Tuesday, August 5, 2014

ப்ரான்க் மக்கோர்ட்டின் (FRANK MCCOURT) நினைவுக்குறிப்பு நூல்கள் - Frank McCourt's Trilogy of memoirs

பதாகை இதழில் வெளிவந்தது (http://padhaakai.com/2014/07/27/frank-mccourt-the-memoirist/)
----------------------

ப்ரான்க் மக்கோர்ட்டின் (Frank McCourt) நினைவுக்குறிப்பு நூல்களின் ட்ரிலாஜியில் இரண்டாம் நூலான ‘Tisஇன் இறுதியில், ப்ரான்க்கின் தாய் ‘ஆஞ்செலா’ (Angela) இயற்கை எய்தியபின் , அவரை அடக்கம் செய்துவிட்டு ப்ரான்க்கும் அவர் சகோதரர்களும்
“A mother’s love is a blessing
No matter where you roam.
Keep her while you have her,
You’ll miss her when she’s gone
என்ற பாடலை பாடுகிறார்கள். நூல் இப்படி முடிகிறது:
“We had lunch at a pub along the road to Ballinacurra and you’d never know from the way we ate and drank and laughed that we’d scattered our mother who was once a grand dancer at the Wembley Hall and known to one and all for the way she sang a good song, oh, if she could only catch her breath”
‘grand dancer ‘, ‘sang a good song’ போன்ற வார்த்தைகள் இள வயது ஆஞ்செலா குறித்து நம்முள் எழுப்பும் பிம்பத்திற்கும், திருமணத்திற்குப் பின்னாலான அவர் வாழ்வு குறித்து நாம் இந்த நினைவுக்குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்வதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம். நாம் அறிந்த ஆஞ்செலா எத்தகையவர்?
அமெரிக்காவிலிருந்து மீண்டும் அயர்லாந்து திரும்பியவுடன், கணவன் வீட்டில் நடக்கும் புறக்கணிப்பால், எதுவும் பேசாமல் கண்ணில் நீர் தளும்ப சுவர்களை வெறித்தபடி இருக்கும், தன் பச்சிளம் குழந்தை புதைக்கப்படும்போது அடிவயிற்றிலிருந்து ஓலமிடும், கணவன் ஒரு வாரம் தொடர்ந்து வேலைக்குச் சென்றபின், சம்பளம் வரும் வெள்ளியன்று காலை முதல் மகிழ்ச்சியாக இருந்து, மாலையில் கணவனின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி, நேரம் செல்லச் செல்ல முக/ மனப் பொலிவை இழந்து இறுதியில் கணவன் பணத்தை குடித்தழித்து விட்டுத்தான் வருவான் என்று உணர்ந்து குமுறி அழும், கணவன் குடும்பத்தை நீங்கிச் சென்றபின் பல சிரமங்களுக்கிடையில் குடும்பத்தை காப்பாற்றிய, இத்தனை வறிய நிலையிலும், இன்னும் மோசமான நிலையில் உள்ளவர்களுடன் தன்னிடம் உள்ளவற்றில் சிறிதளவு பகிர்ந்து கொள்ளும்- இளமையின் எத்தனை எத்தனை கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் வாழ்க்கை முன் தோற்றுவிட்ட- பெண்ணாகத்தான் ஆஞ்செலா இருக்கிறார். உருக்கமான வாழ்வுதான், ஆனால் உலகில் எண்ணற்ற பெண்கள் படும் துன்பத்தைதான் இவரும் அனுபவப்பட்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா?
ப்ரான்க் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார், சிறு வயதில் கடும் வறுமை, பின் அமெரிக்கா சென்றார், ராணுவப் பணியாற்றினார், மணம் முடித்தார், பின்னர் விவாகரத்து, இதற்கிடையில் பல ஆண்டுகள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றினார். தன் பால்யம் பற்றி அவர் குறிப்பிடுவதும்,
“When I look back on my childhood I wonder how I survived at all. It was, of course, a miserable childhood: the happy childhood is hardly worth your while. Worse than the ordinary miserable childhood is the miserable Irish childhood, and worse yet is the miserable Irish Catholic childhood.
People everywhere brag and whimper about the woes of their early years, but nothing can compare with the Irish version: the poverty; the shiftless loquacious alcoholic father; the pious defeated mother moaning by the fire”
அப்படியொன்றும் வித்தியாசமானது இல்லை என்றும் சொல்லி விடலாம்தான். ஆனால் ப்ரான்க் தன் பால்யத்தை வேறு விதமாகப் பார்க்கிறார்.
