Monday, August 25, 2014

THE GRANTA BOOK OF THE AMERICAN SHORT STORY – RICHARD FORD : ஊடுபாவுகள் 3

முந்தைய பதிவுகள் 
----
பதாகை இதழில் வெளிவந்தது -http://padhaakai.com/2014/08/17/the-granta-book-of-the-american-short-story-richard-ford-3/

பால்யத்தின் நினைவுகளும் பதின் பருவ அலைகழிப்புக்களும்
ஜோய்ஸ் கரோல் ஓட்ஸின் (Joyce Carol Oates) ‘Where is Here’, சிறுகதை, ஒரு அந்நியன் மாலை வேளையில் வீட்டின் அழைப்பு மணியை அழுத்துவதுடன் ஆரம்பிக்கிறது. நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் அந்த அந்நியன் தன்னுடைய 11ஆம் வயதில் இந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் பிறகு தன் தாய் இந்த வீட்டை விற்றபிறகு இப்போதுதான் இந்த பக்கம் வந்ததால் வீட்டைப் பார்க்கலாம் என எண்ணி வந்ததாகவும் கூறி, வீட்டின் வெளிப்புறத்தில் மட்டும் சிறிது நேரம் இருக்கட்டுமா என அனுமதி கேட்கிறான். கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது அந்த வீட்டில் வசிக்கிறார்கள். கணவன் அந்நியனை வீட்டின் வெளியே சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கிறார்.
ஓட்ஸ் மனைவியின் மூலம் மனித மனம் சட்டென்று பல்வேறு ஒன்றுக்கொன்று நேர்மாறான நிலைப்பாடுகள் எடுப்பதைக் காட்டுகிறார். முதலில் அந்நியனை அனுமதித்ததைக் குறித்து கணவனை கடிந்து கொள்கிறார் மனைவி, அவன் கொலைகாரனாகவோ, திருடனாகவோ இருக்கலாமே என்கிறார். (“Isn`t that just like you!” என்று தன் சலிப்பை வெளிப்படுத்துகிறார்) வெளியில் அந்த அந்நியன் என்ன செய்கிறான் என்று பார்க்கும் கணவன், அவன் அங்குள்ள ஊஞ்சல் அருகில் செல்வதைப் பார்த்து அவன் குழந்தையாக இருக்கும்போது அதில் விளையாடி இருக்கக்கூடும் என்கிறார். இப்போது மனைவி சட்டென்று அவனை உள்ளே அழைக்கும் மனநிலைக்கு சென்று, அவனை அழைக்காத கணவனை மீண்டும் கடிந்து கொள்கிறார் (மீண்டும் “Isn`t that just like you!“)!!!. அந்நியன் வீட்டிற்குள்ளும் அனுமதிக்கப்படுகிறான்.
இப்படி வழக்கத்திற்கு மாறான இந்த நிகழ்வு தம்பதியரை துணுக்குற வைத்தாலும், வேறெந்த மாற்றமும் இல்லை. நினைவுகள் எழுப்பும் நெகிழ்ச்சியான உணர்வுகள் குறித்த கதையாக இது இருக்கும் என இதுவரை வாசகன் எண்ணுகிறான். அந்நியன் வீட்டில் நுழைந்ததும் சூழலே மாறுகிறது. வீட்டின் உள்ளே சுற்றிப் பார்க்கும் அந்நியனின் பார்வையில், உடல் மொழியில் உள்ள தீவிரம், தம்பதியரை அச்சுறுத்துகிறது. அவர்கள் இருப்பதையே அவன் மறந்துவிட்டு தன் பால்யத்திற்குள் சென்று விட்டது போல் உள்ளது. அவன் ஒவ்வொரு அறையாக நுழைந்து வீட்டை ஆக்கிரமிப்பது மட்டுமின்றி தன் நினைவுகளாலும் ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறான் அவனின் கசப்பான பால்ய நிகழ்வுகளின் நிழல் வீடெங்கும் பரவ ஆரம்பிக்கிறது அவன் தாய் இறந்து விட்டதைக் குறித்து வருத்தம் தெரிவிக்கும் மனைவியிடம் “Please don`t be,” the stranger said. “We`ve all been dead-they`ve all been dead-a long time.” அவன் பார்வையிலே இவர்களும் வீட்டை பார்க்க, உணர ஆரம்பிக்க, அதிலிருந்து மீள அவனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள்.
அது அவர்கள் சமநிலைக்கு திரும்ப உதவுகிறதா? அவனை அனுப்பி விட்டு வரவேற்பறைக்கு வரும் கணவனுக்கு அந்த அறை இதுவரை பார்த்திராதது போல் தோன்ற மனைவிக்கோ சமையலறையின் கதவு சற்று உள்வாங்கி இருப்பது போல் தோன்றுகிறது. இப்படி ஒரு மிகையதார்த்த (surreal) காட்சியோடு முடியும் இந்தக் கதையில் தம்பதியருக்கிடையே மீண்டும் சண்டை ஆரம்பிக்கிறது. “We’ll forget it.” என்று கணவன் திரும்பத் திரும்ப கூறினாலும், அந்த அந்நியனின் பால்யத்திலிருந்து இவர்களோ, இவர்கள் வீடோ மீள்வது அவ்வளவு எளிதாக இருக்காது.
