Monday, February 22, 2016

சிமோன் பொலிவர் (Simon Bolivar)/ ஸ்டோனர் (Stoner) – இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2016/02/14/two-lives/)
-----

'The General In His Labyrinth' நாவலில் நாம் சந்திக்கும் சிமோன் பொலிவர்  (Simon Bolivar), ஒரு கண்டத்தையே ஸ்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்ட அதிநாயகர் அல்ல.   ஒன்றுபட்ட லத்தீன் அமெரிக்கா என்ற கனவு தன்னுடைய   கண் முன்னே கலைவதை தடுக்க முடியாததென்னமெரிக்க கண்டத்தின் சர்வாதிகாரியாக இருக்க விழைந்தவர் என அவர் எதிரிகளால் தூற்றப்படுகிற, அச்சந்தேகம் மக்களிடமும் பரவி 
 தான் விடுவித்த நாடுகள் பெரும்பாலானவற்றில்  சந்தேகத்தோடு பார்க்கப்படுகிற, இத்தனை இக்கட்டிலும் மக்கள்/தன் முன்னாள் தோழர்கள்  தன்னைக் கை விடமாட்டார்கள் என்ற மாயையை இழக்க விரும்பாதமனதளவிலும் உடலளவிலும் உடைந்து போன ஒருவரையே பார்க்கிறோம். அவருக்கு இருந்த இறுதி நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் கலையஐரோப்பாவிற்குச் செல்ல முடிவு செய்கிறார். 
அதீதமாக வாசனைத் திரவியங்களை  உபயோகிப்பதற்காக பணத்தை வாரி இறைத்தவர் என்று அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு புறமிருக்க, தன் பயணத்திற்கு நல்ல குதிரையைக்கூட ஏற்பாடு செய்ய முடியாமல், கோவேறுக் கழுதை ஒன்றே கிடைக்கிறது. அவருடைய தரப்பில் உள்ள ஒருவர் முக்கியஸ்தர், நாட்டைக் காப்பாற்ற இறுதி தியாகத்தைச் செய்யுமாறு வேண்ட,  "I no longer have a country to sacrifice for" - ஒரு கண்டத்தையே மீட்டவன்,  ஒரு காணி நிலத்தைக் கூட  தனக்கென்று/தன்னுடையதென்று கூற முடியாத   - அவல நிலையை  சுட்டும் பதிலோடு - தன்னுடைய இறுதிப் பயணம் என்று அப்போது அறிந்திராமல்  -   பயணத்தை பொலிவர்   தொடங்குகிறார். 


மாபெரும் சாதனைகளைச் செய்வதற்கான உந்து சக்தியை இழந்த ஒருவரை இப்பயணத்தின்போது நாம் பார்க்கிறோம். அவர் நாடு கடத்திய எதிரிகள் தாயகம் திரும்புகிறார்கள்புதிய நாடுகள் அவற்றின் தலைவர்கள் என  ஒன்றிணைந்த தென்னமெரிக்க தேசம் என்ற கனவு அவர் கண் முன்பே கலைந்து,   அவர் விரும்பாத உருக்கொள்கிறது.  சீட்டாட்டத்தில் ஏற்படும் தோல்வியைக்கூட ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை அவருக்கு இப்போது இல்லை. அவர் செல்லுமிடங்களில்மக்கள் அவர் மீது சேறு வீசுகிறார்கள்,  அவருக்கு எதிரான கோஷங்கள் சுவர்களில் எழுதப்படுகின்றன.  இனி எதுவும் செய்ய முடியாது என்ற செயலின்மையும்,  மீண்டும் முதலிலிருந்து புரட்சியைத் தொடங்க வேண்டும் என்ற அடங்கா விழைவுமாக ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட உணர்வுகள் மாறி மாறி குடி கொள்ளும்  மனதோடு நகரும் அவரின் இறுதி நாட்கள்தனிமையான ஒரு மாலை வேளையில் 

" of his last days and for the first time he saw the truth: the final borrowed bed, the pitiful dressing table whose clouded, patient mirror would not reflect his image again, the chipped porcelain washbasin with the water and towel and soap meant for other hands, the heartless speed of the octogonal clock racing toward the ineluctable appointment at seven minutes past one on his final afternoon of December 17. Then he crossed his arms across his chest and began
to listen to the radiant voices of the slaves singing the six o' clock Salve in the mills, and through the window he saw the diamond of Venus in the sky that was dying forever, the eternal snows,the new vine whose yellow bellflowers he would not see bloom on the following Saturday in the house closed in mouring, the final brilliance of life that would never, through all eternity be repeated again"

என்று உள எழுச்சியையும் துயரையும் ஒரே சேர அளிப்பதோடு முடிகிறது.