இந்தச் சாதாரண வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தைப் பற்றி “Angela’s Ashes” என்ற நினைவுக்குறிப்பு நூலை எழுதினார். 1996ஆம் ஆண்டு வெளிவந்த அந்த நூல் புலிட்சர் விருதைப் பெற்றது. பின்னர் இன்னும் இரண்டு நினைவுக் குறிப்பு நூல்களை எழுதினார் (‘Tis மற்றும் Teacher Man). ரூஸோ பற்றிய பதிவில் பார்த்தது போன்ற, அனைவர்க்கும் அனுபவப்பட்டுள்ள ஒரு சாதாரண வாழ்கையை வாழ்ந்த சாதாரணர் இவர் என்று தோன்றுகிறது இல்லையா? 60 வயது வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்த மக்கோர்ட் தன் நூல்களின் வெற்றியால் பிரபலமாகி விட்டார். வாழ்க்கை அனுபவங்களா, அவற்றை சொல்லும் முறையா அல்லது அவற்றை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமா, எது ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது அல்லது அவர்களுடன் ஒன்ற வைக்கிறது?
மக்கோர்ட்டின் பெற்றோர் அயர்லாந்தில் பிறந்தவர்கள். அவர் தந்தை IRAவில் இருந்ததாகவும், அவர் செய்த ஏதோவொரு செயலுக்காக அதிகாரிகளால் தேடப்பட்டதால் அமெரிக்கா வந்ததாகவும் ப்ரான்க் குறிப்பிடுகிறார். வளமான எதிர்காலத்தின் கனவுகளோடு ஆஞ்செலா அமெரிக்கா வருகிறார். இருவரும் சந்தித்து, மணமுடித்து, மயக்கங்கள் தீர்ந்தபின் மீண்டும் அயர்லாந்து திரும்புகிறார்கள். தந்தையின் பெற்றோரிடம் உதவி கிடைக்காமல் தாயின் சொந்த ஊரான ‘லிம்ரிக்’ (Limerick) நகரத்திற்கு வருகிறார்கள்.
பள்ளியில் சேரும் ப்ரான்க்கிற்கு, பல குடும்பங்களுக்கும் பொதுவான கழிப்பறைக்கு எதிரில் அவர்கள் வீட்டின் பகுதி இருப்பது, அதனால் வரும் நாற்றம், குளிர் காலத்தில் நெருப்பூட்ட நிலக்கரி, விறகு தேடி அலைவது போன்ற குடும்பச் சூழலோடு வேறு பல பிரச்சனைகளும் உள்ளன. அவை “pompous priests; bullying schoolmasters…”.
ஒருபுறம் கத்தோலிக்க பாதிரியார்களின் விடாத அறிவுரைகளால் ( மிரட்டல்கள் என்றும் கொள்ளலாம்), எங்கும் ‘பாபம்’ நீக்கமற நிலை கொண்டிருக்கும் உலகில் வாழவேண்டிய சூழல் ஏற்படுத்தும் அச்சம் (ஒரு முறை சிறுவன் ப்ரான்க் அந்த வாரம் பாவமன்னிப்பு வாங்காததால், இந்த கணம் நாம் விபத்தில் இறந்தால் சொர்க்கத்தை அடைய முடியாமல் போய்விடுமே என்று அஞ்சுகிறான்) குழந்தையின் பேதைமை என்றால், இன்னொருபுறம் பாபத்தைப் பற்றிக் கவலைப்படாத, நண்பனின் சகோதரி குளிப்பதை எட்டிப் பார்க்கத் தூண்டும் (நண்பனே அதற்கு காசு வாங்கிக் கொண்டு உதவுகிறான்) குறுகுறுப்பு இன்னொருபுறம்.
ஆசிரியர்களும் சளைத்தவர்கள் அல்ல.
“They hit you if you’re late, if you have a leaky nib on your pen, if you laugh, if you talk, and if you don’t know things”

One master will hit you if you don’t know that Eamon De Valera is the greatest man that ever lived. Another master will hit you if you don’t know that Micheal Collins was the greatest man that ever lived.
..
If you ever say anything good about Oliver Cromwell they’ll all hit you”
என்று நமக்கு பரிச்சயமான அடிதடி ஆசிரியர்களோடு
“He says, you have to study and learn so that you can make up your own mind about history and everything else but you can’t make up an empty mind. Stock your mind, stock your mind. You might be poor, your shoes might be broken, but your mind is a palace.”
என்று சொல்லும் ஆசிரியரும் இருந்தாலும், பள்ளிக்குச் செல்லாமல், தோப்புக்குச் சென்று பழங்கள் தின்று, ஓடையில் தண்ணீர் குடித்து இளைப்பாறுவதையே சிறுவன் ப்ரான்க்கின் மனம் விரும்புகிறது.