டோபாயாஸ் வுல்ப்பின் (Tobias Wolff) ‘Firelight’ சிறுகதையில் கதைசொல்லி தன் பால்யத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். கதையின் முதல் பகுதியில் அவர்களின் வாழ்க்கைச் சூழலைக் கட்டமைக்கிறார் வுல்ப்.
ஏழ்மையில் கதைசொல்லிக்கும் அவர் தாய்க்கும் முக்கிய பொழுதுபோக்கு கடைகளுக்கு window-shopping செல்வது, அல்லது (வாடகை கொடுக்க முடியாததாக இருந்தாலும்) குடியிருக்க காலியான வீடுகளைப் பார்க்கச செல்வது. கதைசொல்லி எங்கு செல்கிறார் என்று நாம் யோசிக்க ஆரம்பிக்கும்போது மையச் சம்பவத்திற்கு வருகிறார். வழக்கம் போல் ஒரு வீட்டைப் பார்க்க இருவரும் செல்லும்போது அங்கு ஏற்கனவே குடியிருக்கும், அந்த நகர பல்கலைக்கழகத்தில் வேலையும் செய்யும் ஏவ்ரி (Avery) குடும்பத்தினரைச் சந்திக்கிறார்கள். கணப்பறை முன்னமர்ந்து பேச ஆரம்பிக்கிறார்கள். அதன் சூட்டில் கதை சொல்லி சொக்கிப் போயிருக்க, மற்றவர்கள் பேசுவது அவர் காதில் அவ்வப்போது விழுகிறது. ஏவ்ரி அந்த வீடு குறித்தும், நகரம்/ பல்கலைக்கழகம் குறித்தும் அலட்சியமான கருத்துக்களைக் கூறுகிறார். வீடெங்கும் ஒரு இறுக்கமான சூழலை உணர முடிகிறது.
முதல் கதையில் அழையா விருந்தாளியால் பிரச்சனையென்றால் இங்கு இவர்கள் வீட்டிலிருப்பவரிடம், அவரின் கசப்புக்களுக்குள் மாட்டிக் கொள்கிறார்கள். கணப்பறையின் சூட்டின் கிறங்கிக் கிடக்கும் கதைசொல்லியை அவர் தாய் எழுப்பி அழைத்துச் செல்கிறார். அதற்குப் பிறகு அவர்கள் அந்த வீட்டிற்கு மீண்டும் செல்வதில்லை.
இந்த இடத்தில் டோபாயாஸ் வுல்ப்பின் கதைசொல்லிகளின் நம்பகத்தன்மை குறித்து நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. இந்தக் கதையென்றில்லை, மற்ற பல கதைகளிலும் அவர்கள் முற்றிலும் நம்பத்தகுந்தவர்கள் அல்லர். நினைவுகளை வளைத்துக் கொள்வதில் சமர்த்தர்கள். ஒரு நேர்காணலில் இது குறித்த கேள்விக்கு அவர் “The world is not enough, maybe? … To lie is to say the thing that is not, so there’s obviously an unhappiness with what is, a discontent,” என்று சொல்கிறார்.
நம் கதைசொல்லியும் இப்போது ஏவ்ரிக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்படாதது, அதனால் அவருக்கு ஏற்படும் ஏமாற்றம், கோபம் அது அவர் குடும்பத்தை பாதிக்கும் விதம் என ஒரு கதையை எடுத்து விடுகிறார். ஆனால் அவர்கள் அந்தக் குடும்பத்தை ஒரு முறைதான் சந்தித்துள்ளது வாசகனுக்கு தெரியுமென்பதால் “.. I have made these people part of my story without knowing anything of theirs,” என்று ஒப்புக்கொண்டாலும் அதற்குள் ஏவ்ரி குடும்பத்தின் நிகழ்கால/ எதிர்கால வாழ்க்கை குறித்த சித்திரத்தை நமக்கு தந்து விடுகிறார். ஆனால் கதையின் மையம் ஏவ்ரி அல்ல, கணப்பறையின் கதகதப்புத்தான். இப்போது பெரியவனாகி, திருமணம் முடித்து, குழந்தைகளோடு முன்பிருந்ததைவிட நல்ல நிலையில் வாழும் கதைசொல்லிக்கு தன் வீட்டில் உள்ள கணப்பறை குறித்த பெருமிதமுள்ளது. அது அவரின் உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் கதகதப்பு தருவதாக உள்ளது. அதே நேரம் இந்த ஸ்திரத்தன்மை கனவு போல் கலைந்து விடுமோ என்ற பயமும் உள்ளது.
