Tuesday, August 12, 2014

THE GRANTA BOOK OF THE AMERICAN SHORT STORY – RICHARD FORD : அறிமுகம்

பதாகை இதழில் வெளிவந்தது http://padhaakai.com/2014/08/03/the-granta-book-of-the-american-short-story-richard-ford-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

---------------

ஒரு எழுத்தாளரின் சிறந்த கதைகள் என தொகுக்கப்படும் தொகைநூல் குறித்தே பல வேறுபட்ட பார்வைகள் இருக்கும்போது, அமெரிக்கச் சிறுகதை இலக்கியத்தின் சிறந்த படைப்புகள் என ரிச்சர்ட் போர்டால் (Richard Ford) தொகுக்கப்பட்டுள்ள ‘The Granta Book of the American Short Story’ இன் இரண்டாம் தொகுப்பை, முழுமையான ஒன்றாக, அதுவும் இந்தியாவிலிருந்து கொண்டு (நமக்கு படிக்கக் கிடைப்பதை வைத்து) அமெரிக்க இலக்கியச் சூழலை கவனிக்கும் நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியாது.
2007இல் வெளிவந்த இந்த இரண்டாவது தொகுப்பேகூட, 1992இல் வெளிவந்த (அதையும் தொகுத்தது போர்ட்தான்), முதல் தொகுப்பிலிருந்து வேறுபட்டுள்ளது. முதல் தொகுப்பில் இல்லாத எழுத்தாளர்கள், அதில் இருந்த எழுத்தாளர்கள், ஆனால் அவர்களின் வேறு கதைகள் என பல மாற்றங்கள் உள்ளன (அதற்காக மாற்றப்பட்ட கதைகள் சிறந்து அல்ல என்று கூற முடியமா, போர்டின் பார்வை அந்த 15 ஆண்டுகளில் மாறி இருந்திருக்கலாம்).
மேலும்,
“Still, there lurks the uneasiness of the anthologizer, the worry that he’s missed something or someone momentous and that his tastes are not wholesome and broad at all, but narrow and timid, and have led him unwittingly to writing he finds easy to take. I’m sure I’ve missed good stories and good writers in my endeavors not to, and for those errors I’m sorry”
என போர்ட் சொல்கிறார். எனவே இந்தத் தொகுப்பை அமெரிக்க சிறுகதை இலக்கியத்தின் உட்புக பல நுழைவாயில்களைத் தரும் ஒன்றாக பார்க்கலாம். சீவர், கார்வர் போன்ற அறியப்பட்ட, சென்ற தலைமுறை பெயர்களுடன், நெல் ப்ராய்டென்பர்கர் (Nell Freudenberger), நேத்தன் இங்லண்டர் (Nathan Englandar) போன்ற இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் வெள்ளையின எழுத்தாளர்களே இருந்தாலும், ஸி.ஸி பாக்கெர் (Z Z Packer) போன்ற ஆப்ரிக்க- அமெரிக்க எழுத்தாளர்கள், ஷெர்மன் அலக்சி (Sherman Alexie) போன்ற அமெரிக்க பூர்வகுடி எழுத்தாளர்கள் (Native American) இருக்கிறார்கள். ஜூனோ டியாஸ் (Junot Diaz), ஜூம்பா லஹிரி (Jhumpa Lahiri) போன்ற, வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த புலம்பெயர் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