மரணத்தின் வலு குறித்து "Death is the greatest leveler" போன்ற சொற்றொடர்கள் எப்போதும் உபயோகத்தில் இருந்துள்ளன. 
"THE glories of our blood and state
         Are shadows, not substantial things;
.....
         Death lays his icy hand on kings:
.....
         And in the dust be equal made
With the poor crooked scythe and spade. "
என்று ஜேம்ஸ் ஷெர்லியின் (James Shirley) 'Death the Leveller' கவிதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுள்ளது போல்தன் புகழ்/ அடைந்த வெற்றிகள் அனைத்தும் எந்த பொருளும் இல்லாதவையாக மாறியாருமற்றவராக மரணிக்கிறார் பொலிவர். 

ஜான் வில்லியம்ஸ் (John Williams ) எழுதிய  ஸ்டோனர் ('Stoner') நாவலின் மைய பாத்திரம்இலக்கிய உலகில் நிறைய இடங்களில் உதிர்க்கப்படும் 'எளியவர்கள்/ சாதாரணர்கள்என்ற பதத்தின் மிகச் சிறந்த பிரதிநிதி என்பதை ஸ்டோனரின் மரணத்தைப் பற்றிய "Stoner's colleagues, who held him in particular esteem when he was alive, speak of him rarely now; to the older ones, his name is reminder of the end that awaits them all, and to the younger ones it is merely a sound that evokes no sense of the past..." குறிப்போடு நாவல் ஆரம்பிப்பதிலிருந்தே உணர முடிகிறது. ஆம்இது ஒரு 'சாதாரணனின்வாழ்வையும் மரணத்தையும் பற்றிய நாவல். 

மாபெரும் சாதனைகள் செய்த - நிஜத்தில் வாழ்ந்த - ஓர் ஆளுமையின் (உண்மைகள் கலந்த) புனைவுச் சித்திரமும்முற்றிலும் புனைவுப் பாத்திரமான - பொலிவரின் வாழ்க்கைக்கு முற்றிலும் நேர் மாறான வாழ்வை வாழ்ந்தவாழும் போதும்  சரிமரணத்திலும் சரி எந்த பெரிய சலனத்தையும் உருவாக்காத – ஸ்டோனரின் ஆளுமைச்  (அல்லது ஆளுமையின்மையின்) சித்திரமும் எந்தத் தொடர்பும் இல்லாதவை போல் முதற்பார்வையில் தோன்றுவதால்இவற்றை ஒரே கட்டுரையில் அணுக வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழலாம். ஆனால் ஸ்டோனரை  மீள்பார்வை செய்வதுஅவரது வாழ்வின் அர்த்தம் குறித்த இன்னொரு கோணத்தை  தருவது மட்டுமின்றி,  இறப்பு எப்படி தனிப்பட்ட ஒருவரின் வாழ்வை சமன் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல்இவர்களைப் போல் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பவர்களையும் ஒரே புள்ளியில் இணைக்கின்றது என்ற இன்னொரு கோணத்தையும்  உணர்த்துகிறது.

ஸ்டோனரின் வாழ்க்கை குறித்து  நாவலின் போக்கில் தெரிந்து கொள்கிறோம். வேளாண் கல்வி படிப்பதற்காக கல்லூரியில் சேரும் ஸ்டோனர்ஆங்கில இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு கல்லூரி பேராசியர் ஆகிறான். காதலில் விழுந்து விட்டோம் என்று எண்ணி,  -  துரித கதியில் திருமணம் செய்துபெரிதும் துன்பத்தையே தரும்மகளே தந்தையிடம் இருந்து விலகிச் செல்லும்   - இல்வாழ்க்கையில் இணைந்து கொள்கிறான். கல்லூரியில் செல்வாக்கு மிக்க இன்னொரு பேராசிரியருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு அவ்வாசிரியர் மனதில் ஸ்டோனர் பால்  பெரும் பகையை உருவாக்கஆசிரியப் பணியிலும் பலச் சங்கடங்களை அவன்  சந்திக்க நேர்கிறது.  