ஓட்ஸின் கதையில் பால்ய நினைவுகள் உக்கிரமாக உருப்பெற்றால், இதில் சாத்வீகமாக, கதகதப்பான நினைவாக உருப்பெற்று, இதமளிக்கும் அதன் சூடு இன்னும் கதைசொல்லியை விட்டு போகவில்லை என்று முடித்துவிடலாம்தான். ஆனால் இங்கு மீண்டும் வுல்ப்பின் கதைசொல்லிகளின் நம்பகத்தன்மை குறித்து யோசிப்பது நலம். கதைசொல்லி தன் கணப்பறை குறித்து சொல்வதற்காக உருவாக்கியதா இந்த நினைவுகள்? அல்லது அந்த நினைவுகள் உண்மையாக இருந்து கதைசொல்லி, வாழ்வில் நல்ல நிலைக்கு வராமல் இன்னும் அந்தச் சூட்டின் நினைவை தன் இன்றைய வாழ்வோடு இணைப்பதாகக்கூட இருக்கலாம். இது இல்லாத ஒன்றைப் பற்றிப் பேசுவதாகத் தோன்றலாம். வுல்ப்பே இது குறித்து என்ன நினைக்கிறார் என்று அறிந்து கொள்ள காலச்சுவடில் அ.முத்துலிங்கத்திற்கு வுல்ப் அளித்த நேர்காணலில்
“ஒரு கதையை வாசகர் இப்படித்தான் படித்து, இப்படித்தான் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாது. கதை என் கையை விட்டுப் போனதும் அது வாசகருக்குச் சொந்தமாகிவிடுகிறது. அந்தக் கதையின் மூலம் வாசகருக்கு ஒரு முடிவடையாத புரிதல் இருக்கக்கூடும். கடைசி வார்த்தை எழுத்தாளருடையது அல்ல. அதை எழுத்தாளர்கள் ஞாபகத்தில் இருத்தினால் சரி,”
என்று கூறுகிறார். இப்படி அவர் கொடுக்கும் உரிமை மட்டுமல்ல, அவரின் கதைசொல்லிகளின் பொது குணாதிசயம் மற்றும் இந்தக் கதையில் நமக்குத் தெரிந்தே கதைசொல்லி ஒப்புக்குச் சொல்லும் கற்பனைப் பகுதிகளும் இந்தக் கதையை வேறு கோணங்களில் அணுக உதவுகின்றன.
பால்யத்திலிருந்து நம்மை பதின்பருவத்திற்கு கெவின் கேண்ட்டி (Kevin Canty) ‘Blue Boy’ சிறுகதையில் அழைத்துச் செல்கிறார். கோடை விடுமுறையில் ஒரு கிளப்பின் நீச்சல் குளத்தின் காப்பாளனாக (lifeguard) கென்னி என்ற பதின்பருவச் சிறுவன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். வேலை செய்கிறான் என்பதைவிட, போதைப் பொருள் (marijuana) உட்கொண்டு (காலை 10.30 மணி அளவிலேயே), அது உருவாக்கும் கற்பனைகளில் நீச்சலுக்கு வரும் தன் வயதையொத்த பெண்கள்/ திருமணமானவர்கள் என அனைவரையும் கற்பனைகளில் புணர்ந்து கொண்டிருக்கிறான். நிஜத்தில் அவனை யாரும் சட்டைகூட செய்வதில்லை, அது தன்னிடம் பணம் இல்லாததால் என்று நினைக்கிறான்.
திருமதி. ஜொர்டன் என்பவர் மீது அவனுக்கு விசேஷமான கவனம் உள்ளது. தன் பகற்கனவுகளில் ஆழ்ந்திருக்கும் அவன், ஒரு குழந்தை குளத்தில் சிக்கிக் கொள்வதை மிகத் தாமதமாக கவனித்து அடித்துப் பிடித்து பாய்வதற்குள் அதிர்ஷ்டவசமாக ஜொர்டன் குழந்தையை காப்பாற்றுகிறார். இதில் கென்னிக்கு சிறு அடி படுகிறது. இதைப் பார்க்கும் ஜொர்டன் அவனைத் தான் தன் வண்டியில் அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார். அவர் அவனிடம் பேசுவது இதுவே முதல் முறை. இது அவனைக் கிளர்ச்சியடையச் செய்திருக்கும் என்று எண்ணினால் அது தவறு, அப்படி இருந்திருந்தாலும் அது வழமையான ஒன்றாகவே இருந்திருக்கும். கெவின் இந்த நிகழ்வை இன்னொரு கோணத்திலிருந்து அணுகுகிறார்.
