுகளில் முழு நம்பிக்கை உடையவர், டாம் சர்க்கிளின் தயாரிப்புக்களை சந்தைப்படுத்துபவர் என்ற அளவிலேயே நாவல் நின்று விடுகிறது.
புலி வால் சவாரி போல் இவர்கள், தாங்கள் ஆரம்பித்ததை நிறுத்த/ மாற்ற முடியாமல், அதன் போக்கில் செல்கிறார்களா, அல்லது அளப்பரிய செல்வம்/ கிடைக்கும் புகழ் தான் இவர்களைச் செலுத்தும் விசையா அல்லது வேறு ஏதேனும் கெடுநோக்கு (உலகையே கட்டுப்படுத்த வேண்டும் என்பது போல் ) உள்ளதா என்று நாவலில் எங்கும் சுட்டப்படுவதில்லை. எக்கர்ஸுக்கு Circleஇன் செயல்பாடுகளின் விளைவுகளே முக்கியம், அதன் நோக்கம் அல்ல என்று நமக்குத் தெரிந்தாலும், அது குறித்து பேசப்பட்டிருந்தால் நாவலை வாசகன் இன்னொரு கோணத்திலும் அணுகியிருக்க முடியும்.
(இதை எக்கர்ஸின் ‘A Heartbreaking Work of Staggering Genius’ என்ற quasi-memoirஉடன் இணைத்துப் பார்க்கலாம். Circle போல் நேரடியான கதைசொல்லல் இல்லாமல், வடிவ/ உரைநடை உத்திகளில் அதிக சித்து வேலைகள் உள்ள, ஆசிரியர் நிறைய இடங்களில் நேரடியாக நம்மிடம் பேசும் self-reflexive தன்மை உடைய நாவலாக இருந்தாலும், பாத்திரங்களின் உணர்வுகள் அவர்களுடையதாகவே தோன்றுகின்றன. வேறு களத்தில் இயங்கும் ‘Circle’ நாவலும், அத்தகைய பாத்திரங்களை உருவாக்குவதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருக்கிறது என்றாலும், எக்கர்ஸ் அதில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை)
முதல் பகுதியின் முடிவில் ஒரு ‘set-piece’ சம்பவம் நடக்கிறது. அதன் விளைவாக மே சர்க்கிளில் ஒரு முக்கிய பொறுப்பிற்கு வருகிறார். புதிய திட்டங்கள் உருவாகின்றன. “SECRETS ARE LIES; SHARING IS CARING; PRIVACY IS THEFT ” என்ற கோஷத்தை மே உருவாக்குகிறார். அவருக்கு சர்க்கிளின் செயல்பாடுகள் குறித்து முன்பிருந்த ஒன்றிரண்டு கேள்விகளும் மறைந்து, அதன் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சர்க்கிளின் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படுபவர்களில் ஒருவருடனான சந்திப்பிலேயே நடப்பதும் ,மேவினுள் இயல்பாக நடக்கும் மாற்றம் அல்ல, அதை வலிந்து உருவாக்கும் எக்கர்ஸின் கைங்கர்யம்தான். கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் உத்தியாக இதுவே உள்ளது, மேலும் இதனால் பாத்திரங்கள் முன்பை விட நம்மிடம் இன்னும் கொஞ்சம் நெருங்குகிறார்கள்.
மேவின் உயர்வு ஆனி- மே உறவில் விரிசல்களை உருவாக்குகிறது (அல்லது அப்படி மே உணர்கிறார்). தன் பெற்றோருக்கு நன்மை செய்யவே விரும்பினாலும், தன் செயல்களால், அவர்கள் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் தனிமையை பலவந்தமாகக் குலைக்கிறர். குற்றவாளிகளைத் தேட உதவும் என சொல்லப்படும் சர்க்கிளின் புதிய ஒரு மென்பொருள், மக்கள் முன் நடத்தப்படும் சோதனை முயற்சியிலேயே குழு ‘vigilante’ மனப்பான்மையை, trollingஇன் பிரதிபிம்ப பரிமாணத்தை உருவாக்கி ஒரு மரணத்திற்கே காரணமாகி விடுகிறது. இவ்வளவு நடந்தும், சர்க்கிளின் கொள்கைகளில் எள்ளளவும் சந்தேகம் இல்லாதவராக, தான் செல்ல ஆரம்பித்துள்ள பயணம் மனிதகுலத்தின் நன்மைக்கே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராக மாறிவிடுகிறார் மே.