ப்ரான்க்கின் தந்தையும் அனைத்துலக வீணாய்ப் போன தந்தைகளின் பிரதிநிதிதான். அரசு வழங்கும் உதவித்தொகையையோ, வேலைக்கான சம்பளத்தையோ குடித்து அழித்துவிட்டு வரும் தந்தை, தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை எழுப்பி தேசப்பற்றுமிக்க பாடல்களை பாடச் சொன்னால், அது பாசமாகுமா? மகன் இறந்த அன்று அவருக்கு துக்கமிருக்கும்தான். ஆனால் அதற்காக அன்றும் மதுபான விடுதியில் குடிப்பது, துக்கத்தாலா அல்லது பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கவா?
எங்கும் சலிப்பேற்படுத்தாத, துன்பவியல்- நகைச்சுவையாக விரிகின்றன ப்ரான்க்கின் நினைவுகள். அவரின் முதல் Communion அன்று, தனக்களிக்கப்பட்ட அப்பத்தை (இயேசுவின் உடலாக பாவிக்கப்படுவதை) தன் பாட்டியின் வீட்டில் வாந்தி எடுத்து விடுகிறார். வைதீகமான கத்தோலிக்கரான ப்ரான்க்கின் பாட்டி கடவுளின் உடல் தன் வீட்டில் இப்படி கிடக்கிறதே என்று புலம்பி ப்ரான்க்கை இதற்கு என்ன பாவமன்னிப்பு என்று கேட்டு வரச் சொல்கிறார். பாவ மன்னிப்பறையில் (confessional) திரைக்கு அந்தப் பக்கம் இருக்கும் பாதிரி சிரிப்பை அடக்க முயல்கிறார், பிறகு தண்ணீர் விட்டு கழுவச் சொல்கிறார். சாதாரண தண்ணீரில் கழுவினால் போதுமா அல்லது புனித நீர் வேண்டுமா என்று பாட்டிக்கு புதிய சந்தேகம் எழ ப்ரான்க் மீண்டும் பாவமன்னிப்பு கேட்கிறார். பாதிரி இப்போது கொஞ்சம் கடுப்பாகி சாதாரண தண்ணீரே போதும், பாட்டியை தன்னை இனிமேல் தொந்தரவு செய்ய சொல்லாதே என்கிறார். பாட்டியும் கடுப்பாகி “… That bloody ignorant bogtrotter” என்று பாதிரியாரை (அவருக்கு கேட்காமல் ) திட்டி, கடவுளை தரையில் போட்டதால் ப்ரான்க் எதிர்பார்த்திருந்த பணம், திரைப்பட அனுபவம் எதுவும் கிடைக்காது என்று சொல்லி விடுகிறார். பாதிரியே இந்த சம்பவத்தை இயல்பாக எடுத்துக்கொண்டாலும், எளிய மக்களால் அப்படி எடுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு சில நம்பிக்கைகள் ஆழ்ந்து பதிந்துள்ளன என்பதை இந்தச் சம்பவத்தில் உள்ள நகைச்சுவையையும் மீறி நாம் கவனிக்கலாம்.
லிம்ரிக் நகரில் ப்ரான்க்கைப் போல், ஆஞ்செலாவைப் போல் பலரைப் பார்க்கிறோம். குடிகாரத் தந்தைகள், பல பிள்ளைகளைப் பெற்று கணவன் இருந்தும் ஆதரவில்லாமல் வளர்க்கப் பாடுபடும் மக்கள் மலிந்து கிடக்கிறார்கள். பழைய நம்பிக்கைகள், சிறிய சண்டைகளை பல பத்தாண்டுகளாக நீட்டித்து ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பது, குறுகிய மனப்பான்மையோடு வெளியாட்களைப் பார்ப்பது என இந்நகரில் இருந்தால் விமோசனமே கிடைக்காதோ என்று தோன்றலாம். ப்ரான்கின் தந்தை வடக்கு அயர்லாந்தை சார்ந்தவர். எனவே அவரின் உச்சரிப்பு வேறு மாதிரி உள்ளதால் வேலை கிடைப்பதில்லை, அந்தளவுக்கு குறுகிய (insular) எண்ணங்கள் (bigotry) கொண்டிருக்கிறார்கள். இத்தகைய விவரிப்புக்கள் சில இந்த நூல் குறித்த பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. அதை இறுதியில் பார்ப்போம்.
