Tuesday, June 30, 2015

ஆலிஸ் மன்றோவை வாசித்தல் – 1- RUNAWAY கதைத் தொகுப்பை முன்வைத்து - Alice Munro - Runaway

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2015/06/21/alice-munro/
--------------------
ஆலிஸ் மன்றோவின் ‘Tricks‘ கதையில் ‘ஆஸ்துமா’ நோயினால் பாதிக்கப்பட்டுள்ள, வேறெந்த வேலையும் செய்ய முடியாத/ செய்யாத 30 வயதான சகோதரியுடன் வாழும் 26 வயது ராபினின் (இந்தப் பெண் செவிலியாக வேலை செய்பவர்) ஒரே வடிகால், வருடந்தோறும் பக்கத்து நகரில் நடக்கும் ஷேக்ஸ்பியர் நாடக விழாவில், ஒரே ஒரு நாடகத்தை மட்டும் பார்ப்பது.  இப்படி ஒரு முறை நாடகம் பார்க்கச் செல்லும்போது, தன் கைப்பையைத் தொலைத்துவிட்டு என்ன செய்வதென்று புரியாமல் உட்கார்ந்திருக்கையில், டானியல் என்பவரைச் சந்திக்கிறார். அந்த முதல் சந்திப்பிலேயே இருவருக்குமிடையே ஒரு பந்தம் உருவாகிறது. டானியல் தன் தாய்நாட்டிற்குச் செல்லக்கூடும் என்பதால், அடுத்த ஆண்டு , மீண்டும் நாடக விழா நடக்கும்போது சந்திப்பது என்றும் அதற்கு முன்பு வேறு எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்றும் முடிவு செய்கிறார்கள். அதன்படி அடுத்த வருடம், ராபின் டானியலின் வீட்டிற்குச் செல்ல, அங்கு இருக்கும் டானியல் ராபினைத் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் உதாசீனம் செய்கிறார். ராபினின் மனம் உடைகிறது. காலம் செல்கிறது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, மருத்துவமனையில் டானியல் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் அவருக்கு ஒரு அதிர்ச்சியான உண்மை தெரியவருகிறது. அது டானியல் அல்ல, காது கேளாத/ பேச முடியாத அவருடைய இரட்டை சகோதரன். அவரைத்தான் அன்று ராபின் பார்த்திருக்கிறார். டானியல் அப்போது வீட்டில் இல்லை. அதனால்தான் தன்னை யாரென்று அறியாதது போல் அந்த மனிதர் நடந்து கொள்ள, அதை டானியல் தன்னை விலக்க நினைக்கிறார் என்று ராபின் தவறாக எண்ணி விடுகிறார். அவர் கொஞ்சம் முன்பாகவோ, பின்பாகவோ வந்திருந்தால் டானியலைச் சந்தித்திருக்கக்கூடும். கதை ராபினின் இந்த எண்ணங்களுடன் முடிந்திருந்தால் ‘விதி’ மோசம் செய்யும், ஷேக்ஸ்பியரின் துன்பவியல் நாடகங்களைப் போல், ராபினின் இருண்ட வாழ்வில் விதியினால் ஒரு கதவு திறந்து  உள்ளே ஊடுருவிய ஒளிக்கீற்றை அதே விதியே மீண்டும் அந்தக் கதவை மூடி மறைத்த  சோகத்தைச் சொல்லும் நேர்த்தியான கதையாக இருந்திருக்கும். பெரும்பாலான எழுத்தாளர்கள் இத்துடன் முடித்திருப்பார்கள். மன்றோ என்ன செய்கிறார்?
முதலில் தன்னை நொந்து கொள்ளும் ராபின் பிறகு, தாங்கள் இணைந்திருந்தாலும், உடல் நலம் சரியில்லாத தன் சகோதரியையும், டானியலின் சகோதரனையும் எப்படி ஒரே வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியும் என்று யோசிக்கிறார். மேலும் இப்போதாவது ‘ஆள் மாறாட்டம்’ நடந்ததைப் பற்றிய உண்மை தன் சுயத்திற்கு பலம் சேர்ப்பதாக, தான் நிராகரிக்கப்பட்டோம் என்று இத்தனை ஆண்டுகள் சுமந்து கொண்டிருந்த அவமானத்தின் வலிக்கு களிம்பு தடவுவது போல் இருக்கும் என்று நினைக்கிறார். இது அவரின் உண்மையான எண்ணங்களா அல்லது தன்னை தேற்றிக் கொள்ள அவர் சொல்லும் சமாதானங்களா என்ற கேள்வி எழலாம். அதை விட முக்கியம் மன்றோவின் நோக்கம். “The mind’s a weird piece of business” என்று இன்னொரு கதையில் ஒரு பாத்திரம் சொல்வதற்கு ஏற்ப , மன்றோ மனதின் நிலவறையின் கதவைத் திறந்து காட்டுவதுடன் மட்டும் நிற்காமல், அந்நிலைவறையின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒளி பாய்ச்ச முயல்கிறார்.
