Monday, January 18, 2016

'Languedoc Trilogy' - Kate Mosse - தனித்துவம் மிக்க ழானர் எழுத்து

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/01/10/languedoc-trilogy-kate-mosse-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%BE/)
-------------------------------------

பல நூற்றாண்டுகளாக மறைந்திருக்கும்/மறைக்கப்பட்டிருக்கும் ரகசியங்கள்அவற்றின் -உலகின் ஆக்கத்திற்கும்/அழிவிற்கும் பயன்படுத்தப் படக்  கூடிய -ஆற்றல்அவ்வாற்றலின்  ஈர்ப்பால் அம்மர்மங்களின் விடைகளைக் கண்டடையத் துடிக்கும் குழுஅவர்களைஎதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் நாயகிகள் என கேட் மாஸின்  (Kate Mosse) 'Languedoc Trilogy' பற்றிய அறிமுகத்தைப் படிக்கும் போது குடிசைத் தொழில் போல் பெருகியுள்ள ‘ancient conspiracy theory’ வகைமை நாவல்களின் இன்னொரு தயாரிப்பு இவை என்றே தோன்றினாலும் இந்த  ழானரில் தனித்தன்மை உடையதாக இந்தத் ட்ரிலஜி உள்ளது. 

பிரான்ஸின் தெற்குப் பகுதியான Languedocல் புதைந்திருப்பதாக சொல்லப்படும் மர்மங்கள்  குறித்து பல ஹேஷ்யங்கள் நிலவுகின்றன. இயேசு சிலுவையில் மறித்தப் பின் மேரி மெக்டலின் இங்கு வந்ததாகவும்இயேசுவின் குருதிவழி  அவர் மூலம் தொடர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையால் 'மதத் திரிபு'  கருத்துக்கள் கொண்டவர்கள் (heretics) என்று முத்திரைக் குத்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட Catharism என்ற கிருத்துவத்தின் ஒரு பிரிவும்அதைப் பின்பற்றுபவர்களான Cathars  மிகுந்திருந்தப் பகுதி இது. இவர்கள் பெண்மையைப் போற்றியவர்கள்பெண்மத போதகர்களை/பூசாரிகளை ஏற்றுக்கொண்டவர்கள்  என்பதை  மெக்டலின் குறித்த ஹேஷ்யத்தோடு பொருத்திப் பார்த்தால் 
இப்பகுதி பற்றிய யூகங்கள்  பரவுவதற்கு பல காரணங்கள் உள்ளன என்று புரிகிறது.  ஆன்ம ஞானம்மரணமில்லா வாழ்வுபொருட்ச்செல்வம் என Catharsகளிடமிருந்த  புதையல் பற்றிய யூகங்களும் பலவாறு உள்ளன.

இந்த நிலவியலைஅதைச் சூழ்ந்துள்ள தொன்மங்களை (legends) ட்ரிலஜியின்  மூன்று நாவல்களான  (அவை வெளிவந்த வரிசையில்) 'Labyrinth', 'Sepulchre' மற்றும் 'Citadel'ன் களமாக கேட் கொண்டுள்ளார். இந்த நாவல்களுக்கு முன் 90களில் 'இலக்கியப் புனைவுகள்எழுதி இருந்தார்  கேட்.  ழானர் எழுத்திற்கு வந்ததைப் பற்றி 
"I realised," she admits, "that I should have listened to myself sooner. My skill is storytelling, not literary fiction."
என்று சொல்கிறார்.  எனிமும் இலக்கிய அம்சத்தை முற்றிலும் அவர் கைவிடவில்லை. "History is written by the victors, the strongest, the most determined. Truth is found most often in the silence, in the quiet places." என்று Labyrinth நாவலில் சொல்லப்படுவது இலக்கியத்தால் எப்போதும் சுட்டப்பட்டு வருவது தான். இந்த ழானர் நாவல்கள் தாங்கள் இயங்கும் களத்தில் தன்மையாலேயே பேசாப் பொருளைப் பற்றி பேச வாய்ப்புக்கள் அதிகம் கிடைத்தும்தன் வகைமையின் எல்லைகளாலேயே (வாசகனின் கவனத்தைத் புனைவின் மையத்திலிருந்து திசை  திருப்பாமல் நாவலின் அப்போதைய நிகழ்வுகளுடன் மட்டுமே ஒன்றைச் செய்வது) ,  அவற்றைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. கேட்  இந்த வரையறுக்குள்,  கடவுளின் பெயரால் அழித்தொழிப்பட்டவர்கள் ('Labyrinth'), இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் ஆதிக்கத்தில் பிரான்ஸ் இருந்தபோதுஎதிர் குரல் கொடுத்தஆனால் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத பெண்களின் பங்கு (Citadel)  (ஜெர்மானிய ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் என அங்கீகரிக்கப்படவர்களில் பெண்கள் மிக மிகக் குறைந்த சதவீதமே என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுவிக்கப்பட்டது குறித்த தொன்மம் "military, national and male” என்று உருவானதை இந்தக் காலகட்டத்தைப் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ள Robert Gildea குறிப்பிடுகிறார்)  என சில விஷயங்களை   நாவலின் மையத்தை சிதைக்காமல்அதனுடன் இணைத்தே சொல்லிச் செல்வது அவரைத் தனித்துக் காட்டுகிறது. 


