Tuesday, January 12, 2016

புலம்பெயர்தலின் பின்னணியில் மானுடம் – Junot Diazன் Drown சிறுகதைத் தொகுப்பு

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2016/01/03/drown/
------------------------
தந்தையில்லாத குடும்பங்கள்ஒருதலைக்காதல்காதல் தோல்விபோதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள்அமெரிக்காவின் கெட்டோ (Ghetto)  வாழ்க்கை மாற்றங்களுக்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்ள முயற்சி செய்யும் குடிபெயர்ந்தோர்தாயகத்தில் (டொமினிகன் ரிபப்ளிக்) அநாதரவாய் விட்டு வரப்பட்ட குடும்பங்கள்  - 1996ல் வெளியான ஜூனோ டியாஸின் ஆச்சரியமளிக்கும் முதல் சிறுகதைத் தொகுப்பான "Drown"ல் உள்ள   கதைகள் பெரும்பாலும் இவற்றைப் பேசுகின்றன.

மக்கள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்தல் என்பது பொதுவாக இப்படி நிகழ்கிறது: பெரும்பாலும் கணவன் அல்லது சில சமயம் மனைவி முதலில் 'பொன்னுலகுசேர்கின்றனர்அங்கு ஒரு பணியில் சில காலம் இருந்தபின் அவரது குடும்பத்தினர் ஏனையோர் அவரைத் தொடர்கின்றனர். ஆனால் எல்லாருக்கும் இப்படி நடப்பதில்லை. குறிப்பாக white-collar அல்லாத  எளியமுறைசாரா வேலைகளுக்காக புலம் பெயர்பவர்களுக்கு நல்வாழ்வு எளிதாக அமைவதில்லை.   'பொன்னுலகுவந்தடையும் வெற்றியின்  களப்பலியாக உறவுகளே உள்ளன. கணவன் காணாமல் போகிறார்,  அல்லது இன்னொரு பெண்ணோடு அமெரிக்காவில் குடும்பம் நடத்த ஆரம்பிக்கிறார்
இறுதியில்வேலைப் பளுவில் தன் சுயத்தை இழக்கிறார்புது உறவிலும் ஒட்ட முடியாமல் தன்னையே தொலைக்கிறார். எதுவாகினும்,  அவரது மனைவியோ அம்மாவோ குடும்பப் பொறுப்பைத் தாய்நாட்டில்  தனியாளாய்ச் சுமக்க நேர்கிறது. பிள்ளைகள் தகப்பனில்லாமல் வளர்கிறார்கள். எல்லா இடத்திலும் இருப்பது போல்எப்போதும் பெண்களே அதிக துயருக்குள்ளாகிறார்கள். 

குடும்பத்தில் "இல்லாத அப்பா" இந்தக் கதைகளில் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறார்அதே போல் அம்மா அல்லது மனைவி குடும்பச் சுமையை ஏற்பதும் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. தந்தை இல்லாததால் ஏற்படும் பொருளாதார அழுத்தம் மட்டுமல்லஅதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் டியாஸ் விவரிக்கிறார். தந்தை எங்கிருக்கிறார் என்பதை மனைவி அறிந்திருப்பதில்லைஏன் தொடர்பு கொள்ளவில்லை என்ற குழப்பம் நீடிக்கிறதுஅவர் திரும்பி வருவாரா அல்லது காணாமல் போனது போனதுதானா என்ற அச்சுறுத்தும் கவலையோடு வாழ வேண்டியதாகிறது.  சில கதைகளின் குழந்தைகள் இது எதையும் புரிந்து கொள்ளாத பச்சிளம் பாலகர்களாய் இருக்கின்றனர். அப்பா தம்முடன் இல்லாததன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என்றாலும் தந்தையில்லாமல் வளர்வதால் ஏற்படும் தழும்புகள் அவர்களின் உள்ளத்தில் நிரந்தரமாய் தங்கவே செய்கின்றன. நிதிநிலை மிகவும் மோசமாகும்போதுகுடும்ப  நிலவரம் முன்னேறும்வரை வேறு இடத்தில் இருக்கட்டும் என்று அம்மா தன் குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்புகிறார். குழந்தைகள் மிகவும் சிறு வயதினராய் இருந்தாலும்கூட இதிலுள்ள அவமானத்தை யாரும் சொல்வதற்கான அவசியமில்லாமலே உணர்கின்றனர் - தன்னை  வளர்க்க  முடியாமல் வேறொரு குடும்பத்துக்கு அனுப்பி  வைக்கிறார்கள் என்பது யாரையும் காயப்படுத்தவே செய்யும். தன் குடும்பத்துடன் வசிப்பதில் உள்ள  இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. உறவினர்கள் முழு மனதோடு வரவேற்றாலும்கூட அவர்களோடு ஒட்ட முடியாமல் இருப்பதை குழந்தைகள் தம் விருப்பமின்மைகளால் வெளிப்படுத்துகின்றனர். 