ஆனால் இந்த மன அலசலை மட்டுமே மன்றோவின் தனித்தன்மையாகக் கருதுவது, அவரின் உரைநடையை, அதன் நுணுக்கங்களை, சிறுகதை என்ற வடிவின் ‘காலம்’ குறித்த கட்டுப்பாடுகளை அவர் மீறிச் செல்வதை, அவ்வாறு மீறிச் செல்வதன் மூலம், பொதுவாக சிறுகதைகளில் கிடைப்பதை விடவும் காத்திரமான வாழ்க்கைச் சித்திரம் வரைவதை, அந்த வாழ்வின் முக்கிய கணங்களுக்கு ஒளிர்வூட்டுவதைக் கணக்கில் கொள்ளாததாக இருக்கும். மன்றோவின் எழுத்தின் பரிமாணங்களைத் தேடும் பயணத்திற்கான ஆரம்பமாக வேண்டுமானால் இதை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரே சந்திப்பில் உருவாகும் பந்தம், ஓராண்டு கழித்து சந்திக்க முடிவு, அதில் விதியின் விளையாட்டு என இந்தக் கதையில் மட்டுமின்றி, ரயில் பயணத்தில் சந்திக்கும் ஆணுடன் செல்லும் இளம் பெண், தன் காதலன் தன் வீட்டு விருந்துக்கு வரும்போது, காதலனின் ஒன்று விட்ட சகோதரனுடன் செல்பவர் என ‘Runaway‘ தொகுப்பில் வரும் பாத்திரங்கள்/ சம்பவங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுமபோது, மன்றோவைப் படித்திராதவர்கள் இவை என்ன ‘யதார்த்த’ கதைகள் போல் இல்லாமல் , வெறும் மில்ஸ் அண்ட் பூன்ஸ் வகையறா கதைகள் போல் உள்ளனவே என்று எண்ணலாம்.
இதற்கு யதார்த்தம் என்றால் என்ன என்றும், யாருடைய யதார்த்தத்தைப் பற்றி பேசுகிறோம் என்றும் எதிர் கேள்வியே பதிலாக அமையக் கூடும். மேலும் இந்தப் பெண்கள் யாரும் குதிரையில் வரும் ராஜகுமாரனுக்காக காத்திருப்பவர்கள் அல்ல (அவர் உறவு ஏற்படுத்திக் கொள்ளும் ஆண்களும் ஒன்றும் கலியுக அர்ஜுனர்கள் அல்ல). இவர்களிடம் உங்கள் வாழ்வு உங்களுக்கு பிடித்திருக்கிறதா அல்லது வெறுப்பாக உள்ளதா என்று கேட்டால், அவர்களால் ஆம்/ இல்லை என்ற தெளிவான பதிலைக் கூற முடியாது. சிறு வயதில் தாய்/ தந்தையை இழந்த க்ரேஸ் (Passion) , தன் மாமாவுடன் வளர்கிறார். மாமா- நாற்காலி செய்பவரான அவரும், அவர் மனைவியும் “..were kind, even proud of her,… but they were not given to conversation..“. தனக்குப் பிறகு தன் தொழிலை க்ரேஸ் தொடர வேண்டும் என்பது மாமாவின் எண்ணம். இத்தகைய சூழலில் க்ரேஸின் மனநிலை என்னவாக இருக்கும்? தன்னை வளர்த்தவர்களிடம் நன்றி (பாசமும் கூட), அதே நேரம் அந்த வயதில், நாற்காலி செய்வதை தன் வாழ்க்கையாக கருத முடியாதது, மாமாவை மீற தயக்கம் என இருப்பவரின் மனநிலையைக் கணக்கில் கொள்ளும்போது, அவர் சட்டென்று எதிர்பாராத செயலைச் செய்யும்போது, அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை.
ஆனால் இவர்கள் எப்போதுமே உள்ளுணர்வால் உந்தப்பட்டு சட்டென்று முடிவு எடுப்பவர்கள் அல்ல, நடைமுறை நிதர்சனத்தை உணர்ந்து அதற்கேற்பவும் செயல்படுபவர்கள். தன் காதலனை விட்டு விட்டு அவன் ஒன்று விட்ட சகோதரனுடன் செல்கிறார் க்ரேஸ். ஒரு சோக சம்பவம் நடக்கிறது. அதன் பின் க்ரேஸின் காதலனின் தந்தை அவரைச் சந்தித்து, 1000 டாலர் கொடுக்கிறார். இங்கு க்ரேஸ் அதை ஏற்காமல் இருப்பது இலட்சியவாதமாக இருக்கும். அதை அவர் ஏற்றுக்கொள்வது என்பது ‘இலக்கிய எழுத்தில்’ வழமையான ஒன்றுதான். ஆனால் மன்றோ அதை “Immediately she thought of sending it back or tearing it up, and sometimes even now she thinks that would have been a grand thing to do. But in the end, of course, she was not able to do it. In those days, it was enough money to insure her a start in life,” என்று விவரிப்பதில் உள்ளது வித்தியாசம். க்ரேஸ் ஒன்றும் பெரும் தார்மீக சிக்கலுக்கெல்லாம் உள்ளாவதில்லை, சில நொடிகளில் முடிவெடுத்து விடுகிறார். அந்த முடிவு குறித்து அவருக்கு இப்போதும் வருத்தமில்லை, திருப்பி அனுப்புதல் என்ற செயல் (gesture) உருவாக்கி இருக்கக்கூடிய உணர்வு குறித்த கற்பனை மட்டுமே உள்ளது. அவளால் அப்படிச் செய்ய முடிவதில்லை என்பது இதில் முக்கியம், அதாவது முடிவு அவர் கையில் இல்லை, அவருடைய பொருளாதாரச் சூழலில் உள்ளது. அதுவே அவருக்கான முடிவை எடுக்கிறது (‘In those days, it was enough money to insure her a start in life’), அவரை புது வாழ்வில் அடி எடுத்து வைக்க உதவுகிறது.