பெண் பாத்திரங்களின்  வார்ப்பு இந்த நாவல்களின் முக்கிய அம்சம்.  இந்த வகைமையில் பொதுவாக ஆணே நாயகனாகவும், சாகசங்கள் புரிபவனாகவும், பெண்  அவனுக்கு உதவும் பாத்திரமாகவே இருப்பாள். கேட்டின் மூன்று நாவல்களிலும்  முக்கியப் பாத்திரம் பதின் பருவத்தில் அல்லது அதன் முடிவில் உள்ள பெண்களே. முக்கியப் பாத்திரத்தின் பாலினத்தை மாற்றியமைப்பதை மட்டும் கேட் செய்யவில்லை. பதின் பருவத்திற்குரிய விழைவுகள், சலனங்கள் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாலும் நாவலின் போக்கில் தங்கள் சுயத்தைக் கண்டடைந்து, நாவலின் ஆண் பாத்திரங்களையும் வழிநடத்துபவர்களாகவும் அவர்கள்  இருக்கிறார்கள். அரச/மத பலம் போன்ற தங்களை மீறிய பெரும் சக்திகளை எதிர்கொள்ளவும் தயங்குவதில்லை இப்பெண்கள்.  ஊழை மீறிச் செல்ல முடியும் என்று நம்புகிறாயா என்ற கேள்விக்கு Labyrinth நாவலின் நாயகி 'ஆலிஸ்
'Otherwise, what's the point? If we are simply walking a path preordained, then all the experiences that make us who we are - love, grief, joy, learning, changing - would count for nothing.'
என்றுரைக்கிறாள். இங்கு இப்பெண்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை விட தங்கள் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை தான் முக்கியமானது. ஒரு விதத்தில் இம்மூன்று நாவல்களுமே ஒரு பதின் பருவத்தவள் மனம் முதிவர்தைப் பற்றியது என்றும் புரிந்து கொள்ளலாம். முக்கியப் பாத்திரங்கள் நாவலின் போக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக மட்டுமே இருப்பது போல் இல்லாமல், அவர்களுக்கென்ற காரண காரியங்களை கொண்டவர்களாக,  அவை சார்ந்து அவர்கள் எடுக்கும் முடிவுகளே  நாவலின் போக்கைத் தீர்மானிப்பதாக அமைந்துள்ளன.  