இந்தக் கதைகளில் உள்ள பெண்கள் பலரும் நேரடியாகப் பேசப்படுவதில்லை. மகன்களின் பார்வையினூடாகடியாஸின் குறிப்புணர்த்தல்களைக் கொண்டுதான் நாம் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆண் கதைசொல்லிகளின் கோணத்தில்தான் அவர்களை நாம் காண்கிறோம் என்றாலும் அவர்கள் பரிவுடனேயே அணுகப்படுகிறார்கள். 

இந்தப் பெண்கள் பன்னிரெண்டு மணி நேரம் நீளும் பணிகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பற்ற இடங்களில் வசிப்பதால், உடன் பணிபுரிபவர்களை வீடு வரை துணைக்கு வரும்படி அழைக்கிறார்கள்ஆனால் அவர்களை வீட்டினுள் வரச் சொல்லி அழைப்பதில்லை. தாய்நாட்டில் இருக்கும் இப்பெண்கள்பொதுவாக வெளிநாடு சென்றுவிட்ட தங்கள் கணவன் போல் வேறு உறவை எளிதில்  ஏற்றுக்கொள்வதில்லை.  கடல் கடந்து சென்ற கணவனுடனான  உறவை அவன் இல்லாவிட்டாலும் பேணுவதில் உறுதியாக  உள்ளார்கள். தன் குழந்தைகளால் (வீட்டிற்கு கொண்டு விடும்) இன்னொரு ஆணை முகமறியா/ முகம் மறந்த தந்தையின் இடத்தில் வைத்துப் பார்க்க முடிவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். சில சமயம் தான் திரும்பி வந்து அவர்கள் அனைவைரும் அழைத்துச் செல்வதாக கணவனிடம் இருந்து ஒரு கடிதம் வருகிறதுஆனால் அவர் மட்டும் வருவதேயில்லை.அவ்வப்போது கணவன் எழுதும் கடிதம் கிடைக்கும்போது அவன் வருகை குறித்து உருவாகும்  நம்பிக்கைபின் காலம் செல்ல அது மெல்லக் குலைவதுபிறகு இன்னொரு கடிதம்மீண்டும் அதே நச்சுச் சுழற்சி என இவர்களின் வாழ்க்கை நம்பிக்கைக்கும்/அது குறித்த சலிப்பிற்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கிறது.  

முன்னொரு காலத்தில் இவர்கள் இப்போதிருப்பதைவிட மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்ததை உணர்த்தும்இனி மீண்டெழ முடியாத கடந்த காலத்தின் இனிய நினைவுகளாக/சாட்சியங்களாக  மட்டுமே உள்ள  பழைய புகைப்படங்கள் விவரிக்கப்படுகின்றன.  தொழிற்சாலையில் நீண்ட நேரம் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் தாய் என்ன செய்வார் என்பதைக் கதைசொல்லி 

"We could never get Mami to do anything after work, even cook dinner, if she didn't first sit a while in her rocking chair. She didn't want to hear about our problems, the scratches we'd put onto our knees, who said what. She sat on the back patio with her eyes closed and let the bugs bite mountains onto her arms and legs."