“We must all have the right to disappear” என்று நாவலில் ஒருவர் கூறுகிறார். Circleஇல் நீங்கள் ஒருமுறை நுழைந்து விட்டால் அது சாத்தியமில்லை. எனவே அதில் நுழைய விரும்பாதவர்கள் உள்ளனர். அவர்களும் நுழையாதவரை, சர்க்கிள் என்ற பெயர் இருந்தாலும், அந்நிறுவனம் முழுமை அடையப்போவதில்லை.
அந்த முழுமைக்காக, இன்னும் தனித்திருப்பவர்களை ஒரே குடையின்கீழ் கொண்டு வர, அரசாங்கம்- தனியார் என்ற வேறுபாடுகளைக் களைய, வட்டத்தை முழுமை செய்ய ஒரு திட்டம் தீட்டப்படுகிறது. ஊழியர்கள் சந்திக்கும் ஒரே ஒரு கூட்டத்திலேயே இத்தகைய திட்டம் உருவாகுமா, அப்படியே உருவாகினாலும் நடைமுறையில் அது சாத்தியமா, அரசு அதை ஒப்புக்கொள்ளுமா போன்ற கேள்விகளைவிட, நன்மையின் முகமூடி அணிந்து வரும், அனைவரையும் விழுங்கக்கூடிய, “..right to disappear”ஐ ஒழிக்கக்கூடிய அந்தத் திட்டத்தின் வீச்சு நம்மை பீதியடையச் செய்யும்.
இறுதிப் பகுதியில் ஒரு பாத்திரம் மூலம் ஒரு பெரிய திருப்பம் வருகிறது. அத்தகைய திருப்பம் வரக்கூடும் என்று யூகிக்கும் வகையிலும், அப்படி முதலிலேயே யூகிக்க முடியாவிட்டாலும், நாவலின் முந்தைய நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை ஓடவிட்டால், அதற்கான அடித்தளத்தை நாவல் முழுதும், சில நிகழ்வுகள் வழியாக எக்கர்ஸ் லாவகமாக அமைத்துச் சென்றுள்ளது தெரியும்.
வாசகனுக்கு யூகிக்க எந்த வாய்ப்பும் கொடுக்காமல், இறுதியில் அவன் மீது திணிக்கப்படும் திருப்பமாக இல்லாமல், தன் எழுத்தின் மீதுள்ள நம்பிக்கையில், துப்புக்களை முன்கூட்டியே தந்து, அந்த திருப்பத்தை உருவாக்குவது பாரட்டப்படவேண்டியது என்றாலும்,
திருப்பம் ஏற்படுவதற்கான காரணங்கள் காத்திரமாக இல்லை, ஓரிரு பத்திகளில் எக்கர்ஸ் அதை கடந்து சென்று விடுகிறார். இதற்கும் எக்கர்ஸ், விளைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே காரணம்.
புதிய திட்டம் குறித்து நாவலின் இறுதி கட்டத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் மே, அப்போது என்ன செய்வார் என்பதையும் நாம் யூகிக்க முடியும், அவ்வாறே நடக்கிறது.
