Thursday, January 20, 2011

மறுபக்கம்-பொன்னீலன்

சமூக/வரலாற்று நிகழ்வுகள் பற்றி பல கோணங்கள்/பார்வைகள் இருக்கும் என்பது நாம் அறிந்தது தான். அதில் எந்த பார்வையை நாம் ஏற்கின்றோம் என்பது நம்முடைய தனிப்பட்ட சார்பு நிலையை சார்ந்தது. ஆனாலும் நம்மிடமிருந்து வேறுபட்டு ஒரு பார்வை உள்ளது என்று நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பன்முகத்தன்மையை உணர்வதும் அதை ஏற்றுக்கொள்வதும் மிக முக்கியம். இப்படி ஒரு சமூக நிகழ்வை, ஒரு இடத்தின் வரலாற்றை கூறுவதுதான் பொன்னீலனின் மறுபக்கம் நாவல். நாவல் பல இழைகளாக பிரிந்து சில பொதுவான புள்ளிகளில் ஒன்று சேர்கின்றது.


ஒரு இழை, சேது மாதவன் மண்டைக்காடு கலவரம் பற்றி கள ஆய்வு செய்ய வருவதும், அதில் வெங்கடேசனை, முத்துவை சந்திப்பதும், அந்த கள ஆய்வில் மூலம் அவனுக்கு தெரிய வரும் உண்மைகள். இத்தோடு மக்களின் அந்த கலவரத்தை பற்றிய வாய் மொழி தரவுகள் இணைகின்றன.  இன்னொரு இழை வெங்கடேசனின் தந்தை 'சங்கரன்' எழுதி வைத்திருக்கும் குறிப்புகள் மூலம் தெரிய வரும் அந்த காலத்திய நிகழ்வுகள். மற்றொன்று ஆசிரியர் சொல்லும், சங்கரனின் தந்தை சின்ன நீலன், பாட்டன் பற்றிய வரலாறு. இதில் தோல் சீலை கழகம், அய்யாவழி சமூக மற்று இயக்கம் போன்றவை வருகின்றன. இவை இணையும் புள்ளி மனிதம், மதங்கள் எப்படி எளிய மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றன,ஜாதிக் கொடுமைகள் ஆகியவை ஆகும். 


இதில் சேது மாதவனின் இழை தான் மையமானது, சம்பவங்கள் அவன் பார்வைளியே மிகுதியாக சொல்லப்படுகின்றன. சேது அங்கு வருவது கள ஆய்வுக்கு மட்டுமல்ல, தன்னுடைய தாயை பற்றி தெரிந்து கொள்ளவும் தான் அங்கு வருகின்றான். சேது ஒரு இந்து மேல்நிலை மனோபாவத்தில் இருப்பவன் என்பது சூசகமாக சொல்லப்படுகின்றது. அவனுக்கு சில உறுதியான கருத்துக்கள் உள்ளன, சில முன்முடிவுகளுடன் தான் அவன் அங்கு வரவே செய்கின்றான்.  சேதுவிடம் உள்ள பல கருத்துக்கள், நம்மில் பலருக்கும் நம்மை அறியாமலேயே இருப்பவை தான். அவற்றை அவன் எதிர்கொள்ளும் வாய் மொழி தரவுகள் அசைக்கின்றன. 


வெங்கடேசனின் தந்தை சங்கரனின் குறிப்புக்கள் காட்டும் நிகழ்வுகள் ஒரு விதத்தில் இன்னும் கொடுமையானவை. சங்கரன் தான் பிறந்த ஜாதியினால் பல துன்பத்தை அடைகின்றார். பிறகு ஆர்ய சமாஜத்தில் சேர்கின்றார், பூணல் அணிகின்றார். இருந்தும் அவர் நிம்மதியை அடைந்தாரா என்றால் இல்லை. அவர் பூணல் அணிந்தாலும், முழுமையாக தங்களுக்கு இணையானவராக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மொத்தத்தில் இந்த ஆர்ய சமாஜம்,பூணுல் போன்றவை ஒரு சாராரை மதத்தில் தக்க வைக்கும் ஒரு முயற்சி தானே தவிர மனிதர்களை மனிதர்களாக நடத்த ஏற்படும் மாற்றம் இல்லை என்று தான் நமக்கு தோன்றுகின்றது. உதாரணமாக சங்கரனின் படத்தை பார்த்து அவர் பூணுல் போட்டிருப்பதை கண்டு சேது சிறிது அதிர்ச்சி அடைவது. அவர் ஆர்ய சமாஜி என்று தெரிந்த பின்பும் அவனால் அதை முழுதும் ஏற்க முடிவில்லை. இதை சங்கரனும் தன் காலத்தில் உணர்ந்து தன் குறிப்புகளில் பதிவு செய்கின்றார். 


ஆசரியரின் பதிவுகள் மூலமும், சங்கரனின் குறிப்புகள் மூலமும், கலவரம் பற்றிய வாய் மொழி தரவுகள் மூலமும் நாம் புரிந்து கொள்வதில் முக்கியமான ஒன்று மக்களின் ஆன்மாவிற்காக இரு பெரு மதங்கள் போடும் போட்டி தான். இந்து, கிறிஸ்துவ மதங்கள் இரண்டுமே தங்கள் கடவுள்களை முன்னிறுத்தவே விரும்புகின்றன. மக்களின் ஆதி கடவுள்களின் சுவடுகளை அழிக்க முயல்கின்றன. மத மாற்றம் என்பது வேறு மதத்திற்கு சென்றால் தான் என்றில்லை, மக்களை மேல்நிலையாக்கம் என்ற பெயரில் அவர்களின் அதித்தாயான 'முத்தாரம்மனை'  விட்டு பிள்ளையார், அம்பாள் என்று வழிபாட்டு முறையை மாற்றுவதும் கூடத்தான். இதை பலரும் உணர்வதில்லை, சேதுவும் கூடத்தான், புதிய வழிப்பட்டால் என்ன பிரச்சனை என்று தான் அவனுக்கு தோன்றுகின்றது. இதற்கான பதில் சங்கரனின் தந்தை நீலனின் வாழ்வில் இருக்கலாம். அவர் அய்யாவழியில் சில காலம் இருந்தாலும், மீண்டும் தன் ஆதி தாயான 'முத்தாரமன்னை'  தேடியே வந்து விடுகின்றார். இந்த மேல்நிலையாக்கம் என்பது இங்கென்றிலாமல் பல நாடுகளிலும் நடை பெறுவதுதான்.  