என்று விவரிப்பது அப்பெண்களின் தாள இயலாத  வேலைப் பளுவைப் பற்றிய மறுக்க முடியாத குற்றச்சாட்டாகும்.

 தகப்பன் இல்லாத குடும்பத்தை தனியொருத்தியாக வழிநடத்த வேண்டியிருப்பதாலும் தன் பணியின் இயல்பினாலும் களைத்துப் போன ஒரு பெண்ணை இங்கு காண்கிறோம். வெளிவேலையின் களைப்பிலிருந்து மீண்டு எழவும்தனக்காகக் காத்திருக்கும் வீட்டு வேலைகளுக்கு ஆயத்தம் செய்து கொள்ளவும் அவளுக்கு தனிமையான சில கணங்கள் -  வாழ்வின் இரக்கமற்ற நிதர்சனங்களிலிருந்து தற்காலிக விடுவிப்பு அளிப்பவை  மட்டுமே இவை- தேவைப்படுகின்றன. தன் வாழ்வைத் தொடர இந்தத் தனிமையும் அதன் மௌனமும் அவளுக்கு ஊட்டமளிப்பதாக இருக்க வேண்டும். அதனால்தான் தான் மட்டும் என்று தனித்திருக்கும் தனக்கேயுரிய தனிமையின் விலைமதிப்பற்ற அந்தக் சிறு கணங்களில் பூச்சிக்கடிகள்கூட தொல்லையாக இல்லாத அளவுக்கு தன் மனதை உள்நோக்கிக் குவித்துக் கொள்கிறாள்.   

மனைவிகுழந்தைகளின் கோணம் ஒரு பக்கமென்றால் தொகுப்பில் உள்ள 'Negocios' கதையில்  ஒரு  தந்தையின் அலைகழிப்புக்கள் நிறைந்த வாழ்க்கையை அவர் மகன் மூலம் அறிகிறோம். முதலில்  நாம் அவர் சிகாகோ வருவதைப் பார்க்கிறோம்ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கிறார். அதன்பின் அவர் அங்கிருந்து நியூ ஜெர்ஸிக்கு பொதுப் போக்குவரத்தில் செல்லக் காசில்லாமல் வழியில் செல்பவர்கள் தம் வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள் என்று கருணையை நம்பிக் கிளம்பி, இறுதியில் பெரும்பாலான தூரத்தை நடந்தே கடக்கிறார். ஓராண்டு காலம் தினமும் 20 மணி நேரம் வேலை செய்வதில் அவர் பூகோள ரீதியாக மட்டுமின்றிமனதளவிலும் கூட  தன் தாயகத்தை விட்டு வெகு தொலைவு வந்து விடுகிறார். வேறொரு பெண்ணை மணம் புரிந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் அவர் தன் முதல் குடும்பத்துக்கு எந்த உதவியும் செய்யாமல் அப்படியே அனாதரவாய் விட்டுவிடுகிறார். பின்னர் தன் இரண்டாம் குடும்பத்தை விட்டுவிட்டு முதல் குடும்பத்துக்கு திரும்புகிறார்இறுதியில் அவர்களையும் பிரிகிறார். அவரது மகன், (அல்லது கதைசொல்லியைக் கொண்டு டியாஸ்) இவரது செயல்களை ஏற்றுக் கொள்வதுமில்லை,நியாயப்படுத்துவதும் இல்லை. மாறாய் அப்பா ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று புரிந்து கொள்ள மட்டுமே முயற்சி செய்கிறான். தன் வாழ்க்கைச் சூழலின் கடினத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் அலைந்து திரிந்தாரா , அல்லது இயல்பாகவே அவர் எங்கும் நிரந்தரமாய் தங்கியிருக்கக்கூடிய சுபாவம் இல்லாதவராகுடியேறிகளுக்கு என்று விதிக்கப்பட்ட வாழ்வு அவரது நிலைகொள்ளாமைக்கு உதவும் பல பாதைகளைத் திறந்து கொடுப்பதாக இருந்தது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா?.