இந்நிகழ்வு முதலில் கென்னியைப் பதற்றமடையவே செய்கிறது. கற்பனைகளில் அவன் பல பெண்களைப் புணரும் ஆண்மையானவனாக இருந்தாலும், ஜொர்டன் தன் அருகாமையில் வந்து பேசும்போது, ஒரு பெண்ணருகே நிற்கும், என்ன பேசுவதென்று புரியாமல் விழிக்கும் சிறுவன்தான் நான் என்று அவன் புரிந்து கொள்கிறான். அவர் (மற்றும் பிறப் பெண்கள்) தள்ளி இருப்பதே தன்னைக் குறித்த பிம்பங்களை உருவாக்குவதற்கு உதவுகிறது. (.. He liked her better as a body, a place for him to put his thoughts..”)
ஜொர்டனின் வீட்டிற்கு செல்லும் கென்னிக்கு கொஞ்சம் பதட்டம் குறைய , அவன் மனம் இப்போது விடலைகளின் மனதில் வயதில் அதிகமான பெண்கள் குறித்து உருவாகும் காட்சிகளை அசை போடுகிறது, மிக விரிவாக உள்ள இந்தக் காட்சிகளைப் பற்றி “.. where does the shit in my head come from..” என்று எண்ணுகிறான். ஜொர்டனின் வீட்டிலிருந்து கொஞ்சம் பணத்தைத் திருடவும் செய்யும் கென்னி, ஜொர்டனைத் தொட முயல்கிறான். அதைக் கண்டு பதறும் ஜொர்டனைப் பார்த்து தன்னிலையடையும் கென்னி அங்கிருந்து நீங்குகிறான்.
கேண்ட்டி கென்னியின் பதின்பருவ பாலியல் விழைவுகளை கதையின் மையமாக வைத்து பேச விரும்பவில்லை. பதின்பருவ மன/ உடல் உளைச்சலையே முன்வைக்கிறார். அடுத்த நாள், நடந்த சம்பவம் குறித்து எதுவும் புகார் சொல்லாமல் வழக்கம் போல் (அவனை சட்டை செய்யாமல்) ஜொர்டன் கிளப்பில் பொழுதைக் கழிக்கும்போது கென்னி ஏமாற்றமடைகிறான். ஒன்று அவனை எல்லை மீற அனுமதித்திருக்க வேண்டும் அல்லது அவன் மேல் புகார் அளித்திருக்க வேண்டும், இரண்டுமில்லாமல் எதுவும் நடக்காததைப் போல அவர் இருப்பதை அவனால் தாங்க முடியவில்லை. ஜொர்டன் பதின்பருவ உணர்வுகளை தானும் அறிந்திருப்பதால், புரிந்து கொண்டிருப்பதால், அவனைப் பற்றி புகார் அளிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இதை அவனுடைய அதிர்ஷ்டமாக எண்ணக் கூடிய நிலையில் அவன் இல்லை.
அவன் தன் உடல்/ மனதிலிருந்து தெறிக்கத் துடிக்கும் இளமையின் ஆற்றலுக்கு தன்னையறியாமலேயே ஒரு வடிகால் தேடுகிறான். அது பொழுதைக் கழிக்க உதவும் போதைப் பழக்கமாகவும், பாலுறவுக் கற்பனைகளாகவும் உருவம் கொள்கிறது. அவையும் விரைவிலேயே தங்கள் ஈர்ப்பை இழந்து விடுகின்றன. கோடை விடுமுறை என்பதால் பள்ளி/ கல்லூரி/ நண்பர்கள் நாள் முழுதும் அளிக்கும் அடைக்கலமும் இல்லை.
நிஜத்தில் அவன் வாழ்வில் புதிதாக எதுவும் நடப்பதில்லை, நீச்சல் குளமருகில் போதை தரும் கற்பனைகளோடு அமர்ந்திருப்பதே அவனுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்பதே அவன் திருடுவதற்கும் எதையாவது செய்ய வேண்டுமே என்ற உளைச்சலுக்கும் ஒரு காரணம். “There were still six weeks of summer left” என்று கதை முடிகிறது. யுகங்களாக நீளப் போகும் அந்த ஆறு வாரங்களை கென்னி தாண்டி விடுவானா அல்லது இது போல வேறேதாவது செய்து, அந்த முறை அதிர்ஷ்டக் காற்று வீசாமல் பிரச்சனையில் சிக்குவானா (அதை அவன் விரும்பவே செய்வான்) என்பது ஒரு கேள்விக்குறிதான்.
கேண்ட்டி பதின்பருவ ஆண் பற்றிப் பேச, டெப்ரா ஐசென்பெர்க் (Deborah Eisenberg) பதின்பருவ பெண்கள் பற்றி ‘The Custodian’ கதையில் சொல்கிறார். பதின்பருவத்தில் அப்போதுதான் நுழைந்திருக்கும் இசபெல் (Isobel), நுழையப் போகும் லின்னியின் (Lynnie) வாழ்வின் ஓரிரு வருடங்களைப் பார்க்கிறோம். இருவரில் இசபெல் ஆளுமைத்திறன் மிக்கவராக இருக்க, அவர் வழிநடத்த, அவரைப் பின்பற்றுபவராக லின்னி உள்ளார். வயது வித்தியாசத்தினால் மட்டும் இது அமைவதில்லை, இயல்பிலேயே லின்னி எப்போதும் பின்பற்றுபவராகவே உள்ளார்.