மேலே பார்த்த குறுகிய மனப்பான்மைக்கு நேர்மாறாக, பல குழந்தைகள் கொண்ட வறிய குடும்பம் , மகன் அழைத்து வந்த நண்பனை ஓரிரு நாட்கள் தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ள தயங்குவதில்லை என்பதையும் பார்க்கிறோம். நண்பன் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ள ப்ரான்க்கைத் தேடி வரும் ஆஞ்செலா நண்பனின் தந்தையை தான் முன்பே அறிந்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்கிறார். நண்பனின் தந்தையுடன் நடனங்களுக்குச் சென்றுள்ளார், அவர் இப்போது தீராத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆஞ்செலாவுடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் அவர், தங்கள் காலத்திய பாடல் ஒன்றை ஆஞ்செலாவை பாடச் சொல்கிறார். தொலைந்த கனவுகளின் நினைவுகள் மீண்டெழும் நெகிழ்வான கணம் இது. இந்த இருவரின் நிலை இதைத்தாண்டியும் ஒன்றை நமக்குச் சொல்கிறது. நண்பனின் தந்தை நகரை விட்டு நீங்காமல், அங்குள்ள சூழலால் குலைந்து விட்டாரென்றால் வளமான எதிர்காலம் தேடி அமெரிக்கா சென்ற ஆஞ்செலா மீண்டும் அங்கு வந்தது விதியாலா அல்லது வர வேண்டிய சூழலை அவர் உருவாக்கினாரா? எந்தளவுக்கு ஒரு இடத்தின் சூழலை நம் இன்றைய நிலைமைக்கு காரணமாக சொல்ல முடியும்?
ப்ரான்க்கின் தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று விட ஆஞ்செலா பல பிரச்சனைகளுக்கு இடையில் குடும்பத்தை கட்டிக் காக்கிறார். அத்தை வீட்டில் சில நாட்கள், பிறகு ஆஞ்செலாவின் ஒன்று-விட்ட சகோதரன் லமன் (Laman) வீட்டில் தங்குதல் என நாட்கள் நகர்கின்றன. லமன் வீட்டில் வேலையாட்கள் போலவே உள்ளார்கள் ப்ரான்க்கும் அவன் தாயும். அதிலும் அங்கு தங்க ஆஞ்செலா தரும் விலை (அல்லது அவரே அதை விரும்பியும் இருக்கலாம்) சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
பதின் வயதில் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும் ப்ரான்க்,, தபால் நிலையத்தில் வேலை செய்கிறார், பலருக்கு கடன் கொடுக்கும் மூதாட்டிக்காக, கடனை திரும்பித் தராதவர்களுக்கு மிரட்டல் கடிதங்கள் எழுதுகிறார். போதிய அளவு பணம் சேர்ந்ததும் அமெரிக்காவிற்கு கிளம்புகிறார். கப்பலிலிருந்து அவர் நியூ யார்க் நகரின் ஒளிகளைப் பார்ப்பதோடு இந்த நினைவுக் குறிப்பு முடிகிறது.
‘Tis’ நினைவோடை ப்ரான்க்கின் அமெரிக்க வாழ்க்கையைப் பின் தொடர்கிறது. முதலில் பெரிய ஹோட்டலில் வேலைக்குச் சேரும் ப்ரான்க், பிறகு கொரிய யுத்தத்தின்போது ராணுவத்தில் சேர்கிறார், பிறகு மேல்படிப்பிற்காக ராணுவ வீரர்களுக்கு அரசு தரும் உதவிகளைப் பெற்று, ஆங்கிலத்தில் பட்டம் பெறுகிறார். ஆசிரியராக பணியில் சேர்க்கிறார், இதற்கிடையில் காதல், திருமணம், மதுவிற்கு அடிமையாவது, விவாகரத்து என இந்த நினைவுகள் செல்கின்றன. எந்தப் பீடிகையும் இல்லாமல், நேரடியாக இந்நூல் பற்றி சொல்லக் காரணம் , பக்க அளவில் “Angela’s Ashes” போலவே இருந்தாலும், படிக்கையில் அதைவிட இரண்டு மடங்கு பெரியதாக, சலிப்பு கொள்ளச் செய்யும் வகையில் உள்ளது. ப்ரான்க் முதல் நினைவோடையை ‘என் வாழ்க்கை வாசகர்களை ஈர்க்கும்’ என்று எண்ணி எழுதி இருக்க, இதை “வாசகர்கள் என் வாழ்வின் இந்தப் பகுதியையும் கண்டிப்பாக விரும்ப வேண்டும்” , என்ற எண்ணத்தில் மிகவும் வலிந்து முயற்சி செய்ய அதுவே இந்த நூலுக்கு எதிராக அமைந்து விட்டது. வாசகனை தன்வயப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், பல சம்பவங்களை அள்ளித் தெளிப்பது, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவுவது என தன் அதீத சுயமுனைப்பினாலேயே இலக்கில்லாமல் செல்கிறது ‘Tis. இதை மொத்தமாகச் சரிந்து விடாமல் சில சம்பவங்கள் காப்பாற்றுகின்றன. அமெரிக்கா வந்து சேர்ந்தவுடன் அந்த இடத்துடன் ஒட்ட முடியாமல் திணறுவது, ராணுவத்தில் சேர்ந்த பிறகு விடுமுறையில் லிம்ரிக் வரும் ப்ரான்க் தன்னுள் தோன்றியுள்ள மேட்டிமைத்தனத்தை தானே பகடி செய்து கொள்வது, குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற தந்தையை பல ஆண்டுகளுக்குப் பிறகு ப்ரான்க் சந்திப்பதை உணர்ச்சிகரமாக இல்லாமல் , இரு தூரத்துச் சொந்தங்கள் சந்திப்பது போன்றவை அப்படிப்பட்ட பகுதிகள். இந்நூலில் அவரின் ஆசிரியப் பணியைப் பற்றி கொஞ்சம் சொல்கிறார். அதை இன்னும் விரிவாக்கி ‘Teacher Man’ என்ற மூன்றாவது நூலக எழுதுகிறார்.