இந்த தொகுப்பில் உள்ள பல கதைகள் இரு தளங்களில் இயங்குகின்றன. முதலாவது, கதையின் மையக்கருப்பொருள். டியாஸ் போகிற போக்கில் தொட்டுக் காட்டுவதொடு நிறுத்திக் கொள்ளும் மற்றொரு கதை இரண்டாம் தளத்தில் இயங்குகிறது. டியாஸ் சொல்லாமல் சொல்லும் இந்தக் கதை கவனமற்ற வாசிப்பில் தவறவிடப்படலாம்..

 'Fiesta, 1980' என்ற கதை இதற்கு ஒரு உதாரணம். மேம்போக்கான வாசிப்பில்தன் அப்பாவின் வேனில் செல்லும்போதெல்லாம் தொடர்ந்து வாந்தி எடுக்கும் கதைசொல்லிஅவனது அத்தை அமெரிக்காவில் குடியேற்றம் பெற்றதைக் கொண்டாட குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் பயணத்தைப் பற்றிய கதை என்றுதான் நாம் புரிந்து கொள்வோம். ஆனால் சிதைவின் விளிம்பில் உள்ள ஒரு குடும்பத்தையும் இதனூடே சித்தரிக்கிறார் டியாஸ். தன் அப்பாவின் ஆசைநாயகியைப் பற்றியும் அவளைத் தான் சந்தித்தது  பற்றியும் சொல்கிறார் கதைசொல்லி. ஆனால் அப்பாவின் கள்ளக் காதல் விவகாரம் குறித்து கதைசொல்லியின் அம்மாவுக்குத் தெரிந்திருந்ததா இல்லையா என்பது பற்றி எதுவும் எழுதுவதில்லை டியாஸ்.இருப்பினும்அம்மா அதை அறிந்திருந்தும் தன்  குழந்தைகளுக்காக விருப்பமில்லா மண உறவில் நீடிக்கிறாரா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. கதைசொல்லியும் அவனது சகோதரனும் சிறுவர்களாக இருக்கலாம்.ஆனால் அவர்களுக்கு கள்ளக்காதல் விவகாரம் என்றால் என்னவென்று தெரிந்திருக்கிறதுஅம்மாவிடம் அது பற்றி அப்பாவித்தனமாய் எதுவும் உளறிக்கொட்டி விடாமல் ஜாக்கிரதையாக இருந்து குடும்பத்தை உள்ளபடியே காப்பாற்ற உதவும் அளவுக்கு அவர்களுக்கு முதிர்ச்சியிருக்கிறது. எனவே அவர்களை அறியாப்[பருவத்தினர் என்று சொல்ல முடியாது. புது நாடுபுது உலகம்புது வாழ்க்கை முறை இவர்களை மிக விரைவிலேயே பெரியவர்களாக்கி விடுகிறது.



குழந்தைகள் விளையாட்டு போல் வன்முறையில் ஈடுபடுவது இரு கதைகளில் வெளிப்படுகிறது. இரண்டிலும் ஒரு சிறுவன் இருக்கிறான்அவனது முகம் குழந்தைப் பருவத்தில் ஒரு பன்றியால் அவலட்சணப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது- அதனால் அவன் எப்போதும் ஒரு முகமூடி அணிந்திருக்கிறான். பிற சிறுவர்கள் அவன் மீது கற்களை எறிந்தும் சீண்டிப் பார்த்தும் அவனது முகமூடியைக் கழட்டப் பார்த்தும் வதைக்கிறார்கள்- பொதுவாக அவர்களுக்கு அவன் வேடிக்கைப் பொருள்அவர்களுக்கான பொழுதுபோக்கு. சிறுவர்கள் எவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ளக்கூடியவர்கள் என்பதை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று நினைவுபடுத்தும் கதைகள் இவை. 