கடந்த காலத்தைப் பற்றிய குறிப்போடு ஆரம்பிக்கும் கதை நிகழ்காலத்திற்கு வருவது, நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு பிறகு, பல்லாண்டு கால தாவல் நடப்பது, ஒரே கதையில் கடந்த/ நிகழ்/ எதிர் கால சம்பவங்கள் வருவது என காலத்தில் முன் பின்னாக செல்வது மன்றோவின் கதைகளில் அதிகமாக காணக் கிடைக்கும் ஒன்று. இதன் மூலம் மன்றோ என்ன சாதிக்கிறார்?
சிறுகதை என்பதில் ஒரு உச்சகட்ட நிகழ்வு/ தரிசனம் என்பது அதன் முழுமைக்கு முக்கியம், அதுவே கச்சிதமான முடிவு என்பதை இல்லாமல் செய்து விடுகிறார். ஆம், அவர் கதைகளில் முக்கிய நிகழ்வு என்பது இடைப் பகுதியில் வர, அதன் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்பும் பாத்திரங்களை நாம் பின் தொடர்கிறோம். இதில் என்ன நடக்கிறது? ஒரு நிகழ்வின் முக்கியத்துவம் என்பது காலப்போக்கில் அப்படியே மாறாமல் இருக்கிறதா அல்லது அதை காலம் கரைத்து விடுவதோடு, அதன் இடத்தில் வேறொரு நிகழ்வை (தற்காலிகமாகவாயினும்) வைக்கிறதா என்பதைப் பார்க்கிறோம். எனவே (சிறுகதை) வாழ்வில் ஒரே ஒரு உச்ச நிகழ்வு அல்லது நகர்வாக மட்டுமே இருக்கும்/ இருக்க வேண்டும், என்ற சூத்திரத்தை மாற்றுகிறார். பல முக்கிய நிகழ்வுகள், அதன் பின்விளைவுகள் என ஒரு நாவலின் அனுபவத்தை தன் நெடுங்கதைகளில் தருகிறார்.
நாவலின் அனுபவம் என்று குறிப்பிடுவது , ஒரு வாழ்வை எழுத்தில் எந்த அளவுக்கு முழுமையாக உணர முடியுமோ அந்த அனுபவத்தைத்தான். மேலும் பெரும்பாலான சிறுகதைகளைப் போல் முக்கிய பாத்திரங்கள், சம்பவக் களன் இவை முதலிலேயே தெரிந்து விடுவதில்லை. ஒரு நாவலில், ஓரிரு அத்தியாயங்கள் போன பிறகு வாசகன் அதன் போக்கைப் பற்றி தெளிவடைவது போல், மன்றோவின் கதைகளிலும் சற்று உள்நுழைந்த பின்னரே அதன் போக்கை உணர முடியும். காலத்தில் முன் பின்னாகச் செல்லும் 50-60 பக்க கதை எழுதுவதால் பல தகவல்களை அவரால் சொல்ல முடிகிறது, எனவே இது சாத்தியமாகிறது என்பது அவரின் கலையை எளிமைப்படுத்துவதாக இருக்கும். ஏனென்றால், வெறும் தகவல்களால் மட்டுமே ஒரு வாழ்க்கைச் சித்திரம் கிடைப்பதில்லை. காலத்தினூடாக ஏற்படும் நுட்பமான புற/அக மாற்றங்கள், அவற்றில் பொதிந்திருக்கும் மௌனம், காலம் செல்லச் செல்ல கடந்த காலம் குறித்து நாம் நினைவில் வைத்திருப்பது, கடந்த காலத்தை நம்மையறியாமல் நமக்கேற்றார் போல் மாற்றி எழுதுவது அல்லது ஒரு விஷயம் குறித்து தெரிந்தே மாற்றிச் சொல்ல ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் அதையே உண்மையென நம்புவது என மன்றோவின் கதைகளில் உட்பொதிந்துள்ள விஷயங்கள் அனைத்துமே முக்கியமானவை.
அதாவது, மாற்றம் என்பது, 1920களில் இளம் பெண்ணை தொடர ஆரம்பிக்கும் கதையில், 70களில் அவர் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும் போது ‘.. a moment during which she saw not just some old and troubled spots, or some decline that could not be ignored any longer, but a complete stranger, ‘ என தன்னையே அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ள உடல் மாற்றத்தை உணர்வது மட்டுமல்ல. ஜூலியட் என்ற பெண்ணை 20களின் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு கதையிலிருந்து (Chance), இரு வேறு கதைகளில் (SoonSilence) பல பத்தாண்டுகள் பின்தொடர்கிறார் மன்றோ. ‘Soon‘ கதையில், தன் குழந்தையுடன் பெற்றோரைக் காண வருகிறார் ஜூலியட். தன் துணை பற்றிய நினைவுகள் அவ்வப்போது வந்தாலும், அவர் ஒன்றும் தன் துணைக்காக ஏங்கவில்லை. பெற்றோருடனான அவருடைய சந்திப்பும் மிகவும் நெகிழ்ச்சியானதாக/ மகிழ்ச்சியானதாக இல்லை. அவருக்கு தன் பெற்றோரிடம் பாசம் இருந்தாலும் (அவர்களுக்கும் கூட) பாசம் இருந்தாலும், அவர்களுக்கிடையே உள்ள கடக்க முடியாத இடைவெளியை நாம் உணர முடிகிறது. ஆனால் இந்தக் கதையின் சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் கழித்து நிகழும் ‘Silence‘ கதையில், தன் துணை செய்த ஒரு தவறுக்காக அவருடன் சண்டையிடும்போது “….When Juliet had gone home to visit her parents. To visit – as she always pointed out now – to visit her dying mother. When she was away, and loving and missing Eric with every shred of her being (she now believed this), Eric had simply returned to his old habits,” என்றாகிறது.