ப்ரான்க் ஆசிரியராக பணியில் சேர்ந்த முதல் நாள் வகுப்பறைக்குள் நுழையும்போது மாணவர்கள் சாண்ட்விச்களை வீசி எறிந்து விளையாடுகிறார்கள். முதல் நாள் வேலை, மாணவர்கள் தன்னை மதிக்க வேண்டும் போன்ற பதட்ட உணர்வுகளால் வீசி எறியப்பட்ட சாண்ட்விச்சை சாப்பிட்டு விடுகிறார். இந்த விஷயம் பரவி (முதல் நாளே, வகுப்பறையிலேயே, அதுவும் மாணவனின் உணவை சாப்பிட்ட ஆசிரியர் என்றால் சும்மாவா?). இரண்டாம் நாள் அயர்லாந்தில் ப்ரான்க் பெண்களுடன் பழகினாரா என்று மாணவர்கள் வினவ, “No, dammit. Sheep. We went out with sheep. What do you think we went out with?” என்று ஹாஸ்யமாக/ நக்கலாக பதில் சொல்கிறார் (அல்லது அப்படி நினைத்துக் கொள்கிறார்). இதுவும் பிரச்சினையாகி விடுகிறது, விலங்குகளுடன் விபரீத உறவு கொள்ளும் ஆசாமியோ நம் ஆசிரியர் என தலைமையாசிரியர் யோசித்திருக்கக்கூடும். தலைமை ஆசிரியர் இது குறித்து விசாரிக்கும் அளவிற்குச் செல்கிறது. ப்ரான்க்கின் ஆசிரிய அனுபவங்களை விவரிக்கும் இவரது மூன்றாம் நினைவுக்குறிப்பு நூல், ‘Teacher Man’ இப்படி ஆரம்பிக்கிறது.
சக ஆசிரியர்கள் வேறு மாணவர்கள் குறித்த பீதியை கிளப்புகிறார்கள், (“The little buggers are diabolical. They are not, repeat not, your natural friends”) மாணவர்களை எதிரியாக பாவிப்பது இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா என எங்கு சென்றாலும் பொதுவாக இருக்கும் போல. ஆனால் இந்த அறிவுரைகள் வீணாகி விடுகின்றன. தவறுகள் செய்து, தெளிந்துதான் ஆசிரியராக இருப்பது எப்படி என்பதை அறிந்து கொண்டேன் என்கிறார் ப்ரான்க். குறைந்தளவே ஆனாலும் இப்படியும் ஆசிரியர்கள் உள்ளார்கள்.
தன் இளமை வாழ்க்கை பற்றி, அமெரிக்கா வந்தபிறகு நடந்த சம்பவங்கள், ராணுவ சேவை பற்றி என மாணவர்களிடம் சொல்கிறார். தன் தோல்விகள், பயங்கள் , செய்த முட்டாள்தனங்கள் பற்றி மாணவர்களிடம் பேசுகிறார். இப்படி அவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கி அவர்களை தன்வயப்படுத்த முயல்கிறார். இது இருபுறமும் வெட்டக்கூடிய கத்தி, மாணவர்கள் இவர் சொல்வதைக் கேட்டு, நெருக்கமாக ஆவதற்கு பதிலாக இவர் மீது கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் போகலாம் , மரபார்ந்த ஆசிரியர்கள் அப்படித்தான் இதைப் பார்த்திருப்பார்கள்.