வாய் மொழி தரவுகளின் மூலம் நாம் அறிய வரும் இன்னொன்று, கலவரம் என்பது சில சிறிய குழுக்களால் அவர்களுடைய சிந்தந்தத்தால் ஆரம்பித்து சாதாரண ஜனங்களிடமும் பரவி ஒரு 'mob mentality' யை உண்டாக்குகின்றது என்பது தான்.இதனால் பொதுவாக எந்த பிரச்சனையில் ஈடு படாமல் இருக்கும், மதம் பற்றிய எந்த ஒரு வெறியில்லாமல் இருக்கும் மக்களும் இதில் ஈடு படுகின்றார்கள். இதுவும் மண்டைக்காடு என்றில்லை, எந்த ஒரு கலவரத்திற்கும் பொதுவானது தான். இருதும் இதில் எனக்கு ஒரு கேள்வி. 'mob mentality' என்று வைத்துக்கொண்டாலும், மிக எளிதாக மக்கள் உணர்ச்சிஊட்டப்படும் போது, அது எப்படி நிகழ்கின்றது என்று தோன்றுகின்றது.அரசியல், மதம் இவற்றில் வெளிப்படையான ஈடுபாடு இல்லாமல், தங்கள் தின சரி வாழ்வையை கவனிக்கும் மனிதர்கள் உள் மனத்திலும் (just  beneath the surface ) ஏதோ ஒரு வன்மம் கனன்று கொண்டு இருக்கின்றதா, ஒரு சிறு குச்சி உரசினாலே பற்றி எறிவதற்கு? தெரியவில்லை. இந்த நூலில் இது விவாதிக்கப்படவில்லை. 


இந்த நாவலில் வரும் 'முத்து' பாத்திரம், சமீபத்தில் வாசித்ததில் மிக வலுவான, காத்திரமான பெண் பாத்திரம். தன் வாழ்கை பற்றிய தெளிவான பார்வை, சமூகம் சார்ந்த திடமான கருத்துக்கள் என, நாவலில் குறைந்த அளவே வந்தாலும் முக்கியமான பாத்திரம். குறிப்பாக 'சேது மாதவனிடம்' முத்துவிடம் திருமணம் பற்றி பேசும் போது முத்து கேட்கும் கேள்விகள் உண்மையில் நம்மில் பல ஆண்களையும் கேட்கக்கூடிய/கேட்கும கேள்வியாக உள்ளது. சேதுவைப் போலவே நம்மில் பலரிடமும் அதற்கும் பதில் இருக்காது. 


நாவலின் முடிவு தான் என்ன, சேது முற்றிலும் மனம் மாறினானா? மனம் ஒன்றும் பாம்பின் தோல் அல்லவே உரித்து எடுத்து மாற்றுவதற்கு. சேதுவும் முற்றிலும் மாறினான் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் தன் எண்ணி வந்ததிற்கு மாறாக இன்னொரு பாகமும் இருக்கின்றது என்று அவன் உணர்வதே ஒரு முக்கிய நிகழு என்று நினைக்கின்றேன். குறிப்பாக 
தன் தாயின் ஜாதி குறித்து முதலில் அறிந்தவுடன் அவன் கொள்ளும் அசூயை, நம்மை அதிர வைக்கின்றது. அம்மாவைவிட அந்த கணத்தில் ஜாதி தான் அவனுக்கு முக்கியமாக படுகின்றது. பிறகு அவன் அதை ஏற்று, தன் தாய் வழி உறவினர்களுடன் பழகுவது ஒரு மற்றம் தான். சேது ஒரு தனி மனிதன் மட்டுமல்ல, அவன் நாம் அனைவரும் தான், நமக்குள்ளும் ஒரு சேது இருக்கின்றான். அவனுடைய எண்ணங்கள் நம்மில் பலருக்கும் உண்டு தான் என்ற அளவில் அவனுக்கு ஏற்படும் மாற்றங்கள் நமக்கும் தான் ஏற்பட வேண்டும். 


இது ஒரு அறிமுக குறிப்பு மற்றும் எனக்கு இப்போது தோன்றும் எண்ணங்கள் தான்.இன்னும் விரிவாக இந்த நாவலை பற்றி niraiyave எழுதலாம், நினைவிலிருந்து எழுதுவதால் இத்துடன் முடித்துகொள்கின்றேன்.  நாவல் கிடைத்தல் கண்டிப்பாக வாசியுங்கள். இது நான் வாசித்த அவருடைய முதல் புத்தகம். அவருடைய மற்ற புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற என்னத்தை தூண்டியது. 

1 comment:

  1. மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய ‘மறுபக்கம்’ நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் அருமை. படித்துவிட்டீர்களா? தொடர்புக்கு ஆதாம் ஏவாள் பதிப்பகம் 9487187193 ரூபாய் 20/- பக்கம் 58.

    ReplyDelete