அந்த திட்டமாவது முழுமையை கொடுத்ததா என்றால் இல்லை. அனைவரின் புறச்செயல்பாடுகளையும் இணைத்து வட்டத்துக்குள் கொண்டு வந்து விடலாம், ஆனால் அவர்கள் மனதை? அதையும் இணைக்கும்வரை வட்டம் முழுமையாகாது அல்லவா. மனதின் எண்ணங்களையும் கண்டறிய வேண்டும், அவையும் பகிரப்பட வேண்டும் என்ற மேவின் விபரீத யோசனையோடு நாவல் முடிகிறது.
முதல் வரியிலிருந்தே யூகிக்கப்படக்கூடிய கதையோட்டம், தனக்கென்ற சுயம் இல்லாமல் நாவலாசிரியரின் விருப்பத்திற்கேற்ப செலுத்தப்படும் பாத்திரங்கள், நடக்கும் சம்பவங்கள் என செல்லும் இந்த நாவலை ஏன் நாம் கவனிக்க வேண்டும்?
சர்க்கிளின் செயல்பாடுகளை ஏற்காத, ஒரு காலத்தில் மே விரும்பிய மெர்செர் “You look at pictures of Nepal, push a smile button and you think that’s the same as going there,” என்று ஒரு இடத்தில் சொல்கிறார். தன்னைப் பற்றிய ஒரு கருத்து கணிப்பில் (‘Is Mae Holland awesome or what?’) வாக்களித்த 12000 பேர்களில் 97% சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தாலும், மே தனக்கு ஆதரவளிக்காத 3% சதவீதம் பற்றியே எண்ணுகிறார். அவர்களை உதாசீனப்படுத்தாமல், அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல், அவர்கள் யாரென்று கண்டுபிடிக்கிறார். பிறகு அவர்கள் தன்னை விரும்ப, தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார். தங்கள் நிலைப்பாடுகளில் இரு துருவங்களில் உள்ள இவர்கள் சொல்வதும் செய்வதும், இந்த நாவல் மே பற்றியோ அல்லது ஒரு நிறுவனம் உலகையாள முயல்வது பற்றியோ மட்டுமே அல்ல என்று சுட்டுகிறது.
இந்த நாவலை வாசிக்கும்/ வாசிக்காத, இணையத்தில்/ சமூக வலைதளங்களின் வட்டத்திற்குள் தங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் அனைவருமே இந்த நாவலில் நேரடியாக வராத, ஆனால் அதன் முக்கிய பாத்திரங்கள்தான். நாவலை செலுத்தும் விசையே அவர்கள்தான். இந்த நாவலில் வருவது போல் நாளை வட்டம் முழுமை அடைந்தால், அதற்கு அவர்கள்தான் முக்கிய காரணமாக இருப்பார்கள். தங்களை மற்றவர்கள் விரும்ப வேண்டும் என்ற அவர்களின் ஆசைகள், அதற்காக எதையும் செய்யத் துணியும் ஆர்வம், அதே நேரம் கொஞ்சமும் எதிர்மறை கருத்துக்களைச் சந்திக்க இயலாத மனநிலை, அது உருவாக்கும் சஞ்சலங்கள்/ பயங்கள் இவற்றின் மீதுதான் சர்க்கிள் போன்ற நிறுவனங்கள் எழுகின்றன. (“Cities, like dreams, are made of desires and fears, even if the thread of their discourse is secret, their rules are absurd, their perspectives deceitful, and everything conceals something else” என்ற கல்வீனோவின் கூற்றில் Cities என்பதை Internet அல்லது Social media என்று மாற்றினாலும் பொருத்தமாகவே இருக்கும்.)
எதிர்காலத்தில் இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ளபடி நடந்தால் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்ட நாவல் என்று சொல்லப்படும். அப்படி நடக்காவிட்டாலும் என்ன, ஒரு காலகட்டத்தின் zeitgeistஐ, அது எங்கு சென்று முடியும்/ சென்று முடிந்திருக்கக்கூடும் என்பதைச் சுட்டிய வகையிலும் இது குறிப்பிடத்தக்க நாவலாகிறது.

No comments:

Post a Comment