 'Languedoc' இன்று  'பிரான்ஸ்' என்று நாம் அறிந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பின் அங்கமாக இருந்தாலும், அது ஒருகாலத்தில் சுதந்திரப் பகுதியாக இருந்து, அப்போதைய பிரான்ஸ் மன்னர்களின்/அரச குடிகளின்  ஆக்கிரமிப்பை எதிர்த்து தோல்வி அடைந்ததும், அதன்  பூர்வ மொழியான Occitan மெல்ல மெல்ல நசிந்ததும் நாவல்களின் பின்னணி சரடாக உள்ளன. (Spain/Catalonia பிரிவினை பிரச்சனையை இத்துடன் பொருத்திப் பார்க்கக் கூடும்ஐரோப்பிய நிலவியல்/வரலாறு/அரசியல் நன்கறிந்த ஒருவர் இன்னும் விரிவாக இதைப் பற்றி பேச முடியும்).  ஜெர்மனி Languedoc பகுதியை உள்ளடக்கிய பிரான்ஸை ஆக்கிரமித்ததை  எதிர்த்தவர்களில் பலரின் மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் Languedocஐ கைப்பற்ற வந்தவர்களாக பார்க்கப்பட்டதும் (Labyrinth நாவல்)அவர்களை அப்போது எதிர்த்தவர்களின் சந்ததியர் 1940களில்பிரான்ஸ் என்ற சொல்லின் கீழ் ஒன்றிணைந்து ஜெர்மானியர்களை எதிர்ப்பதிலும் (Citadel நாவல்) உள்ள  நகை முரண் நிலத்திற்கான வல்லாதிக்கப் போர்கள் பல்வேறு பெயர்களில் (மதம்/இனத்தூய்மை) எப்போதும்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதைச்  சுட்டுகிறது.  

நிலம்/மதம்/தனிமனித வேட்கை இவற்றின் பொருட்டு காலந்தோறும் நடத்தப்படும் அக்கிரமங்களுக்குச் சாட்சியாக
மூன்று நாவல்களிலும் பொது பாத்திரமாய்/சரடாய் வரும் - தன் தாய் நிலத்தில் நடந்தவற்றை ஆவணப்படுத்த  தன் வாழ்வு முழுதையும் செலவிடும், அதே நேரத்தில் அறியா வயதில் அரும்பிய, நிறைவேறவே முடியாத காதலின் தோல்வியின் துயரோடு, காதலியின் நினைவை  சுமந்தலையும்   -  Sajhe/Audric  என்ற மர்மமான  ஆண் பாத்திரம், வாசகனுக்கு நெருக்கமாக இருப்பதோடு இறவாமை/மிக நீண்ட ஆயுள் போன்றவை வரமா சாபமா என்ற கேள்வியையும் அவன்  மனதில் எழுப்புகிறது. மூன்று நாவல்களிலும், இந்த ஒரு ஆண் பாத்திரம்  தவிர மற்ற அனைத்து ஆண்  பாத்திரங்களும் பெண் பாத்திரங்கள் அளவிற்கு காத்திரமாக வார்க்கப்படவில்லை என்பது ஒரு குறையே. எந்த ழானர் எழுத்திலும் அனைத்துப் பாத்திரங்களுக்கும்  அதிக கவனிப்பைத்  தர  இயலாது தான் என்றாலும்கேட் அத்தளையை இன்னும் தளர்த்த முயன்றிருக்கலாம். குறிப்பாக எதிர்நாயக/நாயகி பாத்திரங்களுக்காக. 


கதைசொல்லலே தனக்கு உகந்து எனக் கூறும் கேட் இம்மூன்று நாவல்களுக்கும் - நாவலின் நிகழ்காலம், அதற்கு முந்தைய கடந்த காலம் என்று  இரண்டு காலகட்டங்களின் நடக்கும் நிகழ்வுகளை அடுத்தடுத்த  அத்தியாங்களில் விவரித்து அவை இணையும் புள்ளி -  என்ற  பாணியை உபயோகித்துள்ளார். இந்த ழானர் எழுத்துக்களில் பொதுவாக இருக்கக்கூடிய பக்கத்திற்குப் பக்க சாகஸ நிகழ்வுகளை எதிர்பார்க்கும் வாசகன்  கதையை அதன் போக்கில் விட்டு மெல்ல அதைச் சார்ந்த பின்னலை உருவாக்கும் கேட்டின் யுத்தியினால் முதலில் ஏமாற்றமடைவான். 700 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும் ஒவ்வொரு நாவலையும் எளிதில் நம்பிக்கை இழக்காமல் தொடரும் வாசகன் ஒரு இடத்தில் ஒரு காலகட்டத்தின் அத்தியாயம் முடிந்து இன்னொரு காலகட்டத்தின் அத்தியாயம் ஆரம்பிக்கும் போது, அதை தாண்டிச் சென்று இப்போது விட்டு விட்டு வந்த காலகட்டத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும்  என தன்னையறியாமல் எண்ண ஆரம்பிக்கும் இடத்தில் கேட் அவனை வென்று விடுகிறார். 