ஸ்டோனர் மட்டுமே நல்லவன்மற்ற அனைவரும் தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்களே என்ற விமர்சனம் வாசகன் மனதில் எழலாம் (எழுந்து கொண்டும் இருக்கின்றது).  ஸ்டோனரின் கோணத்திலேயே முழு நாவலும் நகர்வதால் அப்படிப்பட்ட உணர்வு  நாவலில் தோன்றுவது  தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்றாலும்சற்று கூர்ந்து கவனித்தால் வில்லியம்ஸ் யாரையும் கொடியவர்களாக சித்தரிக்காமல்மனப் பொருத்தம் இல்லாத இருவர் தொடர்பில் வரும்போது ஏற்படும் மனக்கோணல் எத்தகைய வஞ்சத்தை உருவாக்கும் என்பதை மட்டுமே சொல்ல வருகிறார்  என்பது புரியும்.  மற்றவர்கள் கோணத்தில் எழுதப்படும்போது (அல்லது வாசகனே அப்படி யோசிக்கும்போது)  ஸ்டோனர் தரப்பில் உள்ள சில பிரச்சனைகள்  - மனைவியின் மனநிலைக்கு நேர்மாறாக,  பெரிய லட்சியங்கள் இன்றி அவர் இருப்பதே இல்வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண்பிடிவாதத்தோடு ஒரு நிலையில் இருந்துஆனால் ஒரு கட்டத்தில் ஆயாசத்தோடு அதை விட்டுவிடுவதுஎதையும் இறுதி வரைக்கும் கொண்டு செல்ல இயலாத மனநிலை  -    இருக்கக்கூடும் என்று தெரிய வரலாம்.  ஸ்டோனரின் வாழ்வில் ஒரு பெண் வருகிறாள். அவர் மனதிற்கு மிக மிக அணுக்கமாக இருக்கும் அந்த உறவையும் அவர் முறித்துக் கொள்ள வேண்டியதாகிறது. மத்திய வயது ஆணின் நிம்மதியற்ற குடும்ப வாழ்க்கை, அவருக்கு ஏற்படும்  இல்லறத்தைத் தாண்டிய காதல் என்ற வழமையான ஒன்றுதான் என்றாலும் அக்காதல் உருவாவதை மட்டுமின்றிஅது முறிவதையும் கண்ணியத்தோடு விவரிக்கிறார். அக்கண்ணியம் அவ்வுறவு குறித்த காத்திரமான/ தூய்மையான  பிம்பத்தை உருவாக்கி, - இலக்கியத்தில் இத்தகைய உறவுகள் குறித்த பரிச்சயம் இருந்தாலும் - வாசகனை அகம் நெகிழச் செய்கிறது.

இதெல்லாம் நடந்தது/ இவற்றை ஸ்டோனர் அடைந்தார் என்பதாக இல்லாமல்இவையெல்லாம் நடக்கவில்லை/ இவற்றையெல்லாம் அவர் இழந்தார் என்பதாக மட்டுமே ஸ்டோனரின் வாழ்கை விரிகிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அவர் மிகவும் விரும்பும் ஆசிரியப் பணியைச் செய்வதிலும் இடறி விழுந்துஅவர் விருப்பத்திற்கு மாறாக பணி மூப்பிற்கு தள்ளப்படுகிறார்.
இதிலும் அவர்  தோல்வியையே சந்திக்கிறார்.  நோயால் பீடிக்கப்படும் அவர்,    அந்திமக் கணங்களில்,  தான் மிகவும் விரும்பிய இலக்கியத்தின் (புத்தகங்களின்) அருகாமையில்அவற்றைப் பார்த்துக்கொண்டேஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும்போது அவர் உயிர் பிரிகிறது. 

 மிக எளிய அறையில்இன்னொருவரின் மஞ்சத்தில் படுத்தபடிஅதிக பொருட்கள் இல்லாத அணிமேஜையைகலங்கிய முகக்கண்ணாடியைப் பார்த்தப்படி மரணிக்கும் பொலிவரைவிட தான் விரும்பிய சூழலில் மரணிக்கும் - நிராசையின் நிழலிலேயே வாழ்நாளை கழித்த - ஸ்டோனரின் அந்திமக் கணங்கள் சற்றே ஆசுவாசமளிப்பவையாக இருந்திருக்கக் கூடும் என்பது ஒரு நகை முரண் தான். 


மரணத்தைப் பற்றிய ஷெர்லியின் கவிதை 
"Only the actions of the just 
Smell sweet and blossom in their dust. "
என்று முடிகிறது. பொலிவரின் செயல்கள் குறித்து அவை  நியாயமா இல்லையா என்று வாதிட முடியும் என்றாலும்அவற்றின் செயற்கரியத் தன்மையைஅவர் ஒரு வரலாற்று நாயகர் என்பதை யாரும் மறுக்கவியலாது. அவருடைய அந்திமக் கணங்கள் நிராகரிப்பின் வலியில்தனிமையின் பிடியில் கழிந்திருக்கலாம். ஆனால் "the final brilliance of life that would never, through all eternity be repeated again" என்று அந்நாவல் முடியும்போது அனைத்தையும் சரி செய்து ,அவர் புகழ் (அவர் செயல்கள் குறித்த விமர்சனங்களோடு) என்றும் நீடித்திருக்கும் என்பதை வாசகனுக்கு உணர்த்துகிறது. 