ராஸ் (Ross)/ கிளேர்(Claire) தம்பதியர் தங்கள் ஊருக்கு குடி வருவது அவர்கள் வாழ்வில் சலனங்களை ஏற்படுத்துகிறது. 35 வயதான ராஸ் தன் மாணவியான கிளேரை மணம் முடித்து இரு குழந்தைகளும் பெற்றுள்ளார். அந்த வீட்டிற்க்கு முதலில் லின்னி குழந்தையை கவனிப்பவராக வேலைக்குச் செல்ல, நடுவில் சில காலம் இசபெல் அந்த வேலையைச் செய்கிறார். வசீகரமான ஆசாமியான ராஸ் அனைவரையும் எளிதில் ஈர்க்கிறார். அவரால் அவர் பயிற்றுவிக்கும் கல்லூரி மாணவிகள் முதல், அவர் மற்றவர்களைச் சந்திக்கச் செல்லும்போது அந்த வீடுகளில் இருக்கும் பள்ளி மாணவிகள் வரை அனைவரும் ஈர்க்கப்படுகிறார்கள்.
ஐசென்பெர்க் தன் பாத்திரங்களின் உடல்/ பேச்சு மொழியாலும், சில நேரம் பேச்சில் வரும் தயக்கத்தினாலும், திடீரெனக் கவியும் தர்மசங்கடமான மௌனத்தாலும் கதையின் முக்கிய கணங்களை வாசகனிடம் கடத்துகிறார். ராஸ் தன் வேலை குறித்த அபிப்பிராயத்தை லின்னியிடம் கேட்க, அவர் பெருமிதம் கலந்த வெட்கமடையும் இடம் ஒரு உதாரணம். அந்த வயதில், ஒரு வசீகரமான ஆண் தன்னை ஒரு பொருட்டாக எண்ணுகிறான் என்பது லின்னிக்கு கிளர்ச்சியாக உள்ளது. மீண்டும் லின்னி வேலைக்குச் சேர்ந்தபின் இசபெல் சில காலம் கழித்து கிளேர் வீட்டிற்கு வரும் இடம் இன்னொன்று. கிளேர், இசபெல் மற்றும் லின்னி பேசிக் கொண்டிருக்க அறைக்குள் ராஸ் நுழையும்போது உருவாகும் சூழல் இன்னொன்று. சட்டென்று எல்லாருக்கும் பேச மறந்தது போல் ஒரு மௌனம் கவிகிறது. தான் படிக்க வாங்கிய புத்தகத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக வந்துள்ளதாக இசபெல் சொல்கிறார். வீட்டிற்கே கொஞ்ச காலம் வராத இசபெலுக்கு எப்படி புத்தகம் கிடைத்தது, வெகு நாட்களுக்கு முன்பு கொடுத்ததாக இருக்குமோ? ராஸ் வேறு புத்தகம் கொடுக்க எப்போது வீட்டிற்கு வரலாம் என்று கேட்க, சனிக்கிழமை சரியாக இருக்கும் என்கிறார் இசபெல். இந்தப் பதிலில் ஒளிந்திருக்கக் கூடியதை லின்னி உணர்ந்தாரோ இல்லையோ, கிளேர் அது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. மற்றவர்கள் ராஸின் வசீகரத்தை மட்டுமே, அதுவும் சில மணி நேரம் பார்த்தால், அந்த வசீகரம் தொலையும் கணங்களைப் பார்ப்பவர் கிளேர்தான். எனவே முன்பிருந்த மயக்கம் கிளேரிடம் இப்போது இல்லை. இருந்தாலும் தன் கணவனின் இயல்பான flirtingஐ தாண்டியும் வேறொரு பெண்ணுடன் ராஸ்ஸுக்கு தீவிரமான உறவு ஏற்படலாம் என்பது குறித்து அவர் அதிகம் அச்சப்பட்டது போல் தெரிவதில்லை. சொல்லப் போனால் ஆயாசம் கலந்த பெருமிதமே கணவன் குறித்து அவருக்கு உள்ளது.
அந்தச் சனியன்று ராஸ் இசபெல்லின் வீட்டிற்கு வருவதைப் பார்க்கும் லின்னி, இசபெல்லின் பெற்றோரின் கார்கள் வீட்டில் இல்லை என்பதையும் கவனிக்கிறார். (அந்த வயதில்) ஏனென்று புரியாத துக்கம் லின்னியைச் சூழ்கிறது. இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து இசபெல் வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். ராஸுடன் அவளுக்கிருக்கும் உறவைக் குறித்து மொட்டைக் கடிதம், அவள் பெற்றோருக்கு வந்ததாக வதந்தி பரவுகிறது, அது உண்மையென்றால் அந்தக் கடிதத்தை லின்னி அனுப்பி இருக்க மாட்டார் என்றே நாம் நம்புவோம்.