'புலம் பெயர்ந்தவர்களைப்பற்றிய கதைகள் என்றவுடன்  தாய் நாடு புலம் பெயர்ந்த நாடுகலாச்சாரம்அ-கலாச்சாரம்அமெரிக்கர்கள் ஒழுக்கமற்றவர்கள்  போன்ற எளிய (உ.ம்  நம் வெகு ஜன இதழ்களில் காணக் கூடியகுறிப்பாக அமெரிக்கா பற்றிய கதைகள் ) குறுக்கல்களை டியாஸ் செய்வதில்லை. ஆம்இப்பாத்திரங்கள்   தங்கள் தாய் நாடு குறித்து ஏங்குகிறார்கள்அது இயல்பான ஒன்றே. அதே நேரம் அங்குள்ள சூழலையும்எதனால் தாங்கள் இந்நாட்டிற்கு வந்தோம்  என்பதையும் அவர்கள் மறப்பதில்லை. தாய் நாடு குறித்த விதந்தோதல்கள் இக்கதைகளில் இல்லைநேரடியாகச் சொல்லாவிட்டாலும் டொமினிகாவின் அரசமைப்பை/ பொருளியல் சூழலைஇவர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கான காரணிகளைச் சுட்டும் சித்திரத்தை சில கதைகளில் டியாஸ் தருகிறார். 


'Drown' கதை டொமினிகாவின் சமூக/பொருளியல் சித்திரத்தை அளிக்கும் அதே நேரத்தில்இன்னொரு தளத்தில்  
எது நடந்தாலும்,   ஒரு சில (பொருத்தமற்ற) சமூக விழுமியங்களுக்கு - அவற்றுக்கு ஒப்பாவிட்டாலும் -  உட்பட்டு இருக்கும் அதே வேளையில்,   வேறு சில சமூக விழுமியங்களை  எந்த முரண்பாட்டையும் உணராமல்   எளிதாக மீறுவதையும்  பேசுகிறது.  
இதன் கதைசொல்லி போதை மருந்து விற்கும் சிலல்றை வியாபாரிஅடுத்த கணம்/நாள் பற்றிய பெரிய கவலைகள் எதுவும் இன்றிஇக்கணத்தில் வாழ்பவன். அவனது நண்பன் பீடோவுக்குதான் தன் வாழ்க்கை குறித்து திட்டங்களும் இலட்சியங்களும் இருக்கின்றன. அவன் தற்பால் விழைவு கொண்டவன்.  கதைசொல்லியும் அப்படிப்பட்டவனாகவோ அல்லது இருபால் விழைவு கொண்டவனாகவோஅல்லது இது குறித்த வெறும் ஆர்வம் கொண்டவனாகவோ மட்டும் இருக்கலாம். பீடோவின் சமிக்ஞைகளை அவன் நிராகரிப்பதில்லை.  ஆனால் லத்தின் அமெரிக்காவுக்கே உரிய பேராண்மைக் கலாசாரம் (machismo), அவன் தன் உணர்வுகளை பூசி மெழுகவும் இருவரின் நட்புறவில் விலகல் உருவாகவும் காரணமாகிறது. போதை மருந்து பழக்கம்அதை விற்பது இவை  குறித்து எந்த தயக்கமும் இல்லாத கதைசொல்லி தற்பாலினன் ஒருவனின் நண்பனாகக காணப்படுவது/சுட்டப்படுவது  தன பேராண்மை குறித்து மற்றவர்கள் சந்தேகம் கொள்ளச் செய்யும் என்று  கவலைப்படுவது ஒரு முரண்நகைதான். இருவரில் பீடோதான் நல்ல வாழ்க்கை வாழப் போகிறான்ஆதர்ச குடிமகனாக இருக்கப் போகிறான். கதைசொல்லியின் வாழ்க்கை அவனைச் சிறைக்கோ அல்லது படுகொலைக்கோ கொண்டு செல்லப் போகிறது என்பதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை - பீடோவின் வாழ்வுமுறையோடு ஒப்பிடும்போது பேராண்மை கொண்ட ஒருவனாக  பார்க்கப்படுவதுதான் அவனது சமூக விழுமியங்களுடன் ஒத்துப் போவதாக இருக்கிறது. உலகொழுக்கு இவ்வாறே உள்ளது.