காலம் போடும் திரை நடந்தவைகளை/ அப்போதைய உணர்வுகளைப் பொய்யாக்கி, நாம் இப்போது நம்புவதையே உண்மையாக மாற்றுவதை உணர்த்தும் she now believed thisஎன்ற வரியில்தான் மன்றோ தெரிகிறார்.
நாவலில் வரும், ஓரிரு பாத்திரங்கள் மேல் மட்டும் கவனத்தைக் குவிக்காமல், பார்வையைப் பரவலாக்கும் தன்மையையும் மன்றோவின் கதைகளில் பார்க்கிறோம். இரண்டாம் நிலை/ உபரி பாத்திரங்களும் நாடக அரங்கின் பின்னணியில் இருக்கும் பொருட்கள் போலில்லாமல் உயிர் பெறுகிறார்கள். ‘Soon‘ கதையில், நோயுற்று இருக்கும் தாயைக் காண வருகிறார் ஜூலியட். இதற்கு முந்தைய கதையான ‘Chance’ல் வரும் சில குறிப்புக்கள் மூலம், ஜூலியட்டின் தாய்/ தந்தை, முழுதும் மனமொத்த தம்பதியராக இல்லாவிட்டாலும், எந்த பெரிய ஏமாற்றங்கள் உடையவர்களாகவும் நமக்கு தெரிவதில்லை, சுருங்கச் சொன்னால், பெரும்பாலான தம்பதியர் போலத் தான் உள்ளார்கள். ‘Soon‘ கதையிலோ நாம் சில நுட்பமான மாற்றங்களைப் பார்க்கிறோம். மனைவியின் நோய், ஒரு மெல்லிய எரிச்சலை தம்பதியருக்குள் உருவாக்கி உள்ளது. அவர்கள் வீட்டு வேலைக்கு வரும் பெண்ணிடம், ஜூலியட்டின் தந்தைக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது போல் தோன்றுகிறது. அவர்கள் வீட்டிற்கு ஒரு மதபோதகரின் (minister) வருகை அவர் தாய்க்கு மகிழ்வூட்டுகிறது. அவர்களுக்கிடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருத இடமில்லை என்பதோடு, (இப்போதைக்கு) அபாயமில்லாத, அடுத்த கட்டத்துக்கு நகராத ‘Flirting’ என்பதைத் தவிர இந்த நிகழ்வுகள் வேறெதையும் சுட்டவும் இல்லை. ஆனால் ஒரு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தம்பதியரில் ஒருவர் நோயுற, இன்னொருவர் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் என்பது – நோயுற்றவர்/ பார்த்துக் கொள்பவர் இருவருக்குமே -இளமையை விட முதுமையில் சலிப்பைத் தரக்கூடும். இவை. “She’d always been this sweet pretty girl with a bad heart and she was used to being waited on. Once in a while over the years it did occur to me she could have tried harder” என்று ஜூலியட்டின் தந்தையும், ஜுலியட்டுடனான ஒரு உரையாடலின்போது “‘He has to suck up to them,’ said Sara with a sudden change of tone, a wavering edge of viciousness, a weak chuckle.” அவர் தாயும் சொல்வது இந்தச் சலிப்பின் வெளிப்பாடே. இந்தக் கதைகள் விரிய, ஜூலியட்டின் தாய்/ தந்தை என்ற ஒற்றை அடையாளத்தைத் தாண்டி, தனித்துவமான குணாதிசயங்களை கொண்டவர்களாக உருப்பெருகிறார்கள். ‘The Bear Came Over the Mountain‘ போன்ற, முதிய தம்பதியர் முதன்மைப் பாத்திரங்களாக வரும் மன்றோவின் கதைகளை, இன்னொரு கோணத்தில் அவர்களின் பிள்ளைகள் முக்கியப் பாத்திரங்களாக இருக்க – அவர்களின் விழிகளில் வழி முதிய தம்பதியரை நாம் இந்தக் கதையில் பார்க்கிறோம்.
இத்தகைய நெடுங்கதைகள் எழுதுவதைப் பற்றி
I started with the idea of writing novels, and I wrote short stories because that was the only way I could get any time. I could take off housekeeping and childrearing for a certain amount of time but never for the amount that you need to write a novel. And after a while I got as if the story form—actually a rather unusual story form, usually quite a long story form—is what I wanted to do. I could say what I wanted to say in that space. And this was hard at first because the short story was a form that people wanted to be a certain length. They wanted it to be a short story, and my stories were quite unusual in the way that they sort of went on and on and told you different things and so on.
I never know—at least, usually I don’t know—that a story is going to be a certain length. But I’m not surprised. I give it all the space it needs.
Anyway, I don’t care if what I write now is a story—is classified as a story—or what. It’s a piece of fiction, that’s what it is.
என்று மன்றோ சொல்கிறார்.
பெண்களே முக்கியப் பாத்திரங்களாக, அவர்களின் கோணத்திலேயே நகரும் கதைகளாக இருந்தாலும் , ஆண்கள் ஒதுக்கப்படுவதில்லை.
“This is the first time I went on a major trip anywhere. Quite a trip, all on your own”
“.. so maybe could just sort of chum around together?”