ழானர் எழுத்தின் பலவீனமாக பொது இலக்கிய வாசகன் நினைக்கூடிய, அது அவனிடம் கோரும்  'புனைவினுள் அவநம்பிக்கையை கைவிடுதலை' (suspension of disbelief) இந்த நாவல்களிலும் சற்றுச்   செய்யவேண்டியுள்ளது. ஆனால் அது எழுத்தாளர் கட்டமைக்கும் சம்பவங்களை, அதன் தர்க்கத்தை  எந்தக் கேள்வியும் இன்றி அப்படியே  ஒப்புக்கொள்வது என்பதாக  இல்லை என்பது இந்த ட்ரிலஜியின் நேர்மறையான அம்சம். இதில் வாசகன் செய்ய வேண்டிய மிக முக்கிய சமரசம் ஆன்மாக்கள்/ஆவிகள், அமானுஷ்ய நிகழ்வுகளின் களமாக உள்ள  ட்ரிலஜியின் புனைவுலகை, அதன் மையத்தில் உள்ள  மர்மத்தை, பாத்திரங்களின் ஊழை, அது பல ஆண்டுகளுக்குப் பின்பு வரும் தலைமுறையில் நிறைவை அடைவதை  ஏற்பதே.   அமானுஷ்யம், தற்செயல், ஊழ் என்று சொன்னாலும் அவற்றுக்கும் ஒரு தர்க்கம்/எல்லை இருப்பதாக கேட் கட்டமைப்பதால் அதை ஏற்பது ஒன்றும் கடினமான ஒன்றாக இராது. போர்கள், குண்டு வெடிப்புக்கள், கைகலப்புக்கள் போன்றவையும் வெறும் சாகஸ நிகழ்வுகளாக மட்டுமில்லாமல், வாழ்வா/சாவா என்ற உச்சகட்ட போராட்டத்தின்   பதற்றத்தை  உருவாக்குகின்றன. காதல், நம்பிக்கை துரோகம், பொறாமை என வழமையான உணர்வுகளையும் வாசகனுக்கு கேளிக்கை அளிப்பதற்க்கான வெறும் மூலப் பொருட்களாக உபயோகிக்காமல்  இவ்வுணர்வுகளின் பின்னணியில் உள்ள மனதின் பேராசையை, காலந்தோறும் அது ஆடி வரும் அதே (தன் கோரத்தை மறைக்கும் இனிய) நடனம்  உருவாக்கும் அழிவின் சோகத்தையே முன்வைக்கிறார் கேட்.  நன்மைக்கும்  தீமைக்கும் இடையேயான போராட்டத்தில் நன்மை தான் வெல்லும் என்பது ழானர் எழுத்தின் விதி. அதை கேட்டும் பின்பற்றுகிறார். ஆனால் இந்தக் களத்தில்  வெற்றி/தோல்வி என்பது தற்காலிகமானது என்றும் நன்மை/தீமைக்கு இடையிலேயான ஆடல் வேறு வேறு பெயர்களில், வேறு வேறு நபர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் அவர் ட்ரிலஜியின் போக்கில் உணர்த்துகிறார். வெற்றிக்கு விலையாக பெரும் இழப்பை நன்மை கொடுக்க வேண்டியுள்ளது. மூன்று நாவல்களின் இறுதியிலும்  வாசகனுக்கு அவன் எதிர்பார்க்கும் ஆசுவாசத்தை அளிக்காமல் அவன் மேல் துயரின் சுமையை இறக்கி, அவனை கையறு நிலையில் விட்டுச் செல்கிறார்.  துன்பவியல் முடிவுகள் வாசகனை அதிகம் நெகிழச் செய்யும் என்பதால் அவர் இப்படி செய்திருக்கக் கூடும் என்று வாதிடலாம் என்றாலும், எப்படியோ இதிலும் அவர் இந்த வகைமையின் வழமையை  மீறுகிறார் என்பதே உண்மை. 
  