'Aurora' என்ற கதையும்   மனமுறிவு/ஒருதலைக்காதல்,  காதல்வயப்பட்டவர்கள் ஒருவரையொருவர் துன்புறுத்திக் கொள்வது என  - போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒருவனால் சொல்லப்படும் - அக உணர்வுகளின்  பதிவாக ஒரு புறமிருக்க   அந்நாட்டில் போதையின் பிடியில் சீரழியும் இளைஞர்களின் சித்திரமாகவும் உள்ளது .  கதைசொல்லியின்  கிறக்கத்தில் மூடிய கண்களினுள் தெரியும்அவன்  வாழ்வின் உடைந்தவண்டல் நிகழ்வுகளையும், காட்சிகளையும் அதே  மங்கலான வெளிச்சத்தில் பயணம் செய்து காணும் வாசகன், அப்பயணம் கதைசொல்லியினுள் உருவாக்கிய/உருவாக்கும் அதே உணர்வுகளையும் தானும் உணர்கிறான்.


சிதிலமடைந்த பண்ணை வீடுகள் (haciendas), அடைத்துக்கொண்ட கழிவறைகள்எங்கும் வாந்திவாசல் அறையில்கூட மலம் என்று கழியும் வாழ்வைப் பார்க்கிறோம்- கதைசொல்லிக்கு ஆரோராவுடன் காதலும் வெறுப்பும் கலந்த உறவு இருக்கிறது. இருண்ட பண்ணை வீட்டிற்குள் தட்டுத் தடுமாறி அலைவதைக்  குறித்து I go from room to room, hand out in front of me, wishing that maybe just this once I'll feel her soft face on the other side of my fingers instead of some fucking plaster wall" என்று கதைசொல்லி குறிப்பிடுவது  அவனும் அரோராவும் நடைபிணங்கள் (Zombie) போல் வாழும் அன்றாட வாழ்வின் தடுமாற்றப் பாதையை முழுமையாய் விவரிப்பதாகவும்கூட இருக்கலாம். நல்லது ஏதேனும் நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அவர்களின் பாதை சுய அழிவுக்கே கொண்டு செல்கிறது. சொல்லிக்கொள்ள எதுவும் நல்லதாக இல்லாத ஒரு தேசத்தை நோக்கிய குற்றச்சாட்டாகவும் இந்தக் கதை இருக்கிறது. இந்தத் தொகுப்பின்  கதைமாந்தர்கள் ஏன் எப்படிப்பட்ட ஆபத்துகளையும் எதிர்கொண்டு புலம்பெயர விரும்புகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. எது நடந்தாலும்  சரிதம்மைச் சிறைப்படுத்தும்சிறுமைப்படுத்தும்  நரகத்திலிருந்து வெளியேற விரும்புகிறார்கள் இவர்கள். அமெரிக்க வாழ்வில் அவர்களது எதிர்பார்ப்புகள் பொய்ப்பது வேறு விஷயம்.