என்று ஜூலியட்டிடம் பேச்சு கொடுக்க முயன்று, ஜூலியட் அதற்கு இடம் கொடுக்காமல் இருக்க, பின்பு தற்கொலை செய்து கொள்ளும் பெயர் சொல்லாத, ஐம்பதுகளில் இருக்கும் ஆணை எளிதில் மறக்க முடியாதபடி செய்கிறார் மன்றோ. ஐம்பது வயதில் முதல் முறையாக பெரிய பயணம் மேற்கொள்பவரின் வாழ்வு எப்படி இருந்திருக்கும்? “chum around together” என்ற வரியில் பொதிந்திருக்கும் தோழமைக்கான ஏக்கத்தை/ கோரிக்கையை உணர்வது (அவரின் தற்கொலையைவிட) மனதை பாரமாக்கக் கூடியது. மருத்துவப் படிப்பை பாதியில் விட்டு – தோழிக்காக செய்த கருக்கலைப்புதான் காரணம் என்று சுட்டப்படுகிறது, ஆனால் அந்தக் கருவிற்கு அவர்தான் காரணமா என்பது தெரிவதில்லை – மீனவ வாழ்க்கை வாழும், பல ஆண்டுகள் நோயுற்ற மனைவியை புறக்கணிக்காத, அதே நேரம் துறவி போல் வாழாத , பல காதலிகளை உடைய (ஒரே நேரத்தில் இரு காதலிகள் கூட ) ஜூலியட்டின் துணைவனான எரிக்கின் வாழ்க்கையை தனியாக எழுதினால் பல விஷயங்கள் கிடைக்கும்.
வெறும் உரையாடல்களாக, மனவோட்டங்களாக மட்டும் மன்றோவின் உரைநடை நின்று விடுவதில்லை. தன் மகளைத் தேடி அவர் சென்றுள்ள ஆன்ம பரிசோதனை செய்ய உதவும் இடத்திற்கு (spiritual retreat), வரும் ஜூலியட் “All wore ordinary clothes, not yellow robes or anything of that sort,” என்பதை கவனிக்கிறார். மகளைத் தேடி வந்த இடத்தில், இது அவருக்கு தோன்ற வேண்டிய காரணம் என்ன? மதம்/ ஆன்மா இவற்றுக்கும் மஞ்சள் நிறத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய பொது பிம்பம் இந்த எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கலாம் என்றாலும், இந்த வரி கதையை முன்னகர்த்த எந்த விதத்திலும் உதவவில்லை எனும் போது இதை மன்றோ ஏன் எழுத வேண்டும்? அன்றாட நிகழ்வுகளில், இப்படி சட்டென்று மனதில் தோன்றும் அவதானிப்புக்களை தர்க்க ரீதியாக நியாயப்படுத்தவோ அவற்றைத் தடுக்கவோ முடியாது அல்லவா? யதார்த்த பாணி கதைகளாக இருந்தாலும் கனவுத்தன்மையுடன் கூடிய உரைநடையையும் காண முடிகிறது. ‘Runaway‘ கதையில், ஓடிப் போன க்ளாரா திரும்பி வந்தபின், அவர் ஓடிப்போக உதவிய அண்டை வீட்டுப் பெண்ணை பார்க்க க்ளாராவின் கணவன் க்ளார்க் வருகிறார். மிரட்டும் தொனியில் இருக்கும் க்ளார்க்கின் பேச்சு முற்றும் முன்
“.. The fog was there tonight, had been there all this while. But now at one point there was a change. The fog had thickened, taken on a separate shape, transformed itself into something spiky and radiant. First a live dandelion ball, tumbling forward, then condensing itself into an unearthly sort of animal, pure white, hell-bent, something like a giant unicorn, rushing at them.”
என்ற அமானுஷ்யத் தன்மை உடைய சூழல் உருவாகிறது. இதென்ன, ‘The hound of the Baskervilles’ போன்ற மிருகம் இவர்களை நோக்கி வருகிறது?. இல்லை, கிளார்க்கின் தொலைந்து போன ஆடுதான் திரும்பி வருகிறது  (unicorn பற்றிய குறிப்பு சட்டென்று புரிய வருகிறது அல்லவா?).
சரி ஏன் இந்த ஆட்டின் மீள் வருகைக்கு இப்படிப்பட்ட நுழைவு? இரு காரணங்கள். பேசப் பேச, இருவருக்கும் இடையே வளர்ந்து கொண்டே இருந்த பகைமையை தற்காலிகமாவேனும் நிறுத்த இது உதவுகிறது. (When two human beings divided by hostility are both, at the same time, mystified—no, frightened—by the same apparition, there is a bond that springs up between them, and they find themselves united in the most unexpected way. United in their humanity—that is the only way I can describe it. We parted almost as friends.). இதே ஆடு மெல்ல நடை போட்டு, நல்ல வெளிச்சத்தில் வந்திருந்தால் க்ளார்க்கின் கோபம், பயமாக முதலில் மாறி பின்பு, அப்போதைக்காவது நீர்த்துப் போய் இருக்குமா? இதை ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், ஓடிப்போன ஆடு, மனைவி திரும்பி வந்த அன்றுதான் திரும்ப வேண்டுமா- நம்பும்படி இல்லையே – சண்டையை நிறுத்த எளிமையான வழியை மன்றோ கையாண்டு விட்டார் என்றும் வாசகன் நினைக்கலாம். அதைத் தவிர்ப்பதுதான் இரண்டாவது காரணம். ஆட்டை க்ளார்க் அழைத்துச் செல்கிறார். க்ளார்க்/ க்ளாரா தம்பதியரின் வாழ்கை தொடர்கிறது. ஆனால் ஏன் திரும்பி வந்த ஆட்டைப் பற்றி க்ளாராவிடம் அவர் சொல்லவில்லை, அதைப் பிறகு யாருமே பார்ப்பதில்லையே. ஓடிப் போன மனைவி/ ஆடு திரும்பி வந்த அன்று, மனைவியின் மீது உள்ள/ அவரிடம் காட்ட முடியாத கோபத்தை க்ளார்க் ஆட்டிடம் காட்டி அதைக் கொன்று விட்டாரோ என்று வாசகன் யூகிக்கத்தான் முடியும்.