அவருடைய முதல் பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பின்போது, பிரச்சனை வேண்டாமென்று பெற்றோர்களிடம் அவர்கள் பிள்ளைகள் பற்றி உயர்வாய் சொல்ல ஆரம்பிக்க, அவர்களோ நீங்கள் குறிப்பிடுவது எங்கள் பிள்ளையைப் போலவே இல்லை என்று தங்கள் பிள்ளைகளைப் பற்றிய குறைகளை அடுக்குகிறார்கள். இதிலிருந்து தப்பிப்பதே பெரும்பாடாகி விடுகிறது அவருக்கு. இப்படி ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் அவரும் பாடம் கற்றுக் கொள்கிறார்.
மாணவர்களை மனப்பாடம் செய்யச் சொல்லாமல், அவர்களின் படைப்பூக்கத்தை, கற்பனைத்திறனை அதிகரிக்க வேண்டும் என்று எங்கும் பேசப்படுகிறது (நடைமுறையில் எதுவும் நடப்பதில்லை என்பது வேறு விஷயம்). உண்மையில் குழந்தைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்க யாரும் உதவ வேண்டாம், அதை ஏளனம் செய்யாமல் ஊக்குவித்தாலே போதும் என்று ப்ரான்க் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார். பெற்றோர்களால் எழுதப்பட்டது என்று மாணவர்கள் கொண்டுவரும் விளக்க/ மன்னிப்பு கோரும் கடிதங்களை மொத்தமாக ஒரு நாள் எத்தேச்சையாக படிப்பவர் அசந்து போகிறார். மாணவர்களின் கற்பனைத் திறன் அவ்வளவு அபாரமாக உள்ளது. – அதீதமான கற்பனை ஒன்று -” His sister’s dog ate his homework and I hope it chokes him”. அபாரமான கற்பனை இல்லையென்றாலும் சற்றே புத்திசாலித்தனமான ஒன்று – “Arnold doesn’t have his work done today because he was getting off the train yesterday and the door closed on his school bag and the train took it away. He yelled to the conductor who said very vulgar things as the train drove away. Something should be done.”
இதைப் படிக்கும் அவர் பெற்றோர்களிடம் இதைப் பற்றி சொல்வதில்லை. இந்தத் திறனை கட்டுரை எழுதுவதில் செலுத்தச் செய்கிறார். கடவுளுக்கு ஆதம் எழுதும் விளக்க/ மன்னிப்பு கோரும் கடிதம், கடவுளுக்கு ஈவ் எழுதும் விளக்க/ மன்னிப்பு கோரும் கடிதம் என மாணவர்களை எழுதச் சொல்கிறார். வித்தியாசமான கோணங்கள் வெளிவருகின்றன. ஒரு மாணவி ஈவை நியாயப்படுத்தும் விதமாக “… She was also tired of God sticking his nose into their business and never allowing them a moment of privacy..”. என்று எழுதுகிறார். இது நல்ல வரவேற்பு பெற்று பள்ளிகளின் கண்காணிப்பாளர் பாராட்டவும் செய்கிறார், ஆனால் அவருக்கும் ஜூடாஸ் எழுதும் விளக்கக் கடிதம் ஏற்புடையதாக இல்லை, குற்றவாளிகளுக்கு இப்படி வக்காலத்து வாங்கலாமா என்று கேட்கிறார். கட்டற்ற கற்பனைகள், அதன் சாத்தியங்கள், மரபார்ந்த ஒரு விஷயத்தில் இதுகாறும் இருந்து வந்துள்ள நிலையை (status-quo) மாற்றி விடும் என்ற அச்சம் எப்போதும் உள்ளது. எந்த படைப்பூக்கமும் அந்த எல்லைக்கு செல்லாத வரையில் பாராட்டப்படுகிறது. உதாரணமாக ப்ரான்க்கின் இத்தகைய முயற்சிகள் அனைத்தும் இத்தகைய நேர்மறையான எதிர்வினையை பெறுவதில்லை. ‘The Catcher in the Rye’ நாவலை மாணவர்களுக்கு படிக்கக் கொடுக்க, அதைப் படிக்கும் பெற்றோர், அதில் ‘விலைமாது’ வருவது போல் சில சம்பவங்கள் இருப்பதால் தலைமையாசிரியரிடம் புகார் செய்கின்றனர். சமூக நிஜத்திற்கும், பெற்றோர்/ கல்வித்துறை உயரதிகாரிகளுக்கும் எப்போதுமே இடைவெளி இருக்கும் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது.
மற்ற இரண்டு நூல்களைவிடக் குறைவான பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும் அடர்த்தியானது இது. “Angela’s Ashes” உடன் ஒப்பிட முடியாவிட்டாலும், கண்டிப்பாக ‘Tisஐ விடச் சிறந்தது.