அதிகமும் யதார்த்த பாணி கதைகளாக இருந்தாலும், அவற்றின் நேர்க்கோட்டுத் தன்மையை கலைத்துப் போடும் சித்து வேலையை செய்யும் டொனல்ட் பார்தல்மே (Donald Barthelme) கதையும் உள்ளது. சொற்சிக்கனம் கொண்ட டோபாயாஸ் வுல்ப் (Tobias Wolff) கதைக்கு மாற்றாக டி.சி போயலின் (T.C Boyle) ஆர்ப்பாட்டமான உரைநடை கதை உள்ளது. குடும்பத் தொல்கதையாக விரியும் லூயிஸ் ஏட்ரிக்கின் (Louise Edrich) கதையும் உள்ளது. அமெரிக்க பெரு/புற/சிறு நகர வாழ்வோடு கிராமிய (rural) வாழ்வும் (ஆன்னி ப்ரூ/ Annie Proulx) பதிவாகி உள்ளது. கதையின் சம்பவங்களைப் பார்ப்பதற்கு கார்வர் போன்றோர் வாசகனுக்கு தெளிவான பார்வையை அளித்தால், ஜூனோ டியாஸ், டெனிஸ் ஜான்சன் (Denis Johnson) போன்றோரின் கதைகளில், அதன் சூழலுக்கு ஏற்ப, அதன் பாத்திரங்களைப் போலவே வாசகனும், போதையேறிய, வெளிறிய மங்கலான பார்வையோடேயே கதையின் சம்பவங்களைப் பார்க்கிறான்.
ஆனால் பல்வகை கதைகளையோ, எழுத்து முறைகளையோ நம் காலத்தின் முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்கின்ற கதைகளையோ (Aids, 9/11, கணக்கில்லாப் போர்கள்), பல்வேறு இனக்குழுக்களையோ பிரதிநிதிப்படுத்த இந்தக் கதைகளை தேர்வு செய்யவில்லை என, “But these matters would always be beside my point -mine being the story’s excellence. My certain belief is that literature always reflects its times either clearly or opaquely whether it wants to or not,” என்று தன் தேர்வு முறை குறித்து போர்ட் சொல்கிறார்.
இது குறித்து விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் இந்தத் தேர்வு முறை இயல்பாகவே பலதரப்பட்ட கதைகளை தந்துள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அமெரிக்க வாழ்வின், சமூகத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் இந்தத் தொகைநூல் தருகிறதா என்பது தெரியாவிட்டாலும், இதைப் படிக்கும் அமெரிக்காவைப் பற்றி அறிந்திராத ஒருவர், நிஜ அமெரிக்காவிற்கு நெருக்கமான ஓர் நாட்டை மனதிற்குள் உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் மட்டும் சொல்லலாம்.
இந்தக் கதைகள் பற்றித் தனித்தனியாக, அவற்றின் சிறப்பியல்புகள், அவை தரும் உணர்வு என பேசலாம். இன்னொரு வகையாக , இக்கதைகளை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்ப்பதும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகிறது.
இக்கதைகளில் சில ஒன்றுடன் மற்றொன்று ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து பிறகு விலகிச் செல்கின்றன, சில கதைகளை மற்றொன்றின் நீட்சியாகப் பார்க்கலாம். அதே நேரத்தில் தங்களின் தனித்தன்மையையும் இந்தக் கதைகள் இழப்பதில்லை. இப்படி இந்தக் கதைகள் சந்திப்பதும், பிரிவதும் அதன் ஆசிரியர்கள் அதை வலிந்து முயன்றதால் அல்லாமல் இயல்பான ஒன்றாக உள்ளது.
அதற்கு காரணம், இவை மானுடத்தின் பொது உணர்வுகளான தனிமை, நட்பு, துரோகம், பிரிவு, இழப்பு, பதின் பருவத்தின் அலைகழிப்பு, மத்திம வயதின் ஆயாசம், முதுமையின் அயர்ச்சி இவற்றையே பேசுகின்றன. கதையின் களனோ, காலகட்டமோ, உரைநடை/வடிவ உத்திகளோ இந்த உணர்வுகளை அன்னியமாக்குவதில்லை. முதிய தாயாரை கவனிக்க வேண்டியுள்ளதால் மற்ற உறவுகளை பராமரிக்க முடியாத மகள் எந்தளவுக்கு நமக்கு நிஜமானவராக தெரிகிறாரோ (ஆசிரியர் – ஆன் பீட்டி/Ann Beattie), அதே