சில நாட்கள் கழித்து ஆடு திரும்பி வந்ததைப் பற்றி அறியும் க்ளாரா, அதைத் தன் கணவன் துரத்தி விட்டிருக்கலாம், அல்லது வேறொரு இடத்திற்கு அனுப்பி இருக்கலாம் என்று சாத்தியங்களை உருவாக்கினாலும், அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள சிறுகாட்டில், சில நாட்களாக வல்லூறுகள் வட்டமிடும் இடத்தை பார்க்க தயங்குகிறார். ஆட்டை க்ளார்க் கொன்று விட்டது என்பது உண்மையெனில், அடுத்த முறை க்ளாரா ஓடிச்சென்று திரும்பினால் (வேறெந்த மிருகமும் ஓடிப் போய் திரும்பாத சூழலில்) க்ளார்க் என்ன செய்வார். அதை விட முக்கியம், க்ளாரா ஏன் இதை இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கிறார். கணவனை நீங்கிச் செல்லும்போது “A life, a place, chosen for that specific reason – that it would not contain Clark“ல் தன்னால் வாழ முடியாது என்று ஏன் பதறுகிறார். இந்தக் கேள்விகள் ஒரு புறமிருக்க, மன்றோ தன் எழுத்தின்/ கதையின் இறுதி வடிவத்தில் எதையும் வீணாக்குவதில்லை என்பது தெரிகிறது.
மன்றோவின் எழுத்தை முற்றிலும் கச்சிதமான ஒன்று என்று சொல்லும்போது, ‘கச்சிதம்’ என்ற வார்த்தை இறுக்கமான, ஒன்றின் ஒன்றின் அணிவகுத்து வரும் வார்த்தைகள் கொண்ட, ஒவ்வொரு சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒரு சொல் மிகாத, தோற்றத்தைத் தரும் உரைநடையை நினைவூட்டுகிறது. ஆனால் மன்றோவின் எழுத்திலோ, வார்த்தைகள் தன்னியல்பாக அதனதன் இடத்தில் ஆசுவாசத்தோடு பொருந்தும் உணர்வே கிடைக்கிறது. இப்படி சொல்வது “And then I want to rewrite it some more. Sometimes it seems to me that a couple of words are so important that I’ll ask for the book back so that I can put them in. ” என்றும் “I’m not too sure about this sort of thing. The answer may be that one should stop this behavior. There should be a point where you say, the way you would with a child, this isn’t mine anymore.” என்று தான் செய்யும் திருத்தங்கள் குறித்து சொல்லும் மன்றோவின் உழைப்பை எளிமைப்படுத்துவதாக இருந்தாலும், அவரின் மேதமை, அவர் செய்த மாற்றங்களை, நாம் இறுதி வடிவில் படிக்கும் போது ‘unobtrusive’காகவே தோன்றச் செய்கிறது. (மன்றோ மட்டுமல்ல, இசை கலைஞர், விளையாட்டு வீரர் என மேதைகளின் கலைக்குப் பின் உள்ள உழைப்பை பின் தள்ளுவது என்பது அவர்களின் மேதமையின் collateral damageகாகவே இருக்கிறது)
இதுவரை மனறோவின் எழுத்தின் அம்சங்கள் என நாம் பார்த்த அனைத்தும் ஒருங்கிணைந்த கதையாக “Powers” உள்ளது. ‘நான்சி’ (Nancy) என்பவரின் டைரி குறிப்புக்களாக 1920களில், கிராமச் சூழல், அவரின் நட்பு வட்டம் பற்றிய விவரணைகளுடன் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. அவரின் தோழியான டெஸ்ஸா (Tessa), தொலைந்த போன பொருட்கள் இப்போது இருக்கும் இடத்தை சொல்லக்கூடிய ஆற்றல் உடையவராக கருதப்படுகிறார். வில்ப் (Wilf) என்பவருடன் நான்சியின் திருமணம் நிச்சயமாகிறது. வில்பின் ஒன்று விட்ட சகோதரன் ஆல்லி (Ollie), அவருடன் தங்க வருகிறான். அவனை நான்சி டெஸ்ஸாவிடம் அழைத்துச் செல்ல, எழுத்தாளனாக/ பத்திரிக்கையாளனாக விரும்பும் ஆல்லி (Ollie), டெஸ்ஸா பற்றிய கட்டுரையை எழுதுகிறான். அவளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா அழைத்துச் செல்லவும் முயல்கிறான். இதுவரை நான்சியை மட்டுமே சுற்றி வந்த கதையில், ஆல்லி/ டெஸ்ஸா இருவரும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றனர், வில்ப் பின்னுக்குச் செல்கிறார்.