ராஸ் பல பெண்களுடன் தொடர்ந்து பழக , ஒரு முறை பொறுக்க முடியாமல் கிளேர் அவனை விட்டுச் சென்று பிறகு ஒன்று சேர , இசபெல் திருமணம்/ குழந்தைகள் என பயணிக்க, ராஸ், இசபெல், கிளேர் வாழ்வில் இந்த அத்தியாயம் இசபெல் ஊரை விட்டுச் செல்வதுடன் முடிந்து விடுகிறது. ஆனால் இந்த நினைவுகளின் பாதுகாவலராக லின்னி மட்டும் ஏன் பின்தங்கி விடுகிறார்?
பதின் பருவத்தின் இன்னொரு சித்திரத்தை ஜூலி அறிந்ஜெர் (Julie Orringer) தன்னுடைய ‘Stars of Motown Shining Bright’ சிறுகதையில் தருகிறார். பதினைந்து வயதான லூசி, தன் தோழி மெலிசாவின் வரவை எதிர்நோக்கி இருக்கிறாள். ஜாக் என்ற பொது நண்பனின் வீட்டில் இரவைக் கழிக்க இருவரும் செல்வதாக திட்டம், இருவரின் பெற்றோருக்கும் இது தெரியும். தெரியாதது, வாழ்வில் முதல் முறையாக ஜாக்குடன் லூசி உடலுறவு கொண்டுள்ளது. இது பற்றி மெலிசாவிடம் மட்டும் சொல்ல எண்ணியுள்ள லூசிக்கு ஒரு அதிர்ச்சி. தானும் ஜானும் திருமணம் செய்து கொண்டு (பொய் பிறப்பு சான்றிதழுடன்), லாஸ் ஆஞ்செலஸ் செல்லப் போவதாக மெலிசா கூறுகிறார்.
லூசி இப்போது என்ன செய்வாள்? தங்கள் இருவரையும் ஏமாற்றின ஜாக்கைப் பற்றி மெலிசாவிடம் சொல்லி விடுவாளா, அல்லது அவள் கையில் ஒரு துப்பாக்கி கிடைக்க ‘செகொவ் சொல்லிய துப்பாக்கி விதி’ நடைமுறைப்படுத்தப்படுமா என்று நாம் யூகிக்க ஆரம்பிக்க ஜூலி அதற்கு இணையாக இன்னொரு இழையை உருவாக்கி, தோழிகளின் நட்பின் அடுக்குக்களை சுட்டுகிறார். மெலிசா கூறியதைக் கேட்டு லூசி சற்று அதிர்ச்சி அடைந்தாலும், அது அவளை நிலைகுலையச் செய்வதில்லை.
ஏன்? ஒரு திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்துள்ள, தொலைக்காட்சித் தொடர்களில் தோன்ற வாய்ப்பிருக்கிற, கொஞ்சம் பிரபலமாக உள்ள (minor celebrity) ஜாக், கிடைப்பதற்கரிய வெற்றிச் சின்னமாக பார்க்கப்படுகிறான். தோழிகளின் உறவில் மெலிசாதான் ஆதிக்கம் செலுத்துபவராக உள்ளார், அதற்கான ஒரு பதிலடியாகவும் லூசி ஜாக்குடனான தன் உறவைப் பார்த்திருக்கக்கூடும். கதையின் ஆரம்பத்தில் “Lucy was the one Jack wanted, and Melissa would have to live with that” , என்று லூசி எண்ணுகிறார். மெலிசாவும் ஜாக்குடன் உணர்வு பூர்வமான நெருக்கம் உடையவள் அல்ல, ஜாக்கின் பிரபலம் தரும் கவர்ச்சியோடு, குடும்பச் சூழலிலிருந்து தப்பிக்க ஒரு வழியும் தெரிவது அவளை ஜாக்குடன் நெருக்கமாக்குகிறது. லூசி இந்த விஷயம் தன்னை பாதிக்காதது போல் நடந்து கொள்ள, இது குறித்த அவளின் பொறாமையை, மேலே தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை எதிர்ப்பார்த்த மெலிசாவும் தன் எதிர்பார்ப்பு நிறைவேறாததை பற்றி அலட்டிக் கொள்ளாதவர் போல் நடந்து கொண்டு, இருவரும் ஜாக்கின் வீடு வந்து சேர்கின்றனர். ஜாக் பல பெண்களுடன் உறவு கொள்வதை வெற்றியாகப் பார்த்தால், அதே லூசியும் , மெலிசாவும் கூட ஒரு விதத்தில் அவனை அப்படித்தான் அணுகுகிறார்கள். வீட்டிற்கு வந்தபின் நடக்கும் சில சம்பவங்களால், திட்டம் மாறி, தோழிகள் இருவரும் வீட்டிற்கே திரும்புகின்றனர்.