எப்படியோ புலம் பெயரும் இவர்களுக்கு அமெரிக்காவில் கிடைக்கும் வாழ்க்கையை  'Edison, New Jersey' என்ற கதையில்  பார்க்கிறோம்.  புலம் பெயர்ந்த  கதைசொல்லிவாங்கியவர்களின் வீட்டில் மேஜைகளை பொருத்தும்முதுகொடிக்கும் வேலை செய்பவர். வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டிற்குப்  இரண்டு மூன்று முறை சென்றாலும்யாரும் கதவைத் திறப்பதில்லை. வீட்டினுள் ஒரு கறுப்பினப் பெண் இருக்கிறாள் என்றும் அவள் பணிப்பெண்ணாக இருக்கக் கூடும் என்பதும் மட்டும் தெரிகிறது. இறுதியில் அவர்களை  உள்ளே அனுமதிக்கும் அப்பெண்அங்கிருந்து வெளியேற விரும்புவதாகக் கூறுகிறாள்தன் முதலாளி குறித்து வசைச் சொல் ஒன்றை  வீசுகிறாள். அவளும் கதைசொல்லியின் நாட்டைச் சேர்ந்தவளே. மேஜையை பொருத்தி முடித்த பின் கதைசொல்லி அவளை வேறொரு இடத்தில் இறக்கி விடுகிறார். அவள் குறித்து அவருக்கு சந்தேகமாகவே உள்ளது. அதற்கேற்ப ஓரிரு வாரங்களில் அவள் மீண்டும் அந்த வீட்டிற்கே வந்து விட்டாள் என்பதை தெரிந்து கொள்கிறார். அவள் எதற்காக கதவைத் திறக்கக் கூட அச்சப்பட  வேண்டும்அது அச்சமா அல்லது பிறரைப் பார்க்கக் கூட பிடிக்காத மனநிலையா. எதுவாகினும் அதற்குப் பின்னால் உள்ள காரணம் துயரமானதாகத் தான் இருக்கக் கூடும். மீண்டும் அவள் அந்த  வீட்டிற்கு  திரும்பி வந்ததும் பலக் கேள்விகளை  எழுப்புகிறது. அமெரிக்க எனும் மாய உலகு தன்னுள் உள்ள அனைத்து கசப்புக்களைத் தாண்டியும் இவர்களை மீண்டும் மீண்டும் ஈர்க்கிறதா அல்லது தங்கள் தேசத்தின் துயர்களை விட இங்குள்ள துயர்களை எதிர்கொள்வது ஒப்பீட்டளவில்  எளிது என்ற எண்ணமாஎனில் இவர்களுடைய  சூழல் அங்கு எத்தனை துயர் மிக்கதாய் இருந்திருக்க வேண்டும்.


கருப்பொருள் காரணமாக இந்தக் கதைகள் ஒரே களத்தில் பயணித்தாலும்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் புதியதாய்தனித்துவம் கொண்டதாய்  மாறும் ரசவாதத்தை
பாத்திரங்களுக்கிடையே  உள்ள நுட்பமான வேறுப்பாடுகளும் ,  டியாஸின் எழுத்து நடையும் நிகழ்த்துகின்றன.  அவரின் உரைநடை  ஏற்ற இறக்கங்கள் கொண்ட ஒரு பாடலாய் ஒலிக்கிறது. அதன் தாளகதிக்கு ஒரு இசைத்தன்மை உண்டு. டொமினிகன் ரிபப்ளிக்கின் வெயிலையும் புழுதியையும் விவரிப்பதாகட்டும்அதன் குறுகிய கெட்டோக்களைச் (Ghetto) சித்தரிப்பதாகட்டும்அதன் காப்பி தோட்டங்கள்கடல் ("the surf exploding into the air like a cloud of shredded silver") என்று கரிபியன் உயிர் பெறுகிறது. போதையின் பிடியில் இருக்கும் கதைமாந்தர்களின் பகுதிகளும் கலங்கலான தன்மை கொண்டிருக்கின்றன.  கதைகளில் அதிக அளவில் ஸ்பானிஷ் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதும் அதன் இசைத் தன்மைக்கு உதவுகிறது. மிகச் சுலபமாகஎந்த பிரயத்தனமும் இல்லாமல் இதை எல்லாம் செய்கிறார் டிசாஸ். தனக்கென தனித்துவக் குரலை முதல் நூலின் கதைகளிலேயே  அவர் கண்டடைந்து  ஆச்சரியமான ஒன்று. 