ஆல்லியின் திட்டங்கள் குறித்து தெரிய வந்தவுடன், ஆல்லிக்கு கடுமையான கடிதத்தையும், ஆல்லி இறுதியில் உன்னை ஏமாற்றி விடுவான் என்று டெஸ்ஸாவுக்கு இன்னொரு கடிதத்தையும் வில்ப் எழுதுகிறார். இதற்கு டெஸ்ஸா மேல் உள்ள அக்கறைதான் காரணமா அல்லது வேறேதேனும் உள்ளதா. டெஸ்ஸாவிற்கு கிடைக்கக் கூடிய புகழ் நான்சிக்கு பொறாமை அளிக்கிறதா அல்லது ஆல்லி மேல் அவருக்கு ஏதேனும் எண்ணங்கள் உள்ளதா. “To put it frankly, I cannot think of any worse fate than falling in love with him” என்று நான்சி எப்படி சொல்கிறார். அவர்களின் உரையாடல்களில், சந்திப்புக்களில் நட்பு தவிர எந்த தொனியும் வாசகனுக்கு தெரிவதில்லையே. டெஸ்ஸா கடிதத்தை பொருட்படுத்தாமல் அமெரிக்கா செல்கிறார். இருவருக்குமிடையே உள்ள தொடர்பு அறுகிறது.
இப்போது 1960களின் இறுதி. மனநல மையமொன்றில் இருக்கும் டெஸ்ஸாவை, அந்த நிலையம் மூடப்பட உள்ளதால், அவரை அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு வந்த கடிதத்தின்படி அங்கு நான்சி வருகிறார். தன் கணவன் வில்ப் நோயுற்றிப்பதால் டெஸ்ஸாவை தன்னுடன் அழைத்துக் கொள்ள முடியாது என்று நான்சி சொல்கிறார். மனநிலை மைய அலுவலர் நான்சி டெஸ்ஸாவுடன் பேசும்போது, சிறிது நேரம் கழித்து அழைப்பதாகவும் அதைப் பயன் படுத்தி நான்சி கிளம்பி விடலாம் என்றும் சொல்கிறார்.
இதற்கு முன்பு தாங்கள் பிரிந்த போது உருவான கசப்பை மறந்த சந்திப்பு நடக்கிறது. தனக்கு நடத்தப்பட்ட சோதனைகள், மனநில இல்லத்தில் கொடுக்கப்பட்ட மின்சார அதிர்வுகள் என தன் வாழ்க்கை பற்றி சொல்லும் டெஸ்ஸா, ஆல்லி இறந்து விட்டதாகவும் சொல்கிறார். அது உண்மையா, கற்பனையா என்ற சந்தேகம் நான்சிக்கு வருகிறது. டெஸ்ஸாவை அழைத்துக் கொள்ள முடியாத தன் சூழலை நான்சி சொல்கிறார். அப்போது மனநிலை மைய அலுவலர் அழைக்க டெஸ்ஸா
“‘That’s so you won’t have to say good-bye to me,’ she said. She seemed to be settling into appreciation of a familiar joke. ‘It’s that trick of hers. Everybody knows about it. I knew you hadn’t come to take me away. How could you?'”
என்கிறார்.
“You were good to come to see me, Nancy. You can see I’ve kept my health. That’s something. You better pop in and see the woman.”
“I don’t have any intention of popping in to see her,’ said Nancy. ‘I’m not going to sneak out. I fully intend to say good bye to you.'”
என்ற ரீதியில் . தன்னால் இங்கிருந்து மீள முடியாத இயலாமையை உணர்ந்துள்ள டெஸ்ஸா, அழைத்துச் செல்ல முடியாத இயலாமையை உணர்ந்துள்ள நான்சி இருவருக்குமிடையே உரையாடல் நடக்கிறது. ஆனால் அந்த இயலாமையை கண்டு ஒளியாமல், வேறு பக்கம் பார்க்காமல், நேராக எதிர்கொள்ளும் இந்த நட்பின் கம்பீரம் நெகிழ்ச்சியான ஒன்று. தொடர்ந்து கடிதம் எழுதுவதாக சொல்லி நான்சி கிளம்பினாலும், நடைமுறையில் அது முடிவதில்லை. மெல்ல மெல்ல அந்த நிகழ்வே ஒரு கனவு போல் அவருக்கு தோற்றமளிக்க ஆரம்பிக்கிறது.
இப்போது 1970களின் ஆரம்பம். வில்ப் இறந்த பின், மாறுதல் தேவை என பிறர் வற்புறுத்தியதால் கடல் உலா செல்லும் நான்சி ‘Vancouver’ நகருக்கு வர ஆல்லியை சந்திக்கிறார். டெஸ்ஸாவை தான் சந்தித்தது குறித்து எதுவும் அவர் சொல்வதில்லை. வாழ்வில் தான் சந்தித்த மேடு பள்ளங்களைப் பற்றி விவரிக்கிறார் ஆல்லி. ESP போன்றவற்றின் மவுசு குறைய ஆரம்பிக்க, சர்க்கஸில் பணி புரியும் நிலைக்கும் தாங்கள் தள்ளப்பட்டதாக சொல்லும் அவர் ‘Leukemia’ தாக்கி டெஸ்ஸா மரணமடைந்ததாகவும் கூறுகிறார். அந்த துயரத்திலிருந்து இப்போது ஓரளவுக்கு மீண்டுள்ளதாக சொல்கிறார்.
தான் சொல்வது உண்மை தான் என்று ஆல்லி தன்னையே மனதளவில் தயார் செய்திருக்கக்கூடும் அல்லது தெரிந்தே பொய் கூறி இருக்கலாம். எதுவானாலும் தான் அறிந்த உண்மையைப் பற்றி நான்சி கூறாமல், “I suppose you found that life goes on,” என்று சொல்வதோடு இந்தக் கதை முடிந்திருக்கக் கூடும்.