ஆனால் ஸ்டோனரின் நிலை? அந்திம நேரத்தில் "What did you expect"   என்று தன் வாழ்க்கை குறித்து  அவர் மீண்டும் மீண்டும் தன்னையே கேட்டுக்கொள்வது வாசகனை மனமுடையச் செய்கிறது. யாரும் பார்க்காமலே மொட்டவிழ்ந்துயாரும் முகராமலே மணம் வீசி, யாருக்கும் இழப்பதற்கு இல்லாமல் உதிரும் பூ போன்ற வாழ்க்கையை மட்டுமே அவர் வாழ்ந்திருக்கிறாராஎந்த அர்த்தமும் அதற்கு இல்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் நாவலின் மீள் பார்வை செய்தால்முதலில் வாசகன் உணரக்கூடிய வாழ்க்கை சார்ந்த ஆயாசத்தையும்/ அவநம்பிக்கையையும் தாண்டி உண்மையில் எழுச்சிமிக்க  வாழ்க்கை அனுபவத்தையேஅத்தகைய  ஒரு வாழ்வையே ஸ்டோனர் வாழ்ந்திருக்கிறார் என்று வாசகன் உணர முடியும். 

ஸ்டோனர்  வாழ்வில் இரு சம்பவங்கள் இது குறித்த சிலத்  தெளிவுகளைத் தரக்கூடும். வேளாண்மை படிக்க வந்துள்ள ஸ்டோனரைநீ ஆசிரியராகப் போகிறாய் என்று அவருடைய ஆசிரியர் சொல்கிறார். அதுவரை அப்படி எண்ணிக்கூட பார்த்திராத ஸ்டோனர் புரியாமல் ஆசிரியரை நோக்க "It's love, Mr.Stoner,' Sloane said cheerfully. 'You are in love. It's as simple as that.'"   என்று சொல்கிறார். இன்னொரு நிகழ்வு.  தன் காதலை முறித்துக் கொள்வதைப் பற்றி ஸ்டோனர் பேசும் போது,   நாம் மற்றவர்களுக்கு பயந்தோஇதனால் நாம் சந்திக்கக் கூடிய இன்னல்களைத் தவிர்க்கவோ இதைச் செய்யப்போவதில்லை என்று சொல்லி "It is simply the destruction of ourselves, of what we do" என்பதால் காதலைத் துறக்கிறோம் என்று முடிக்கிறார்.

ஸ்டோனர் அனைத்திலும் தோல்வி அடைந்திருக்கலாம். சில விஷயங்களில் மாற்று கோணத்தை பார்க்க இயலாதவராக,
மனத்திடம் இல்லாதவராக இருந்திருக்கலாம்ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு நிகழ்வுகள் வாசகனுக்குச் சுட்டுவது என்னஅவருடைய முதற் பெருங்காதலான இலக்கியத்தை/ கற்பித்தலை அவர் எப்போதும் கைவிடவில்லை. "I want to thank you all for letting me teach" என்றே தன் மேல் திணிக்கப்பட்ட  பணி நிறைவு விழாவின் போது சொல்கிறார்.  காதலைத் துறக்கும்போது "..what we do" என்று அவர் குறிப்பிடுவதுதங்களைக் குறித்து அவர்களே கட்டமைத்துள்ள பிம்பத்தை மட்டுமின்றிஇலக்கியத்தை /கற்பித்தலையும் சுட்டுகிறது என்று உணரலாம்.   அதற்கேற்பதான் வகுத்துக் கொண்ட விழுமியங்களையும் (அவை மற்றவர்களின் கோணத்தில் தவறானவையாக - தன் காதலை முறிக்க அவர் சொல்லும்  காரணத்தைப் போல-  தேவையற்றவையாக இருக்கலாம்)ஏற்றுக்கொண்ட பொறுப்புகளையும் (இறுதி வரை தன் மனைவியிடம் இருந்து அவர் பிரிவதில்லைதன்னை ஒதுக்கிய மகள் இக்கட்டில் சிக்கும் போது அவள் தரப்பையே எடுக்க விழைகிறார்-   கைவிடாமல்அவற்றுக்கு  நியாயம் செய்யவே எப்போதும் முயல்கிறார். எதையும் வென்றிலன் எனும் போதும் அவரும் பொலிவரைப் போல் ஒரு நாயகரே.



No comments:

Post a Comment