கதையின் இறுதியில், இந்தச் சம்பவங்கள் குறித்து எதையும் அறியாத லூசியின் பெற்றோர் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் காலையில் வேலைசெய்து கொண்டிருக்கும் காட்சி வருகிறது. எந்த ஒரு மத்திய தர பெற்றோரின் விடுமுறை நாள் நிகழ்வான இதையும் ,அவர்களின் பதின் பருவ பிள்ளைகள் அனுபவித்து விட்டு வந்திருக்கும் மன உளைச்சலான சம்பவங்களையும் ஒன்றாக பார்க்கும் போது, அந்த உளைச்சலைப் பற்றி எதுவும் அறியாமல், முந்தைய இரவு (பிள்ளையின் செயலால்) தங்கள் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் சென்றிருக்கக் கூடும் என்று உணராமல், அதன் தாள கதி இன்னும் பிசகாமல் உள்ளதாக நம்பிக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகள் குறித்த அவர்களின் புரிதல்களுக்கும், பிள்ளைகளின் உண்மையான எண்ணங்களுக்கும் உள்ள இடைவெளி தெரிகிறது. இரு தலைமுறைகளுக்கிடையே எப்போதுமிருக்கும் இந்த இடைவெளி நிரப்பக்கூடியதா என்ன. இந்த முறை மெலிசா திரும்பி விட்டாலும், மீண்டும் இது போல் செய்ய மாட்டார் என்று என்ன நிச்சயம், அந்த வயதில் மனச் சலனத்தை உருவாக்க எத்தனை விஷயங்கள் உள்ளன.
ஸ்டூவர்ட் டைபெக்கின் (Stuart Dybek) ‘The Palatski Man’ சிறுகதை ஆரம்பத்தில் ஜான் மற்றும் அவன் இளைய சகோதரி மேரியின் வாழ்க்கைக் காட்சிகளின் சித்தரிப்பினூடாக, வெளியில் விளையாடும் குழந்தைகள் சிறு பொருட்கள் விற்பனை செய்யும் ஜிப்சிக்களை சீண்டுவது, அவர்கள் தங்குமிடத்திற்கு சென்று ஒளிந்திருந்து பார்ப்பது என குழந்தைகளின் உலகமாக விரிகிறது. ஒரு முறை ஜான் மற்றும் அவன் நண்பன் ரே ஜிப்சிக்களிடம் மாட்டிக்கொள்ளும் சூழலில் ஜான் ஓடி வந்து விடுகிறான். அடுத்த நாள் பள்ளியில் சந்திக்கும்போது அங்கு என்ன நடந்தது என்று ரே சொல்வதில்லை. ஒரு வாரம் கழித்து அவன் காணாமல் போகிறான். இது ஜிப்சிக்களைப் பற்றிய பல அமானுஷ்யப் ஹேஷ்யங்களை நம்மிடையே உருவாக்கினாலும், அவன் வேறு காரணங்களுக்காகவும் வீட்டை விட்டு ஓடி இருக்கலாம். குழந்தைகளின் இந்த அக உலகோடு அவர்களின் வசிக்கும் புறசூழலான நகரின் செழிப்பான பகுதிகளை விட்டு நீங்கியுள்ள உள் நகரத்தின் (inner city) தாள கதியையும் ஸ்டூவர்ட் துல்லியமாக உருவாக்குகிறார்.
குறுகிய சந்துகளில் நெருக்கிக் கட்டப்பட்டுள்ள வீடுகள், அவற்றில் தங்கள் குதிரை வண்டிகளை ஓட்டிச் செல்லும் ஜிப்சிக்கள், வேலைக்கு சென்றுவிட்டு திரும்புகிறவர்களால் தெருக்களின் உண்டாகும் மாலை நேர கசகசப்பு என்று ஒரு கீழ் மத்திய தர சூழலை உருவாக்குவதுடன், இந்த இடங்களையும் தாண்டி நகரின் புறநகரில் ஜிப்சிக்கள் வசிக்கும் இடம், அங்கு குவிக்கப்பட்டிருக்கும், துருபிடித்துக்கொண்டிருக்கிற பொருட்கள், அவர்கள் வாழ்விடத்திற்கு வழியிலுள்ள கைவிடப்பட்டுள்ள வீடுகள்/ தொழிற்சாலை, அழுக்கு சாலைகள் என ஒரு நகரின் urban decayவையும் கதையின் முக்கிய அங்கமாக ஆக்குகிறார். ஜிப்சிக்களின் இடத்தைத் தேடி நண்பர்களின் ஒரு மாலை நேர பயணத்தை பற்றிச் சொல்லும்போது நகரின் பிரகாசத்திற்கு நேர்மாறான சூழலை உடைய, நகருக்கு மிக அருகிலேயே இருக்கும் இடங்களைப் சுற்றிப் பார்ப்பது
They rode their bikes down the railroad tracks, and it wasn’t like being in the center of the city at all, with the smell of milkweeds and the noise of birds and crickets all about them and the spring sun glinting down the railroad tracks. No one was around. It was like being far out in the country. They rode until they could see the skyline of downtown, skyscrapers rising up through the smoke of chimneys like a horizon of jagged mountains in the mist.