‘Angela’s Ashes’, நூலின் அவர் வளர்ந்த ஐரிஷ் நகரமான ‘லிம்ரிக்’ (Limerick) பற்றியும், தன் பால்ய கால வறுமை பற்றி அவர் எழுதியதிலும் பல திரிபுகள் உள்ளதாகவும், அந்நகரையும், நகர மக்களையும் அவர் அவமதித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் கிளம்பின. அது குறித்த ஒரு விவாதத்தை இங்கு காணலாம். இன்னொருபதிவை இங்கு படிக்கலாம். இந்த விவாதங்கள் குறித்த பல தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன . அவர் மறைவுக்கு பின் சில நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிகிறது.
இதை இங்கு குறிப்பிடுவது மக்கோர்ட்டின் நூல்கள் ‘நினைவுக் குறிப்புக்கள்’ என்று வகைப்படுத்தப்படுவதால்தான். இதுவே புனைவென்றால் இப்படிப்பட்ட கேள்விகள் எழுவதற்கு இடமில்லை. இவற்றைப் பற்றி அறிந்திராமல் இந்தப் புத்தகங்களைப் படித்த அல்லது இவற்றைப் பற்றி தெரிந்திருந்து படிக்க நினைக்கும் (அல்லது படிக்க நினைத்து இந்த விஷயங்களைக் கேள்விப்பட்டபின் வேண்டாமென்று விலக்க நினைக்கும்) வாசகன், இந்த நூல்களை எப்படி அணுகலாம்? ‘Angela’s Ashes’ குறித்து மட்டுமே இத்தகைய சர்ச்சைகள் எழுந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கலாம். அதே நேரம், அவர் தன்னைப் பற்றிய சுயபரிசோதனையில் நேர்மையாகவே இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்படிச் சொல்வது முரணான ஒன்றோ, ப்ரான்க் மீதான குற்றச்சாட்டுகளை புறந்தள்ளுவதோ, அவர் செய்ததாக கூறப்படும் திரிபுகளை நியாயப்படுத்துவதோ அல்ல. லிம்ரிக் நகர மக்களின் கோபத்திற்கு தகுந்த நியாயமான காரணங்கள் இருக்கலாம். இது குறித்து லிமரிக் நகரவாசிகள், இளம் வயதில் ப்ரான்குடன் பழகியவர்களே உறுதியாக சொல்ல முடியும், அதிலும்கூட ஒரே விஷயத்தை பலரும் பல கோணங்களில் அணுகுவதால் இதில் அறுதியான உண்மை என்பது இருக்கக்கூடுமா? ஆனால் இந்த நூலின் மூலம் மட்டுமே, ப்ரான்க்கையும் அவரது குழந்தைப் பருவத்தையும், லிம்ரிக் நகரையும் அறிந்து கொள்ளும் வாசகன், அந்தத் திரிபுகளின் நோக்கம் என்ன என்று மட்டுமே பார்க்க முடியும்.
அவருடைய திரிபுகள் என்று சொல்லப்படுபவை எங்குமே “இரக்கத்தை” கோருவதாகவோ, ‘நான் எவ்வளவு சிரமப்பட்டேன் பார்” என்று மார் தட்டுவதாகவோ இல்லை. திரிபுகளை (அந்தக் குற்றச்சாட்டு உண்மையென்றால்) ஒரு சம்பவத்தை இன்னும் சுவாரஸ்யப்படுத்தவே அவர் உபயோகித்திருக்கிறார். தன்னைப் பற்றிய ஒரு பெருமையான, உயர்வான பிம்பத்தை உருவாக்குவதற்கு அல்ல. உதாரணமாக சான்ட்விச் சம்பவம் பொய்யாக இருக்கலாம், ஆனால் அது நமக்கு காட்டுவது பதட்டத்தில் தவறு செய்த ஒரு ஆளையே தவிர, தன்னிலை இழக்காத ஆசிரியரை அல்ல. ஒரு நேர்காணலில் ப்ரான்க் இப்படிச் சொல்கிறார்.
“I must congratulate myself, in passing, for never having lost the ability to examine my conscience, never having lost the gift of finding myself wanting & defective. Why fear the criticism of others when you, yourself, are first out of the critical gate? If self-denigration is the race I am the winner, even before the starting gun. Collect the bets”
இதற்கேற்றார் போல் மூன்று நூல்களிலுமே கறாரான சுயவிமர்சனத்தைப் பார்க்க முடிகிறது. ‘Angela’s Ashes’இல் ஒரு மூதாட்டிக்காக கடிதம் எழுதும் வேலை செய்யும் ப்ரான்க், ஒரு நாள் மூதாட்டியை பார்க்கச் செல்லும்போது அவர் காலமாகி விட்டதைப் பார்க்கிறார். மூதாட்டியின் பணப்பையிலிருந்து பணத்தை திருடி விடுகிறார். இந்தச் சம்பவம் உண்மையோ, பொய்யோ, ப்ரான்க்கை கண்டிப்பாக உயர்த்தவில்லை. ‘Tis நூலில் தன் முதல் திருமணம் முறிந்ததற்கு தன்னுடைய குடிப்பழக்கமே காரணம் என்கிறார்.