ஆனால் மன்றோவிற்கு இன்னும் ஆழங்களுக்குள் செல்ல வேண்டியுள்ளது. நான்சி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அவரை
ஆல்லி கொண்டு விட, நான்சி ஏதோ சொல்ல மூச்சிழுக்க
“No, Nancy”

“.. It wouldn’t turn out well..”
என்று ஆல்லி கிளம்புகிறார்.
ஆல்லி சொன்னது பொய் என்று தெரிந்திருந்தும், அதை நான்சி மறுத்துப் பேசாததையாவது புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் அவரை தன் அறைக்கு அழைக்கும் எண்ணம் எப்படி நான்சிக்கு தோன்றியிருக்கும்? விட்ட குறை தொட்ட குறையாக, அவர்களிடையே ஏதேனும் உறவிருந்தாலும், இப்படி பொய் சொல்பவனை எப்படி அறைக்கு அழைக்க முடியும். நட்பு, துரோகம், காதல் என உணர்வுகளில் எது எப்போது உணர்வுகளை ஆதிக்கம் செலுத்துகிறதோ அதன் அடிமை தான் மனிதனா?.
டெஸ்ஸாவிற்கு என்ன நடந்தது என நான்சி அறிய முயற்சிக்கிறார். அந்த மனநல மையம் மூடப்பட்ட தகவல் கிடைக்கிறது, ஆல்லியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, தன் வீட்டை அவர் காலி செய்து விட்டார். டெஸ்ஸா/ ஆல்லிக்கு இடையே என்ன நடந்தது என்பதை நான்சி அறிய வாய்ப்பில்லாத சூழலில், நான்சியின் கனவா, அல்லது நினைவோடு இருக்கையில் அவர் உருவாக்கும் கற்பனையா என பிரித்தறிய முடியாத ஒரு surreal காட்சியோடு கதை முடிகிறது.
டெஸ்ஸா/ ஆல்லி ஹோட்டலறைக்கு வருகிறார்கள். உறவின் முடிவின் எல்லைக்கு வந்துவிட்ட சலிப்போடு ஆல்லியும் ,எதிர்காலத்தில் என நடக்குமோ என்ற பயத்தோடு டெஸ்ஸாவும் இருப்பது தெரிகிறது. அங்கு மீண்டும் டெஸ்ஸாவிற்கு ESP உணர்வு வந்துவிட்டதை சுட்டுவது போல் ஓர் சம்பவம் நடக்க, டெஸ்ஸா மகிழ்ந்து ஆல்லியை அணைக்கிறார். டெஸ்ஸாவை மன நல இல்லத்தில் சேர்க்கும் காகிதங்களை தயார் செய்து வைத்திருக்கும் ஆல்லியை இது சங்கடப் படுத்துகிறது.
“She is not an ill-natured person or a person with any bad habits, but she is not a normal person, she is a unique person, and living with a unique person can be a strain, in fact perhaps more of a strain than a normal man can stand. The doctor understands this and has told him of a place that she might be taken to, for a rest”
என்று அனுமதி காகிதங்கள் வாங்க ஆல்லி சொல்லியுள்ள காரணங்கள் உண்மையானவையா அல்லது தப்பித்துக் கொள்ளும் முயற்சியா. அப்படியே உண்மையாக இருந்தாலும், தன்னை நம்பி வந்த டெஸ்ஸாவை ஆல்லி எப்படி கைவிட முடியும். இது நான்சிக்கும் தோன்றியிருக்கக் கூடும். எனவேதான்
“He says to himself that he will get rid of the papers as soon as he can, he will forget the whole idea, he too is capable of hope and honor.”
“Yes, Yes. Tessa feels all menace go out of the faint crackle under her cheek”.
என்ற நேர்மறையான நம்பிக்கையோடு இந்தக் காட்சி முடிந்திருக்கலாம். ஆனால் கடும் சிக்களுக்கிடையில் hope and honorஉடன் வாழ்தல் என்பது அவ்வளவு எளிதா என்ன. எனவே தான் “But deep in that moment some instability is waiting, that Nancy is determined to ignore” என்று அவர் அச்சம் கொள்கிறார், அதை புறக்கணிக்க முயல்கிறார். ஆனால் காட்சி இத்துடன் முடிகிறது, அல்லது நடைமுறையில் என்ன நடந்திருக்கும் என்பதை உணரும் நான்சி தானே அதை முடித்துக் கொள்கிறார். “Gently, inexorably leading her away from what beings to crumble behind her, to crumble and darken tenderly into something like soot and soft ash” எரிந்து உதிர்வது ஆல்லி/டெஸ்ஸாவின் வாழ்க்கையா அல்லது ஆல்லியிடம் உள்ள அனுமதிக் காகிதங்களா என்று முடிவு செய்ய வாசகனிடம் மன்றோ விட்டு விடுகிறார். இதற்கான பதில் Hope and Honor பற்றி வாசகனின் கருத்து என்ன என்பதில் தான் உள்ளது.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் மன்றோவின் எழுத்தின் அனைத்துப் பரிமாணங்களையும், ‘Runaway’ என்ற ஒரு கதை தொகுப்பின் – பெண்கள் இளமையில் எடுத்த முடிவைப் பின்தொடரும் – சில கதைகளை மட்டும் கொண்டு, அறிய முடியாது. சிறுமிகள், பதின் பருவத்தினர், இளம்/நடுத்தர/முதிய தம்பதிகள் வாழும் பிற தொகுப்புக்களைப் பின் தொடர அவரின் மேதமை பற்றிய இன்னும் விரிவான சித்திரம் கிடைக்கும்.
(தொடர்வோம்)

No comments:

Post a Comment