படிக்கும் நமக்கு ஒரு நகரின் run-down பகுதிகளில் வெகு தூரம் அலைந்த உணர்வை கொடுக்கிறது. ஒரு நகரிலேயே இரண்டு மூன்று முற்றிலும் மாறுபட்ட குறு நகரங்கள் இயங்குவதைப் பார்க்கிறோம்.
ஒரு நாள் ஜானும் மேரியும் இனிப்புக்கள் விற்கும் ஜிப்சியை (குழந்தைகளால் Palatski Man என்றழைக்கப்படுபவர்) பின் தொடர்கிறார்கள். ஜிப்சிக்களின் இடத்தை கண்டுபிடிக்கும் அவர்கள் Palatski Man இனிப்பை உருவாக்கும் போது மந்திர உச்சாடனம் போல் ஏதோ செய்வதைப் பார்க்கிறார்கள். ஜிப்சிக்கள் அவர்களைப் பார்த்து பிடித்து விடுகிறார்கள். Palatski Man மற்றும் பிற ஜிப்சிக்களால் சிறிது சிறிதாக கடிக்கப்பட்டு மிச்சம் உள்ள இனிப்பை இருவருக்கும் பிட்டுக் கொடுக்க , ஜானின் எச்சரிக்கையை மீறி மேரி அதை சாப்பிட்டு விடுகிறாள். ஜிப்சிக்கள் இருவரையும் விட்டு விடுகிறார்கள்.
வீட்டிற்கு வந்து தூங்கச் சென்றபின், இரவில் விழித்து ஜன்னலருகில் செல்லும் மேரி இனிப்புடன் குதிரையில் வீற்றிருக்கும் ஒருவனைப் பார்க்கிறாள். அங்கிருந்து நகர்ந்து கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் அவள், தன் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்க்கிறாள்.
She ran from the window to the mirror and looked at herself in the dark, feeling her teeth growing and hair pushing through her skin in the tender parts of her body that had been bare and her breasts swelling like apples from her flat chest and her blood burning, and then in a lapse of wind, when the leaves fell back to earth, she heard his gold bell jangle again as if silver and knew that it was time to go.
ஜிப்சிக்களின் அமானுஷ்ய வசியத்திற்கு மேரி பலியாகி விட்டாளா, ஏற்கனவே நாம் ரே காணாமல் போனதைப் பற்றி அறிவோம், மேலும் Palatski Man செய்த உச்சாடனம் போன்ற ஒன்றை நாம் பார்த்தோம். இது ஒருபுறமிருக்க, கதையின் இறுதிப் பகுதி, இது ஏன் ஒரு கனவாக இருக்கக் கூடாது என்றும் நினைக்கச் செய்கிறது. ‘Red Riding Hood’ கதை பற்றி சொல்லப்படுவதைப் போல போல மேரியின் ‘sexual awakening’ பற்றிய குறியீடாகவும் இதைப் பார்க்கலாம். (இந்தக் கதை வன்புணர்ச்சியை சுட்டுவதாகவும் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகிறது)
ஜிப்சிக்கள், அவர்கள் குறித்த மர்மம் என்று fairy tale கூறுகளை இந்தக் கதை கொண்டிருப்பதோடு, மேரி வளர ஆரம்பித்து விட்டாள் என்று கதையில் முன்பே சுட்டப்படுகிறது. தன் உடல் குறித்த மாற்றங்களை உணர ஆரம்பித்திருக்கக்கூடிய மேரிக்கு (ஒரு முறை தன் விளையாட்டு பொம்மையைப் பார்த்து அது போல ஒரு குழந்தையைப் தான் பெற்றுக் கொள்வதைப் பற்றி அவள் நினைத்துப் பார்ப்பதாக ஒரு காட்சி வருகிறது), அன்று மாலை பார்த்த/ நடந்த சம்பவத்தால் , ஏற்கனவே ஜிப்சிக்கள் குறித்த அவள் மனதில் உருவாகி இருக்கக்கூடிய பிம்பத்தின் தாக்கம் அதிகமாகி, இரண்டு வேறு வேறு விஷயங்களும் ஒன்றாகி இந்தக் கனவாக உருவாகி இருக்கலாம். உண்மை எதுவாக இருந்தாலும் , முதலில் நாம் பார்த்தக் கதைகளின் பால்ய/ பதின்பருவங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும் கணத்தை இந்தக் கதை குறியீடாக சொல்கிறது என்றும் கொள்ளலாம்.

No comments:

Post a Comment