‘Teacher Man’இல் மாணவர்களை ஆக்கப்பூர்வமான விஷயங்களில் திசை திருப்புவதில் சில வெற்றிகளை அடைந்தாலும், ஒரு பள்ளியறையை அப்படியே மாற்றினேன், அனைத்து மாணவர்களையும் நல்வழிப்படுத்தினேன் என்றெல்லாம் அவர் சொல்வதில்லை. தன் பணி பற்றி,
“In the high school classroom you are a drill sergent, a rabbi, a shoulder to cry on, a disciplinarian, a singer, a low-level scholar, a clerk, a referee, a clown, a counselor, a dress-code enforcer, a conductor, an apologist, a philosopher, a collaborator, a tap dancer, a politician, a therapist, a fool, a traffic cop, a priest, a mother-father-brother-sister-uncle-aunt, a bookeeper, a critic, a psychologist, the last straw.”
என்று குறிப்பிடும் அவர், தன் தோல்விகளையும் பதிவு செய்கிறார். மாணவர்களின் தளைகளை உடைத்து அவர்களை விடுவிப்பேன் என்று எண்ணியதாகவும் அதில் தோல்வியே அதிகம் அடைந்ததாகவும் கூறுகிறார். கெவின் என்ற தொந்தரவு தருகிற ஒரு மாணவனின் ஆற்றலை ஆக்கபூர்வமான திசையில் திருப்ப முயல்கிறார். அதில் கொஞ்சம் வெற்றி அடைந்தாலும், ஒரு நாள் கெவின் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகிறான், அங்கிருந்து தப்பும் அவன், பிறகு ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, வியட்நாமில் காணாமல் போகிறான். அவனிடத்தில் கல்வித்துறை இன்னும் கொஞ்சம் பொறுமை காட்டி இருந்தால், இன்று அவன் சமூகத்தில் நல்ல நிலையில் இருந்திருக்கக்கூடும். கெவினின் தாயார் நீங்கள் மட்டும்தான் அவனைப் புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லும் போது, ப்ரான்க் தான் ஒன்றும் அதிகம் செய்து விடவில்லை என்ற குற்ற உணர்வே அடைகிறார். இந்த சுய விமர்சனமே அவரை நமக்கு நெருக்கமானவராக ஆக்குகிறது..
ஐரிஷ் மொழியில் ‘Seanchaí’ என்ற சொல் பழங்காலத்தில் கிராமம் கிராமமாக சென்று வந்த ஐரிஷ் கதைசொல்லிகளைக் குறிக்கிறது. ப்ரான்க்கின் மூன்று நினைவுக்குறிப்புக்களையும் படித்தபின் நமக்கு அவரும் ஒரு ‘Seanchaí’யாகதான் தெரிகிறார். ‘tea’ என்பதை குறிக்க ‘tay’ என்றும், ‘idiot’ என்பதை ‘eejit’ என்றும், அதிர்ச்சியை குறிக்க ‘bejeesus’, ‘Jesus’ஐ ‘jaysus’ என்றும் ஐரிஷ் பகுதியின் ‘உச்சரிப்புத்’ தன்மையை எழுத்தில் அதிகம் கொண்டு வருவதால், இந்தச் சொற்கள் ஒலிக்களாக உருப்பெற்று, வாசிக்கும் அனுபவத்துடன் கேட்க்கும் அனுபவத்தையும் தருகின்றன.
ஒரு எழுத்தாளரின் சுயசரிதை என இந்தப் புத்தகங்களை அணுகாமல், எளிதில் பிரிக்க முடியாத, உண்மையும் பொய்யும் கலந்த நிகழ்வுகளை சொல்லும் ஒரு raconteurஇன் வாய் மொழிக் குறிப்புக்களின் தொகுப்பாக அணுகுவது பின்னர் ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவும்.
புத்தகமாக படிப்பதைவிடவும் , நேரடியாக, அவருக்கு பிரியமான மதுபான கடையிலோ அல்லது அவரது வீட்டிலோ அவரருகில் உட்கார்ந்து இந்த நினைவுகளைக் கேட்டால் இன்னும் அலாதியாக இருந்திருக்கும். அது சாத்தியமில்லை என்றாலும், இவை மூன்றும் ப்ரான்க்கின் குரலில் ஒலி நூல்களாக வந்துள்ளன. படிப்பதோடு, ஒலி நூலாகக் கேட்பதும் நிச்சயம் வேறு அனுபவத்தைத் தரக்கூடும்.

No comments:

Post a Comment