இவற்றை புலம் பெயர் கதைகள்டொமினிகா நாட்டினவர் பற்றியவை என்று மட்டும் குறுக்குவது சரியான ஒன்றாக இராது. புலம் பெயர் அல்லாத வேறு காரணங்களால் சிறு வயதிலேயே தந்தை இல்லாத குடும்பமாக, மற்ற  உறவுக்கார குடும்பங்களை அண்டி இருக்க வேண்டிய நிலையில் உள்ள பெண்களை/சிறுவர்களை, அவர்களின் மன விகாசங்களை  யுவனின்/அமியின் உலகிலும்கணவன்/காதலன் வருவான் என்று 'நடனத்துக்குப் பின்காத்திருக்கும் லாராவையும்சில்வியாவையும்  நாம் அறிவோம்.  ஒரு பெரும் இழப்பின் சோகத்தை சுமந்து கொண்டிருக்கும் இந்தியத் தம்பதியரைப் பற்றிய ஜூம்பா லஹிரியின் (Jhumpa Lahiri) 'A Temporary Matter' கதையை இந்திய புலம் பெயர்ந்தவர்களின் கதை என்று மட்டும் குறுக்க முடியுமா என்ன. ஒரு நாட்டின், அதன் மக்களின்  பிரத்யேகச் சமூக/பொருளாதாரச் சூழல், அவர்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் சவால்கள் என தனித்துவம் கொண்டதாக இருப்பதோடு  மானுடத்தின் உலகளாவிய வாதையை பேசுவதால், இக்கதைகளை வாசகன் இதுவரை அறிந்திராத, புதிதான ஒன்றாக உணரும் அதே நேரத்தில் அவற்றின் உணர்வுச் சரடுகளுடன் தன்னை  இயல்பாக பிணைத்துக்கொள்ளுமளவிற்கு அணுக்கமாகவும் உணர்கிறான்.

பின்குறிப்பு:
இந்த முதல் தொகுப்பிற்குப் பின் ஒரு நாவல் மற்றும் இன்னொரு சிறுகதைத் தொகுப்பை டியாஸ் வெளியிட்டுள்ளார். Drown தொகுப்போடு இணைந்தும் விலகியும் செல்லும் இந்த இரு நூல்களும்
புலம் பெயர்ந்தவர்கள் பற்றி பேசுவதுடன் உலகளாவிய தன்மை கொண்டுள்ளன. 

 'The Brief Wondrous Life of Oscar Wao' நாவல், பெண்ணின் நேசத்திற்காக ஏங்கும் - எத்தனைப் பெண்களை கவர்கிறார்களோ அதற்க்கேற்ப்ப மதிக்கப்படுவர் என்ற லத்தீன் அமெரிக்க ஆண்களின் பேராண்மை (machismo) கலாச்சாரத்தைப் (அல்லது அப்படி பொதுப்பரப்பில் உருவாகியுள்ள தோற்றத்தைப்) பற்றிய பகடியாகவும் கொள்ளத்தக்க -  மிகவும் பருமனான  Oscar Waoவின்  மென்னுணர்வுகள் பற்றிய நாவலாக இருப்பதோடு, Dominica அதன் சர்வாதிகாரி  'Rafael Trujillo'ன் ஆட்சியின் கீழ்  நசுக்கப்பட்ட விதத்தின் இலக்கிய சாட்சியமாகவும் உள்ளது. (அதே காலகட்டத்தைப் பற்றி பேசும் Mario Vargas Llosaவின் 'The Feast of the Goat'  நாவலையும் இத்துடன் இணைத்து வாசிக்கலாம்). இந்நாவல் அடிக்குறிப்புகளை உபயோகித்துள்ள  முறையில் , David Foster Wallaceஐ நினைவு படுத்துவதும்   சுவாரஸ்யமான ஒன்று. அத்துடன் வடிவ உத்திகளில் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அவர் விழைவையும் உணர்த்துகிறது. 

அவருடைய அண்மைய சிறுகதை தொகுப்பான 'This Is How You Lose Her'  ஆண்-பெண் உறவில் நேர்மையைப் பேண முயலுதல், அதில் பெரும்பாலும் தோல்வி அடைதல்,  தாய்-மகன்/சகோதர  உறவு , இவற்றின் உள்ளூடாக பொதுவாக எந்த உறவைப் பேணுவதிலும் உள்ள சிக்கல்கள் /சிரமங்கள் குறித்த கேள்விகளை/சிந்தனைகளை புலம் பெயர்ந்தவர்களின் பிண்ணனியில்  எழுப்புகிறது.


No comments:

Post a Comment