இந்த ட்ரிலஜியை இந்த வகைமையின் மற்ற படைப்புக்களுடன் ஒப்பிடுவதை விட  Elizabeth Kostovaன் 'The Historian' நாவலுடன் பொருத்திப் பார்ப்பதே ஏற்றதாக இருக்கும்.  இரண்டும் தொன்மங்களை  
கையாள்கின்றனதாங்கள் இயங்கும் தளத்தை விரிவாக்க முயல்கின்றனகாத்திரமான பெண் பாத்திரங்களைவாசகனை முட்டாளாக கருதாத கதைப் பின்னலைக் கொண்டுள்ளன எனப் பல ஒற்றுமைகள் உள்ளன.   ஒரு வேறுபாடும் உள்ளது. கதைசொல்லல் என்பதில் அதிக கவனம் செலுத்தும் கேட் உரைநடையில் செறிவு என்ற அம்சத்தை இழக்கிறார். எனவே  'நாவலின் முழுமைஎன்ற அடைய முடியாத இலக்கை நோக்கியப் பயணத்தில்  கேட்டை விட Kostova அதிகம் தூரம் பயணிக்கிறார்.  உதாரணமாக Kostova, வாசகன் தன் அகத்தில்  துல்லியமாகக் காணக்கூடியதாகஅதில்  உலவுக்கூடியதாக உருவாகும்,  ருமேனியாவின்  நிலவியலின் சித்திரத்திற்கும் , கேட்டின் தட்டையான நடையில் துல்லியமான உருவெடுக்காத Languedocன் நிலவியலுக்கும் உள்ள வித்தியாசம்.  கோட்டைகள் (castle), மலைப் பிரதேசங்கள்பழங்கால தேவாலையங்கள் உள்ள Languedocன் புறச் சித்திரத்தை உருவாக்கும் கேட்டின் முயற்சி முழுமை பெறாததாகவே உள்ளது. இதை யாருக்கு வெற்றி/தோல்வி என்று பார்ப்பதை விட,  ஒரு ழானரை எந்தளவுக்கு வளைக்க இரு எழுத்தாளர்களும் முயன்றிருக்கிறார்கள் என்பதில் உள்ள வேறுபாடாகக் கருதலாம். 

"What we leave behind in this life is the memory of who we were and what we did. An imprint, no more.”  என்று இந்த ட்ரிலஜியில் ஒரு பாத்திரம் பேசுகிறார். ஆனால் வரலாற்றில் எளியவர்களின் நினைவுச் சுவடுகள் இடம் பெறுவதில்லை என்பதை நாம் அறிவோம்.  அவற்றை முழு அழிவிலிருந்து மீட்டெடுக்க  "Through the shared stories of our past, we do not die" என்று ஆலிஸ் சொல்வதே சிறந்த  வழியாக உள்ளது. அதைத் தான் Sajhe/Audricம்அவரைக் கருவியாகக் கொண்டு கேட்டும்  இந்த டிரிலஜியில் செய்ய முயல்கிறார்கள். இவை தூய இலக்கிய ஆக்கங்களாக உருவாகாமல் போயிருக்கலாம். ஆனால்  'சுவாரஸ்யம்என்ற - எந்த  ழானர் எழுத்திலும் கட்டாயமாக எதிர்பாக்கப்படும்  - அம்சத்திற்காக அவ்வெழுத்தை மலினப்படுத்தாமல்
அதன் சாத்தியங்களில் புதிய உயரங்களைத் தொட முயலும் இந்த ட்ரிலஜி இந்த வகை எழுத்துக்களை விரும்புவர்கள் மட்டுமின்றிபொது இலக்கிய வாசகர்களும் அணுகக் கூடியதாகவே உள்ளது.

பின்குறிப்பு: 

1. ட்ரிலஜியின் மூன்று நாவல்களும் தனித்தனியாக முழுமைப் பெற்றிருந்தாலும், அவற்றை அவை வெளிவந்த வரிசையில் வாசிப்பதே அவற்றினூடாக உள்ள சிறிய இடைவெளிகளை புரிந்து கொள்ள உதவும். அது முடியாத நிலையில் முதல் நாவலான 'Labyrinth'யேனும் ஆரம்பத்தில் வாசிக்கலாம்.

2. 'Labyrinth'  நாவல் தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்துள்ளது.

3.  'Gothic Horror/Thriller' தளத்திலும் இரு நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதை தொகுப்பை எழுதி உள்ளார் கேட்.




No comments:

Post a Comment