அளவிற்கு அமெரிக்க உள்நாட்டு யுத்த காலத்திய, ஆவிகள் உலவும் ஒரு தீம் பார்க்கில் வேலை செய்யும், அந்த ஆவிகளோடு நல்லுறவு (!) வைத்திருக்கும், எப்படியாவது வேலையைத் தக்கவைத்துக் கொண்டு குடும்பத்தை பராமரிக்க வேண்டும் என்று பாடுபடும் தந்தையும் (ஆசிரியர் – ஜார்ஜ் சாண்டர்ஸ்/ George Saunders) நிஜமானவராகத் தெரிகிறார். அந்த விதத்தில் இத் தொகுப்பிலுள்ள பல கதைகள், ஒன்றோடொன்று மட்டுமில்லாமல், தமிழ் உட்பட எந்த இலக்கியச் சூழலோடும் பொருந்தக்கூடியவை. 
பின்குறிப்பு -
ஏழை, மத்திய, கீழ்/ உயர் மத்திய தர/ வர்க்க மனிதர்கள் வாழ்வு பற்றி பேசும் இந்தக் கதைகள், அதிபணக்கார வாழ்வு அதிகம் பற்றி பேசுவதில்லை, அல்லது பணக்காரத்தனம் கதையில் முதன்மைப் படுத்தப்படுவதில்லை. 19ஆம் நூற்றாண்டின் இலக்கியங்கள் வரை, பெரும் பிரபுக்கள், அவர்கள் வாழ்வு குறித்த நாவல்களை அதிகம் பார்க்கிறோம், அவர்களுக்கு அடுத்த படியில் இருந்த உயர் குடிகள் (gentry) குறித்த பதிவுகளும் அதிகம் உள்ளன ( Dostoyevsky, Walt Whitman போன்ற எழுத்தாளர்களும், ஹீத்க்ளிப்-Heathcliff போன்ற பாத்திரங்களும் 19ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும், இலக்கியத்தின் கவனம் பெருங்குடிகளை நோக்கியே அதிகம் இருந்தது). ஜனநாயகம் பரவலாகி, எழுத்தில் நவீனத்துவம் துவங்க, அதுவரை குரலற்றவர்களாக (disenfranchised ) இருந்தவர்களின் குரல் வெளிப்படத் துவங்கியது. ஆனால் அதன்பின் பெருந்தனக்கார மறக்கவியலா பாத்திரங்கள் அருகி விட்டது போல் தோன்றுகிறது. அரசியல்/ வரலாற்றுப் பாத்திரங்கள் பற்றிய நூல்கள் தனி. (பல்ப் பிக்ஷன் நூல்களில் இன்னும் இத்தகைய பணக்கார பாத்திரங்களைக் காண்கிறோம். பி.ஜி வூட்ஹவுஸ்-P.G Wodehouseஇன் பெர்ட்டி வூஸ்டர்- Bertie Wooster இன்றும் மறக்க முடியாதவரே). ஜே காட்ஸபி (Jay Gatsby) போன்ற எத்தனை பணக்கார முக்கிய பாத்திரங்கள் நவீன இலக்கியத்தில் இருக்கக்கூடும்?
இன்னாரைப் பற்றி எழுத வேண்டும்/ கூடாது என்று பார்ப்பதல்ல இங்கு நோக்கம், ஒரு நாட்டின் கிட்டத்தட்ட 50 ஆண்டு கால இலக்கியத்தின் முன்மாதிரி படைப்புக்கள் என சொல்லப்படுபவையில், விடுபடல்கள் என சில தோன்றும்போது எழும் கேள்விகள் இவை. மேலே பார்த்தது போல் 44 கதைகளில் பெரும்பாலும் வெள்ளையின எழுத்தாளர்களே இருக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அதற்கான பதிலையும் (கதைகளின் தேர்வு பற்றி) போர்ட் சொல்லி இருப்பதை மேலே பார்த்தோம். அவர் பார்வையில் பெருந்தனக்காரர்களைப் பற்றிய சிறந்த கதைகள் இல்லாமல் இருந்திருக்கலாம். மேலும் பொதுவாக முழு நேர எழுத்தாளனின் நிலை குறித்து நாமறிவோம், GuardianSalon) இதில் எங்கு பிரபுக்களின் அண்மையை பெறுவதோ, இவர்களே பிரபுக்களாவதோ நடக்கக் போகிறது. அத்தகைய பாத்திரங்கள் சமூகத்துடன் ஒரு ‘conformity’யை பிரதிபலிப்பதாக எழுத்தாளர்கள் எண்ணுவதால் அப்படிப்பட்டவர்கள் உருவாகுவது இல்லையா? இது குறித்தான உளவியல் எங்கும் பொதுவான ஒன்றாகவே இருக்கலாம்.

No comments:

Post a Comment